Saturday, January 30, 2010

Thaipoosa Thiruvizha in Singapore - Vel Kaavadi

Thaipoosa Thiruvizha in Singapore - Slideshow

Thaipoosa Thiruvizha in Singapore

Thaipoosa Thiruvizha in Singapore

Thaipoosa Thiruvizha in Singapore - Mayil Kaavadi

Thaipoosa Thiruvizha in Singapore - Idumban

Thaipoosa Thiruvizha in Singapore - Inside the Tang Road Murugan Temple

Thaipoosa Thiruvizha in Singapore - Alagu Kaavadi

Thaipoosa Thiruvizha in Singapore - Alagu in Tongue

Thaipoosa Thiruvizha in Singapore - Alagu Chapparam

Thaipoosa Thiruvizha in Singapore - A Chinese Boy

Thaipoosa Thiruvizha in Singapore - Kaavadigal

Thaipoosa Thiruvizha in Singapore

Thursday, January 28, 2010

ஞான திருஷ்டி

தெய்வத்தைப் பார்க்க
அன்று கிளம்பியவன்
மலையும் நதியும் தேடி
கடலும் கரையும் தேடி
எங்கும் காணாமல்
உள்ளுக்குள் உற்றுப்
பார்க்கச் சொன்னவனை
நம்பி
நிஷ்டையிலாழ்ந்தான்
திருஷ்டி
உட்புறம் குவிந்தும்
யாருமறியாமல்
குடும்பம் பெருகி
குழந்தைகள் வளர்ந்து
சம்சாரம் மட்டும்
சிக்கலில்லாமல்
அனுதினம் தோன்றி
கொண்டிருக்கிறது
என்றாவது ஒருநாள்
உட்புறம் குவிந்தது
வெளிப்புறம் விரிந்தால்
தெரிந்து விடலாம்
ஒருவேளை

Sunday, January 24, 2010

"காமக் கனலிற் கருகுஞ் சருகு"

பட்டினத்தார் அருளிய திருப்பாடல் திரட்டு
15 பாடல்களின் மொழியாக்கம்
 
கட்டியணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன்
வெட்டிமுறிக்கு மரம்போற் சரீரத்தை வீழ்த்திவிட்டாற்
கொட்டிமுழக்கி யழுவார்; மயானங் குறுகியப்பால்
எட்டி யடிவைப்ப ரோ? யிறைவா ! கச்சியேகம்பனே.

Will these women and children
Who embrace and shower their love,
Who cry with such passion
As time closes in on,
When this body
Lays as a dead tree would,
Go along
Beyond the final ground?

நல்லா ரிணக்கமும், நின்பூசை நேசமும், ஞானமுமே
அல்லாது வேறு நிலையுளதோ? அகமும், பொருளும்
இல்லாளும் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக்கே இறைவா, கச்சியேகம்பனே !

Which is wise -
Other than being with the righteous,
Pray and love thee
And continue the quest for wisdom?
All that acquired -
Self, wealth, wife and relatives
Children, life and this beautiful body –
Are not they mere illusions!

பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புலன்கள்தமை
வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால்
செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின்திருவடிக்கன்பு
இல்லாதவன், மண்ணிலேன்பிறந்தேன் ! கச்சியேகம்பனே !

Why was I born -
Leading unrighteous life,
Uncontrolled and illiterate
Not being with learned
A liar and
Who had not
Surrendered his love at thy feet

பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே !

How would I muse
For those
Who guard their wealth
Not sharing and unrealizing
That what had been given unto them
Was only given by thee
And was not with them when born
And surely will not leave as they die

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே.

Forgive me
For being an illiterate to thy scriptures
For being mindless not realizing thy love
For being impassionate unmoved by thy love
For not being righteous and not living in path leading unto you
And for not praying and worshipping thee

ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே.

Transient are
This world and goodwill;
Relatives and women;
Children and glories earned;
Wealth and all those
Who are in this world;
It is thy feet,
Which is my permanent abode!

சொல்லால் வருங்குற்றஞ் சிந்தனையால் வருந்தோடஞ்செய்த
பொல்லாத தீவினை பார்வையிற் பாவங்கள் புண்ணியநூல்
அல்லாத கேள்வியைக் கேட்டிடுந் தீங்குகள் ஆயவுமற்று
எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சியேகம்பனே,

Forgive me my sins
The unkind words I utter
Deeds I commit from sinned thoughts
Sinning even with my vision
Paying heed and holding to
Unrighteous words

பிறந்துமண்மீதிற் பிணியே குடிகொண்டு பேரின்பத்தை
மறந்து சிற்றின்பத்தின் மேல்மயலாகிப் புன்மாதருக்குள்
பறந்துழன்றே தடுமாறிப்பொன் தேடியப் பாவையர்க்கீந்து
இறந்திடவோ பணித்தாய் இறைவா, கச்சியேகம்பனே.

