Sunday, April 11, 2010

விழுதுகள்

கனவுக்குள்
வெண்புகை சூழ
ஆடிக்கொண்டிருக்கும்
அந்த ஊஞ்சலில்
நீயும் நானும்

என் அருகிறுத்தி
பார்க்கும் பொது
என்னோடும்
ஆடுகிறது ஊஞ்சல்

உன் பார்வையை
நானுணரும் பொது
எப்படி
நீயும் நானும்
தனித்தனியாய்

ஊஞ்சல்கள்
ஆடுகின்றன
நனவுக்குள்
புகுந்துவிடும்
ஓர் உன்மத்த
முயற்சியின் இயலாமையோடு

- 22 /10 / 93

காலை

சூம்பிப்போன
ஆப்பிள்காரிகளின்
கொழுகொழு குழந்தைகள்
நடைபாதையில்
ஒண்ணுக்கிருக்கும்
நைந்து போன
கிழவியொருத்தி
அவளைவிடவும்
அழுக்கான பழம் விற்பாள்
நிச்சயமாக
இன்றோ நாளையோ
இறந்துவிட வேண்டியிருந்தும்
விரல்களற்ற கையினால்
பீடிபுகைக்கும் கிழவன்

தடதடத்து விரையும்
மின்வண்டியின் தாளம்
சேராத லயத்துடன்
தோள்துண்டு
நெற்றியின் சந்தனப்பொட்டுடன்
குழல் வாசிக்கும்
என்றோ
உயர்விலிருந்த வித்தகன்

காதலிகளுக்காக
சிகரட் புகைத்து
நகம் கடித்துக் காத்திருக்கும்
இளைஞர்கள்
அவர்களை
ஆர்வத்துடன் நோட்டம் விடும்
பெண்கள்

படிப்பதாய் பாவனை செய்யும்
பாதி நேரம் கூட்டம் மேயும்
பெரிசுகள்
நீட்டிய கையில்
டிக்கட் தரவேபடாத
பரிசோதகர்

'வேர்க்கடலெய், இஞ்சி மொரப்பா,
சீப்பு, பொம்மை, சீசன், பஸ்பாஸ்
ரேஷன் கார்டு கவர்'
சத்தம் கடந்து போனால்
'இயேசு விரைவில் வருகிறார்'

எதற்கென்றே தெரியாமல்
எப்போதும் இருக்கும்
பத்துப் பதினைந்து பேரோடு
மூலையில்
மூடிவைக்கப் பட்டிருக்கும்
போன ரயிலில்
அடிபட்டு ஈமொய்க்கும்
(அவன், அவள்)
அது

20 /10 / 93

பரிணாமம்

பார்த்து கொண்டிருக்கும்போதே
நிகழும் உருமாற்றம்
இது வேறு

உருமாறுகையில்
மாறும் சூழல்
அல்லது
சூழல் மாறியதும்
அதன் உருவா

இதோ
மற்றொரு உருமாற்றம்
இதுவும் வேறு சிதைவு

மற்றுமொன்று

மாற்றச்சிதைவு
முற்றுப்பெற்றதா

அதிர்ந்து பார்த்து
விரைந்து கலைக்கையில்
அடுத்த மாற்றம்


ஐயோ
இது
என் முகம்

08 / 09 / 92

சிற்சிதைவுகள்

முகமற்ற சலனங்கள்
கருந்திரையில் பிம்பங்கள்
நேராய் தொங்கும்
வௌவால்
புகைபோக்கி வழியே
மனிதர்கள்
வான் முழுதும்
அசைகிற
ஒலியற்ற உதடுகள்
சிரிக்கும் போல் அழும்
அழும் போல் சிரிக்கும்

