Sunday, September 6, 2020

ஷிவர்

ஏன் உன்னை 

இன்னும் யாரும் 

அடித்துக் கொல்லவில்லை 

என்று கொலைவெறியோடு கேட்கிறார்கள் 


ஏன் இல்லை 

இதோ என் முன் 

கையில் பல கவிதைகளுடன் 

வார்த்தை விளையாட்டுகளுடன் 

இணையமும் 

சிற்றிலக்கிய சாகசமும் 

இருக்கிறது 

தூக்குக் கயிற்றின்முன் நிற்கும் 

மரணதண்டனைக் கைதியைப்போல் 

அவற்றின்முன் நிற்கிறேன் 


அவற்றின் 

அறிவார்ந்த முதல் தொடுகையில் 

உடலெங்கும் 

அருவருப்பிலும் கூச்சத்திலும் 

புல்லரித்து நடுங்குகிறது 


ஒரே கணத்தில் 

நடுக்கம் மறைந்து 

நானும் அவற்றின் ஒரு பகுதியாக 

கவிதையெழுதத் துவங்குகிறேன் 


நான் எப்போதும் 

முழு முட்டாள்தனத்துடன் 

எதையும் எழுதுவதிலிருந்து 

இத்தனைக் காலம் 

தப்பித்து வந்துகொண்டிருந்தவன் 

ஆயினும் 

அள்ளிப்பூசும் அசூயை 

என்னை மேலும் மோசமாக 

எழுதத் தூண்டுகிறது 


செய்வதறியாது 

கவிதை என்றறிந்ததை செய்யாது 

உறைந்துபோய் 

யோசித்துக் கொண்டிருக்கிறேன் 


எவ்வளவு முயற்சித்தும் 

அடித்து ஊற்றிக்கொண்டேயிருக்கும் 

இத்தகைய கவிதைகளிலிருந்து 

சட்டென்று 

தப்பித்து விட முடிவதில்லை 


கவிதை என்பது 

கவிதை மட்டுமல்ல 

புலன்களை உறைந்துபோகச் செய்யும் 

வல்லமை கொண்ட 

வன்முறையும் கூட 

எழுதியும் அறிந்தும் 

ஏற்றிக்கொண்டிருக்கும் 

உன்னதங்களை 

உருவியெடுத்து 

வெளியில் வீசும் 

வேலையையும் 

கவிதை செய்கிறது 


இலக்கிய வன்முறையின் 

மிகப்பழைய படிமம் 

யாவரும் எதுவும் தெரியாத 

இரசனை அறிவிலிகள் 

என்றெண்ணி 

கவிதையெழுதுதல் 

என்பதை இன்று 

உணரவைத்த 

கவிதை போல் 

வேறேதேனும் உண்டா?


அள்ளிக்குடித்த காடியைப்போல் 

அப்பட்டமான கவிதை 

வாயெங்கும் கசந்து 

உடலெங்கும் பரவுகிறது 


படித்துமுடித்தபிறகும் 

நினைவில் சிந்திச்சிதறும் 

கவிதை வரிகள் வார்த்தை விளையாட்டுகள் 

பற்பல நாட்கள் 

புன்னகையும் வேதனையையும் 

ஒருசேர விளைவித்துக்கொண்டிருக்கின்றன 


ஒரு கவிதை 

ஒரே கவிதை 

இருந்தால் போதும் 

ஈராயிர வருடங்களை 

அற்றுப் போகச் செய்துவிடலாம் 


மேலும் கவிதை 

எவ்வித 

எதிர்பார்ப்பும் இல்லாதது 

சுயகட்டுப்பாடோ 

அவைநாணமோ 

என்றுமில்லாத அதற்கு 

எப்போது நிறுத்திக்கொள்ள 

வேண்டுமென்றும் தெரிவதில்லை 


அந்தக் கவிதையின் பாதிப்பில் 

நீங்களும் கவிதையெழுதினால் 

அந்தக் கவிதையை ஏற்றுக்கொள்ளும் 

அனைவரும் 

உங்கள் கவிதையை 

ஏற்க வேண்டுமென்பதில்லை 

ஏனென்றால் அது அந்தக் கவிதை 

Tuesday, September 1, 2020

பெருகாத கோப்பைகள்

பருகப்படாமல் காத்திருக்கின்றன

புகையும் இரு தேநீர் கோப்பைகள்
சரிந்திறங்கும் மாலைவெயிலில்
சருகுபோல் அலைகிறது தேநீர் வாசம்
இருபுறமும்
இருவேறுதிசைகள் நோக்கி
எதையோ காத்து நின்ற
எண்ணங்கள்
ஒன்றையொன்று நோக்கக்
குவிந்துவிட்டால்
பருகப்பட்டு விடலாம்
காத்திருக்கும் இக்கோப்பைகள்

என்னை நிறைத்துக்கொள்ளும்
ஒரு கோப்பை
ஏதென்று
அறியாதிருந்தது ஒரு  காலம்
எதற்கென்று
அலைபாய்ந்தது இன்னொரு காலம்
நிறைக்கமுடியாது
நிறைந்துவழிவதாய்
நினைவிலழியும்
ஈதொரு முடியாக்காலம்

இரு கவிதைகள் - பெருகாத கோப்பைகள்

 பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் இரு கவிதைகள்: 


https://padhaakai.com/2020/09/01/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/


Pandit Venkatesh Kumar and Raag Hameer