Showing posts with label Creative Writing - Tamil. Show all posts
Showing posts with label Creative Writing - Tamil. Show all posts

Monday, October 26, 2015

நானும் நானும்

உணர்வின் வெளிப்பாடு 
இயலாமல் ஆகிவிட்டவன் 
சுயம் என்னவாகும் 

உணர்தல் இயலும் அதை 
உரைத்தல் இயலாதான  இது 
சுயமற்றவொரு சடப்பொருள் என 
சூழ்ந்து நின்று விவாதிப்பதை நான் 
விழியசைவின்றி கண்டும் 
உடல் நகர்வின்றி கேட்டும் 
கொண்டிருப்பதை 
எப்படி உணர்த்துவேன் 

நினைவுக் கோளங்களில் 
பளிச்சிடும் 
வெளிச்சத் துணுக்குகளில் 
உங்களைப் போல் நானும் 
அவ்வப்போது
விதிக்கப்பட்டவோர் ஒழுங்குடன் 
நடந்து கொள்வதாக 
நீங்கள் மகிழ்வது புரிகிறது 

எனினும் 
எனக்கும் உங்களுக்கும் 
என்ன வேறுபாடு 
என்னை உங்களைப் போலாக்கும்
தவிப்பெதற்கு

வலிகளில் எது பெரியது 
என்றுதான் 
நீங்களெல்லாம் பேசியும் 
நான் பேசாமலும் 
ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் 

விட்டுவிடுங்கள் 
நானும் நீயும் ஊடாடுவதின் மூலம் 
நாமும் அவர்களும் 
ஒன்றெனக் காட்ட முயலும் 
இந்தச் சமன்பாடு 
எனக்குப் பிடிக்கவில்லை

Sunday, October 18, 2015

மோஹ்சின் மக்மல்பஃப் இயக்கிய நிசப்தம்

குறிப்பிடத்தகுந்த இரானிய இயக்குனர்களுள் ஒருவர் மோஹ்சின் மக்மல்பஃப். விருதுகள் பல வென்ற அவரது படங்களுக்கு பல விமர்சனங்களும் குறிப்புகளும் கிடைக்கின்றன எனினும் முதல் முறை இந்த திகைக்கவைக்கும்படி எளிமையான ஆனால் குறியீடுகள் நிறைந்த The Silence என்ற படத்தை பார்த்தபோது என்னளவில் ஒரு சிறு  பதிவை எழுதும் உந்துதல்.

தாயுடன் வாழ்ந்து வரும் பார்வையற்ற சிறுவன் குர்ஷித் இசைக்கருவி செய்யும் ஒரு கூடத்தில், செய்து முடித்த கருவிகளில் சுதி கூட்டும் பணி செய்கிறான். கல்வியும் தந்தையுமற்ற ஆனால் வறுமை நிறைந்த வாழ்வில், அவன்  வருவாயை நம்பித்தான் அவன் தாய் இருக்கிறாள்.

தினமும் வீட்டிலிருந்து நடந்து ஒரு சந்தையை கடந்து, பேருந்து பயணித்து, உலோக வேலைக்கூடங்கள் தாண்டி அவன் பணியிடம் சேர்வதில் ஒரே ஒரு  சிக்கல்: ஓர் அழகிய பாடலோ, இசையோ, குரலோ கேட்டால் அவன் செய்வதறியாது அந்த இசையின் பின் சென்று விடுகிறான். நடக்கும் போது வழி தவறுவதும், பேருந்தில் இருந்து இறங்கி குரல்களை தொடர்ந்து எதிர் வழி சென்று விடுவதுமாக, பல நாள் பணிக்கு உரிய நேரத்தில் செல்ல முடிவதில்லை.

இசைக் கூட முதலாளி பல முறை கடிந்தும் வேலையை விட்டு நிறுத்தி விடுவதாக மிரட்டியும் கூட, அவனால் அவனறியாமல் செய்வதை மாற்றிக்கொள்ள முடிவதில்லை. மாறாக, சுதியும் லயமும் கூடிய எதுவும் அவனை ஈர்ப்பதை அவன் இயற்கையாகவும் இன்பமாகவும் கருதுகிறான்.

பல நாட்களில் வேலைக்குக் கிளம்பும்போது அவன் தாய் மேலும் பணம் முதலாளியிடம் பெற்று வரா விட்டால் வீட்டு வாடகை கட்ட முடியாமல் (ஏற்கனவே வீட்டுச் சொந்தக்காரன் அடிக்கடி வந்து வாடகை பாக்கி கேட்டு மிரட்டுகிறான்) வீதிக்குத்தான் வரவேண்டியிருக்கும் என்று எச்சரித்து அனுப்புவது அவனுக்கு நினைவில் இருக்கிறது, ஏதோவொரு இனிய குரலோ, இசையோ கேட்கும் வரை.

மிக அழகிய காட்சிகளில் அற்புதமான படப்பதிவுக் கோணங்கள்; மிகக் குறைந்த படப்பதிவு அசைவுகள்; யதார்த்தத்திற்கு  அருகில் இருக்கும் பின்னணி இசைக்கோர்வை என இப்படம் தரும் அனுபவம் உயரியது.

