Wednesday, June 22, 2016

சில்கோவ்ஸ்கியின் தேற்றம்: கார்ல் இயாக்னெம்மா

அத்தியாயம் 1

முழுதும் நிறையாத அந்த கருத்தரங்கு அறையின் பின்னாலிருந்த காலி நாற்காலியொன்றில் ஹெண்டெர்சன் மஞ்சள் நிற குறிப்பேட்டைக் கொண்டு முகத்தை மறைத்தவாறே சரிந்து அமர்ந்து கொண்டார். அவரைச் சுற்றிலும் கணித வல்லுனர்கள் மூன்று நான்கு பேராய் நின்றபடி ஸ்டைரோபோம் கப்களிலிருந்து காபியை பருகிக்கொண்டு ‘வேரியேஷனல் கால்குலஸ் – செர்மெலோ பிரான்கல் தேற்றம்’ பற்றி கிண்டல் செய்து சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது. அவர்களின் ரசமில்லாத நகைச்சுவை, மட்கிய ஆரஞ்சு நிற தரைவிரிப்பும், வசதியற்ற நாற்காலிகளும், சீராக எரியாத மின்விளக்குகளும் கொண்ட அந்த கருத்தரங்கு அறைக்கு பொருத்தமாகவே பட்டது. சரி, இது தான் அக்ரோன் நகரமா என்று எண்ணிக் கொண்டார் ஹெண்டெர்சன். அவர் எண்ணியதை விட மோசமாகவோ நன்றாகவோ அது இருந்து விடவில்லை.

Karl Iagnemma

ஒவ்வொரு வருடமும் அதே கருத்தரங்கு; அதே முந்நூறு பேர்; உற்சாகமற்ற நகரங்கள். டான்ஸ்க் ஒரு வருடம்; பெல்பாஸ்ட் அடுத்த வருடம்; இதோ இப்போது அக்ரோன். அடுத்தது எங்கே – மோகதிஷு போல. அல்லது டெஹரான்? ஹெண்டெர்சனுக்கு அரங்கிலிருந்த தெரிந்த முகங்களில் பல பிடிக்காதவை. நேரில், ஈரமான கைகுலுக்கல்களும், நாற்றமடித்த சுவாசங்களும் கரகரத்த குரல்களும் கொண்ட இந்த மனிதர்கள், அவரவர் ஆராய்ச்சி புத்தகங்களின் தடித்த அட்டைகளுக்கிடையே கணிதம் சமன்படுத்திய கோர்வையான குரல்களில் மிக ஏற்புடையவர்களாக தெரிபவர்கள். ஹெண்டெர்சன் தலையை குறிப்பேட்டினுள் புதைத்துக் கொண்டு, சுற்றி நின்றவர்கள் யாரும் பார்த்து விடாதவாறு, முக்கியமாக, பேச்சாளர் சோக்லோஸ் கண்ணில் படாதவாறு ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தார்.

மணி இரண்டானதும் ‘வலுவிழந்த நான்-லீனியர் தொகுப்புகளின் மாறுபாடுகள்: ஒரு பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக் கட்டுரையை அன்று சமர்ப்பிக்கவிருந்த சோக்லோஸ் மேடை மேலேறி ப்ரொஜெக்டரை உயிர்ப்பித்தார். ஹெண்டெர்சன் எதிர்பார்த்ததை விடவும் இன்னும் இளமையாகத் தெரிந்தார் சோக்லோஸ். முன்தலை இன்னும் வழுக்கை விழுந்து விடவில்லை; பெரும்பாலான கணித வல்லுனர்களுக்கே உரிய நெற்றிச் சுருக்கங்கள் இல்லை; நான்கு வருட துணைப் பேராசிரியர் பொறுப்பு சோக்லோஸை அவ்வளவாக பாதிக்காதது அநியாயமாகப் பட்டது.

சோக்லோஸ் குறுந்தாடி வைத்திருந்தார். அவர் அணிந்திருந்த, பளபளக்கும் ஊதா நிற டை வலுவிழந்த நான்-லீனியர் தொகுப்புகளைப் பற்றிய கட்டுரை வாசிப்புக்கு முற்றிலும் பொருத்தமில்லாதது என்று நினைத்தார் ஹெண்டர்சன். குறுந்தாடி, சோக்லோஸுக்கு ஒரு பைசாச பாவம் அளிப்பதாக நினைத்துக் கொண்டார்.

