Showing posts with label Kavithaigal. Show all posts
Showing posts with label Kavithaigal. Show all posts

Monday, November 9, 2020

சொல்வனம் மின்னிதழில் மூன்று கவிதைகள்

 சொல்வனம் மின்னிதழில் வெளிவந்திருக்கும் மூன்று கவிதைகள் 


https://solvanam.com/2020/11/08/%e0%ae%89%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3/


Sunday, September 6, 2020

ஷிவர்

ஏன் உன்னை 

இன்னும் யாரும் 

அடித்துக் கொல்லவில்லை 

என்று கொலைவெறியோடு கேட்கிறார்கள் 


ஏன் இல்லை 

இதோ என் முன் 

கையில் பல கவிதைகளுடன் 

வார்த்தை விளையாட்டுகளுடன் 

இணையமும் 

சிற்றிலக்கிய சாகசமும் 

இருக்கிறது 

தூக்குக் கயிற்றின்முன் நிற்கும் 

மரணதண்டனைக் கைதியைப்போல் 

அவற்றின்முன் நிற்கிறேன் 


அவற்றின் 

அறிவார்ந்த முதல் தொடுகையில் 

உடலெங்கும் 

அருவருப்பிலும் கூச்சத்திலும் 

புல்லரித்து நடுங்குகிறது 


ஒரே கணத்தில் 

நடுக்கம் மறைந்து 

நானும் அவற்றின் ஒரு பகுதியாக 

கவிதையெழுதத் துவங்குகிறேன் 


நான் எப்போதும் 

முழு முட்டாள்தனத்துடன் 

எதையும் எழுதுவதிலிருந்து 

இத்தனைக் காலம் 

தப்பித்து வந்துகொண்டிருந்தவன் 

ஆயினும் 

அள்ளிப்பூசும் அசூயை 

என்னை மேலும் மோசமாக 

எழுதத் தூண்டுகிறது 


செய்வதறியாது 

கவிதை என்றறிந்ததை செய்யாது 

உறைந்துபோய் 

யோசித்துக் கொண்டிருக்கிறேன் 


எவ்வளவு முயற்சித்தும் 

அடித்து ஊற்றிக்கொண்டேயிருக்கும் 

இத்தகைய கவிதைகளிலிருந்து 

சட்டென்று 

தப்பித்து விட முடிவதில்லை 


கவிதை என்பது 

கவிதை மட்டுமல்ல 

புலன்களை உறைந்துபோகச் செய்யும் 

வல்லமை கொண்ட 

வன்முறையும் கூட 

எழுதியும் அறிந்தும் 

ஏற்றிக்கொண்டிருக்கும் 

உன்னதங்களை 

உருவியெடுத்து 

வெளியில் வீசும் 

வேலையையும் 

கவிதை செய்கிறது 


இலக்கிய வன்முறையின் 

மிகப்பழைய படிமம் 

யாவரும் எதுவும் தெரியாத 

இரசனை அறிவிலிகள் 

என்றெண்ணி 

கவிதையெழுதுதல் 

என்பதை இன்று 

உணரவைத்த 

கவிதை போல் 

வேறேதேனும் உண்டா?


அள்ளிக்குடித்த காடியைப்போல் 

அப்பட்டமான கவிதை 

வாயெங்கும் கசந்து 

உடலெங்கும் பரவுகிறது 


படித்துமுடித்தபிறகும் 

நினைவில் சிந்திச்சிதறும் 

கவிதை வரிகள் வார்த்தை விளையாட்டுகள் 

பற்பல நாட்கள் 

புன்னகையும் வேதனையையும் 

ஒருசேர விளைவித்துக்கொண்டிருக்கின்றன 


ஒரு கவிதை 

ஒரே கவிதை 

இருந்தால் போதும் 

ஈராயிர வருடங்களை 

அற்றுப் போகச் செய்துவிடலாம் 


மேலும் கவிதை 

எவ்வித 

எதிர்பார்ப்பும் இல்லாதது 

சுயகட்டுப்பாடோ 

அவைநாணமோ 

என்றுமில்லாத அதற்கு 

எப்போது நிறுத்திக்கொள்ள 

வேண்டுமென்றும் தெரிவதில்லை 


அந்தக் கவிதையின் பாதிப்பில் 

நீங்களும் கவிதையெழுதினால் 

அந்தக் கவிதையை ஏற்றுக்கொள்ளும் 

அனைவரும் 

உங்கள் கவிதையை 

ஏற்க வேண்டுமென்பதில்லை 

ஏனென்றால் அது அந்தக் கவிதை 

Wednesday, December 13, 2017

ஆதி கதை

Image result for animals gods humans

கதை சொல்லத் தொடங்குகிறேன்

இன்று போலல்ல
அது தேவதைகளும் யக்ஷிகளும்
மிருகங்களும் மனிதர்களும்
தத்தமது உலகம் வாழ்ந்த காலம்