இரு காட்சிகளை குறிப்பிடலாம்:

- இசைக்கருவிக்கூடத்தில் குர்ஷித் கருவிகளுக்கு சுதி கூட்டும்போது அவன் தோழி நாதிரா அந்த இசையற்ற வெறும் சுதிக்கு மெதுவே மிக மெதுவே ஆடுவதும் அபிநயிப்பதும் - கவிதையான காட்சிப்படுத்தல்.

- நாதிராவும் குர்ஷித்தும் கானகத்தின் ஊடாக பொய்கை நோக்கி செல்லும் காட்சிகளில் இயற்கை ஒளியும் காட்சியின் கோணமும்  நடிகர்களின் உணர்ச்சிகளை பெருக்கும் ஒரு ஆடியாக பயன்படுத்தப் பட்டிருப்பது ஒரு சுகானுபவம்.

இது தவிர, படத்தின் பல நிலைகளிலும் குறியீடுகளை உணர முடிகிறது:

- வேலையிழந்த பிறகு தான் கேட்டு மயங்கிய ஏதோவொரு குரலை மீண்டும் கேட்க நகரத்  தெருக்களில் தேடித் திரிவது

- தோழி நாதிரா காட்டுக்குள் ஒருவன் தலையை மறைத்துக் கொள்ளாத பெண்களை  மிரட்டுவதாகக் கூறி குர்ஷித்தை வேறொரு வழியில் கூட்டிச் செல்கிறாள்; அந்த வழியில் அவன் இருக்கிறான், ஒரு அழகிய நரம்பு வாத்தியத்தை மீட்டிக் கொண்டு - அவனிலிருந்து சற்று விலகி அவன் இயந்திரத் துப்பாக்கி!

- உச்சக் காட்சியில் உலோக வேலைக்கூடத்தினூடே மெதுவே நடந்து கொண்டே வேலை செய்பவர்களை தன் தாளத்திற்கேற்ப பின் தொடருமாறு ஆணையிடுவது (மேலிருந்து பொழியும் ஓர் ஒளிக் கற்றையின் கீழ் தன் மேற்சட்டையை கழற்றியவாறு அவன் நிற்கையில் காட்சியும் இசையும் முடிகிறது!)

இந்தக் காட்சிகள் பல படிமங்களை எனக்களித்தது.

தீவிரவாதமும் இசையும்

தீவிரவாதமும் வறுமையும்.

மற்றும் தன்னை அறியாமலேயே ஓர் இசைக்கலைஞனாக உரமேறும் சிறுவனின் கால்களைத்  நகர விடாமல் தளைக்கும் அற்பக் கவலைகள்;

பெரும் வாழ்க்கைப் போராட்டங்களை சித்தரிப்பதான எந்தவொரு பசப்பும் இல்லாது ஆனால் இசை எப்படி எளிய மனங்களின் மிக எளிய மனங்களின் மிக எளிய, மிக இனிய இணைப்பு மொழியாக நிகழ்கிறது என காட்சிப்படுத்தும் இந்தத் திரைப்படம் நிச்சயம் வசியப்படுத்தும் ஓர் அனுபவம்.




Monday, October 12, 2015

இருண்மை


கேட்கப்படாத கேள்வியொன்று
நெய் குறையும் தீபத்தின்
சுடர் போல்
வளி கொண்டு அணையலாம்
ஆயினும்
இன்னும் கேட்கப்படாத கேள்வியின்
ஆன்மா
அங்கேயேதான் உறைகிறது
பிறிதொருகணம்
எனவொன்றில்லை
இறவாத அக்கேள்வியுடன்
தனித்து
அச்சுடர் நோக்கி
அமர்ந்திருப்பதில்
இடரொன்றும் இல்லை
அறிந்தது கொண்டு
அறிந்ததை அளத்தல்
இல்லாதது கொண்டு
இருப்பதை உணர்தல் போலும்
சுடரின் நுனி
துடித்தல் போலன்றி
தவித்தல்
எனவுணர்வதிலும்
இல்லை இல்லை
எனுமொரு நிலை
இல்லை இல்லை
கரைதலென்பதென்ன
இல்லாமற் போவதா
இன்னொன்றாய் இருப்பதா
வெற்றிடம் முழுதும்
நிறைந்து பெருகி
எனவொன்றில்லாத
பிறிதொருகணத்தில்
வழிந்தோடி வெற்றிடமாகி
இன்மையும் இருப்பும்
கரைதலென்பதென்ன
இல்லாமற் போவதா
இன்னொன்றாய் இருப்பதா
சுடரணைந்த இருளுக்குள்
தனித்தவொரு கேள்வியும்
சற்றுமுன்
வேறொன்றாய்
இருந்த ஒளியும்

Thursday, October 8, 2015

இன்மையின் எண்

றந்து விட்ட நண்பனின்  
கைபேசி எண்ணை 
என்ன செய்வது 

அழைப்பே வராமல் 
ஆயிரம் எண்கள் 
இருப்பினும் 
அழித்தாக வேண்டிய கட்டாயம் 
வேறெந்த எண்ணுக்கும்
இல்லையே  