“வணக்கம், இங்கு நன்கு தெரிந்த பலர் கூடியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது”, சோக்லோஸ் தனது செழுமையான ஹங்கரியன் உச்சரிப்பில் துவங்கினார். ஹெண்டெர்சன் தன்னிச்சையாக நாற்காலிக்குள் இன்னும் புதைந்து கொண்டார். ஆனால் சோக்லோஸ் குறிப்புகளிலிருந்து தன் கண்களை எடுக்காமல் ஆராய்ச்சிக் கட்டுரைக்குள் பிரவேசித்து கொண்டிருந்தார் – வலுவிழந்த நான்-லீனியர் தொகுப்புகளின் இப்போதுள்ள தீர்க்க முடியாத பிரச்சனைகள், அவை குறித்த முந்தைய ஆய்வுகள், அவற்றின் முடிவுகள், டோபுஞ்ஸ்கியின் 1964-இல் வெளிவந்த பிரபலமான தேற்றம்; கிரேக்க கணித வல்லுநர் காலியார்டோஸ் முன்வைத்த, அதிகம் அறியப்படாத தொடர் முடிவுகள் – என ஒரு துல்லியமான, தேர்ந்த, ஒன்றன் பின் ஒன்றான நகர்வு.

கட்டுரையின் இந்தக் கட்டம் கடந்ததும் சோக்லோஸ் குரலைச் செருமிக் கொண்டார். ஓர் அரை சுரம் குரலில் கூட்டிக் கொண்டு தன் சொந்த ஆராய்ச்சியை இப்போது அவர் விவரிக்க ஆரம்பித்தார். அரையிருளில் ஆழ்ந்திருந்த அரங்கை பார்வையால் அளந்த ஹெண்டெர்சனுக்கு இது போன்ற ஆய்வரங்குகளில் நிலவும் சந்தேகம் கலந்த விரோத மனப்போக்கு இல்லாமல் பொருமலுடன் கூடிய ஒரு மரியாதை நிறைந்திருப்பதாகப் பட்டது. தனது குறிப்பேட்டுக்கு பார்வையை திருப்பி கொண்டு, திரையில் தெரியும் சமன்பாடுகளில் எங்கே குறை தெரிகிறது, எந்த மென்மையான பாகம் தெரியும், எங்கே அந்த கூர் ஈட்டியைச் செருகலாம் என நுண்ணிய மன அவதானிப்புடன் காத்திருந்தார்.

‘இறுதி வரைவு மற்றும் முடிவுகள்’ என்ற படியை ப்ரொஜக்டரில் சோக்லொஸ் வைத்ததும், உறக்கத்திலிருந்து விழித்த பாவனையுடன் இருந்த அரங்கைப் பார்த்து “இதனால் தீர்மானிக்க முடிவது என்னவென்றால் வலுவிழந்த நான்-லீனியர் சமன்பாடுகளின் நிலைத்தன்மையை மரபார்ந்த மாறுபாட்டு ஆய்வின் மூலம் தீர்க்கலாம் என்பதே” என்றார். உணர்வுகளை வெளிக்காட்டாமல் ஆனால் வசீகரமான ஒரு புன்னகையுடன் தன் குறிப்புகளிலிருந்து நிமிர்ந்து நோக்கி, “இப்போது யாருக்காவது ஏதேனும் – ”

“ஒரு கேள்வி”, என்றார் ஹெண்டெர்சன் உரத்த குரலில். அவர் குரலில் பதட்டமும் ஆக்ரோஷமும் இருந்ததை மறைத்துக் கொள்ள முயலவில்லை. இந்த ஒரு கணத்திற்காகத்தான் அவர் பல காலமாக காத்துக் கொண்டிருக்கிறார். “அணி H-ன் நேர்மாற்றும் தன்மை குறித்து என்ன கூறுகிறீர்கள்? H ஒருமையாக இருந்தால் என்னவாகும் என நீங்கள் ஆராயவில்லை.”

சோக்லோஸ் குரல் வந்த அரங்கின் இருண்ட ஆழங்களைப் பார்வையால் துழாவினார். “இன்னும் குறிப்பாக கூற முடியுமா?”