What have you destined me for -
Is it to be born into this world
Suffer with countless debilitations
To forget thee and
Fall at the feet of women
Toil tirelessly earning
Wealth to be given unto them
And die an unrepenting death?

கொன்றேன் அனேகமுயிரை எலாம்பின்பு கொன்றுகொன்று
தின்றே அதன்றியும் தீங்குசெய்தேன் அதுதீர்கவென்றே
நின்றேன் நின்சன்னிதிக்கே அதனால் குற்றம்நீபொறுப்பாய்
என்றே யுனைநம்பினேன் இறைவா, கச்சியேகம்பனே.

I stand thus at your sanctum
Praying thy pardon
I have killed, and killed a many
Ate what I killed
Committed sins which are countless
All that had ceased
As I bow at your lotus feet

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?
பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?
மூடனாயடி யேனும றிந்திலேன்,
இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?
என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே?

How many mothers have I had?
How many fathers could I have had?
Countless women I might have had
Countless children did I father
How may births I have had in the past
As a foolish dog, I never, never would know
How many births I am to have henceforth
What will I do, oh my Lord!

கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற் குத்திரங்கோள்கள்
கல்லாமற் கைதவரோ டிணங்காமற் கனவினும்பொய்
சொல்லாமற் சொற்களைக் கேளாமற் றோகையர்மாயையிலே
செல்லாமற் செல்வந் தருவாய், சிதம்பர தேசிகனே.

Bless me the wealth, the wealth of knowledge
Which guides me not to kill
Not to eat what has been killed
Not to learn what not to be learnt
Not to be with sinners
Not to lie ever
To be of my own
And not to fall prey in lust

முடிசார்ந்த மன்னரு மற்றமுள்ளோரு முடிவிலொரு
பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவதுங் கண்டுபின்னுமிந்தப்
பிடிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லாற்பொன்னினம்பலவ
ரடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென்றே யறிவாரில்லையே.

When would it dawn on them,
For those having witnessed
The countless who had ruled the earth
And all who have lived before us
All ending in handful of ashes,
That they should disavow materialistic life
And hold thy golden feet
To end this cycle of births and deaths

பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன வுணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்; 10

Whatever had born, will die; whichever had died, will be born
Whatever had appeared will vanish; whatever had vanished will appear
Whatever had grown, will diminish; whatever had diminished will bloom
Whatever had been felt will be forgotten; whatever had been forgotten will be remembered
Whatever had united will separate; whatever had been divided will be conjoined

அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்;
என்றிவை யனைத்து முணர்ந்தனை, அன்றியும்
பிறந்தன பிறந்தன பிறவிக டோறும்
கொன்றனை யனைத்தும், அனைத்துநினைக் கொன்றன,

What had been eaten were all wastes;
What had been worn were all soiled;
What had been liked was disliked, what had been hated was loved
All were realized by all those born
Born through innumerous births
All annihilated by thee
And all killing thee

தின்றன யனைத்தும், அனைத்துநினைத் தின்றன;
பெற்றன யனைத்தும், அனைத்துநினைப் பெற்றன;
ஓம்பினை யனைத்தும், அனைத்துநினை யோம்பின;
செல்வத்துக் களித்தனை, தரித்திரத் தழுகினை;
சுவர்க்கத் திருந்தினை, நரகிற் கிடந்தனை,

All were eaten and all ate thee
All were born unto thee, all gave birth to thee
All were fed by thee and all fed thee
Lavished at wealth, toiled in penury
Relished at heaven and suffered in hell!

- திருப்பாடல் திரட்டு - பட்டினத்தார் அருளியது

240 பீடா

பள்ளியில் படித்து கொண்டிருந்த பதின்ம பருவம். அப்போது என் மிக நெருங்கிய ஒரே தோழனின் பெயர் சுரேஷ். கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு அவன் வீட்டுக்கு முதல் நாளே சென்று விடுவேன்; இரண்டு நாட்கள் கழித்து தான் வீடு திரும்புவேன். அதே போல் அவனும், தீபாவளி, பொங்கலுக்கு எங்கள் வீட்டுக்கு வந்து விடுவான்.