கைபேசித் திரையில் 
அடுக்கடுக்காக நகரும் 
பெயர்களில் 
நண்பனின் பெயரும் 
படமும் எண்ணும் 
துணுக்குறாமல் 
கடந்து செல்ல முடியவில்லை 

நானழைக்க முடியாமலும் 
அவனழைப்பை எதிர்நோக்க 
இயலாமலும் 
துயருறும் இந்நிலையை 
நீங்களெப்படி 
எதிர்கொள்வீர்கள் 

அழித்துத்தான் ஆகவேண்டுமா 
அந்த எண்ணை
 
இருந்தால்தானென்ன 
அடிக்கடி 
இருப்பின் திடுக்கிடல் 
தரும் வலியோடு 


Tuesday, September 15, 2015

இன்றிரவு

ன்றிரவு போரின்
முதல் அணு ஆயுதம்
என் நகரில் விழுந்து விடலாம்

கடல் கொண்டுவிட்ட
நகரங்களில்
ஒன்றாக அது
ஓரிரவில் மாறி விடலாம்

விஷ வாயு வெளியேறி
உயிரோடு கண்களையும்
இழந்து விட்ட
இடுகாடாக உருமாறி விடலாம்

குறைந்த பட்சம்
நான் வசிக்கும்
அடுக்கு மாடி குடியிருப்பு
நிலநடுக்கம் ஏதுமின்றி
சரிந்து விடலாம்





நிலைமைக்கு தக்க
முதல் பக்கத்திலோ
மூன்றாம் பக்கத்திலோ
வரப்போகும்
என் நகரின் விவரணையோ
அன்றி என் படமோ
வாசிக்கும் நானின்றி



Sunday, September 6, 2015

ஹாங் காங்கின் அயல் நாட்டு வேலைக்காரி



ன்றொரு ஞாயிற்றுகிழமை
நூறாயிரம் ஆயிரம்
நாடும் வீடும் மறந்த
இல்லப் பணிப்பெண்டிர்
உலகாண்ட விக்டோரியா பேரரசியின்
பேர் தாங்கும் பூங்காவிலும்
சாலையோர நடைபாதைகளிலும்
கூடும் நாள்

வண்ணங்கள்
உடைகள்
ஒப்பனைகள்

சரசங்கள்
உரசல்கள்
பூசல்கள்
உறவுகள்

நின்றும் அமர்ந்தும்
படுத்தும் நடந்தும்
பேசியும் எதையோ
தேடியும்


















தீராத பார்வைகள்
ஓயாத தவிப்புகள்

அத்தனையும்
வெட்ட வெளியில்
காட்சிப் பொருளாக

அத்தனையாயிரம்
உடலங்களின்
ஒன்றிணைந்த
உணர்ச்சிக்குவியலும்
நடைபாதை குப்பைகளூடே
ஒரே பெரும்
முலைச் சுரப்பாக
யோனி கசிவாக
விழி நீராக 

Thursday, December 25, 2014

கார்போரேட் கொலைகள்

நீண்ட நாளாகிறது 
ஒரு கொலை செய்து 
உணர்ச்சிகளை சீண்டும் ஒரு கொலை 

பவர்பாய்ன்ட்களின் தேர்ந்தெடுத்த 
வார்த்தைகளில் 
சதுரங்க விளையாட்டு 
குளிர் அறைகளுள் நாளெல்லாம் 
முகக் குறிப்புகள்  நோக்கியே 
கவனம் குவித்த வினைகள் 
மனிதம் தாண்டிய யத்தனங்கள் 
ஆயினும் 
வெவ்வேறு திசையிழு உறவுகள் 


























ஒரு கொலை அனைத்தையும் 
சமன்படுத்தி விடும் 
என நம்ப இடமிருக்கிறது 

இதற்குமுன் 
இழந்தவை
சரிவர நிகழ்த்தாத 
கொலைகளால் என 
நம்பவும் இடமிருக்கிறது 

மீண்டும் உணர்வுகள் 
மீதூறும் வரை 
மொழியின் கையறு நிலையில்
வானளக்கும் சாகசங்கள் 
பொருளியல் முன்னேற்றங்கள்  

ஒவ்வொரு வினைக்கும் 
ஒரெதிர் வினையுண்டு என்பது  
ஒன்றை இழந்தே 
ஒன்றைப் பெறலாகும் 
என்பதன் சரிநிகர் 
என்று உணர்ந்ததும் 
சரியே நிகழ்ந்த 
கொலை வரலாறுகள் வழியே 

எனவே 
நெடுங்கால வளர்ச்சி முன்னோட்டங்களை 
அடையக்கூடிய 
குறுகியகால திட்டங்களாக 
பகுத்து 
பல்வகை கொலைகளைத் 
திட்டமிடுங்கள் 
ஏனெனில் 
இப்பொழுது நீங்கள் 
அறிவீர்கள் 
வளர்ச்சியும் மரணமும் 
ஒரு பாதையின் 
இரு புறங்கள்

