Monday, May 16, 2011

இரவு பிரதிக்ஞைகள்

இந்த இரவு
என்னுடயதாவென்று
எண்ணிப் பார்க்கிறேன்

ஆற்று மணலை
அளைகையில்
விரல்வழியோடும் குறுமணல் போல்
பற்பல நினைவுகள்

ஆயிரம் தாரகைகள்
அள்ளி இறைத்திருக்கும் வானம்
என் துருவம் நீ
அற்புத சொல்லாட்சியின்
அருந்தமிழ் வடிவம்
ஆழ்கடல் செல்வம்
புலன்வழி புனைந்தவை
உனக்கே அர்ப்பணம்

மண் பார்க்க குமைந்து
மேலே பார்த்து
தடுக்கி விழுந்த தவறுகள்;
காயங்கள் எனது
கைதரத்தான் ஆளில்லை

ஊர் சிரித்தது
சிரிப்பொலியின் எதிரலை
செவிப்பறை முழுதும்
அனர்த்தம்

                                                   இந்த இரவு
                                                   என்னுடையதா தெரியவில்லை

உறக்கம் தப்பிய
இரவுகள்
உறங்கவே மறுத்த
இமைகள்
வாட்டுதல் மட்டுமே
குறிக்கோள்

பூவில் களிநடம் புரியும் காற்று
நுகர்ந்து
மனம் மரணத்திலிருந்து
மீளும்
நித்தியம் பெறும்
அத்தகு தருணம்
கைகளில் தேங்கிய
காவியங்களோடு நான்
குருடர்களும்
செவிடர்களும்
செங்கோல்

ஏன்?

பாலைவனத் தாகமாய்
பிறந்த கேள்வி
மறையாக் கானலாய்
மாதுயரூட்டும்

                                                    இந்த இரவு
                                                    என்னுடையதா தெரியவேண்டும்

உறையாத அறியாமையும்
நெகிழாத மௌனங்களும்
என்
அன்றாட எதிர்பார்ப்புகள்

இறுகிக் கிடந்து
மூச்சு முட்டி வெம்பிய
கோர உணர்வு நெரிசல்களுக்குள்
விடுதலை வேள்வி
அணு அணுவாய்
துடித்தது

விரைவில்
வழிய விட்டாலன்றி
விபத்து வெடிக்கும் எனும் நிலை

வல்லூறொன்று
சிறகுகளை கோதிக் கொண்டு
அலகை
அலட்சியமாய் திருப்பி
அசுரபலத்துடன்
கிளைத்து பறந்தது

நாள் செல்லச் செல்ல
அனுபவச் சுமை
அதிகமாயிற்று
பயணம்
இன்பமாயிற்று

வெற்றியே வேதம்
வேதத்தின் பிரணவம்
திருவினையாக்கும்
ஒருமுகம்
சிந்தனைத் தீவிரம்

அம்பின் கூரிய நுனியில்
ஆயிரமாயிரம் அணுக்கள்

என் 
சுடரொளிச் சிந்தனையின் 
ஒவ்வொரு தணலும்
வெப்பமும் வியாபிப்பும்
வெற்றியே பரப்பும்

தீயின் நிறமும் மாறும்
நாக்குகள் பொசுக்கும் பொசுங்கும்

ஓமப்புகை வானிட்ட பாலத்தில்
வெற்றி ஊர்வலம்
மண் நோக்கிக் கவிழ்ந்த
மானுடம் நிமிரும்

அம்பறாத் தூணிகள்
சிந்தனை நிரப்ப
சிறியோர் மேல்
சினமிகு போரிடும்

கடமை ஒருகை
காவியம் மறுகையென
கையிணைத்த
நெறிகள் வரலாறாகும் 

கடமைக் களங்களில் 
கண்ட காயங்கள்
ஒவ்வோர் உயிரும்
ஏங்கும்

காயக்கதை பேசி
காதற்க் கடலில்
கலந்திட்ட நதிகளே
காட்டாறுகளே

                                      இன்னும்,
                                                            இந்த இரவும்
                                                            என்னுடையதா என்று
                                                            தெரிய வேண்டும்
-12/07/1988




தோழிக்கு ஒரு கடிதம்

அன்புள்ள தோழி,

கொடி! 