அப்படி ஒரு தீபாவளி. வயது 15 அல்லது 16 இருக்கும் என நினைக்கிறேன். ஆளுக்கொரு சைக்கிள் இருந்தாலும், பல இடங்களுக்கு பேசியவாறே நடந்து செல்வதுதான் எனக்கும் அவனுக்கும் பிடித்திருந்தது. அயனாவரத்தில் இருந்த எங்கள் வீட்டில் இருந்து வாரக் கடைசியில் செல்லும் கன்னிமாரா நூலகமாகட்டும் அல்லது எப்போதாவது செல்லும் மெரீனா கடற்கரையாகட்டும், அப்படியே மெதுவாக பேசிக்கொண்டே நடையை போட்டு விடும் எங்கள் பழக்கம் எங்கள் வீட்டில் தெரிந்திருந்ததால், மதியம் அம்மா தந்த கறிச்சோறு சாப்பிட்டவுடன், "கெல்லீஸ் வரைக்கும் போயிட்டு வர்றோம்பா", என்று கிளம்பியதை யாரும் பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை.


கைனேகாலஜியிளிருந்து கன் மேகிங் வரை பேசிக்கொண்டே கெல்லீஸ் வந்து அபிராமி திரைஅரங்கு வந்து சேர்ந்தோம். கூட்டத்தில் மிதந்து நுழைந்து, இந்தப் பக்கம் நாலு விளம்பர பலகைகள், அந்த பக்கம் நாலு என்று புதுப் படங்களுக்கு வைத்திருந்ததை வேடிக்கை பார்த்து கொண்டே படிகள் ஏறி உள்ளே சென்று, ஏதோ ஜேம்ஸ் பான்ட் படமும் அப்போது ஓடி கொண்டிருந்தது, ஸ்டில் பார்த்து விட்டு, மிதந்து மிதந்து சாலைக்கே வந்து விட்டோம்.

திரையரங்குக்கு எதிர் புறம் இருந்த கடைதொகுப்பின் ஓரம் ஒரு பான்பீடா கடை இருக்கும். கடை எல்லாம் இல்லை அது. குடை. குடையின் கீழ் ஒரு பெரிய சதுர பெட்டி; பேட்டியின் மேல் பற்பல நிறங்களில் டப்பாக்கள். அவை அடுக்கப்பட்டிருந்த அழுக்குப்படிந்த தாம்பாளத்தில் முரட்டு வெற்றிலைகள். அதே அள்வு முரட்டுத்தனமும் அழுக்கும் கொண்ட அவனிடம் தான் நானும் சுரேஷும், அபிராமிக்கோ அல்லது நாங்கள் வழமையாக புத்தகம் வாடகைக்கு பெறும் கந்தன் லென்டிங் லைப்ரரிக்கோ, வரும்போது ஸ்வீட் பீடா போடுவது.

கறிச்சோறு நெஞ்சை நிறைத்துகொண்டிருக்க, மிதப்போடு அவனிடம் சென்று, "ரெண்டு பீடா" என்றோம். அப்போதுதான் அவன் அந்த சரித்திரப் புகழ் வாய்ந்த அந்த கேள்வியை கேட்டான், "240 யா, 320 யா?" நானும் சுரேஷும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டோம். "என்னடா சொல்றே" என்றேன். "நீ என்ன சொல்றே' என்றான் அவன். ஒரு மிகச் சிறிய சிந்தனைக்கு பிறகு, "240 " என்றோம் கோரசாக. அதற்கு முன் வரை அந்த பீடாவை போட்டதில்லை. அதில் என்ன இருக்கும் என்றும் தெரியாது. ஹ, என்ன இருந்து விடப்போகிறது என்றுதான் சொன்னது. அப்போதும் அந்தப் பாவி கேட்டது ஞாபகம் இருக்கிறது, "இதுக்கு முன்னாடி போட்டிருக்கீங்க தான?' ஒரு கெத்தில் ஆமென்று விட்டோம்.




பின் மதிய வெயில். சாலையில் இருந்த கூட்டமெல்லாம் திரையரங்குக்குள் சென்று விட, அந்த தீபாவளி தெரு காலியாக இருந்தது. கையில் வாங்கியவுடன் அந்த பீடாவை வாயில் இடாமல், பேசிக்கொண்டே வீட்டை நோக்கி கிளம்பினோம். அப்போந்திருந்த உமா திரையரங்கு தாண்டி, கூவம் பாலம் தாண்டி மேடவாக்கம் நோக்கி இருந்கும் போது, ஆளரவமற்ற அந்த சாலையில், மிக அசால்டாக பீடாக்களை வாயில் போட்டோம்.