அத்வைதம்
















சற்றுமுன் பெய்த மழை

விரையும் வாகன கண்ணாடியில் 
காற்றில் ஒரு துளி 

பதறி 
உருவம் தேய்ந்து 
குறைந்தழிந்து
வெளியில் தடமின்றி 
கரைவது 
எதன் உருவகம்
என்ன தத்துவம் 

Friday, January 31, 2014

என் நாள்

தெய்வம் மறிக்கின்ற வழியெனது
சாத்தான் திறக்கின்ற வழியுமெனது

மழை கலங்கும் நீர்த்தேக்கங்களில்
மறையப்போகும் முகங்கள்

எதையோ இழக்க நேரிடுமென்றே
எதையும் சேர்க்காதொழிந்த காலம்

எஞ்சுவன எண்ணும்  விரல்களுள்
கூட சேர்ந்தெண்ணும் காலனின் கைவிரல்

தொலைவில் எனக்கான
அழைப்பு விடுக்கப் பட்டுவிட்டது

எனக்கேயான என் பெயர் பொறித்த
மாற்றவியலா அழைப்பு

பிறந்ததும் செய்யத் துவங்கும்
பருவந்தோறும் எண்ணி எழுத்தேறும்

நிறமும் செம்மையும்
நிதமும் மாற

மறிக்கின்றதும் மரிக்கின்றதும்
கரைகின்ற நாள்

என் நாள் அதுவென்
அழைப்பின் நாள்


Sunday, December 29, 2013

கடல்

வெண்ணிற இலச்சினைகளை
வடித்தெடுத்து கால்களில்
வழங்கும் ஓயாது

கன்மத்திற்கும் உன்மத்தத்திற்கும்
வேற்றுமை காட்டாது
நித்தம் கொதித்துக் கொண்டே




Sunday, February 3, 2013

உயிர்ப்பயணம்

உருகும் குளிர் மலையிலிருந்து
சரிந்தோடும் சிற்றருவிகளில்
என் உறவுகள்
ஆங்காங்கே நீந்தி
இறங்குகின்றன பிறந்த நீர் தேடி

என் தாயும் தந்தையும்
அடுத்த தலைமுறைக்குத்
தம்மைக் கடத்த
இன்னும் போகவேண்டும் நெடுந்தூரம்


வழிந்து பெருகி நகரும் ஆற்றின்
வளைவுகளில் பாறைகளின் மறைவுகளில்
காத்திருக்கும் பனிக்கரடிகள்
வாரிசுகளை
வேட்டை பழக்கும்

பாய்ந்திறங்கும் பறவைகளும்
பதுங்கி இரைதேடும் நரிகளும்
அவ்வாறே

கால் வழி கடந்ததும்
கால் அளவு உறவுகளே மீதம்
இரை எடுத்து நீரில்
வளி பிரித்து
உயிர் காத்து
இன்னும் இன்னும்
பெருகும் பேராற்றில்
என் பெற்றோர் போக வேண்டும்
நெடுந்தூரம்




உறவனைத்தும் கரைந்து
ஆழ்கடலின் அச்சுறுத்தும்
தாற்காலிகத் தனிமையில் முயங்கி
ஆயிரத்தைநூருவரில் ஒருவனாய்
எனையீன்ற என் தாய்
உடன் மரித்து மிதப்பாள்
உடல்கள் முழுதும்
மூவாயிரம் கண்களால்
துடித்தபடியே பார்த்திருக்கும்
எங்கள் முன்னால்





நானும் காத்திருப்பேன்
என் தலைமுறைப்பயணம்
தொடங்க
இயற்கையின் எல்லையிலா
உணவுக் கருணையில்
மீதமாகப் போகும்
என் இன்னொரு
உடன்பிறப்புடன்

Monday, November 12, 2012

5 குறுங்கவிதைகள்

கற்றுக் கொண்டவைகளை கணக்கு வைத்திருக்கவில்லை
கணக்கும் கற்றுக் கொண்டது  தானே


ஒழுகி விழுந்தது ஒழுக்கம் இடையில்
நழுவித் தொலைந்தன கற்பிதங்கள்



என்னிலிருந்து இறங்கிச் சென்றவனை கண்டேன்
கண்டவனை கண்டு கொண்டேன்


சொற்களை சிந்தி எண்ணங்களை விதைத்து
செயல்களை வேண்டினேன்
அவநம்பிக்கை கிளைத்து அனர்த்தங்கள் விளைந்து
உன்மத்தம் சித்தித்தது


உடனுறைந்தும் தானுணரா தத்துவம்
அனைத்தும் நிறைந்தும் ஆருமறியா  சித்தாந்தம்
உணரக் கூடாத வினைகள்
புரிந்தவை கொண்டு
அளக்க முற்படும்
அறிவின்மை
அளக்க முடியா
அறிவின்மையை அறிவதே
அறிவல்லவா

 

Saturday, October 13, 2012

விருமாண்டி - நேர்மையின் காதல்

த்தனையோ விமர்சனங்கள், தாக்குதல்களைத் தாண்டி விருமாண்டி வெளிவந்த அந்த காலகட்டத்தை நினைவு கூர்ந்து...