அது பற்றிப் படரும்; காற்றில் சஞ்சலமடையும்; புயலில் துடிக்கும்; தேர் தரும் பாரியை தேடும்.

நீ?

நீ கொடி போலவா? உனக்குள் இருக்கும் வண்ணங்கள் வியப்பூட்டுவன; உணர்வுகள் அதிர்வூட்டுவன. தவறாக கைபட்டால் எளிதில் உடைந்துவிடக்கூடிய மென்மையுடையதாய் தோன்றி, அதனால் தொடவே சிறிது அச்சத்தை ஊட்டக் கூடியவை, உன் பரிமாணங்கள்.

மென்மையானவள் நீ; ஈடு செய்யும் வகையில், உன் நேரடியான (அதனாலேயே எனக்கு மிகவும் பிடித்தமான) வெளிப்பாடுகளில் வன்மையானவள்; உண்மையானவள்.

கொடி பற்றிப் படரும்; நீயும் பற்றிப் படர்கிறாய். படரவும் ஆக்கி விடுகிறாய்.  உன் அன்பை இப்படியெல்லாம் வெளிப்படுத்த யாருனக்கு கற்றுக் கொடுத்தது?
உணர்பவை அனைத்தும் (இன்பமோ துன்பமோ) பகிர்ந்து கொள்ள நீ தேடும் சகம், அதிலுன் தேர்வு, உன் தீர்மானம், உன் பற்றுதல், நீ எதிர்பார்க்கும் வெளிப்பாடு, உன் limitations பற்றிய முன்கூட்டிய உன் தெளிவு...

சஞ்சலங்கள். எளிதில் பெண்கள் உணர்ச்சிவசப்படுவார்களாம். ஏன் விதிவிலக்குகள் இருக்கக் கூடாது? கோபப்படுகிறாய் அதிகம். ' சாதிக்க இயலாதவனே கோபப்படுவான்'. சொல்லியிருக்கிறேன். உன் கோபம் உன் குடும்பத்தையுமல்லாது என்னையும் சமயங்களில் கூர்பார்க்கையில் மனம் வேதனை அடைகிறது. கொடி கோபப்படக் கூடாது. 

எங்கே உன் சுயம்,  வாழ்வுரிமை, லட்சியம் முதலியன பறிக்கப்படுமோ அங்கே உன் கோபம் தார்மீகமானது; அர்த்தமுள்ளது; வீரமானது.

மற்றும் பல உணர்ச்சிகள் உன்னில் எளிதில் தீவிரமாக தாக்குகின்றன. கவர்கிறாய், எளிதில் கவரப்படுகிறாய். உணர்வுகளால் விரைந்து எடுக்கும் எம்முடிவும் வேதனை தரும். தவறு! இவ்வுலகம் மிகச்சில நல்லவர்களையே கொண்டது. யார் மீதும் விரைந்து அன்புறுவதும் தவறு. அதிக எதிர்பார்ப்பு மிகுந்த ஏமாற்றத்தைத் தரும்.

உன் அறிவு, உன் உலக ஞானம் கொண்டு நீ ஆராயக் கற்றுக் கொள்ள வேண்டும். எதிலும் எளிதில் மனம் பறிகொடாதே. (எவரிடமும்) முதலில், யார் எத்தகையவர், அவர் கண்ணோட்டம், லாப நஷ்டங்கள் எடைபோட பழகு. சுயநலமியாய் இரு. இவ்வுலகில் சுயநலமில்லாமல் வேறொன்றுமில்லை. 

கல்வியில் உன்னார்வம் என்னை மகிழ்விக்கிறது. மென்மேலும் நீ கற்க வேண்டும்.  உன் எல்லைகளை விரிவுபடுத்தும் தருணமிது.

இரசனைகள் இயற்கையானவை. எனவே, இன்பமானவை. ஒரு கவிதையோ, உரைநடையோ அன்றி இரசனை குறித்த பேச்சோ உன்னிடம் வீசப்பட்டால் நீ சோர்ந்து போகிறாய்.  ஏன்? உலகியல் வாழ்வின் உயிர்நாடி இரசனை.

அதுவொன்றில்லாமல் நானில்லை.

