Showing posts with label Love. Show all posts
Showing posts with label Love. Show all posts

Tuesday, June 26, 2012

ஓர் அந்திமாலையின் மழை நேரம்


மழை பெய்து கொண்டிருக்கிறது

அந்தியிலிருந்து இரவுக்கு
இடம் மாறும் நகரத்தின்
நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலை
உன்னையும் என்னையும்
உறுத்தாவண்ணம்
குளிரூட்டப்பட்ட காருக்குள்
நானும் நீயும்

'முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்பூவாய்...'
இசையில் குரலில் வழியும் தாபம்
இசையை தவிர
வைப்பரின் தாளம்

பல வருட உறவு
ஒரு வருட பிரிவு

அருகிருந்தும் ஒரு
மனவிலகல்
ஏதேதோ கற்பிதங்கள்

உண்மைகளை உரத்து
ஒத்துக் கொள்ள
இருவருக்கும் ஏற்பில்லாதவொரு
இடைவெளி

பிரிவின் வருடத்தில்
எத்தனை வலிகள்
அத்தனை வருட
உறவின் மூலமறுக்கும்
வலிகள்
இரவின் நெருக்கமுணர்ந்த
படுக்கையில்
தனியே தனியே
கரைந்து துடைத்த
வலிகள் வலிகள்

'நான் சாயும் தோள் மேல்
வேறாரும் சாய்ந்தால் தகுமா...'

சகிக்க முடியவில்லை
இந்த மௌனம்

பாடலின் அழகு குறித்து வினவுகிறேன்
அவளின் குரல் உணர்த்தும்
உணர்ச்சி குறிக்காமல்

மிகக் குறுகிய
ஆயினும் மிகநீண்டதோர்
ஆவிநின்ற
இடைவெளிக்குப் பிறகு
தாபமும்
வலியும்
தயையும்
தன்னிரக்கமும் பொதிந்து
'ம்' என்கிறாய்

அத்தனை உணர்வுகளையும்
ஒற்றை அசையில்
ஏற்பதற்கு
கழியும் நொடிகள் நிமிடங்கள்

சாலையில் இருந்து
பார்வையை திருப்பி
உன்னைப் பார்க்கிறேன்
பாடல் நிறைவடைந்தும்
வெளி நிறைந்து கிடக்கிறது

கார் மழையினூடே
விரைந்து கொண்டிருக்கிறது

Monday, May 16, 2011

கனவில்

மெல்லிய திரையொன்று
விலக,
நானும் நீயும்
அமர்ந்திருக்கிறோம்;
ஆச்சர்யம்
என்னை அமிழ்த்துகிறது
என் இவ்வளவு அருகே
உன்னை நான் சந்தித்ததில்லையே?

என் முகமருகே
குனிந்து
ஏதோ முணுமுணுக்கிறாய்
சிரித்தவண்ணம்

அசையும்
உன் இதழ்களையும்
மின்னுகிற உன் பற்களையும்
கவனித்து கொண்டிருக்கிறேன்

புரியாத மொழியுதிர்க்கும்
உன் இதழ் மூடும்
என் கைவிரல்
செந்நிற இதழ்களை
வருடுகிறது.
புன்னகை...

எப்படியோ
எப்போதோ
உன்னருகில் நகர்ந்து
கன்னங்களின் செம்மையை
துடைத்துவிடும் 
முயற்சியில் ஒரு முத்தம்...

எனக்கு
அப்போதும் ஆச்சர்யமாயிருக்கிறது
நான்?

சிரிப்புகள் சத்தமற்று
பளீரிடும் புன்னகைக் கோர்வை

உன் கழுத்தின் பின்புறம்
பொன்னிற சிற்றிழை ஒதுக்கி
உன் குழற்கற்றைகள்
என் மார்புரச
கமழ்கிற மணம்
நுகர்ந்தொரு முத்தம்

வார்த்தைகளேயற்றுப் போன
உடல் முழுதும் 
உன் அருகாமையில் இசைகிற
தவிப்புகள்
புன்னகைகளால் 
இசைவுகளால் இயங்க
வாய்நுனி வரை
வந்து நிற்கிறது
'என் நேசம் நீ...
என் தேவை நீ...'

உள்ளுமையோ
உள்ளுணர்வோ 
ஏதோவொன்று தடுக்கிறது
நீ சொல்லட்டுமென்று
உன் இசைவுகள்
என்னில் இசையாகும் போது
ஓசை என்ன முக்யத்துவம் 

இதுவரை
அதிசயித்துக்கொண்டிருந்த எனக்கு,
உன் எதிர்பார்ப்பு நிறைந்த
குறும்பு கண்களில் மின்னுகிற
புன்னகை
வியப்பளிக்கவில்லை
....