அந்தத் திரைப்படத்தை எத்தனைக் கோணத்தில் பார்க்க முடியுமோ அத்தனைக் கோணத்திலும் பார்த்து விமர்சனங்கள் வந்ததுண்டு.  தேவரினத்தை தூக்கிப் பிடிக்கும் கதை, தென் தமிழகத்தில் நிலவும் கடிய சாதிய அமைப்பை விமர்சிக்கும் படம், இனக்குழுக்களுக்குள் பலியாடாக மாறியலையும் இளைஞர்களின் கதை, மடிந்து வரும் விவசாயத்தை பற்றிய விமர்சனம், காவல் துறை/நீதித் துறை/சிறைத்துறைகளுக்குள் நிலவும் ஊழலைப் பற்றிய விமர்சனம்...

இது போக, அந்தத் திரைப்படமே தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் 'மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரம்' என்பதுவும் ஒன்று.

ஆனால், பற்பல வருடங்கள் கழித்து மீண்டும் விருமாண்டியை மீண்டும் பார்த்த போது இயக்குனர் கமல் ஹாசன் அந்த கதைக்குள் பொதிந்திருக்கும் ஒரு மிக அழகிய காதல் - எவ்வித தயக்கங்களுமில்லாத, நேரடியான, உணர்வுபூர்வமான, அதனாலேயே பச்சை வாசனை அடிக்கிற காதல், என்னை தாக்கியது.

என்னைக் கேட்டால் மேற்கூறிய விருமாண்டியை பற்றிய அத்தனை அடையாளங்களையும் மீறி, தமிழ் திரையில் வந்த மிக உணர்வு பூர்வமான ஒரு காதல் கதை என்று ஐயமில்லாமல் கூறுவேன். படத்தின் நீளக் கணக்குப்படி பார்த்தால், அன்ன லட்சுமியும் விருமாண்டியும் திரையில் காதலர்களாக வரும் பகுதி மிகக் குறைவு. ஆனால், அவர்களின் பாத்திரப் படைப்புகளும், வசனங்களும், அபிராமி-கமல் நடிப்பும் என் புலனில், அன்ன லட்சுமி-விருமாண்டி காதலை செதுக்கி விட்டன.

மிகக் குறைந்த உரையாடல்கள்...

இத்தனைக்கும், அவர்களிருவரும் ஒன்றாக இருக்கும் போதெல்லாம் அவனின் துடுக்குத் தனமான பேச்சே முன்னிற்கிறது; அவளின் வெட்டி விடும் வார்த்தைகள். நெருக்கம் கூடக் கூட, அவன் அவளிடம் தன் இயலாமைகள், ஆதங்கங்கள், பொருமல்கள் என தன்னைத் திறக்கிறான். அவள் மெதுமெதுவே ஒரு தோழியாக மாறுகிறாள். கொலைகள் நடக்கும் போது, கிணற்றுக்குள் அமர்ந்து, அன்னலட்சுமியின் மடியில் தலை புதைத்து விருமாண்டி அழுதவாறே பேசும் இடம்!

ஊரை விட்டு கிளம்பி, நள்ளிரவில் நிலவொளியில் காட்டுக்குள் முயங்கும் போதும் ஓர் ஆழமான புரிதலே வெளிப்படுகிறது. அவள் நகத்தால் தன் மார்பில் காயமேற்படுத்தி காமம் கூடக் கூடும் காட்சியில், அப்படியோர் அந்தரங்கத்தை, காதலின் தனிமையை, வஞ்சிக்கப்பட்ட காதலை நான் எப்போதும் உணர்ந்ததில்லை.

யன்னல் கம்பிகளை பிடித்தவாறு நிலவை ஏக்கத்துடன் பார்த்து நிற்கும் புதுக் காதல் மனைவியை, விருமாண்டி கேட்கிறான் - 'என்ன விசனமா இருக்க? என்னடா, இப்படி ஒரு அசட கல்யாணம் பண்ணிக்கிட்டோமேன்னு நினைக்கிறியா?'. ஊரே பயப்படும் சண்டியர், சல்லிக்கட்டு காளையடக்கும் வீரன், ஊரில் பெரிய பணக்காரர்களில் ஒருவன் - கதை முழுதும் மற்றெல்லாவரிடமும் இதுதான் அவன் முகம்; முகங்கள். அவளிடம் மட்டும்தான் - அவன் தன் சுயத்துடன் நிற்கிறான். அவளை முழுமையாக நம்புகிறான்; விளையாட்டுதனத்துக்கும், சிரிப்புக்கும், குறும்புகளுக்கும், நையாண்டிக்கும் இடையே எப்போதும் அவன் கண்களில் அவள் மேலான மதிப்பும் (ஆம், மதிப்பு), நேசமும், காதலும் வழிந்து கொண்டேயிருக்கிறது.