எதையும் இரசிக்க வேண்டும்.  நீ துன்பமடையும் கணங்களிலும், சோக நிகழ்வுகளினின்று, வெளி நின்று, "இக்கணம் நம் வாழ்வில் ஒரு முறை வருவதை இருந்தால், இப்போதே இதை வாழ்ந்து விட வேண்டும்" என்று எண்ணி அனுபவி. இச்சக்தி எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மனநிலை தரும்.

'நம்மை மீறி என்ன வரும்? என்னால் சாதிக்க முடியும். உயிரைத் தவிர பெரிதாய் வேறொன்றும் போய்விட முடியாது' போன்ற எண்ணங்கள் உன்னில் வளரவேண்டும். அவை, உன்னில் இப்போது காணப்படாத சகிப்புத்தன்மை, பொறுமை, வெல்லும் விடாமுயற்சி, முடிவில் இரசனை போன்ற, உன்னை மற்றவரிடமிருந்து தனித்து உயர்த்தக்கூடிய பண்புகளைப் பெற்றுத் தரும்.

உயரிய, தொலைநோக்கு மிகுந்த கொள்கைகள் உன்னில் குறைவு. இது உன் கல்விக்கும், சிந்தனை தெளிவிற்கும் பொருத்தமற்றதாய் இருக்கிறது. எப்படி வாழ வேண்டும், எங்கே, எவருடன், சாதனைகளின் குறிக்கோள், உன் கல்வி, உன் படிப்படியான வளர்ச்சி, உன் குடும்பம் பற்றிய முழுமையான திட்டங்களை நீ கொண்டிருக்க வேண்டும். 

இல்லையெனில், இப்பொழுது ஆரம்பி. சிந்தனைகளை பெரிதாக செய். எல்லைகளை தள்ளி வை. இலக்குகளை சிறந்தவையாய் நிர்ணயி. அதை அடைய பாடுபடும் வழிமுறைகள், தேவைப்படும் காலம், பொருள், மனித முயற்சி பற்றி திட்டமிட்டிருக்கிறாயா? இல்லையெனில், உடனே ஆரம்பி.

வேறே? உன் மென்மையும், பெண்மையும், அன்பும், பரிவும், கல்வியும், ஞானமும், உணர்ச்சிகளும் உயர்ந்தவை.

இவை இருக்கவேண்டிய இடம் இப்போது நீ இருப்பதல்ல. 

நீ உயர வேண்டும்; மூட நம்பிக்கைகளுக்கு உடன்படாமல், இல்லறக் கட்டுப்பாடுகளுக்கு இடங்கொடாமல் , நீ உயர வேண்டும்.

செய்வாயா, எனக்காக?

சரவணன் 
07/1990

கனவில்

மெல்லிய திரையொன்று
விலக,
நானும் நீயும்
அமர்ந்திருக்கிறோம்;
ஆச்சர்யம்
என்னை அமிழ்த்துகிறது
என் இவ்வளவு அருகே
உன்னை நான் சந்தித்ததில்லையே?

என் முகமருகே
குனிந்து
ஏதோ முணுமுணுக்கிறாய்
சிரித்தவண்ணம்

அசையும்
உன் இதழ்களையும்
மின்னுகிற உன் பற்களையும்
கவனித்து கொண்டிருக்கிறேன்

புரியாத மொழியுதிர்க்கும்
உன் இதழ் மூடும்
என் கைவிரல்
செந்நிற இதழ்களை
வருடுகிறது.
புன்னகை...

எப்படியோ
எப்போதோ
உன்னருகில் நகர்ந்து
கன்னங்களின் செம்மையை
துடைத்துவிடும் 
முயற்சியில் ஒரு முத்தம்...

எனக்கு
அப்போதும் ஆச்சர்யமாயிருக்கிறது
நான்?

சிரிப்புகள் சத்தமற்று
பளீரிடும் புன்னகைக் கோர்வை

உன் கழுத்தின் பின்புறம்
பொன்னிற சிற்றிழை ஒதுக்கி
உன் குழற்கற்றைகள்
என் மார்புரச
கமழ்கிற மணம்
நுகர்ந்தொரு முத்தம்

வார்த்தைகளேயற்றுப் போன
உடல் முழுதும் 
உன் அருகாமையில் இசைகிற
தவிப்புகள்
புன்னகைகளால் 
இசைவுகளால் இயங்க
வாய்நுனி வரை
வந்து நிற்கிறது
'என் நேசம் நீ...
என் தேவை நீ...'