ஓரிரு நிமிடங்கள் சென்றிருக்கும். வழமையான ஸ்வீட் பீடா சுவைக்கும்போது எதையும் வெளியே உமிழ்வதில்லை. அதேபோல, வாயில் ஊறிய சாற்றினை கொஞ்சம் உள்ளே இறக்கியது தான் தெரியும். நின்ற இடத்திலேயே உலகம் தலை கீழாக சுற்றுவது போல் ஆடுகிறது. கால்களுக்கு கீழே தரையையே காணவில்லை; நெஞ்சை அடைக்கிறது; கண்கள் இருள்கிறது; ஒரே நொடியில் உயிர்பயம் வந்து விட்டது. 'சரவணா, தீபவளியோடு நீ காலி' என்று நெஞ்சை ஒரு கையால் பிடித்து கொண்டு, இன்னொரு கையால் நடைபாதையின் ஓரம் நிற்கும் சிமின்ட் தடுப்புகளை பற்றிக் கொண்டு, திரும்பி பார்த்தால், அங்கே நிலைமை இன்னும் மோசம். அதே சிமின்ட் தடுப்புகளை தலையால் முட்டு கொடுத்து கொண்டிருந்தான் சுரேஷ். என்னடா என்று கேட்பதற்குள் வாயில் மூக்கில் எல்லாம் வாந்தி. நிற்க வேறு முடியவில்ல இருவருக்கும். கிளாக் வொர்க் போல ஒரே நேரத்தில் பக்கத்தில் பக்கத்தில் நின்று கொண்டு கூட்டாக வாந்தி எடுத்து கொண்டிருந்தோம்.

அடிவயிற்றை சுருட்டி வெளியில் கொண்டு வந்து விடும் போலிருந்தது.
ஒரு நான்கைந்து தடவைகளுக்கு பிறகு மனிதபிறவியாக நின்று கொண்டு பேசுவதோ வாந்தி எடுப்பதோ இயலாத காரியமாகி, மெதுவாக அப்படி அப்படியே அவரவர் எடுத்த வாந்திகளுக்கு அருகிலேயே ஆளுக்கொரு திசையை பார்த்து கொண்டு, நடைப்பாதையிலேயே செட்டிலாகி விட்டோம். வாயில் வழிந்த எச்சிலை கூட துடைக்க திராணியில்லாமல், உள்மனது சிந்தனையின் வாயிலாக நம்மை தாக்கியது 240 பீடாதான் என்று கண்டுபிடித்தோம் (வெளிமனது முழுதும் சிந்திக்க முடியாமல் வாந்தி).

பஸ்ஸில் ஏறி வீட்டுக்கு மட்டுமல்ல, வேறெங்கும் போவதை நினைத்து பார்த்தாலே மீண்டும் ஒங்கரித்தது. ஆகவே இந்த முகங்களோடு வீட்டுக்கு இப்போது போக முயற்சிப்பதை விட, கொஞ்ச நேரம் சென்றால் தெளிந்து விடும், மீண்டும் நடந்து ஆசுவாசமாக போகலாம் என்று உட்கார்ந்திருந்தோம். இனி வெளியே வருவதற்கு குடலை தவிர வேறொன்றும் உள்ளே இல்லை என்றான பிறகு, வானம் மேலேயும் , பூமி கீழேயும் ஒருவாறு நிலைத்தது.

எழுந்து நின்றால், பயங்கரமாக ஆடியதை ஒருவர் தோள் மீது மற்றவர் கை போட்டுக் கொண்டு, ஒரு கூட்டு முயற்சியில் நகர்ந்து நகர்ந்து டீக்கடை ஒன்றிற்கு வந்து விட்டோம். 'என்ன தம்பிகளா, டீயா' என்று கேட்டவர்க்கு பதிலொன்றும் சொல்லாமல், ஆளுக்கு இரண்டு கிளாஸ் தண்ணீர் முகர்ந்து முகத்தில் அடித்து கொண்டதை பார்த்ததும் புரிந்திருக்கும். ஒன்றும் பேசாமல் இரண்டு ஸ்ட்ராங் டீ போட்டு கொடுத்தார் அந்த நல்ல மனுஷன். குடித்து விட்டு டீக்கடையில் ஒரு மணிநேரம் உட்கார்ந்திருந்தோம் என்று மரியாதையாக சொல்வதை விட அவமரியாதையாக கிடந்தோம் என்று சொன்னாலும் தப்பில்லை.

இருட்டி விட்டது. ஆனால் தெளிந்து விட்டது. நாலு கிமீ தூரத்தை மூன்று மணிநேரம் நடந்து (உருண்டு என்றும் பாடம்) வீட்டுக்கு சென்று சேர்ந்தோம். நாங்களிருந்த கோலத்தை பார்த்து பதறிய அம்மாவை, அப்பா, என்ன புரிந்து கொண்டாரோ, 'விடு விடு, நடந்து களைப்பா வந்துருக்கானுங்க, கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடட்டும்' என்றார். என் அறைக்குள் சென்று இருவரும் விழுந்தது தான், நடுநிசியில் எழுந்து தான் அடுக்களையில் சாப்பாட்டுக்கு உருட்டினோம், மறக்க முடியாத அந்த தீபாவளியில்!