காதலி/மனைவி இறந்து நாயகன் தனித்து வாழும் எத்தனை படங்களை பார்த்திருப்பீர்கள். விருமாண்டி, படத்தில் பேச்சு போக்கில் - 'அன்ன லட்சுமி இல்லாத வாழ்க்கை',  'அன்ன லட்சுமி இல்லாத இந்த வாழ்க்கை', என்று கூறுவதில் தெரியும் அவன் உணர்வு; அவன் நேசம்; அவர்களின் காதல். 'என்ன பெத்தா! (என் தாய் - அன்ன லட்சுமியை சொல்கிறான்), அவ இருந்தா, நான் இன்னிக்கு இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டேன்', என்று அவன் கூறும் போது என் மனதில் எழுந்த உணர்வுகளுக்கு வடிவமில்லை.


ஏஞ்சலாவிடம், சிறைக்கூடத்தில் தன் கதையை விவரிக்க ஆரம்பிக்கும் போது கூட, அன்ன லட்சுமியிலிருந்துதான் அவன் விவரணை தொடங்குகிறது. (மாறாக, கொத்தாளன் அவன் கதையை கூற ஆரம்பிக்கும்போது, தன் குல பெருமை, தன் ஊர் பெருமையில் தொடங்கி விருமனை பழிசொல்லி நகர்வதைக் காணலாம் - இது போல் படம் முழுதும் அவ்வளவு ஒப்புமை விவரங்கள் பொதியப்பட்டிருக்கிறது) மார்பில் அவள் நகத்தால் கீறி ஏற்பட்ட வடுவைக்காட்டி, "இது என்ன தெரியுதா? என்னோட ஆயுள்ரேகை;என் விதி; அன்ன லட்சுமியோட ஞாபகம்; அவ நகம்" என்கிறான்.


ஒரே ஒரு வடு - ஆயுள் ரேகையாகவும், விதிக் கோடாகவும், காதலியின் ஞாபகமாகவும் மாற வேண்டுமென்றால் அந்த காயமும் அதை உண்டாக்கிய காதலும் என்ன வலுவும், வலியும் நிறைந்ததாக இருக்க வேண்டும்! அந்த காட்சியில் ராஜாவின் பின்னணி இசை அத்தனை அவலமும், தன்னிரக்கமும் கூட்டி மறக்க முடியாத நிகழ்வாக மாற்றி விடுகிறது.


என்ன ஓர் உண்மை! வெளிப்பாடுகளில் அற்புதமான நேர்மை!

கொத்தாளத் தேவர், நல்லம நாயக்கர், கொண்ட ராசு, கோட்டைச் சாமி - என ஒவ்வொரு பாத்திரப் படைப்பும், எடுத்துக் கொண்ட கதைக்கான நேர்மையின் உச்சம். இதில் கொத்தாளத் தேவர், நல்லம நாயக்கர் இவ்விருவரிடையே உள்ள போட்டியை - நல்லம நாயக்கரின் வார்த்தைகளிலோ, அவரது ஆட்களின் வசனமாகவோ, கமல் நிரூபிக்கவில்லை. விருமாண்டி - கொத்தாளன் இருவரின் கோணங்களில் சொல்லப்படும் கதையிலும் அதுதான் நிலை. கத்தி மேல் நடப்பது தான் இது! தென் தமிழ் நாட்டில் முக்கிய சாதிய அமைப்பாக விளங்கும் முக்குலதோரியிடையே ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட கதைஅமைப்பு, கமலின் திரைக்கதை அமைப்புக்கு ஒரு சான்றே.

கொத்தாளன் மற்றும் விருமாண்டியின் பாத்திரங்களின் உளவியல் கூறுகளை, இத்திரைக்கதையின் மூலமாகவும், உரையாடல்கள் மூலமாகவும் ஆய்ந்து யாராவது எழுதினால், நல்ல திரைகதை மற்றும் பாத்திர படைப்புகளுக்கு பழகுவோர்க்கு உதவியாக இருக்கும்.

கொத்தாளனின் பாத்திர வார்ப்பு - தமிழ் திரைப்படங்களில் இல்லாத ஒன்று; இனியும் வரும் என்று தோன்றாத ஒன்று. மூக்குத்துவார முடி திருத்தி, அக்குள் மயிர் வழித்து, எப்போதும் நீறணிந்து, சுத்தமான உடைகளில் - வஞ்சமும், வெறியும் வழியும் வார்த்தைகள்! என்ன ஒரு நடிப்புத் திறன், உயரிய நேர்த்தி!


இதற்கிடையே, விருமாண்டியின் (கொரிய திரைப்பட விழாவில்  "ஆசிய சிறந்த திரைப்பட விருது' வழங்குகையில் குறிப்பிட்டது போல்) சிறப்புகளில் மிக முக்கியமானதொன்றாக நான் கருதுவது - பேச்சியம்மா, பேய்க்காமன் முதலிய நாட்டார் காவல் தெய்வங்களின் பின்னணியும், பூசைகளும், நம்பிக்கைகளும், பாடல்களும் படத்தில் பயன்படுத்தியிருக்கும் விதம் விருமாண்டி காலம் கடந்த நிற்கும் வாய்ப்பை உருவாக்குகிறது.

