Sunday, April 25, 2010

இரண்டாம் விற்பனைக்கு

மோனங்கலைதற்கஞ்சி
முகத்திரைகள்
முகங்களானதை
நான் எதிர்பார்த்தேன்

எனவே
நானுமொன்று செய்துகொண்டேன்

ஆயினும்
அவ்வப்போது வெளிப்பட்டவண்ணமிருந்தன
என் வெளிப்பாடுகள்

திரைகளை தூக்கிஎறிந்தேன்

கசகசவென்று
கனவிலும், நேரிலும்
வீட்டிலும், வெளியிலும்
முகத்தருகே
எப்போதும் முகங்கள்
அன்று, முகத்திரைகள்

திரைகளுக்காய்
திறந்து விடுகிற
என் நுட்பங்களை
எப்படிக் கரைத்து கொள்வது

கவலையில்
கையிருந்த ஓரிரு திரைகளையும்
விற்றேன்
வயிறு வளர்க்க

வெளிப்பாட்டு வறுமை
வறுத்தெடுக்க
செல்லாக்காசு மோனத்தை
நுட்பமறந்து போய்
விற்றுத் தொலைக்க
அல்லாடி கொண்டிருக்கிறேன்
இந்த வேளைக்கு


- அஞ்சலிக்குரல்கள் கேட்கும்
   அந்த
   அறைக்கதவை மூடிவிட்டு

- 26/02/91

மழைக்கால சுவடுகள் - II

நீ, நான்
உனது, எனது
இந்த மழைக்காலங்கள்

பெரிதாய் விழத்தொடங்கி
உடலதிர ஓடி
இடந்தேடி ஒதுங்குமுன்
அரைகுறையாய் நனைந்து
ஆசையோடு பார்த்து நிற்போம்

நின்று போகும் மழையை
நீ கை நீட்டி பார்க்க
பார்த்த கையை
முகர்ந்தணைத்து
நனைந்து போவோம்
பெய்யாத மழையில்

கை கோர்த்து
முகம் பார்த்து
தோள்சாய்ந்த மடல் பார்த்து
பாதை விலகி
உன் விழிகளுக்குள்
நடந்து கொண்டிருப்பேன்

உன் நாசிநிழல் சொட்டும்
நீர்த்துளி ஏந்தி
காவிரியை சிறைபிடித்ததாய்
மகிழ்வேன்

என் மகிழ்ச்சியை
நீ இரசிப்பாய்

மழை
நின்று போகும்

மழைக்காலங்கள்
திரும்புவதில்லை

- 12/10/91

மழைக்கால சுவடுகள் - I

புகைமூட்டமாய் விடிகிற பொழுது
என் மனதுக்குள்ளும்

ஆயிரஞ்சிறு சூரியன்கள்
வட்டமாய் உதிக்கிற
அக்குடிசைக்குள்
இன்று மழை

காட்சிகளை
விரிவாக்காத என் வீட்டுச்சன்னல்
என் பார்வைக்குள்ளும்
புகை மூட்டம்

தரையை
துளைத்து விடுகிற கோபத்துடன்
வானம் சரம் சரமாய்
ஊற்றிக் கொண்டிருக்கிறது

ஓடை
குடிசைச்சுவரின் முதுகிறங்கி
நதியாய் பெருகுகிறது

மிதக்கப் போகும்
வட்டிலிலிட்ட சோற்றுக்கு
வெளியோடும் நீரில்
விளையாடுவதை
தடுத்தழைக்கும் குரல்

கிழிந்த தலைத்துணி
இழுத்துச் சிரித்து கொள்ளும்
அவ்விருவர்
அக்குடிசை வாயிலில்

சன்னல் மறைக்க
என் வீட்டு கண்ணாடியிலும் நீர் மூட்டம்

தோள்தொட்டு என் சிறுமகள்
தந்த காப்பி
வாங்கத் திரும்பினேன்
நீர்மூட்டம் உறைய

- 31/02/91

Saturday, April 24, 2010

Facade Design & Engineering Asia, Singapore - 2

Facade Design & Engineering Asia, Singapore

சிந்தனை வெறுமை

'மூடு அவுட்டாகி விட்டது; படிப்பதில் நாட்டம் இல்லை' என்று எண்ணிக் கொண்டு வெறுமனே தொலைதூரத்தில் ஜன்னலுக்கு வெளியே வெறித்தவாறு ஒரு சந்தோச சோக போர்வையை என்னைச் சுற்றி போர்த்துக் கொள்வதில் ஓர் இன்பம்; ஒரு ரசிப்பு.

காரணம் சொல்லத் தெரியவில்லை. கேட்கின்ற பாடலின் இடையீடு இசை கூட இமைகள் ஈரப்படுத்துகின்ற நேரமது.

நிர்ப்பந்த குளிர்களிலிருந்து நானென்னை காத்துக்கொள்ள பிரயோகிக்கும் ஓர் ஆயுதமாக அந்தப் போர்வை இருக்கலாமோ?

சூரியனைச் சுற்றி மழைக்கால கருமேகம் மெல்லக் கவிந்து காட்சிகளை இருட்டடிப்பு செய்வது போல, எண்ணங்களை வெறுமைப்படுத்தும் இந்நிலை நானே வேண்டுமென்று ஏற்படுத்துவதா அன்றி அச்சூழ்நிலையின் தன்மை குறித்து எற்பதுகிறதா என்று ஆராயும் தெளிவும் மனநிலையும் வெறுமை நிறையும் அக்கணத்தில் இருப்பதில்லை;

அன்றியும், நான் தெளிவடைந்த பிறகும் இவற்றை சிந்திக்க சமயங்களில் நாட்டமும் நேரமும் இருப்பதில்லை என்பதே உண்மை.