அந்தத்துக்குள்ளிருந்து
ஜீவசிசுவின் முனகல்கள்

தொட முடியாத
எரிச்சலூட்டுகிற மார்புகள்
படுத்தால்
இறந்து விடப் போகிற
பயங்கள்

முற்றுப்பெறாத
என்
அர்த்தச் சிதைவுகள்

- 15 / 10 / 93

ஏன்

ஏனென்று கேளுங்கள்
அனைத்தையும்
அதிகம் தெரியாதவர்கள்
அப்படிக் கேட்பது
அவசியம்
அதற்கு பதிலிறுக்க
அநேகம் பேர்
ஆனால்
அவர்களுக்கு
அந்தப் பதில் தெரியாது
அது ஏனென்று
அவர்களிடம் கேளாதீர்கள்
அது தவறான இடம்
அக்கேள்விக்கு வேறு பேர்

எப்பொழுதும்
எப்படியும்
ஏனென்று கேட்பது
அனாவசியம்
என்று மட்டும்
எண்ணி விடாதீர்கள்

ஆகவே
எப்பொழுதும்
ஏனென்று கேளுங்கள்
இந்தக் கவிதையைப் போல

- 08 / 09 / 92

Friday, March 5, 2010

நகரம்

உயிர்களை உறிஞ்சிக்
கொண்டே
காற்றாடும் தாவரம்
தோலும் சதையுமற்ற
உடலங்கள்
உலவும் இடுகாடு
கெட்டிப்பட்ட அடுக்குகளில்
நேசமும் காதலும்
புதைந்திறுகும்
மணல் மேடு
நாளிலும் இரவிலும்
எண்ணிறந்த நிறங்களுடன்
உறவுகள்
புசிக்கும் பச்சோந்தி
உயிர்ப்பை மறந்த கருக்கூடு
ஆண்மை இறந்த சதைநீட்டம்
சிறகுடன் சேர்த்து
சுதந்திரமிழந்த
ஆயிரம் பறவைகள்
அடையுமொரு வீடு

Monday, March 1, 2010

யன்னல்

கழுத்தின் பின்புறம்
தோல்
பின் சதை
நரம்புக் கூட்டம்
குருதிக் குழாய்கள்
மூச்சுக் குழல்
பின் சதை
தோல்
முடிந்தது
வெட்டுப்பட்டு தனியே
விழுந்தும் தலை
துடிக்கும் சிறிது நேரம்
மிச்சமிருக்கும்
உணர்வுத்துணுக்குகளின்
தன்னிச்சைத் தாண்டவம்
பாய்ந்து ஒழுகி
வெட்டுமேடை நனைக்கும்
என் குருதிக் கறை
எங்கும் படிவது
குறித்த கவலை
எனக்கில்லை


எப்போது
நிகழும் இது

அரசியல் கைதி
அறம் வெறுத்தவனை விடவும்
அபாயமானவன்


என் தனிமைச் சிறையில்
உயர்ந்து சூழ்ந்த
நான்கு சுவர்களிலொன்றின்
உச்சியில் இருந்தது
சதுரச் சன்னல்
உலகம் என்னை பார்க்கவில்லை
நான் அதை பார்த்துக்கொண்டிருந்தேன்


இரவன்று தனிமை
தோன்றும்
வளரும்
முழுமை பெறும்
தேயும்
மறையும்
என
தினமொரு உறவு
இரவொரு உயிர்ப்பு

எப்பொழுது வரும்
எனதழைப்பு


நொடியின் நூற்றில்
ஒரு பங்கில்
முடிந்து விடும்
என்றாலும்
ஒவ்வொரு நொடியும்
அதை மட்டுமே
எண்ணத்தில் சேமித்து
பற்பல கோணங்களில்
மெய்விதிர்க்க
இமையாது
நாடகமென நானே
நின்று
பார்க்கிறேன்


வந்துவிட்டது
ஆணை

ஆட்சிமாறிய
அரசியல் சதுரங்கத்தில்
கொலைக்கள மேடை
மறைந்துவிட்டது
பகலையும் இரவையும்
சேர்த்து சுகிக்கும்படி
கதவுகள் திறந்துவிட்டன
கருவியைத் தாண்டி
நடக்கிறேன்
எதிர்பார்ப்பில்
ஏதோ குறைந்த
ஏமாற்றம் ஊடாட

(Written in the influence of 'The Wall' by Jean Paul Sartre)

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...