Friday, January 22, 2010

நித்தியச் சிதறல்

நாமனைவரும்
அன்றாடம் பார்க்கும்
ஒரு முகம்
எப்படியும்
பிறந்தததிலிருந்து
பார்த்திருக்கும்
லட்சக்கணக்கான முகங்களுக்கும்
அதற்கும் வேறுபாடு
ஏதொன்றும் காண்பதற்கில்லை
பாதி செருகிய கண்களோ
அலைபாய்ந்து தோள் புரளும்
கூந்தலோ இல்லை
அபாய ஹஸ்தமும்
சின்முத்திரைகளும் இல்லை
அங்கிங்கு
அலைந்து காணும்
துறவியரின் ஞானியரின்
அடையாளமேதுமில்லை
எதிரமர்ந்திருந்த முகத்தில்
உடலில்
காணும்போதே
கடல் நிலைக்கும்
அமைதி வளரக் கண்டேன்
வண்ண வண்ணக் கொடிகள்
காற்றில் கிழிபட்டு
திருவிழா இரைச்சலில்
நாலாபக்கமும்
பதறிப் பறப்பதுபோல்
துடித்துத் துள்ளும்
என் பிரக்ஞையின்
நித்தியத்தை
நிலைநிறுத்திக் கொண்டு

Sunday, January 17, 2010

Letters to Jeyamohan - 8

அன்புள்ள ஜெயமோகன்,

பெண்மையில் ஆண்மையையும், ஆண்மையில் பெண்மையையும் பிரித்துணரும் வல்லமை அனைவருக்கும் வாய்ப்பதில்லை. இயற்கையின் இவ்விரு சக்திகளுக்கிடையே நாம் அனுதினமும், நமது வெளிப்பாடுகளையும், புரிதல்களையும், அனுசரணைகளையும் மாறுபடுத்த வேண்டியிருக்கிறது.

“தன் ஒவ்வொரு துளி இருபபலும் பிறிதொன்றுக்காக காத்திருக்க, தன்னை வந்தடையும் ஒரு சிறு தொடுகையில் பூரித்து கண்விழித்தெழ, தன்னுள் விழும் ஒரு துளி உயிர்த்தூண்டலை தன் மொத்த ஆன்மாவையும் உணவாகக் கொடுத்து உருவாக்கி எடுக்க பெண்மையாலேயே முடியும். உடலிலும் உள்ளத்திலும் உறுதியாகிவிட்ட ஆண்மையின் இறுக்கத்தை கரைத்து பெண்மையாகி நெகிழ எத்தனை தவம் எத்தனை கண்ணீர் தேவைப்பட்டிருக்கும்!”

மொத்த கட்டுரையின் சாரமாக நான் கருதும் இவ்வரிகள் தான் எத்துணை சத்தியமானவை! எத்துணை நெகிழ்ச்சியானவை!

சரவணன்

Letters to Jeyamohan - 7

அன்புள்ள ஜெயமோகன்,

எவ்வித எதிர்பார்ப்புகளும் அற்ற நிலையை மட்டுமே இயற்கையின் வல்லமையின் முன் கைக்கொள்ள தோன்றுகிறது. அனைத்தையும் கடந்த, அனைத்தையும் தோற்றுவித்த பரிபூரணத்தின் முன் என்னை ஆட்கொள், அருள் செய் என்று இறைஞ்சுவது கூட அவசியமா என்று தோன்றுகிறது. அப்படிக் கேட்பதே கூட அகண்ட சக்தியிலிருந்து என்னைப் பிரித்து உணர்ந்து விடுவதாகிவிடாதா?

விரிந்து கிடக்கும் பள்ளத் தாக்குகளிலும், காடுகளிலும், புரண்டோடும் நதிகளிலும், மலைகளிலும், கடல்களிலும், பாலைகளின் முன்னும் தன்னை கரைத்துக் கொள்வது தவிர வேறெது சிறந்தது? என்னைப் படைத்து வாழ்விக்கும், என் சந்ததியை வாழ்விக்கப் போகும் இப்ப்ரபஞ்சத்தினிடம் கேட்பதற்கு எதுவுமில்லை, தன்னில் என்னை ஈர்த்துக் கொள்ளும் கணங்களை நீட்டித்து தரும்படி கேட்பதைத் தவிர.