யார் சொல்வார்? 

- 11/07/1990

Sunday, May 15, 2011

இந்த சங்கீதம்

இந்த சங்கீதம்
இந்தக் கவிதை
அவள் வீணையில் எழுகிறது
வீணைகள் பிணைக்கப்பட்டவை
அவள் வீணையின் தந்தி
நிரடப்படும் பொது
என் வீணையின் தந்திகள்
சிலிர்க்கின்றன

ஒரு சங்கீதம்
ஜனிக்கிறது

ஓர் உன்மத்தம்
எதற்காகவோ 
எழுந்தடங்குகிறது 

விரல்கள்
ரகசிய வித்வான்கள்
அவைஎழுப்பும்
உணர்ச்சி சங்கீதம்
மனமெங்கும் அலைபாய்கிறது
நானும் அவளும்

இருவீணைகளும் சங்கீத உற்சவம்
நடத்துகின்றன
இசைவேள்வியின் உச்ச உணர்ச்சியில்
அறுந்த தந்தியிரண்டும் 
தழுவிக் கிடக்கின்றன

-19/03/1987

ஞானஸ்நானம்

அதோ,
அந்த வனாந்திரம்...

ஈரத்தோடு கூடிய
இலைகளின் மேல்
அவளும் நானும்
நடக்கையில்
இவள் பாதம்
இடர்ப்ப்படுமோவென
அஞ்சத் தோன்றுகிறது

மண்ணின் அந்த வாசம்

என் தோள்மேல்
புரளும் அவள் தலைமயிர்
பொன்னிறக் கோடுகளாய்
கோலம் போடுகிறது

பறவைகள்
இவள்குரலைக் கேட்டு
வாயடைத்துப் போகின்றன

துணிந்த சிலகுயில்கள்
பலமுறை பாடிப் பார்க்கின்றன

அவளை
அணைத்துச் சாய்த்து
மெதுவாய் நடக்கையில்
உலகின் கோடியை
அடைந்து
வெளிச்சென்றார்ப் போல்
தோன்றுகிறது

கதிரவன்
புகையோடு கூடிய தன்
கைகளை நீட்டி
அந்த அடர்ந்த கானகத்தில்
எங்களை ஆசீர்வதிக்கிறான்
1515342953_4d17f59a3b.jpg (500×451)
அந்த நிசப்தத்தில்
எங்களுயிர்
காதலுக்கு ஏங்குவது கூட
கேட்கிறது

நடக்கிறோம்
நடந்து கொண்டேயிருக்கிறோம்

ஓர் எல்லையற்ற வெளியில்
இயற்கையின் அழகோடு
அவளோடு
வாழ்நாளெல்லாம் இருந்துவிடலாம்போல்
இருக்கிறது

மனம்
அக்கணம்
இன்பமா துன்பமா
வேண்டுமா போதுமா என
உணர்வதை நிறுத்திவிட்டது
அனிச்சையா ஆணையிட்டதா
என்பதுகூட
புரியவில்லை

அந்தக் கானகம்
அடர்ந்து விட்டது

காற்று இலைகளாய்
அட்சதை தூவுகிறது
இவள் மேலுதிர்ந்த
இலைகள் 
கன்னம் தடவை
சாபல்யமடைந்து மெதுவாய்
கீழே விழுகின்றன

அந்த அழகிய காட்டில்
அவளும் நானும்

- 22/07/1986

உயிர்த்தவம்

உன் நினைவுகளை
என் மனபீடத்தில்
வேள்வித்தீயாய்
வளர்த்தேன்

கடைசியில்தான் தெரிந்தது
நினைவுகள் மட்டுமல்லாது
நானுமே
ஆகுதியாய் ஆகிவிட்டேனென்று

ஆயினும்
இத்தனைத் தவத்திற்குப் பின்னும்
நீயேன்
இன்னுமுன்
அவிர்ப்பாகத்தை
அடையவரவில்லை காதலி?

- 04/09/1985


மென்மை

நான்
அவளுக்காக காத்திருக்கிறேன்
நேரம்
நிசப்தக் கத்தியைக் கொண்டு
என்னை அறுக்கிறது ...

அதோ, பூக்கள் மலரும்
சப்தம் கேட்கிறது
வந்தது
என் காதலி

- 07/08/1985

விந்தை

இருளில் பார்க்கவியலோதோ

கண் சன்னலின்
இமைக்கதவுகளை
இழுத்து மூடி
இருட்டுப்படுத்தினாலும்
உன் முகம்தான்
பிரகாசமாய் தெரிகிறது
உன் நினைவே
அனலாய் எரிகிறது

- 10/02/1986

அறிமுகம்

உன்னை
சிந்திக்கவும்
சந்திக்கவுமே
வார்த்தைகளைத் தேடி
நான் களைத்த
போதுதான் -

உன்னால்
சிந்தனைக் கருவுற்று
வார்த்தைகளைப் பிரசவித்த
களைப்பில்
இருந்தபோதுதான் -

நீ
மௌனமொழியை
அறிமுகம் செய்தாய்.