உள்ளுமையோ
உள்ளுணர்வோ 
ஏதோவொன்று தடுக்கிறது
நீ சொல்லட்டுமென்று
உன் இசைவுகள்
என்னில் இசையாகும் போது
ஓசை என்ன முக்யத்துவம் 

இதுவரை
அதிசயித்துக்கொண்டிருந்த எனக்கு,
உன் எதிர்பார்ப்பு நிறைந்த
குறும்பு கண்களில் மின்னுகிற
புன்னகை
வியப்பளிக்கவில்லை
....

யார் சொல்வார்? 

- 11/07/1990

Efficiency

நானோர் இயந்திரம்.
...
ஆமென பலபேர்
ஆயத்தமாய் இருப்பினும்
என் இயக்கங்கள்
வேறுவிதம்.

நீங்களும் இயந்திரங்கள்தாம்
ஆயினும் 
என் இயக்கங்கள் 
வேறுவிதம்

உட்கொண்ட சக்தியைவிட
வெளியியக்க சக்தி
குறைவான
நிறை இயந்திரம்

உணர்ச்சிகளற்று
இயங்கும்;
இயங்கு, இயங்கு
சக்தி கொள், சக்தி தா
சூழ்நிலை மற
இதுவே சூழலின் அவா 

அடிக்கடி இரைச்சலிடும்
இயந்திரத்தை பற்ற வை;
அல்லது,
மூலையில் எறி.

முனகல் உணர்ந்து
மூச்சுணரும்
சிலபேர்
இருந்தனர் முன்பு.

எவ்வளவு நாள்தான்
எண்ணெய் தடவி
ஒன்றுகொன்று
சிக்கிக் கொள்ளாமல்
இதை ஓட்ட முடியும்?

விகிதமிழந்த எண்ணெய் போலும்
கரிப்புகையாய் துப்பி
தொழிற்ச் சாலையையே
நாற அடிக்கிறது

வேலைப்பளு
அதிகம் என்று
ஆகும் அன்றுதான்
அறுந்துபோகும் பெல்ட்
உடைந்து போகும் பல்சக்கரம்
இதை
வாங்கவோர் ஆளில்லை

ஆனாலும் 
இதன் இயக்கங்கள்
வேறுவிதம்

கொடுக்கின்ற சக்தியை
சொந்த உஷ்ணத்திற்கே
செலவழித்து விடுகிற
சுயனலமியாகி விட்டது
இயந்திரம்

இயந்திர கம்பெனிக்காரர்களை
கூப்பிட்டுத் திட்டினால்
கைபிசைந்து
கண்கலங்கி நிற்கிறார்கள்
செலவழித்து செய்துவிட்டு
சரிசெய்யத் தெரியாத
மூடர்கள்

வேறென்ன செய்ய?

போகிற போக்கில்
சொல்கிறார்கள்,
எந்த இயந்திரமும்
நூறு சதவிகித
இயக்கத் திறம் கொண்டதில்லையாம்...

இதை முதலிலேயே
சொல்லித் தொலைப்பதற்கென்ன

பரவாயில்லை
ஆனாலும்
இந்த இயந்திரத்தின்
இயக்கங்கள்
வேறுவிதந்தான்

- 07/06/1990

எனினும், இப்படிக் கவிதை...

வெளிச்சம் தேட
முனையும் கசிவுகளை
விலங்கிட்டு
அடிமைப்படுத்தியவன் நான்...

அப்படியும்
அந்த நாட்களில்
சில கரைகள்
உடைந்திருக்கின்றன.
சில மட்டும்.
வெகுசில மட்டும்.

மதகுகளை தகர்க்கிற
அரிப்புகள் என்று
அந்த ஈர்ப்புகள்
நிர்ணயிக்கப்பட்டவுடன் 
கசிவுகள்
கரைபுரண்டு விடுகின்றன
என் 
அனுமதியில்லாமல்

அப்பொழுதும்
திரைகளினால்
தடுத்துவிட நான் முயன்றதில்லை
காரணம்
உங்களுக்கே தெரியும்

இன்று,
நிதர்சனப் புரிதல்கள்
நிரந்தரப் பிரிவுக்கே என்று 
நினைவுறுத்திப் போனாலும்
நிம்மதி 
தொலைந்து போகிறது

                                                                 கரைகளும்
                                                                 இற்றுவிட வேண்டுமென்றா
                                                                 விரும்புகிறாய்?
அன்பும்,
பாசமும் காதலுமாய்
காலம்
என் முதுகினில்
சுவடு மிதித்து போனது;
சுவடு தொட்ட போதெல்லாம்
அன்பும் காதலும்
திரும்பித் தொட
ஆசை வந்தது

                                                                  கரைகடந்த நீர்
                                                                  சென்றது தானே?