சில கணங்களுக்கு சிந்தனை ஸ்மரணை தப்பியிருக்கும்; எந்தச் சூழ்நிலை இந்த சிந்தனை வெறுமையை ஏற்படுத்துகின்றதோ அதிலிருந்து வெளிக்கிளம்புதல் நன்மை பயக்கும்; ஒரு மாறுதல் பழைய இனிமையை, நடைமுறையை என்னில் உடன் கொணரும் என்றொரு மாயை இருப்பதை நான் மறுக்க முடியாது.

இந்த மாயை தன்னுடைய முழு உரு காட்டும் நேரம் தான், நான் அதுவொரு மாயை; அதனால் நான் பெற்றது எதுவுமில்லை என்றறியும் நேரமாயிருக்கும்.

வெறுமை அகோரமாய், கேட்கும் ஒலிகளும் சோக வெறுமையாய், எண்ணக் கோட்டைகள் சரியும் சத்தங்கள் கூட கேட்காது கணங்கள் ஊமைப்படத்தின் பிம்ப நொடிகளாய் நகர, நான் நின்றேனா அமர்ந்தேனா அன்றி படுத்தேனா என தன்னிலை மறப்பதில் ஆரம்பமாகும் அந்த மாயையின் சொரூபம்.

மாயையின் பிரசன்னம் தோன்றியவுடன் சிந்தனை வெறுமை சிதறும்; வெறுமையின் பின் விளைவுகள் தான் மனத்திரையில் பிசாசுகளாய் உலவிக் கொண்டிருக்கும். அவற்றின் ஆட்டம் கட்டுக்கடங்காமல் போகும் போதுதான், யாரேனும் என்னைப்பற்றி, என் முகநிலை பற்றி (அகத்தின் அழகு முகத்தில் என்பார்களே) விசாரிக்க, உடனே பின் விளைவுப் பிசாசுகளோ 'பொய் சொல்கிறோம்; தூண்டுகிறோம்' என்ற எண்ணமின்றி கூசாமல், 'ஒன்றுமில்லை' என்று பதிலிறுக்க வைக்கும்.

அவர்கள் அப்படி நகர்ந்ததும், வெற்றிச் சிரிப்புடன் விளைவுப் பிசாசுகள் மீண்டும் கைகட்டி, சிந்தனை மாயைக்கு வழிவிடும். இவையெல்லாம் என் அனுமதியின்றி, என்னைப் பார்வையாளனாக்கிக் கொண்டு எனக்குள்ளே நடைபெறும் நேரம், நொடிகள், நிமிடங்களைத் தாண்டியிருக்கும்.

காலக்குதிரை இழுத்துக் கொண்டோடும் வாழ்க்கை வண்டியின் பாதையில் ஒரு சிறு தூரமாகவே இந்நேரம் இருப்பினும், அந்நேரம்தான் எத்துணை பாதிப்புகளை என்னில் உருவாக்குகிறது?

ஒரு வளரும் ஓவியன் கையிற் கிடைத்த வண்ணங்களை எல்லாம் வேந்திரையிர் கொட்டி கோலம் செய்து அழகு பார்ப்பது போல்.

புதுக்கவிஞன் ஒருவன் தானறிந்த சொற்களையெல்லாம் அழகுடனோ அவலமாகவோ அடுக்கி ரசிப்பது போல்.

நடக்கக் கற்றுக்கொண்ட குழவி தன தளர்நடையில் உலகையே அளந்து விட அங்குமிங்கும் அலைந்து திரிவது போல்.

புதிதாய் பூப்படைந்த பெண்ணை தாய் தடவித் தடவி அகமகிழ்ந்து நெட்டி முறித்து செய்வதறியாது திகைப்பது போல், என் மனம் தனக்குள்ளே அலைகிறது.

நான் அந்நேரம் அதைக் கட்டுபடுத்தி சுயநிலைக்கு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டால், எங்கே ஒரு செயற்கையான காரியம் செய்கிறோமோ, மனதின் விடுதலைக்கு துரோகம் இழைக்கிறோமோ எனும் பயமும் உடன் எழும்புகிறது.

ஆகையால்தான் அம்முயற்சியில் இறங்குவதில்லை என்றும் சொல்லிவிடுதல் இயலாது; அது என்னால் முடியுமா என்றவொரு ஐயமும் ஒரு காரணம்.

இவற்றிற்கெல்லாம் இரையாகி, மகிழ்வுமில்லாமல் துன்பமுமில்லாமல் வெறுமையை, சில சமயம் கண்ணீருடனும் ரசித்துக் கொண்டு நின்ற நேரமும் உண்டு.

முன்பு கூறியது போல், அந்நேரத்தின் முடிவில்தான் மாயை உதிக்கும். உதித்ததும் சிந்தனைச் சுழலில் மூழ்கியிருந்த புலன்கள் கரை தட்டும். வெறுமையின் பின்விளைவு பிசாசுகள், மிகவும் சுயாதிகாரத்துடன் 'வெளியே செல், சூழ்நிலை மாற்றம் தேடு' என்று ஆணையிடுவது, நான் தன்னிச்சையாக செய்கிற காரியம் போன்று பிறர்க்கு தோன்றக்கூடும். உடனே என் வாகனத்தை எடுத்துக் கொண்டோ, அன்றி நடந்தோ நான் தனிமையான இடம் என்று கருதும் இடம் வரை வந்து சேர்வேன்.