சில வருடங்களுக்கு முன், கேரளாவில் காலடிக்கு சென்றிருந்தேன். அப்போது பெரியாற்றின் கரையில் பெற்ற அந்த மனவெழுச்சியின் பதிவை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி ஜெயமோகன்,

சரவணன்
சிங்கப்பூர்

இந்தக் கணம்

கொதிக்கும் தணல்
கடல் எழுந்து
வெண்ணிற உக்கிரம்
தருமந்த பகல்
விடும் மூச்சின்
ஆவி சூழ்ந்து
நாசி இறுக்கும்
நடந்து சலித்த
கால்கள் தேடும்
நிழலோ மஞ்சள்
மேனி எங்கும்
புதிதாய் முளைக்கும்
வியர்வை ஊற்றுகள்
நெற்றி மேடிறங்கி
புருவம் வழிந்து
கண்களில் கரைந்து
திரையிடும் பார்வை
மறையும் தருணம்
தோன்றி விடும்
அடுத்த அடி
விடுக்கும் மூச்சு
அல்ல என்
இறுதி மூச்சு
இருக்கலாம் ஒருவேளை
இருப்பினும் இருப்பினும்
தவழ்ந்தேனும் நகரும்
எனதிந்த அடி
ஒழுகியேனும் நழுவும்
விடுமிந்த மூச்சு

Saturday, January 9, 2010

நிகழ்வு

தலை சாய்க்கவில்லை
இமை செருக இயலவில்லை
உடலறுக்கும்
கவசமன்றி இருப்பதில்லை
கைகளினின்றும்
வாளையும் கேடயத்தையும்
கீழிறக்க இயலுவதில்லை
எப்பொழுதோ
நிகழப் போகுமொன்றுக்காக
எப்பொழுதும்
ஆயத்தமாய் இருப்பது
அலுத்து விட்டது

சேறு

புதுக்கிணற்றில்
பொங்குகிறது நீருற்று
குடிக்க
குளிக்க
வயலுக்கு பாய்ச்ச
தோட்டம் போட
தடையில்லை இனிமேல்
மிக்க
வசதிதான்
தற்கொலை செய்யவும்

ஏது

கண்கள் மூடிக்கொண்டாலும்
கொட்டுகிறது கண்ணீர்
காரணம் தெரிந்தாலும்
ஏற்க மறுக்கிறது மனசு

கப்பிக் கிடக்கும் இருளுக்குள்
கவ்விப் பிடிக்கும் நிசத்தில்
உணர்வே வலியாய்
வலியே சுகமாய்
விடுபட முடியாத
தேவையுமில்லாத
ஒரு
சுயநிர்பந்த சுகமாய்
சகமாய்
பழகிப் போன
இது -
என்
அற்புதங்களில் ஒன்று

Diagnosis

தவறான டயக்னாசிசால்
தள்ளாடும் உடல்போல்
மெஷின்
நுட்பமான தேர்வை
எதிர்பார்க்கும் பண்பு
அதன் நேர்த்தியான
கட்டமைப்பில் பொதிந்திருக்கிறது
CPU வீழ்ந்தது - இல்லை
SCSI பிரச்சனை - இல்லை
RAM தான் - அதுவுமில்லை
என
உள்ளுறுப்புகள் கூறாகி
ஆராயப்படுவதை
ரகசிய வேதனையுடன்
பார்த்தபடி நகர்கிறது
மெஷின்

Thursday, January 7, 2010

இளையராஜாவின் 'இசையில் தொடங்குதம்மா'



சில வருடங்களுக்கு பிறகு, ஹே ராம் படத்தில் வரும் 'இசையில் தொடங்குதம்மா' என்ற பாடலை மீண்டும் அனுபவிக்க நேர்ந்தது. இரண்டு நாட்களுக்கு வேறு பாடல்கள் எதுவும் நினைவில் தங்கவில்லை என்பது மட்டுமல்ல, இளையராஜாவின் இசை ஆளுமையை நேர்கொண்ட உற்சாகம் அவரது உன்னதத்தை உணர வைத்தது.


பல்லாயிரம் பாடல்கள், பல்வேறு இசைகோவைகள் தந்த ராஜாவின் மிக அற்புத பாடல்கள் என்று யார் ஒரு பட்டியலிட்டாலும் 'இசையில் தொடங்குதம்மா' அப்பட்டியலில் இடம் பெறும் என்பதில் ஐயமில்லை. பல காரணங்கள். மிக அபூர்வமாக இசைக்கப்படும் விவாஹப்ரியா ராகம் எப்படி கையாண்டிருக்கிறார், சாஸ்திரிய ஹிந்துஸ்தானி இசை எப்படி கலந்திருக்கிறது என்பது போன்ற வல்லுனர்கள் கூற வேண்டிய எவ்வளவோ விஷயங்கள் அந்த பாடலில் இருக்கலாம்.