யாருக்காக
இந்தத் தவிப்புகள்...

ச்சே, தொடருமா
உறவுகள் என்னும்
இந்தத் தவிப்புகள்...

நினைவுகளை
நீட்டித்து நீட்டித்து 
கற்பனைகளில் 
சொரிந்து கொள்கிற
இச்சுகம்....

ஒளிப்புள்ளியைச்
சுற்றிச் சுற்றி
ஏகாந்தகாரங்கள்...
உட்புகுந்த
சில கிரணகற்றைகளும்
விரைந்து வலுவிழக்கும்
நிலைத்து
கலக்கும்
ஒளி தேடி ஒளி தேடி.

                                                             வெள்ளச் சுழற்சி
                                                             பழகியவனுக்கு
                                                             இன்பமோ?
                                                             இங்கு தவிப்பது யார்...
                                                             மற்றொரு வெள்ளத்தின்
                                                            குமுறல்களில்
                                                             இயைந்து போக
                                                             இங்கு யார், சொல்?

காரணம்
உங்களுக்கே தெரியும்.

சொல்ல வேண்டுவதெல்லாம்
முடிந்தானபின்னும்
முதல் புரியாமல்
மற்றொன்று.

அடர்ந்த மரக்கிளைகளின்
நெடுதுயர்ந்த கலப்புகளினால் 
தரைப்பாசிகள்
ஒளியற்று
மரத்தை யாசித்து
மரமேறும்;
மறைவு பூண்டு
ஒளிந்து வாழ்ந்த
ஒளிக்கற்றைகள்
தரையைத்தான் 
தேடிக்கொண்டிருந்ததாய்
பொய் புணரும் 
பாசிகளின் தேடல்
அன்றோடு முற்றும்
மற்றுமொன்று புதிதாய்...

                                                            ஒரு நதி பிரிந்த
                                                            இரு வெள்ளமும்
                                                            ஒன்றாய் வடிய
                                                            வேண்டுவதோ எங்கனம்? 
                                                            தடங்களும் தொலைவுகளும்
                                                            இலக்குகளும் இயைந்தவை அல்லவே?

இற்றுப் போகப்
போவதில்லைதான்;
கடந்து போக
பாதை உண்டுதான்;
துயில்வதற்குள்
ஆற்றி முடிக்க 
கடமையும் உண்டுதான்...
எனினும்...

                                                             போச்சு,
                                                             இவ்வளவு சொல்லியும்
                                                             இப்படி
                                                             கவிதை எழுதிக் கொண்டு....

- 21/04/1990




Sunday, May 15, 2011

இன்னொருவன்

பகட்டு உடைகள்
பகல் வேஷங்கள்
இருட்டு நளினங்கள்
உதட்டுச் சாயங்கள்

குழு நீங்கி
முகம் கலைத்து
சூழ்ந்து நின்று
துக்கம் விசாரித்த
அரிதார மனிதர்களோடும் 
உண்மை பேசி
நிகழ்வு சிந்திக்கப்போன
அவனும்
நடிகனாகி போனான்

அவன்
அப்படியிருக்கவே குழு
ஆசைப்பட்டது
ஆணையிட்டது

பகட்டு ஆடைகளிலும்
பல்வேறு வேஷங்களிலும்
அவன் அழகாயிருப்பதாய்
எடுத்து காட்டியது குழு

அவன் நடிப்புக்கு 
சில நேரம் கைதட்டலும்
பல நேரம் கல்லெறியும்
கிடைத்தது

கைதட்டலும் கல்லெறியும்
குழுவே
ஆட்களை வாங்கி
நடத்தியது
நாடகத்துக்குள்ளும் நாடகம்

அவன்
நன்றாய் நடிப்பதாக
நம்பத் தொடங்கியிருந்தபோது,
குழுவின் கைதட்டல்
பலமாயிருந்தபோது,
அவன் பேச 
ஆசைப்பட்ட
உண்மைகளும் நிகழ்வுகளும்
நாடக மேடை படுதாவுக்குள் 
உறைந்து போய்,
அவ்வப்போது
அவன் சுதந்தர உணர்வுகளை
தீனக்குரலில்
விசாரித்து விட்டு
அடிக்குப் பயந்து
ஒளிந்து கொள்ளும்