சமயங்களில் நான் இவ்விடங்களுக்கு வந்து சேரும் வரை வெறுமை என்னை பிணைத்திருப்பதும் நேரும். கிளம்பியவுடன் நன்முறையில் நினைவுடன் அவ்விடம் சென்று அமர்ந்து அதைப்பற்றி சிந்திப்பதும், மாற்ற முயல்வதும் பலமுறை.

இத்தகைய வெறுமையின் பிறப்பிடம் எப்படி, எங்கே, எது என்று ஆராயம் போதுதான் பலவகை கிரியா ஊக்கிகளின் தொடர்பை கண்டேன். பெண்கள், இசை, மணம், கவிதை, துன்பம், அவலம், அதிர்ச்சி.... என்று அவற்றில் தான் எத்துணை வகைகள்!

இவற்றில் ஏதேனுமோன்றோ அன்றி ஒரு சிலவோ சூழ்நிலையின் தன்மைக்குள் என்னை மெதுவே உருமாற்றும். பொதுவாக, இந்த உருமாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் நிலையில் தான் மனம் இருக்கும். அதாவது, எவ்வொரு மாற்றத்திற்கும் உடன்பட்டுவிடக் கூடிய பலவீனம் மனதின் அடித்தளத்தில் தோன்றியிருக்கும் நேரமே, இத்துணை விளைவுகளும் ஏற்படும் நேரம்.

கப்பலின் மேலேயல்லாது, அடித்தளத்தில் ஏற்படும் சிறுபிளவே பெருங்கலத்தை கவிழ்த்தல் போன்று, மனம் பலவீனமாய், வலுவற்றதாய் மாற்றப்பட்டு வெறுமை என்னை ஆக்கிரமிக்க, உதவி புரியும் காரணங்களுள் சில என்னை எப்போதும் ஒட்டிக் கொண்டேயிருக்கும், கர்ணனின் கவச குண்டலன்களைப் போல்.

பெரும்பாலான போதுகளில், நான் என் சுய, சமூக நிர்ப்பந்தங்களுக்காக அவற்றை வெட்டியெறிந்து விட முன்வருவதில்லை. ஆனாலும் அவை என்னை ஆட்கொண்டு ஆளுமை செய்யவும் அனுமதிப்பதில்லை.

எப்போது இந்த வெறுமைகள் நேர்கிறதோ, அப்போதெல்லாம் இவை தங்களின் பலியாடான என்னை பார்த்து சிரிப்பதுதான், நான் படைக்கும் காதல் மொழிகளாகவும், கவிதைகளாகவும், ஓவியங்களாகவும் உருமாற்றம் பெற முடியம்.

சமயங்களில், இந்த கிரியா ஊக்கிகளின் இலாபங்களையும், இலாகிரிகளையும் வேண்டி வெறுமைகளை என்னில் நானே செயற்கையாய் ஏற்படுத்திக் கொள்ள முயற்சித்திருக்கிறேன். அம்முயற்சிகளில் பலமுறை நான் தோல்வியையே தழுவினேன் என்பதை வெளிபடுத்துவதில் வெட்கமில்லை.

காதலுக்காகவும், கவிதைக்காகவும் நான் முயன்றும் ஏற்படுத்திக்கொள்ளத் தவறிய வெறுமைகள், காதலையும் கவிதையையும், ஒவ்வொரு பிறப்பின் சாரமாகவுள்ள இயற்கையை பெருமைப்படுத்தினவேயன்றி யாரையும், குறிப்பாக என் சிந்தனையின் சாரத்தையும், வீர்யத்தையும் சிறுமைப்படுத்தவில்லை என்றே கருதுகிறேன்.

ஆனால், சிந்தனை வெறுமையை என் ஆளுமைக்குள் கொணர்ந்து, மாயைகளையும் விளைவுபிசாசுகளையும் பற்றிக் கவலையின்றி நான் சில சமயம் படைத்த பரிமாணங்களில், முத்தின் வனப்பும், வைரத்தின் வன்மையும், தங்கத்தின் தன்மையும் இல்லாமலில்லை.

என் போன்றோரைத் தவிர சிந்தனை வெறுமையை நுகர்வோர் என்று மதுவருந்தியவன் மற்றும் மனநிலை பிறழ்ந்தவன் என்று குறிக்கத் தோன்றுகிறது. அவர்களை போலவும் வெறுமையின் நிறைவை அதிகமாய் சுவைப்போர் யாரிருக்கிறார்கள்?

மாயையின் உந்துதலால், நான் சூழ்நிலை பரிகாரம் தேடப் புறப்பட்டு அடையும் இடம் கண்டிப்பாக, ஒவ்வொரு இவ்வகை நிகழ்வின் முடிவிலும், எனக்கு முன்பே பரிச்சயமானதாகத்தான் இருந்திருக்கின்றது.

சிறிது நேர சிந்தனை, மனதை வலுக்கட்டாயமாக மற்ற நேர்வுகளில் செலுத்துவது, நண்பனுடன் அளவளாவுதல் போன்ற காரியங்கள் இந்த முரட்டுக் குதிரைக்கு சவுக்குகளாய் இருப்பதை கண்டிருக்கிறேன். வெறுப்பல்ல அது, பெரிதும் இந்த முரட்டுக் குதிரையே என்னை படைப்பின் சிகரங்களுக்கு அழைத்து சென்றிருக்கிறது என்பதும், தன்மானச் சரிவுகளிலிருந்து காத்திருக்கிறது என்பதும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை.

