Wednesday, November 4, 2015

ஒற்றைப் பூ


மகிழ மரத்தினின்று
பூக்கள் உதிர்வது போல்
கிரணங்கள் அறைக்குள்
பெய்து  கொண்டிருக்கின்றன

மௌனம் காத்திருந்த நம்மிருவரிடயே
இசை பேசிக் கொண்டிருந்தது 

மெல்லிய
ஆவிபுகையும்
தேநீர்க்கோப்பையை உறிஞ்சிவிட்டு 
என்னை பார்க்கிறாய்

புலர்வெயிலின்
இளவெம்மையுடன் 
மெதுமெதுவே மஞ்சள் மாறும்
அறையின் பரிமாணங்களை
ஹரி பிரசாதின் குழலிசை நிறைக்கிறது

தோடி ராகந்தானே 
என வினவுகிறேன்

தலையசைக்கிறாய்
செவிமடல் பொதிந்த
அணிகள் ஆடுகின்றன
வர்ணங்களை வாரியிறைத்தபடி

என்னுள்ளும்
பொன்னிழைகளாய் மின்னும்
காதோர குழற்கற்றைகளை 
ஒதுக்கிவிட 
தவிக்கும் என் விரல்களின்
தகிப்பை ஏன் மறைக்க வேண்டும்
என எண்ணுகிறேன்

உன் இதழில் இருந்து முறுவலொன்று
நழுவிச் சிந்துகிறது

வெளியே
வெட்கமின்றி
பூக்கள்
உதிர்ந்து கொண்டிருக்கின்றன

அற்றது

நதி நிறம் மாறி 

கால்களுக்காக காத்திருக்கும்
வழுக்கும் பின்னிரவு

நீரின் அடுக்குகளில்
மெல்லிய அசைவுகளூடே
நெளியும் அரவத்தின்
அரவம்

இசை வற்றிய காற்று
அதிராத இலைகளில்
வழிந்து இறங்கி
நீர்ப்பதற்கு முன்
மயங்கி நிற்கும்
பாதத்தின் அழுத்தத்துடன்
பேசிப் பேசி மறையும்
புல்லிதழ்களின் நுனிகள்
எங்கோ ஒரு ஊரின் 
கேட்டு இல்லாமலாகி கேட்கும்
பாடல் 
இங்கு என்ன இந்த நேரம் 
என்று கேட்டால்
பதில் மட்டும் இல்லை என்னிடம்

பதாகை மின்னிதழ்

பதாகை மின்னிதழ்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் 'ஒற்றைப் பூ'

http://padhaakai.com/2015/11/04/flower/

Pandit Venkatesh Kumar and Raag Hameer