அவன் நடிப்புக்கு
இவையெல்லாம்
தடையெனக் கருதிய குழு,
இந்தச் சின்ன சின்ன
தாகங்களை,
மாலையும் துண்டும் போட்டு 
விலைக்கு வாங்கும்


அவன்
நடிகனாகிப் போனான்

உண்மையும்
நிகழ்வும் பிறதொழிலும்
மறந்து போய்
நடிப்பே
உயிரும் உயர்வுமாகிப்
போனான்
 வேறொன்றரியாதுமானான்

குழுவோடு
ஒப்பந்தம் முடியும் காலம்
நெருங்கியது
முடிந்தது

மேடைக்குள்
நுழைந்த அவனை
முகம் தொட்டு
புறந்தள்ளிய
பல கைகளை
வெறிகொண்டு
விலக்கிப் பார்த்தபோது,
அங்கே
பகட்டு உடையிலும் 
உதட்டுச் சாயத்திலும்
பற்கள் மட்டுமே சிரித்த
புன்னைகையோடும்
உண்மை பேசி
நிகழ்வு சிந்திக்கப் போன
இன்னொருவன்

-08/03/1990

அன்பே நீ தேடுவது என்னையா?

நான் இதுவரை என் கற்பனைகளில் உன்னோடு தனித்திருந்திருக்கிறேன்
ஓராயிரந்தடவை உன்னிதழ்களில் கனவுகளில் முத்தமிட்டிருந்திருக்கிறேன்
இப்போழ்தும் கூட,
அவ்வப்போது என் வாசல் வெளியில்
உன் வரவை நான் உணர்கிறேன்


                  

அன்பே நீ தேடிக்கொண்டிருப்பது என்னையா?

உன் தேடலை உன் கண்களில் நான் உணர்கிறேன்
அன்பே, அதையுன் புன்னகையில் பார்க்கிறேன்

நான் தேடியலைந்தவை அனைத்தும், அன்பே உன்னிடமே
ஏனின்னும் என் கைகள் விரிந்திருக்கின்றன என கேட்கிறாயா?
அன்பே, நீயறிவாய் என்ன சொல்ல வேண்டுமென்று
உனக்குத் தெரியும் உனதெந்த வார்த்தைகளில்
இவனுயிர் வாழ்கிறதென்று
உன்னிடும் சொல்ல ஏக்கம் அடைகாக்கும்
ஆயிரம் சேதிகளும்...

அன்பே, நானுன்னை நேசிக்கிறேன்

உன் குழல்களினூடே கதிரொளியின் கோலம் காண
என் மனம் துடிக்கிறது
உன்னை அரவணைத்து நேசிக்க எத்தனை
இரவுகளிலும் பகல்களிலும்
நான் துடித்திருப்பேன்

சில போதுகளில், 
காதலினால் என்னிதயம்
பொங்கி வழிந்துவிடும் போல் உணர்கிறேன்

அன்பே, என்னால் இனி தாங்க முடியாது
என் காதல் நீ உணர்ந்தே ஆக வேண்டும்

ஆயினும்...

நீ எங்கிருக்கிறாய் எனத் தேடுகிறேன்
நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்றும் நானறியேன்
எங்கேயோ,
தனிமையில் நீ வாடிக் கொண்டிருக்கக் கூடுமோ
என்றவெண்ணம் வதைக்கிறது

அல்லது அன்பே
யாரேனும் அங்கும்
உன்னை நேசித்துக் கொண்டிருக்கிறார்களா?

உன் நேசம் வெல்ல ஒரு வழி சொல், தோழி
இறுதியாகவும்
நான் சொல்வதிதுதான்
நானுன்னை நேசிக்கிறேன்

-05/03/1990
- லயனல் ரிச்சியின் 'Hello, is it me you are looking for?' பாடலின் மொழிபெயர்ப்பு 

Pandit Venkatesh Kumar and Raag Hameer