- 17/03/87

என் - துளி

என் கண்களுக்குள்
நானுணரும் வெப்பம்
கரித்தபடி
நகர்கிறது ஒரு துளி

உன் கண்ணில்
ஒற்றி
பகிர்ந்து கொள்ள
ஆவியாகுமுன்
வருமோவுன்
குவிந்த கைகள்

- 13/05/2001

ஒற்றைச் செருப்பு

நாற்சந்தியில்
நடுத்தெருவில்
நடைப்பாதையில்
எப்போதும் கிடக்கும்
ஒற்றைச் செருப்பு
எப்படித் தொலைந்தது
மற்றொன்று
எந்த நிர்ப்பந்தம்
பிரிக்குமவற்றை

கவனிப்பாரற்று
கிடந்துகொண்டேயிருக்கிறது
அடித்து புரட்டும்
அடைமழை வரும் வரை

போகும் ஊர் முழுதும்
பார்க்குமந்த
ஒற்றைச் செருப்பை
எண்ணப் புரியாத
ஏதோவொன்றின்
சீரழிவாய் எண்ணி
ஏங்கி விதிர்க்கும்
மனசு

- 16/05/92

(ம)த(க)னம்

மோகனத்தில் குளித்துவிட்டு
முத்தெடுத்து போர்த்திய பின்னும்
ஏன் எனக்குள்
அப்படியோர் நடுக்கம்
உன்
இதழ்களின் வளைவுகளில்
ஈரங்களின் அழைப்புகளில்
இறங்கிப் போயும்
ஏன் என்னில்
அச்சம்

கன்னக் கதுப்போடு
சிவந்த மென்செவி மடலோடு
உரசியும்
என்னுதடுகள்
ஏனிப்படித் துடிக்கின்றன

மேலெங்கும்
பரவிப் போர்த்தும்
உன் கூந்தலிழை பின்னும்
என் விரல்கள்
எதைத் தேடுகின்றன

விம்மித் தணியா
வெம்மூச்சுகள்
முத்தத்தின் ஈரத்தை
மறைத்து விடாதா

இடை பொடித்திருக்கும்
மயிர்த் துளிகள்

இமை சோர
என்னிமை மூடும்
உன் இமையிழைகள்

நீள் விரல்களின்
மென்பதிவுக்குள்
புதைந்து கிடக்கும் முகம்

தன்னோடு
எரிந்து போகும்
காமம்

- 28/02/92
பாதை தேடிக்கொண்ட பின்

தேட வேண்டும் -

- என் கால்களை

- 02/01/92

Friday, April 23, 2010

பிரசுரம்

உயிரோசையில் வெளிவந்திருக்கும் 'எதிர்நோக்கும் இருவழிவிலகல்'

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2804

Sunday, April 18, 2010

எதிர்நோக்கும் இருவழி விலகல்



தணலையுமிழும் உன் தோள்கள்
தண்மை கொண்டிருந்தன அன்று
பேசியவை காதல் மொழிகள்
அல்லவென்றாலும்
அருவருப்பை கூட்டும் விதமாய்
இல்லை இன்று போல் அன்று
கண்கள் நேர் பார்வையில்
காரணம் புரியும் அன்று
விரிந்த கைகளும்
தலை கோதும் விரல்களும்
அருவமாய் வீசிப் பரப்பும்
அமைதியை அன்று
காமத்திற்குள் காதல்
புகுத்தியதில்லை நாம்
துணையுடன் கலவியும்
அவ்வாறே

நாமின்று
நடந்து போகும் பாதை
நமக்கென விதிக்கப்பட்டதல்ல
ஒவ்வொரு வளைவிலும்
கழன்று விழுகின்றன
சொற்கள்
மௌனத்தினால் அளக்கப்படும்
இந்தப் பயணம்
மிக்க வலி மிக்கது
என நீயும் அறிவாய்

உன் என் குருதிகளால்
நிரம்புகின்ற பாதையின் சரிவுகள்
நம் கடந்த நினைவுகளை
பிரதிபலித்து தளும்புகின்றன
விண்ணெங்கும் பொழியும்
ஒளி கருகுகிறது
நம் இன்றைய உறவைப் போல்

நேர்கொள்வதில்லை கண்கள்
வார்த்தைகள் தம் இலக்கை
விளிப்பதில்லை
அருவமாய் சூழ்ந்திருந்த
புரிதலின் சருகுகளின் மேல்தான்
நாம் நடக்கும்
இந்தப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது

நானஞ்சிய
பாதையின் இருவழி விலகல்
எதிர்கொள்கிறது இன்று
பாதங்களிலும் உடல்களிலும்
படிந்து இழியும்
நினைவுகளின் எச்சங்களையும்
குரூரங்களின் வலிகளையும்
கழுவி விடும்
ஒரு பெருமழையை
பன்முறை பொய்த்திருந்தும்
எதிர்நோக்குகிறோம் நாம்

எங்கிருந்தோ நீளும்
என நான் நம்பும்
ஒரு விரல் சுட்டும் பாதையை
தெரிவு செய்ய
நான் காத்திருக்கிறேன்
உன் வழமையான
என்னில் மட்டும் சித்தித்திராத
அமைதியுடன் நீயும் காத்திருக்கிறாய்
நம் முன்னே
நாமடையப் போகும்
வெவ்வேறு இலக்குகளின்
மறைவுகளை பொதித்து
பாதைகளும் காத்திருக்கின்றன
ஓர் உன்மத்த அணைப்பில்
கரைந்து விடும்
அற்ப சாத்தியத்துடன்