12/02/1986


கார்காலம்

 இலைச்சருகுகளில் காற்று
காதல் மொழி பேசும்
கார்காலம் அது.

என் கையிணைந்த அவள் கைகள்
ஒரு காவியசுகம் பிரிவதை 
தடுப்பதைப் போலெனை
அணைக்கின்றன

என் கண்களுக்குள் அவள் தேடல்
இதயச்சுவடிகளை வருடி
இசையாய் இதழ்களை நிறைக்கிறது

காலத்தை
நினைவுகளைப் போல்
தள்ளிவைத்து விட்டோம்

ஊமை மனதாசைகள்
உள்ளுக்குள் இடம்மாறுகின்றன
கரைகள் காலம்கடந்தே தோன்றுகின்றன

அதிகாலைப் பனியின் வெண்மையில்
முகம் பார்க்கும் இயற்கையே
எங்களுடை

இசைக்கனலின் கதகதப்பில்
கேட்காத 
காலத்தின் குளிர்மூச்சுகள்

அவள் கன்னக்கதுப்பில்
நான் வரைந்த கோலங்கள்
எந்த மார்கழிக்கும் சொந்தமில்லை

நாங்கள் நிறைந்து விட்டோம்
வெள்ளம் நுரைத்து படர்ந்தது
படர்ந்த அலைகள்
காதல் காதல் காதல்
என்று கரையை
ஆதுரத்துடன் முத்தமிட்டன

ஒரு முத்துக்காக
இருவரும் மூழ்கினோம்

22/05/1988

Saturday, April 24, 2010

(ம)த(க)னம்

மோகனத்தில் குளித்துவிட்டு
முத்தெடுத்து போர்த்திய பின்னும்
ஏன் எனக்குள்
அப்படியோர் நடுக்கம்
உன்
இதழ்களின் வளைவுகளில்
ஈரங்களின் அழைப்புகளில்
இறங்கிப் போயும்
ஏன் என்னில்
அச்சம்

கன்னக் கதுப்போடு
சிவந்த மென்செவி மடலோடு
உரசியும்
என்னுதடுகள்
ஏனிப்படித் துடிக்கின்றன

மேலெங்கும்
பரவிப் போர்த்தும்
உன் கூந்தலிழை பின்னும்
என் விரல்கள்
எதைத் தேடுகின்றன

விம்மித் தணியா
வெம்மூச்சுகள்
முத்தத்தின் ஈரத்தை
மறைத்து விடாதா

இடை பொடித்திருக்கும்
மயிர்த் துளிகள்

இமை சோர
என்னிமை மூடும்
உன் இமையிழைகள்

நீள் விரல்களின்
மென்பதிவுக்குள்
புதைந்து கிடக்கும் முகம்

தன்னோடு
எரிந்து போகும்
காமம்

- 28/02/92

Sunday, April 18, 2010

எதிர்நோக்கும் இருவழி விலகல்



தணலையுமிழும் உன் தோள்கள்
தண்மை கொண்டிருந்தன அன்று
பேசியவை காதல் மொழிகள்
அல்லவென்றாலும்
அருவருப்பை கூட்டும் விதமாய்
இல்லை இன்று போல் அன்று
கண்கள் நேர் பார்வையில்
காரணம் புரியும் அன்று
விரிந்த கைகளும்
தலை கோதும் விரல்களும்
அருவமாய் வீசிப் பரப்பும்
அமைதியை அன்று
காமத்திற்குள் காதல்
புகுத்தியதில்லை நாம்
துணையுடன் கலவியும்
அவ்வாறே

நாமின்று
நடந்து போகும் பாதை
நமக்கென விதிக்கப்பட்டதல்ல
ஒவ்வொரு வளைவிலும்
கழன்று விழுகின்றன
சொற்கள்
மௌனத்தினால் அளக்கப்படும்
இந்தப் பயணம்
மிக்க வலி மிக்கது
என நீயும் அறிவாய்

உன் என் குருதிகளால்
நிரம்புகின்ற பாதையின் சரிவுகள்
நம் கடந்த நினைவுகளை
பிரதிபலித்து தளும்புகின்றன
விண்ணெங்கும் பொழியும்
ஒளி கருகுகிறது
நம் இன்றைய உறவைப் போல்

நேர்கொள்வதில்லை கண்கள்
வார்த்தைகள் தம் இலக்கை
விளிப்பதில்லை
அருவமாய் சூழ்ந்திருந்த
புரிதலின் சருகுகளின் மேல்தான்
நாம் நடக்கும்
இந்தப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது

நானஞ்சிய
பாதையின் இருவழி விலகல்
எதிர்கொள்கிறது இன்று
பாதங்களிலும் உடல்களிலும்
படிந்து இழியும்
நினைவுகளின் எச்சங்களையும்
குரூரங்களின் வலிகளையும்
கழுவி விடும்
ஒரு பெருமழையை
பன்முறை பொய்த்திருந்தும்
எதிர்நோக்குகிறோம் நாம்

எங்கிருந்தோ நீளும்
என நான் நம்பும்
ஒரு விரல் சுட்டும் பாதையை
தெரிவு செய்ய
நான் காத்திருக்கிறேன்
உன் வழமையான
என்னில் மட்டும் சித்தித்திராத
அமைதியுடன் நீயும் காத்திருக்கிறாய்
நம் முன்னே
நாமடையப் போகும்
வெவ்வேறு இலக்குகளின்
மறைவுகளை பொதித்து
பாதைகளும் காத்திருக்கின்றன
ஓர் உன்மத்த அணைப்பில்
கரைந்து விடும்
அற்ப சாத்தியத்துடன்

Sunday, September 6, 2009

காத்திருத்தல்

கனன்று பொதிந்த
எண்ணங்களின் எச்சங்கள்
உறைந்து உறங்குகின்றன
உன்
மயிரிழை தீண்டல்
குழலுதிர் ஒற்றைப்பூ
மணம்சுமந்த சேலைநுனி
பெருநெருப்பு
மூட்டிவிடும் சாத்தியத்துடன் 

நுண்புலன்



மேசை நுனியை
எதற்காகவோ
பற்றிக் காத்திருக்கும்
உன் விரல்களை
பார்க்கிறேன்
உன் விரல்களன்றி
வேறெதுவுமற்ற
பார்வைக்கோணத்தில்
உன் முகம் சிந்தும்
புன்னகையை
உணர்கிறேன்

நீ-நான்

படியில்
தவறி விழவிருந்த
என்னை இழுத்து நிறுத்திய
உன்னில் நான்
என்னில் நீ

கற்பிதம்

உன்
கொள்கைகள வேறு
என்
சித்தாந்தன்களோ வேறு
பகிருமனைத்திலும்
தேவையில்லை
இணக்கம் என்பதில்
இணக்கம் உண்டு
நம்மிடம்

துணை

இருள்கவிந்து
இலைவழி சொட்டும்
முன்பனிக்கால மரத்தினடியில் நாம்
உறக்கம் குலைக்கும்
உன் குழறல் பேச்சு கேட்டு
அனைத்து செல்வேன்

உணவை சூடு செய்து
மேசையில்
எதிரெதிர் அமர்ந்து
கண்கள் பார்த்து உண்போம்
விடியும் நாளை
நினைக்க மறுத்து

நர்த்தகி



நாட்டிய நாடகம்
காணக் கிளம்புகிறோம்
மெல்லிய இசை
கசியுமுன்
படுக்கைஅறையில்
நீ
உடைமாற்றும் வைபவம்
நடந்தேறுகிறது

நளினங்களின் ஈர்ப்பில்
பார்த்திருக்கிறேன்
அழகும் ஆளுமையும்
மிளிரும்
அசைவுகளின் முடிவில்
கரமொதுக்கி
நீ சிரிக்கிறாய்
'நர்த்தகி நீ' என்கிறேன்

அவை

நீ கேட்டும்
நான் தரக்கூடாத
துயரங்களையும்
அவலங்களையும்
தாங்கியழுந்தி
அன்றொருநாள் வந்தேன்

தோள் உரச
அமர்ந்திருந்தோம்
நீ பேசவில்லை
நான் பேசவில்லை
நாளின் முடிவில்
கிளம்பினேன்
நீ அமர
விட்டுவிட்டு

நாம்

கலைந்த படுக்கையில்
ஆழ்ந்துறங்கும் நீ

சன்னலோரம்
புலரும் இருள்

கண்ணாடியில் மேசைவிளக்கின்
மஞ்சள் பிம்பம்

உன் வெம்மையை
போர்த்தியபடி
இந்தக்கவிதை
எழுதும் நான்

பெருகி


View !
Originally uploaded by shabgarde paezi ...
கொதித்துத் தகதகக்கிற
கடல்
பார்த்து அமர்ந்திருந்தோம்
பேசுவதற்கு
ஒன்றுமில்லை
என்றாலும் உணர்கிறோம்
காமம்
ஏனிப்படி
நுரைத்து வழிந்து
பெருகித் தளும்பி
பாதம் சீண்டுகிறது
என

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...