“நிச்சயமாக”. அரங்கில் சில தலைகள் திரும்பி ஹெண்டெர்சனை பார்த்தன. “படி 11-ல் நீங்கள் அணி B ஒரு நேர் அணியாயின் அணி H பன்மைத் தன்மையுடையது என்று வாதிடுகிறீர்கள். ஆனால் B உறுதி செய்ய முடியாத நேர் அணியாக இருந்தால் என்னவாகும் என நீங்கள் ஆராயவில்லை. இது போன்ற பரவலான அணி மாற்றங்களில், B உறுதி செய்ய இயலாத நேர் அணியாக இருக்கும் வாய்ப்பிருக்கிறது; அதனால் H ஒற்றை அணியாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது; எனவே, நீங்கள் நிறுவும் இந்த முடிவு நேர் மாற்றத்தக்கதல்ல.”

சோக்லோஸ் நிதானித்தார். கட்டுரையின் படிகளை மெதுவாக புரட்டி பக்கம் 11க்கு வந்தார். அந்த படியை ப்ரொஜக்டரில் வைத்துவிட்டு, அரங்கிற்கு முதுகை காட்டியவாறு திரும்பி தலையைத் உயர்த்தி திரையை பார்த்தார். அரங்கில் இப்போது பரவிய இறுக்கமான முணுமுணுப்புகள் ஹெண்டெர்சனுக்கு திரைப்படங்களில் காட்டப்படும் பொது மரண தண்டனை நிறைவேற்றத்தின் நாடகமாக்கலை நினைவுபடுத்தியது. தன்னிச்சையாக தாடியை வருடிக்கொண்டே சோக்லோஸ் தன்முன் நேர்த்தியாக கட்டவிழ்கிற கணிதச் சிக்கலை, தான் சரியென்று கருதிப் பொருத்திய நேர்மாற்ற முறையை, தான் பார்க்கத் தவறிய, ஹெண்டெர்சன் தாக்கிய மிக நுண்ணிய ஆனால் மிக அத்தியாவசியமான அனுமானத்தை கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தார்.

“ஆம், சரிதான்.” சோக்லோஸ் குரலை செருமிக் கொண்டார். கடற்கரை வெயிலில் காய்ந்தவை போல் அவர் காதுகள் தகித்தன. “நீங்கள் சுட்டிக் காட்டும் நேர் மாற்ற அணியின் இந்தக் கட்டுப்பாடு… ஒரு வரையறையே.”

“வரையறையா? அந்தத் தவறான அனுமானத்திற்கு பின் நீங்கள் நிரூபிக்கும் அத்தனை முடிவுகளும் தவறல்லவா?”

அரங்கத்தில் ப்ரஜக்டரின் மெல்லிய உறுமல் தவிர முழு நிசப்தம்.

சிறிது நேர அவகாசத்திற்கு பிறகு சோக்லோஸின் தலை விறைப்பாக அசைந்தது. “நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். அந்த அனுமானத்திற்கு பின்னான விளைவுகளை நான் இன்னும் தெளிவாக ஆராய வேண்டும் என நினைக்கிறேன்.”

அரங்கிலிருந்து வாழ்த்தொலி எழுந்தது. கருத்தரங்குகளில் இது போன்ற நிகழ்வுகள் அபூர்வம். இந்த நாளின் நாடகீயம் அடுத்த கருத்தரங்கிலும், அதற்கடுத்ததிலும் மெல்லிய கிசுகிசுத்த குரல்களில் விவாதிக்கப் பெறும். இனி பயம் கலந்த மரியாதையுடன் ஹெண்டெர்சன் பார்க்கப் பெறுவார். கூட்டங்களில் அவரது கணித கட்டுரைகளும் இனி தாக்குதல்களின் இலக்காகலாம். இதெல்லாம் ஹெண்டெர்சன் அறிவார். இந்தக் கூட்டம் முடிந்ததும் அவரிடம் பேசவும் சிலர் காத்திருப்பார்கள் என்பதால், சோக்லோஸ் மீண்டும் வலுவாய்ச் செருமி பார்வையாளர்களின் கவனத்தை மீண்டும் தன்பால் திருப்பிக் கொள்ளுமுன் ஹெண்டெர்சன் சத்தமின்றி அரங்கின் பின் கதவு வழியே வெளியேறினார்.