Saturday, April 17, 2010

மனமுவந்து

பஸ்ஸில்

பிரயாணித்து கொண்டிருந்த
என்
பார்வை மறைவுக்குள்
பல ஊர்வலக் கால்கள்

பூச்சிந்தும் சில
சிந்திய பூவை மிதிக்கும் சில
ஆடிய வண்ணம் சில
குதிக்கும் சில
செருப்பணிந்து சிலவும்
வெருங்கால்களும் உண்டு
சைக்கிள்கள் உருட்டிக்கொண்டு
சில

நகர்ந்து கொண்டிருந்தது
பஸ்

இடம் கிடைத்து அமர்ந்தேன்
இன்னும் கால்களை
கவனிக்க
ஊர்வலம் கவனிக்க
நடந்து கொண்டிருந்த
அத்தனை கால்களுக்கிடையேயும்
படுத்திருந்த
இரு கால்கள்

- 26/01/90

மனமுவந்து

சரிந்து விழுந்த
சாம்ராஜ்யத்தில்
அங்கே கிடப்பதுவும்
ஒரு கோட்டை

நானும் திறமையாகத்தான்
ஆடினேன்
இது முதல் அல்ல

அத்திறமையான
ஆட்டத்தை
குறிவைத்து
மெதுவே என்
முனைவுகளை குறைத்து
மூலைகளை அடைத்து
என்னை
முதல் தவறு செய்ய விட்டு
காய் நகர்ந்ததும்
இலக்கு மாறாமல் தொடுத்து

மிகத் திறமையான
ஆட்டம் தான்

ஏமாற்றி விட்ட
அந்த நகர்விற்காக
எதிராளியை
பாராட்ட வேண்டும்தான்
அங்கே
வீழ்ந்து கிடப்பது
என் கோட்டையாக
இருந்த போதிலும்

- 15/01/90
காத்திருத்தல் -

அறுந்து தொங்கும்
ஒற்றையிழை
சிலந்தியாய்
அதன் ஏறலாய்

- 10/01/90

சந்தர்ப்பம்

ஒவ்வொரு நாளும்
ரயில் நிலைய
பாலத்தின் படியேறுகையில்
பார்ப்பேன்
அந்தக் கிழவியை

மடிந்த மெலிந்த
கால்களின் முன்
என்றோ அவளுடல்
மீதிருந்த சாட்சியாய்
ஓர் அழுக்கு புடவை
விரித்திருக்க
எப்போதுமே
காலியாய் கிடக்கும்
அந்த தகரக்குவளையோடு
சூம்பிய கைகளில்
ஓரிரு சில்லறைக்காசுகள்

ஒவ்வொரு நாள்
படியேறும்போதும்
காசு போடணும் என்று
நினைப்பேன்
நேரமோ மனமோ
இருந்ததில்லை

இன்று
தீர்மானித்து
காசெடுத்து
போட்டு நிமிர்ந்தால்
விரித்த துண்டின் முன்
யாரோ

- 28/12/89

வைபவம்

மேம்பாலம்
முழுக்க அலைமோதும்
கூட்டம்
வைகையின்
எப்போதுமே நீரற்ற
பரப்பில்
கள்ளழகர்
குதிரையிலிறங்கும்
வைபவம் காண
பக்கத்து கிராம
தகப்பனின் தோள்களில்
வந்து
பலூன் வாங்க
இறங்கி
திரளில் தொலைந்த
குழந்தையாய்
நான்

- 28/12/89

என்றாலும்

யாருக்காவது
புரிந்து விடுகிற
ஒரு கவிதையை
படைக்கிற துடிப்பு
எனக்குள்ளே
இன்னும்
என் சிதறல்களை
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது

முற்றுப் பெறாத வாசகங்கள்
மோனங்கலையாத உறவுகள்
என
என் வெளிப்பாடுகள்
தொடர்ந்த போதும்

- 28/12/89

Monday, April 12, 2010

யாராம்

பாலாடையின் மேல்பரப்பு
மெல்லிய மிக
மெல்லிய காற்றில்
மிருதுவாய் சலசலப்பதை
கண்டும்

அரைக் கோவணத்தின்
சுதந்திரத்தோடு
தூண்டில் வீசி
வெயில் காயும்
சிறுவர்களை
ரசித்துக் கொண்டும்

இழப்பு எது
மீட்பு எது
என்றே தெரியாத
பாவனையோடும்
நான்


இழத்தல் ஏன் மீட்சியில்லை
மீட்பு ஏன் இழத்தலில்லை
எனும் இறுக்கம் கொள்கையில்
நிகழ்வின் தொடர்வில்
என் பங்கு ஏதுமில்லை
எனப் புரிந்தது

- 28/12/89

முகத்திரை

அகந்தைகளாலும்
அவமானங்களாலும்
அடைக்கப்பட்டிருந்த
கம்பிகளை விளக்கி
வெளியே பார்த்தேன்
ஒரு நாள்

எதிரே ஒரு நான்

மலைத்து பார்த்த
என்னை
எள்ளி நகையாடி
அவன் செய்த காரியங்கள்
இதுவரை
நானாடி வந்திருக்கும்
வேடத்திற்கோ
சிறிதும் பொருத்தமில்லை