கூடியும் ஊடியும்
களியென யக்ஷிகள்
ஒருநாள் மனிதத்தடம் பதிந்திராத
கருமலைகளின் விண்பொதிந்த
உயரங்களினின்று
மண்வந்து சேர்ந்தன

சிகரங்களின் பனிமுகில்கள்
கொடுமுடிகள் விட்டிறங்கி
கானகத்தின் இலைப்படுகை
கால்நுனி தீண்டிப்பார்க்கும்
அந்நீர்தொடர்ந்து ஆடிவந்த
தேவதைகளும் யக்ஷிகளும்
பிறிதொரு கரைநின்ற
விலங்குகளும் மனிதமும்
கண்டுகொண்டன

அதன்பின் கடந்துமறைந்த
காலங்கள்தோறும்
யாருக்கு பூசனை யாரிடும் படையல்
யாருக்கு ப்ரீதி யார் செய்வதென
கனவுகளிலும் தீரா போர்களில்
கழிந்தன தலைமுறைகள்

ஒருபோது மனிதம் வேண்டி
யக்ஷிகள் தெண்டனிடும்
மறுபோதோ
படையலும் பலியும் கொள்ளுமவை

எழுந்தும் அமிழ்ந்தும்
அவை சன்னதம்
அடங்காதாடும்தோறும்
அவற்றிலொன்றென ஆயினும்
இதுவேதும் கலவா தேவதைகளோ
கூர்பார்வையும் அரிதென சிரியுமென
பனிமூடிச்சிகரங்கள் ஏறியவாறிருந்தன

போர்களில்
படைப்பும் காதலும் ஊக்கமும்
அழிந்துகிடந்த
யக்ஷிகள் மனிதர்கள்முன்
தோன்றின தேவதைகள் ஒருநாள்
யாரும் கேட்டிரா ஒலிகளில் உன்னதம்நிறைத்து
யாரும் கண்டிரா வினைகளில் மர்மம்புதைத்து
தேவதைகள் கூறும்
வேடம் மாற்றுக
முகமூடி களைக
யக்ஷியும் நீ மானுடமும் நீவிர்
விலங்கினமும் நாம்
அனைத்தும் நாமே
வீழ்ந்தன அனைத்தும்
பணிந்தன பாதம்

கதைமுடிந்தது
எனினும்
கனவுமுடியாதென
நாமும் அறிவோம்
அவையும் அறியும்

Wednesday, October 4, 2017

வேட்கை

Image result for bird drinking water + busy road

பசுமஞ்சள் அலகைச் சாய்த்துச் சாய்த்து
கையகல நீர்த்தேக்கத்தை
துளித்துளியாய் அருந்துகிறாய்
அடுத்தப் பேருந்து வந்து
நீர்த்தேக்கத்தை சிதறடிக்குமுன்
உன்சிறு நாவின் வேட்கை
தணியுமோ ஆறாதோ
தவித்தவாறு நடைமேடையில் நிற்கும்
என்னருகே தாவி நின்று
வந்த பேருந்து கிளம்பக் காத்திருக்கிறோம்
நீயும் நானும்

Padhaakai - Kavithai

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை:

https://padhaakai.com/2017/10/04/desire/

Monday, April 24, 2017

புலன்மயக்கம்

Image result for separation lovers

இமைத்துவிட்டாலும் கசங்கிப் போகக்கூடும்
விழிகளுக்குள் தேங்கி நிற்கும் உறவு
கூப்பிய கரங்களின் விரல்நுனிகள்
பார்த்தவாறிருந்தேன்
சொல்லென இல்லாமலேனும்
உணர்வொன்று
விரல்வழி வழிந்துவிடாதா
மென்மயிர் அடர்ந்த உன்
முன்வளைக்கரம் தொட்டு
உணர்த்திவிடாதா
அனிச்சையாகவேனும்
ஏதேனும் நிகழ்ந்துவிடாதா
தீண்ட நீளும் விரல்களின் முன்
சுருங்கும் என் புலன்கள்
சூழலின் உறுத்தல் மீதூற
கழுத்தை அழுத்தித் தேய்த்துக் கொள்கிறேன்
மேசை மீது வைக்கப் பெற்றிருக்கிற
நிறமும் வளைவும் மினுமினுப்பும்
உன் கழுத்தை நினைவூட்டும்
யாரும் இதுவரை தொடாத
தேநீர்க்குவளை புகைகின்றது.