பாடல்கள், பின்னணி இசை, தள அமைப்பு, படப்பதிவு - போன்றவற்றின் ஆதிக்கம் தெரியா வண்ணம் கதையும், பாத்திரங்களும் இருந்தும் ராஜாவின் அற்புத பின்னணி இசை - சிறைக்கூட காட்சிகளில் அபாரம்.

கமல் என்ற அரிய கலைஞனிலும், அரியதாகவே கைகூடும் வெளிப்பாட்டு நேர்மை 'விருமாண்டி'யை ஓர் உன்னத காவியமாக்குகிறது.

Tuesday, June 26, 2012

ஓர் அந்திமாலையின் மழை நேரம்


மழை பெய்து கொண்டிருக்கிறது

அந்தியிலிருந்து இரவுக்கு
இடம் மாறும் நகரத்தின்
நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலை
உன்னையும் என்னையும்
உறுத்தாவண்ணம்
குளிரூட்டப்பட்ட காருக்குள்
நானும் நீயும்

'முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்பூவாய்...'
இசையில் குரலில் வழியும் தாபம்
இசையை தவிர
வைப்பரின் தாளம்

பல வருட உறவு
ஒரு வருட பிரிவு

அருகிருந்தும் ஒரு
மனவிலகல்
ஏதேதோ கற்பிதங்கள்

உண்மைகளை உரத்து
ஒத்துக் கொள்ள
இருவருக்கும் ஏற்பில்லாதவொரு
இடைவெளி

பிரிவின் வருடத்தில்
எத்தனை வலிகள்
அத்தனை வருட
உறவின் மூலமறுக்கும்
வலிகள்
இரவின் நெருக்கமுணர்ந்த
படுக்கையில்
தனியே தனியே
கரைந்து துடைத்த
வலிகள் வலிகள்

'நான் சாயும் தோள் மேல்
வேறாரும் சாய்ந்தால் தகுமா...'

சகிக்க முடியவில்லை
இந்த மௌனம்

பாடலின் அழகு குறித்து வினவுகிறேன்
அவளின் குரல் உணர்த்தும்
உணர்ச்சி குறிக்காமல்

மிகக் குறுகிய
ஆயினும் மிகநீண்டதோர்
ஆவிநின்ற
இடைவெளிக்குப் பிறகு
தாபமும்
வலியும்
தயையும்
தன்னிரக்கமும் பொதிந்து
'ம்' என்கிறாய்

அத்தனை உணர்வுகளையும்
ஒற்றை அசையில்
ஏற்பதற்கு
கழியும் நொடிகள் நிமிடங்கள்

சாலையில் இருந்து
பார்வையை திருப்பி
உன்னைப் பார்க்கிறேன்
பாடல் நிறைவடைந்தும்
வெளி நிறைந்து கிடக்கிறது

கார் மழையினூடே
விரைந்து கொண்டிருக்கிறது

Wednesday, February 15, 2012

என் தாய்த் தமிழ் உணவு

திடீரென்று அம்மாவின் நினைப்பு வந்து விட்டது அன்றொரு நாள். உறங்காமல் படுத்திருந்தேன் அவளை நினைத்துக் கொண்டே. பழஞ்சேலை வாசத்தோடு எப்போதும் அவளைச் சுற்றி இருக்கும் சமையல் வாசம் வந்து சூழ்ந்து கொண்டது. சமையலில் பெரிய நிபுணி என்றெல்லாம் சொல்ல முடியாதென்றாலும் வகை வகையான சமையலில் கெட்டிக்காரி என்று தோன்றியது.

அப்படியே யோசித்துக்கொண்டிருந்தவன், நினைவிலேயே அம்மா சமைத்து நான், என் தம்பி, தங்கை அவரவர் திருமணம் வரை உண்டு வளர்ந்த உணவுகளை அடுக்க ஆரம்பித்தேன். அசந்து விட்டேன். கூட இருக்கும்போது எதன் அருமையும் தெரிவதில்லை.


நீண்டு கொண்டே போன பட்டியலில் ஒரு பகுதி இதோ:

காலை உணவு
இட்லி
தோசை
முட்டை தோசை
வெங்காய தோசை

உப்புமா
ரவா கஞ்சி
சேமியா கிச்சடி
இடியப்பம் - தேங்காய் பால்
ஆப்பம்
சப்பாத்தி
பூரி - உருளை கிழங்கு
கம்பங்கூழ்
வெந்தயக்களி
கேப்பைக்களி
உளுந்தங்கஞ்சி
பயத்தம்பருப்பு கஞ்சி
அவல் உப்புமா
அடை
குழாய்ப் புட்டு
கேப்பைப் புட்டு
சட்டினி - சுமார் 10 வகைகள்
பாசிப்பருப்பு சாம்பார்
எள்ளுப் பொடி

இட்லி மிளகாய் பொடி

மதிய உணவு
சாம்பார் - பல வகைகள்
புளிக்குழம்பு - பல வகைகள்
மிளகு ரசம்
வெந்தய ரசம்
பூண்டு ரசம்
வேப்பம்பூ ரசம்
பூண்டு குழம்பு
பருப்புருண்டைக் குழம்பு
மோர்க் குழம்பு
முட்டைக் குழம்பு
கழனிப் புளிச்சாறு