எதிர்க்க முயன்ற
என் முகத்தில்
ஓர் அடி விழுந்தது

வேடத்திற்குள்
இன்னொரு வேடத்தின்
அவசியம்
புரிந்தது போலிருந்தது

மறுகணம்
விலகிய கம்பிகள்
இறுக
சாத்திக் கொண்டன
சிறிதே
குற்றவுனர்ச்சியுடன்
பத்திரமாக நான்
மறுபடியும்
- 28 / 12 / 89

அவள் நினைவுகள்

இருண்ட சந்துகளில்
குருடனாய்
கைத்தடியின் சத்தம் மட்டும்
அவ்வப்போது முனகுவதாய்
முன்னேயும் பின்னேயும்
ஆளின்றி
நடந்து போகும்
நானறியாது
இதோ
இச்சுவர்களிலும்
இழுத்து அடைக்கப்பட்ட கதவுகளிலும்
தரையிலும்
என்னைத் தொடர்ந்து வரும்
நிழலே
போய்விடு போ போய்விடு

என் பாதையே
நானறியாத போதில்
எங்கே நான்
சுமப்பது உன்னை

இருள் கவிந்த
கண்களுக்குள்
நிழல் துணை உணர்ந்து
புன்னகை மலரும்

கவனம் சிதறி
கண்ணீர் வர
விழும் வேளையில்
நீயொரு சுமை

போ போய்விடு

நிழலுமற்ற தனிமை
நான் மட்டுமே துணை
அடர்ந்த இரவுகளிலும்
என்னருகே இருக்க
நீ காட்டும்
விசுவாசம் கருதி
சில போதும்
விழத் தயாரில்லை

இந்த குருடனை
அந்தகாரத்தில் வாழவிடு
அதற்குள்
என்னை அரசாள விடு
நிஜன்தேடி நிழலணைக்க
ஆகாது

போ போய்விடு

- 26 / 10 /89

Sunday, April 11, 2010

கரிய தேவதைகள்

துர் அதிர்ஷ்டத்தின்
அழகிய கறை படிந்த
என்
கரிய தேவதைகள்
நான் போகுமிடமெல்லாம்
தொட்டுவிடப்போவதாய்
பாவனையில்
தொடாமல் ஒரு சரசம்
சிக்கிக் கொள்வதாய்
நிகழ்வில்
சிக்காமல்
மகிழ்ந்து கொண்டு நான்

எனத்
தொடர்கிறது

கறைகளை
அர்த்தப்படுத்திக் கொள்ள
தெரிவதோடு
முடிந்துவிடவில்லையோ
என் தேவதைகளின்
தொடர்வுகளை
அலட்சியப்படுத்தும் வழியாய்
கறைகளை
கண்களாக்கிக் கொண்டேன்

இனியெல்லாம்
இனிய கருமை
தொடாமலே விடுபட்டுப் போகும்
அன்றி சிக்குண்டு மூச்சிறும்

- 11 / 10/ 93

பாவத்தின் சம்பளம்

வடிக்கப்படாமல்
மடிந்து போகும்
கவிதைகளுக்காய்
இதயம்
இனிமையற்றுப் போன
இரவுகளில்
இரத்தம் சிந்துகிறது


மரணிப்பதற்கா வாழ்வு
முயற்சிகளும்
முயங்குதலும்
முகிழ்ச்சிகளும்
அர்த்தமறுமா

போற்றிக்காத்து
மயங்கிச் சுமந்து
குருதிச் சதைப்பிண்டமாய்
செத்து விழும்
குறைப் பிரசவமா

ஆமெனில்
இங்கு கலவி எதற்கு

இல்லாத பொருள் கூறாதீர்

விழிகளுக்காக
காத்துக் கிடக்கிற
காட்சிகளும்
வீழ்ச்சிகளுக்காக
உயர்ந்து கொண்டிருக்கிற
உன்னதங்களும்
அதிகமிங்கு


வாழ்வதற்குள் முடிந்துவிடும்
முடிவதற்குள் வாழ்ந்துவிடு

கைகளுக்கு
கத்திகளையும், கீதைகளையும்
தயக்கமின்றி
பழக்கிவிட்டேன்
இனி,
பயமின்றி இருக்கலாம்
இறக்கலாம்

- 29 /01 /92

- Ve

நகராமல்
நின்று கொண்டிருக்கிறதோ?

ஆம்
காலம் அசைவற்று
இரைவிழுங்கி கிடக்கிறது

கால் தேடுகையில்
சிறகு முளைக்கும்
எத்தனங்கள்

கனவுகளின்
நாட்குறிப்புகள்
நிகழ்வுகளில் தானே
எழுதப்பட வேண்டும்

நான்
வென்றுவிட வேண்டும்

காலம் உறங்குகிறது


செஞ்சாந்து சுடர்
எழுமுன்
விழித்துக்கொள்ள வேண்டும்

- 15 /01 / 92

எங்கெங்கு காணினும்

அதுபோன்ற ஊர்வலங்களில்
கலந்து கொண்டு பழக்கமில்லை
என்று சொல்லியிருந்தும்
அழைத்து சென்றார் நண்பர்

பார்த்ததும்
வெளியே தினத்தந்தியோடு
போட்டிருந்த பெஞ்சு எழுந்து
கைகுலுக்கிய பழைய நண்பர்கள்
சேமநலம் விசாரித்து
டீக்குடிக்கும்போது
மாலை மூன்று மணி