என்னை போன்ற ஒரு சாதாரண ராஜா ரசிகனின் பார்வையிலும் அந்த பாடல் உள்ளத்தை உறைய வைப்பதற்கு சில காரணங்கள் உண்டு. அந்த பாடலை எழுதியதும் ராஜாதான். பாடியது பண்டிட் அஜய் சக்ரபோர்த்தி. படத்தில் அந்த பாடல் இடம் பெறும் சூழ்நிலையை இங்கே விவரிக்க வேண்டும். நாலாயிர திவ்ய பிரபந்தம், ஆண்டாள் பாசுரம் பாடும் தீவிர வைணவ குடும்பத்து இளைஞன்; புதிதாக திருமணமானவன்; மிக அழகிய, அவனை தவிர வேறொன்றும் அறியாத, மேலெங்கும் அறியாமை போர்த்திய மனைவி; இந்து இயக்க புரவலரான (இந்தியாவின் மேற்கில் ஒரு) மகாராஜா தரும் விருந்து; சூழலில் மது; திடீரென சமூக தளத்தில் கிடைக்க பெறும் அந்தஸ்து, கவனிப்பு - இந்த பின்புலத்தில் நடக்கும் இராவண வதம் விழாவில், இடம்பெறும் பாடல் அது.

இயக்குனர் கமல் ஹாசன் ராஜாவிடம் என்ன சொல்லியிருக்க முடியும், எவ்வளவு சொல்லியிருக்க முடியும் என எண்ணிப் பார்க்கிறேன். மதுவின் போதை, அழகி மனைவியின் போதை, ஒரு வகையில் தீவிரவாத அதிகாரம் தரும் போதை என்று நாயகன் தடுமாறுகிறான். காமம் அவனை சுழற்றுகிறது. சுற்றிலும் ஆட்டம், களி, வண்ணங்கள், விழாவின் மயக்கம் தரும் சைகெடலிக் குழப்பம்.

பாடல் ஒரு பின்னணி இசை போல அங்கே துவங்குகிறது. அவனது பேசும் குரல்கள் முன்னணியில் ஒலிக்கின்றன. மனைவி அறியாமையின் அழகோடு வாசனையோடு அருகே இருக்கிறாள். சோம பானம் அவனை வெறிகொள்ள செய்கிறது. இந்த மனநிலை, இந்த கலாசார பின்புலம்,  நாட்டின் தனித்தன்மை வாய்ந்த ஒரு பகுதியில் நடைபெறும் நிகழ்வின் பாடல்.

'இசையில் தொடங்குதம்மா' வில் வேறுபட்ட ராஜாவை காண்கிறோம்.

நௌஷாத் மற்றும் சலீல் சௌதுரி போன்ற மேதைகள் வெறும் தாள வாத்தியங்களின் ரிதம் அமைப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு மாபெரும் வெற்றி பாடல்களை உருவாக்கினார்கள். ராஜாவும் சில பாடல்கள் அப்படி தந்திருக்கிறார். அதில் 'இசையில் தொடங்குதம்மா' உச்சத்தில் இருக்கும். நாயகனை சுழற்றியடிக்கும் பல்வேறு போதைகள் பாடலிலும் சுழல்கின்றன, தாள வாத்தியங்களின் விரைந்த அடுக்குகள், ஒன்றின் மேல் மற்றொன்று என ஒரு காம்ப்ளெக்ஸ் கோர்வையாக அமைக்கபட்டிருக்கிறது. தோலக், தபலா, முழவுகள், ராம லீலா உர்ச்சவத்தின் போது இசைக்கப்படும் கொட்டுகள் மற்றும் சிம்பல்கள்... முன்னெப்போதும் ராஜாவின் பாடல்களில் கேட்டிராத நரம்புகளை சுண்டும், உடலை பதற செய்யும் ஒரு தாளம்.

பொதுவாக ராஜாவின் பாடல்கள் அனைத்திலும் ஒரு கிரியேடிவ் ரஷ் தெரியும், முன்னிசை அல்லது இடையிசை ஆகட்டும், ஒரு ஸ்ட்ரிங், ஒரு விண்ட், ஒரு பெர்குஷன், மீண்டும் ஒரு ஸ்ட்ரிங் Orchestration என அடுத்தடுத்து இசைகோர்வைகள் ஒன்றை தொடர்ந்து இன்னொன்று வந்து கொண்டேயிருக்கும். அவற்றில் ஒரு பீஸ் 8 - 10 நொடிகளுக்குள் முடிந்து விடும். உதாரணங்கள் - தென்றல் வந்து என்னை தொடும், நினைவெல்லாம் நித்யா பாடல்கள்.