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - புலன்மயக்கம்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - புலன்மயக்கம்

https://padhaakai.com/2017/04/23/sensory-illusions/

Monday, February 20, 2017

எதிரே ஓடும் நதி

எதிரே ஓடிக் கொண்டிருந்த 
நதியைப் போலொரு பெருக்கு 
என்னுள்ளும் 


உயர்ந்து அமிழ்ந்து 
மறைந்து போயினும் 
காலாதீதமாய் விரைந்த தடம் 
காணக்கிடக்கிறது 

உயிர் அருந்தி 
வறண்ட கரைகளில் 
விடாது அள்ளினாலும் 
என் தடம் மறைய 
ஆகும் இன்னும் 
ஆயிரம் காலம் 

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் 7 ஹைக்கூ கவிதைகளின் மொழியாக்கம்

Thursday, December 10, 2015

திணை மயக்கம்

நாட்காட்டியில் தாள்கள் கிழியும் சத்தம்
நொடிகள் கழியும் சத்தம்

யன்னலின் வெளியே
நிறம் மாறி மாறித் தோன்றும்
இரவின் வெக்கையும்
பகலின் மழைஈரமும்

வாழ்வு என்பதும்
நகர்தல் என்பதும்
அர்த்தமற்ற ஒலிக்குறிப்புகள்

சருகாகவும் தளிராகவும்
மிக மென்மையாக
மிக மிக அமைதியாக
உதிர்த்துக் கொண்டிருக்கிறது
காலம்

திறந்தே கிடந்தும்
யாரும் நுழையா
இக்கதவுகள்

திங்களொரு முறை
தோன்றும் மகனோ மகளோ
வருவது கூட
அசையா கதவுகளின்
மன்றாடலின் பேரில்

அசையா நாற்காலி அஃறிணை
அசையா கட்டில் அஃறிணை
அவற்றினூடே
உயிர்ப்புடனொரு
நாட்காட்டியும் கடிகாரமும்
பதாகை  மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: திணை மயக்கம்

http://padhaakai.com/2015/12/09/exotica/

Wednesday, November 4, 2015

பதாகை மின்னிதழ்

பதாகை மின்னிதழ்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் 'ஒற்றைப் பூ'

http://padhaakai.com/2015/11/04/flower/

Thursday, October 8, 2015

இன்மையின் எண்

றந்து விட்ட நண்பனின்  
கைபேசி எண்ணை 
என்ன செய்வது 

அழைப்பே வராமல் 
ஆயிரம் எண்கள் 
இருப்பினும் 
அழித்தாக வேண்டிய கட்டாயம் 
வேறெந்த எண்ணுக்கும்
இல்லையே  

கைபேசித் திரையில் 
அடுக்கடுக்காக நகரும் 
பெயர்களில் 
நண்பனின் பெயரும் 
படமும் எண்ணும் 
துணுக்குறாமல் 
கடந்து செல்ல முடியவில்லை 

நானழைக்க முடியாமலும் 
அவனழைப்பை எதிர்நோக்க 
இயலாமலும் 
துயருறும் இந்நிலையை 
நீங்களெப்படி 
எதிர்கொள்வீர்கள் 

அழித்துத்தான் ஆகவேண்டுமா 
அந்த எண்ணை
 
இருந்தால்தானென்ன 
அடிக்கடி 
இருப்பின் திடுக்கிடல் 
தரும் வலியோடு 


Sunday, November 27, 2011

பொய்மெய்

புதுமை ஒன்றுமில்லை

உறவற்ற உறவையும்
நிரந்தரமான நிரந்தரமின்மையையும்
மறுதலித்தால்
எப்படி சித்திக்கும்
ஞானம்

Pandit Venkatesh Kumar and Raag Hameer