போதிய கூட்டம் சேர்ந்தது
சைக்கிளுருட்டி
மெதுவே பேசி நடந்தோம்
'பழைய பாட்டுகள் தான் அருமை'
வாதிட்டார் அன்று பழக்கமானவர்
என்னோடு அணிசேர்ந்து
புதுபாட்டுக்கோ ஓரிருவர்

நடந்து கொண்டிருந்தோம்

வந்து சேர்ந்து விட்டோம்
ஏற்பாடுகள் முடிந்ததும்
எங்கிருந்தோ ஓர்
அழுகுரல் கேட்க
அமைதியாக
ஒருநிமிடம் நின்றோம்

- 14 / 01 /92

என்னைப்பற்றி

ரோட்டோரத்தில்
குழம்பின நிறமாய் ஓடும்
மழை நீரில்
துளி விழுந்து எழும் குமிழ்
உடையாமல்
எவ்வளவு தூரம் போகும்

ஊர்தெரியாமல்
போகும் ரயிலிலிருந்து
நான் போட்ட
காற்றின் வேகத்தில் சுழன்று
அடித்தளம் மறையும்
அலுவல் காகிதம்
எத்தனை நாள் அங்கே கிடக்கும்
பத்து நாட்களில் என்னவாகும்


கழுநீர்த் தொட்டியை
முகர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும்
காக்கை குத்திய
கழுத்து புண் சுமந்த மாடு
அதன் கண்ணோர கண்ணீர்க் கறை?

பேருந்து இறங்கி
கரட்டோரம் சிறுநீர் கழித்து
பூத்திருந்த செடி
அடுத்த தடவை வந்தால்
ஞாபகம் வைத்துக்கொள்ள வேணுமாய்
நினைவில் பதிக்கும் அந்தச் சின்னப் பூ?

வாழ்க்கை அப்படித்தான்

- 13 / 01 / 92

சாதனைகள்

எல்லோரும் பார்க்காதீர்கள்
ஏனப்படி பார்க்கிறீர்கள்
உங்களில் யாரும்
அப்படியில்லாமலிருக்கிறீர்களா
பின் ஏன்

ஒருவேளை இருக்கலாம்
எனக்கு தெரியாது
இருப்பினும்
அப்படியொரு பார்வை
தேவையில்லையென்றே தோன்றுகிறது

முன்வந்து
நிதர்சனமாய் வெளிபடுத்திவிட்டு
ஒளிந்து கொள்ளுங்கள்
பரவாயில்லை

உங்களில் யாருக்கும்
துணிவில்லை
என்னைப் போல்

போகட்டும்

சற்றுநேரம்
தத்தம் நிர்வாணங்களை
இனி பாருங்கள்,
அடுத்து
என்னையப்படி பார்க்கும் வரை

- 13 / 01 / 92

நனவு மிச்சங்கள்

முகமற்றுப் போகப்போகிற
இரவுகளின் இறுக்கத்தில்
கண்ணீரில்
முகம்புதைத்துத் தூங்கியிருக்கிறேன்

தோள்களோ மெலிந்துபோய்
கையிடுக்கிலும் காலூன்றும்
கட்டைகளைக் காணோம்

முதுகும், கத்திகளும்
குருதிவழியும் புதைகுழிகளும்
இருண்ட முகங்களும்
அரட்டும் கனவுகளுக்காய்
நனவில் இரவு

எதிர்பார்ப்புக்கள்
புதைந்து கிடக்கும்
குழிக்குள்
கனவுப்புழுதியின்
மிச்சம் ஒட்டிய
முகமற்ற விரல்கள்
நடுங்கிக்கொண்டே நீளும்
உதவிக்கோ உட்தள்ளவோ

கண்மூடினாலும்
கருவிழியின் ஒளியில்
காலத்தை
கடந்தாலோசித்து விடுகிற
கலை மறந்து போனேன்
கனவு மறந்து போனேன்


என்
கால்களும் புதைகையில் அறிவேன்
உயிரற்று போவேன்
சுயமற்று போகும்முன்

- 29 /12 /91

சிரசு விரல்கள்

காவிய வார்த்தைகளின்
களங்கம் அற்று
மௌனத்தால் எனக்கு
மகுடம் சூட்டவந்த
நீ

சாயம் போன

தூண்டுதல் சட்டமிட்ட
மனப் பலகை
இருளடித்து
அகோரங்களும்
அழகுகளும்
அற்புதங்களும்
உன்னதங்களும்
எழுத
உடனே அழிபடும்

அழித்தழித்து
வெளுத்துப் போய்
அழிகிற வலிகளுக்காய்
எழுதுவதும் இற்று
பலகை பயனற்றுப் போமோ?

புதுக்கருமை கூட்ட வேண்டும்
இருளே தனிமை
தனிமையே அழகு
அழிவற்ற அழகு

- 26 / 06 / 91

சகம்

இருள் புலரும்போது
கீழ்வானில் வெளிறிய சிவப்பு
முதலெழுந்த புட்கள் குரல்
யாருக்காகவும்
காத்திராத கடன்கள்
அதிலொரு நிறைவு