இதற்கு தொட்டுக்கொள்ள
வறுவல் வகைகள்
பொரியல் வகைகள்
அவியல் வகைகள்
கூட்டு வகைகள்
கீரை மசியல்
மாங்காய் பச்சடி
துவையல் - பல வகைகள்
ஊறுகாய்கள்
மாவடு
வத்தல் வகைகள்
வடகம்
மோர் மிளகாய்
உப்பு கண்டம்
அப்பளம்

அசைவம்
பிரியாணி - கோழி, ஆட்டிறைச்சி, வெஜிடபிள்
முட்டை வகைகள்
கோழி வகைகள்

ஆட்டிறைச்சி வகைகள்
நண்டு
மீன் - வறுவல், குழம்பு
இறால் - வறுவல், குழம்பு
சுறாப்புட்டு

குடிக்க
காபி
தேநீர்
பானகம்
மோர்
தயிர்
பால்
ஆட்டுக்கால் சூப் (உடல் நலமில்லை என்றால்)
இஞ்சிச் சாறு (எல்லா ஞாயிற்றுக் கிழமையும் காலை எழும்போதே அப்பா ஒரு கையில் தம்ப்லரையும் மறு கையில் சர்க்கரையையும் வைத்துக் கொண்டு, அழ அழ குடிக்க வைப்பார்)
நீராகாரம் (வெயிலில் சென்று விட்டு உள்ளே வந்தால்)
கிரிணிப்பழ சாறு
பருத்திப் பால்
சீம்பால்

வெளியூர் பயணம்/சுற்றுலாப் பயணங்கள்
புளியோதரை
எலுமிச்சைச் சாதம்
தேங்காய் சாதம்
தக்காளி சாதம்
வெஜிடபிள் சாதம்

மாலை சிற்றுண்டி/விடுமுறை சிற்றுண்டி
சோளம் - அவித்து, வாட்டி
வேர்க்கடலை - அவித்தும் வறுத்தும்
சுண்டல் - வகைகள்
தட்டாம்பயறு
சர்க்கரைவள்ளி கிழங்கு
மரவள்ளி கிழங்கு
கொள்ளு
எள்ளு
பயறு வகைகள்

தீபாவளி போன்ற விசேட நாட்கள் (முக்கியமாக கிருத்திகை விரதத்தின் போது)
வெள்ளைப் பணியாரம்
இனிப்புப் பணியாரம்
கொழுக்கட்டை - வகைகள்
மசால் வடை
உளுந்தம் வடை
பஜ்ஜி - வகைகள்
போண்டா
வாழைப்பூ வடை
கேசரி
 பாயசம் - வகைகள்
அதிரசம்
முறுக்கு
சீடை
மைசூர் பாகு
சோமாஸ்
எள்ளுருண்டை
ரவா லட்டு



எத்தனை உணவுகள், எத்தனை வகைகள்...

எத்தனை காய்கள், பழங்கள், கீரைகள், பருப்புகள், கிழங்குகள் உண்டோ, எவ்வெவற்றில் எல்லாம் நல்ல சத்தான சுவையான உணவு சமைக்க முடியுமா அவற்றிலெல்லாம் நம் தாய்மார்கள் சமைத்திருக்கிறார்கள் என்பது புலப்பட்டது. இவையனைத்தும் அப்பா கடையில் வாங்காமல், அம்மா வீட்டிலேயே சமைத்தவற்றின் தொகை.

எவ்வளவு ஆரோக்கியமான உணவுப் பழக்கம் நம்முடையது!

இன்று பற்பல கோளாறுகளுக்கு ஆளாகி மருத்துவரிடம் சென்றால், கிடைக்கும் அறிவுரை - நார்ச்சத்து மிகுந்த, இயற்கையான, கால பருவ நிலைக்கேற்ற, நீர் சதவிகிதம் அதிகமுள்ள உணவை ஒரு நாளைக்கு ஐந்து வேளை சாப்பிட வேண்டுமாம். இதைத்தான் நம் முந்தைய தலைமுறைத் தாய்மார்கள் நமக்கு தந்து வந்திருக்கிறார்கள் அல்லவா?


இந்த காலை உணவில் மட்டுமே இப்போது என் குடும்பத்தில் எத்தனை வகை பிழைத்திருக்கிறது என்று எண்ணிப் பார்த்து நொந்து விட்டேன். இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் பூரி. மற்றவை வழக்கொழிந்து விட்டன.

நல்ல வேளை, தமிழகத்தில் இன்னும் இலட்சக்கணக்கான தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இந்த அற்புத உணவு முறையை வழங்கி வருவார்கள் என்று என்னை நானே தேற்றிக் கொண்டு, தினப்படி செய்யும், அரைக்கப் ஓட்சில் கொஞ்சம் பாலை விட்டு சாப்பிட்டு விட்டு பணிக்கு கிளம்பினேன்.

Pandit Venkatesh Kumar and Raag Hameer