ஆனால் ஹே ராம் பட பாடலில், ராஜா அந்த கிரியேடிவ் ரஷ்ஷை முறைபடுத்தி, ஒரு கட்டுக்குள் வெளிபடுத்தியிருக்கிறார். முதல் interlude இல், ஒரு ஷெனாய்; இரண்டாவது interlude இல், ஒற்றை வயலின், பின்னால் ஒரு வட இந்திய நரம்பு கருவி (சாரங்கி / தில்ரூபா?). அவ்வளவுதான். அதுவும் ஒரு இண்டர்லுடில் ஒரே ஒரு அசைவு/movement . மற்றபடி பாடல் முழுதும் மிக சிக்கலான தாளம், தாளம் மட்டுமே. இது ராஜாவின் பாடல்களில் அபூர்வம். இரண்டாவது இடை இசையில் 12 தாள அளவுக்கு எந்த accompaniment -இம் இல்லாமல் தாளம் மட்டும் இயங்குவது ராஜாவின் வேறெந்த பாடலிலும் கேட்டதில்லை. இந்த கிரியேடிவ் அமைதியை ராஜா கைகொண்ட பாடல்கள் எல்லாம் (மிகசிலவேயானாலும்) அற்புதமான அமைப்புகள்: கண்ணே கலைமானே (மூன்றாம் பிறை), தூரத்தில் நான் கண்ட உன் மனம் (நிழல்கள்), தாலாட்டுதே வானம் (கடல் மீன்கள்)....

இவற்றிலும் மற்றும் மிகப் பல பாடல்களிலும், ரிதம் ஸ்டார்ட் - ஸ்டாப் முன்னிசை, இடை இசைகளுக்குள், சரணத்தில் என தாள நடை நின்று, நடை மாறுவதும், நின்று வேறு வாத்தியங்கள் துவங்குவதும் ராஜாவின் ஓர் உத்தி. 'இசையில் தொடங்குதம்மா' அதிலும் மாறுபட்ட பாடல். துவக்கத்திலிருந்து முடிவு வரை தாளம் எங்கும் நிற்பதில்லை. சுழன்று சுழன்று ஓர் உச்சத்திற்கு செல்வதும் சரணம் துவங்கியதும் மயங்கி மயங்கி கீழே சரிவதும் என அலகிலா மருகுதலாகவே இசை நிகழ்கிறது.

'நாளில் பாதி இருளில் போகும் இயற்கையில்
வாழ்வில் பாதி நன்மை தீமை தேடலில்
உயிர்களே
உயிர்களே
உலகிலே இன்பத்தை தேடி தேடி
தேகத்தில் வந்ததே'

- இது இரண்டாவது சரணம். இதற்கு முன்னும் பின்னும் வரும் சுர சங்கதிகளில் அஜய் சக்ரபர்தியும் தாளமும் பிரிக்க முடியாதபடி பின்னி துள்ளுவது எழுத்தில் வடிக்க முடியாத அழகு.

உலக இசையை விடுங்கள், இந்திய இசையில், இந்த சூழ்நிலைக்கு, இந்த பாத்திரப் படைப்புக்கு, இந்தக் கலாச்சார பின்புலத்திற்கு இசை வேறு யாரால் சிந்தித்திருக்க முடியும்? எவ்வளவு ஓர் ஆழமான புரிதலும், உள்வாங்குதலும், மேதைமையும் இருப்பின், இந்த பாடல் பிறந்திருக்கும்? கை கூப்பி தொழத் தோன்றியது, அந்த பாடலை எத்தனையாவது முறையாகவோ அந்த நள்ளிரவில் கேட்ட போது...

இனி 'இசையில் தொடங்குதம்மா'....



IsayilThodanguthamma.mp3












Monday, January 4, 2010

கிரியா வித்வம்


பள்ளத்தில்
பொருந்தியது கோல்
கையின்
வலிவு ஏற
சக்கரசுழற்சியின் தளம்
நேரென்று ஆகும்
பத்து விரல்கள்
போய் பதிய
இயைந்து வளைந்து
அழுத்தம் பெற்று
பெற்ற இடத்தில்
வட்டப்பாதை கொள்ளும்
உயர்ந்து எழும்
உருவம்
விரல்களின்
வித்வ வேகம்

சிறிய
மேடிட்ட ஒரு வட்டம்
கீழ்
உட்குழிந்த
நாலு விரற்கடை பள்ளம்
மெல்ல பக்கவாட்டில்
சரிந்து
உச்சமடைந்து
உள்வாங்கி
முடியும்
பானை

முதலில் தெரியுமா
உங்களுக்கு

அந்த
விரல்களுக்கு?

Pandit Venkatesh Kumar and Raag Hameer