அறிந்தும் அறியாமலும்
நெருங்கியும் நெருங்காமலும்
அடித்தும் அணைத்துமாய்
ஒரு சகம்

எதுவும் தேவையற்று
விரைந்து பரவும்
ஒளியொன்ற வேண்டி
ஈடுகொடுக்க வேண்டும்
ஒரு சகம்

மனதுக்குள்
கண்டுபிடித்திராத
எண்ணிலடங்கா
நிறப்பிரிகைகள்
படிமங்கள்

கல்லை
புரட்டிப்பார்க்க
ஒவ்வொரு படிமமும்
அற்புத அழகுடன்
அகோர அவலச்சனத்துடன்
விரிந்த நிறக்கதிருடன்
பெருமைப்பட செதுக்கி
பூரணமாய்
மகிழ்ந்து கொள்ளும்
என் சகம்

- 05 / 5 / 91
காவியம் வடிக்க
கல் செதுக்கியபோது
மெதுவாய்
ஊர்ந்தது தேரை

விழுதுகள்

கனவுக்குள்
வெண்புகை சூழ
ஆடிக்கொண்டிருக்கும்
அந்த ஊஞ்சலில்
நீயும் நானும்

என் அருகிறுத்தி
பார்க்கும் பொது
என்னோடும்
ஆடுகிறது ஊஞ்சல்

உன் பார்வையை
நானுணரும் பொது
எப்படி
நீயும் நானும்
தனித்தனியாய்

ஊஞ்சல்கள்
ஆடுகின்றன
நனவுக்குள்
புகுந்துவிடும்
ஓர் உன்மத்த
முயற்சியின் இயலாமையோடு

- 22 /10 / 93

காலை

சூம்பிப்போன
ஆப்பிள்காரிகளின்
கொழுகொழு குழந்தைகள்
நடைபாதையில்
ஒண்ணுக்கிருக்கும்
நைந்து போன
கிழவியொருத்தி
அவளைவிடவும்
அழுக்கான பழம் விற்பாள்
நிச்சயமாக
இன்றோ நாளையோ
இறந்துவிட வேண்டியிருந்தும்
விரல்களற்ற கையினால்
பீடிபுகைக்கும் கிழவன்

தடதடத்து விரையும்
மின்வண்டியின் தாளம்
சேராத லயத்துடன்
தோள்துண்டு
நெற்றியின் சந்தனப்பொட்டுடன்
குழல் வாசிக்கும்
என்றோ
உயர்விலிருந்த வித்தகன்

காதலிகளுக்காக
சிகரட் புகைத்து
நகம் கடித்துக் காத்திருக்கும்
இளைஞர்கள்
அவர்களை
ஆர்வத்துடன் நோட்டம் விடும்
பெண்கள்

படிப்பதாய் பாவனை செய்யும்
பாதி நேரம் கூட்டம் மேயும்
பெரிசுகள்
நீட்டிய கையில்
டிக்கட் தரவேபடாத
பரிசோதகர்

'வேர்க்கடலெய், இஞ்சி மொரப்பா,
சீப்பு, பொம்மை, சீசன், பஸ்பாஸ்
ரேஷன் கார்டு கவர்'
சத்தம் கடந்து போனால்
'இயேசு விரைவில் வருகிறார்'

எதற்கென்றே தெரியாமல்
எப்போதும் இருக்கும்
பத்துப் பதினைந்து பேரோடு
மூலையில்
மூடிவைக்கப் பட்டிருக்கும்
போன ரயிலில்
அடிபட்டு ஈமொய்க்கும்
(அவன், அவள்)
அது

20 /10 / 93

பரிணாமம்

பார்த்து கொண்டிருக்கும்போதே
நிகழும் உருமாற்றம்
இது வேறு

உருமாறுகையில்
மாறும் சூழல்
அல்லது
சூழல் மாறியதும்
அதன் உருவா

இதோ
மற்றொரு உருமாற்றம்
இதுவும் வேறு சிதைவு

மற்றுமொன்று

மாற்றச்சிதைவு
முற்றுப்பெற்றதா

அதிர்ந்து பார்த்து
விரைந்து கலைக்கையில்
அடுத்த மாற்றம்


ஐயோ
இது
என் முகம்

08 / 09 / 92

சிற்சிதைவுகள்

முகமற்ற சலனங்கள்
கருந்திரையில் பிம்பங்கள்
நேராய் தொங்கும்
வௌவால்
புகைபோக்கி வழியே
மனிதர்கள்
வான் முழுதும்
அசைகிற
ஒலியற்ற உதடுகள்
சிரிக்கும் போல் அழும்
அழும் போல் சிரிக்கும்

அந்தத்துக்குள்ளிருந்து
ஜீவசிசுவின் முனகல்கள்

தொட முடியாத
எரிச்சலூட்டுகிற மார்புகள்
படுத்தால்
இறந்து விடப் போகிற
பயங்கள்

முற்றுப்பெறாத
என்
அர்த்தச் சிதைவுகள்

- 15 / 10 / 93

ஏன்

ஏனென்று கேளுங்கள்
அனைத்தையும்
அதிகம் தெரியாதவர்கள்
அப்படிக் கேட்பது
அவசியம்
அதற்கு பதிலிறுக்க
அநேகம் பேர்
ஆனால்
அவர்களுக்கு
அந்தப் பதில் தெரியாது
அது ஏனென்று
அவர்களிடம் கேளாதீர்கள்
அது தவறான இடம்
அக்கேள்விக்கு வேறு பேர்

எப்பொழுதும்
எப்படியும்
ஏனென்று கேட்பது
அனாவசியம்
என்று மட்டும்
எண்ணி விடாதீர்கள்

ஆகவே
எப்பொழுதும்
ஏனென்று கேளுங்கள்
இந்தக் கவிதையைப் போல

- 08 / 09 / 92

Pandit Venkatesh Kumar and Raag Hameer