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் மொழியாக்கச் சிறுகதை

சில்கோவ்ஸ்கியின் தேற்றம்: அத்தியாயம் 1
மூலம்: கார்ல் இயாக்னெம்மா

https://padhaakai.com/2016/06/19/zilkowkskys-theorem/

Monday, June 6, 2016

பதாகை மின்னிதழ்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை:


நிறப்பிரிகை: ஐந்து - அரிசனம் 

https://padhaakai.com/2016/06/05/turmeric/

நிறப்பிரிகை: ஐந்து - அரிசனம்

இலைகள் தோறும் 
இழையாடைகள் சரிந்து 
மெதுவே மிக மெதுவே 
சருமம் போர்த்திய 
சருகுகள் ஒதுக்கி 
நிலம் மெல்ல நடுங்கிட 
காதல் செய்யும் வீர்யன் 

இருத்தலின் சுடர் 
இயக்கத்தின் தீ 
அளையிடை இருக்கவொன்னா 
அக்கினிக்குஞ்சு 

மேன்மையொன்றே கருதி 
எரிந்தழித்து 
முளைத்தெழும் 
அரிசனம் 

Wednesday, June 1, 2016

பதாகை மின்னிதழ்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை:

நிறப்பிரிகை: நான்கு - துய்யம்

https://padhaakai.com/2016/06/01/pale-white/


நிறப்பிரிகை: நான்கு - துய்யம்

இறையின் முன் 
கரைந்தொழுகும் கண்ணீர் 
 
இரவும் விடியலும் 
இல்லாதோரின் 
எதிர்நோக்கல் 
எளிமையின் திறப்பு
சாதனையின் உச்சம் 

எதுவும் அறியாத 
எதுவும் நிறையாத 
எதுவாகவும் இல்லாத 
எதுவாகவும் உருமாறும்  
உன்னதம் 
துய்யம் 

Monday, May 23, 2016

நிறப்பிரிகை: மூன்று - மரகதம்

நீர்தேடி 
வேர் நீளும் 
ஒளியாசித்து 
மரமேறும் 
சந்ததி நீள 
விழுதிறங்கும் 

நீரின்றி கருகினாலும் 
ஒரு துளி விழலை 
நினைவிற் பொதித்து 
பெருகிக் கொள்ளும் 




















போர்த்திப் புரந்து 
புரண்டு கொடுத்து 
கலைந்து தாங்கி 
கிளைத்து எழுந்து 
உழைப்பொன்றே கருதி 
உயிரீயும் 
மகிழ்வொன்றே கருதும் 
மரகதம்

பதாகை மின்னிதழ்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: நிறப்பிரிகை: மூன்று – மரகதம்


https://padhaakai.com/2016/05/22/emerald/

Monday, May 16, 2016

நிறப்பிரிகை: இரண்டு - நீலம்

விரி வானை 
விஞ்சும் 
மனிதத்தின் 
மனவிரிவு 

கைவிரல் பற்றி 
படர விடும் 
நம்பிக்கை 

அமைதியற்ற உயிர்
காத்து நிற்கும் 
விடியற் கீற்று  




















கூரை
தாங்கிப்பிடிக்கும் தரை
சூழவமைந்த குடில் 

அகண்டவெளிப் பெருக்கு
அகத்தமைந்த ஞானச்செருக்கு

பதாகை மின்னிதழ்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை:

நிறப்பிரிகை: கவிதை இரண்டு - நீலம் 

https://padhaakai.com/2016/05/15/blue/


Monday, May 9, 2016

நிறப்பிரிகை கவிதைகள்: ஒன்று - சியாமளம்

அடர் 
ஆதி வெம்மையினின்று 
ஒழுகி வந்த   
ஒற்றை முலையமுதம் 
ச்யாமளம் 

கனவின் ஆழம் 
அறியமுடியாஉன்னதம் 

பேதமறியா  
அந்தக உலகின்  
அந்தமில்லா வாஸகி
சியாமளீ 

இன்னும் பின்னும் 
தேடியடைய 
விழையும் கருக்கூடு 
ஆடி அடங்கும் புலன் 
சாயும் மடி ச்யாமளம்

பதாகை மின்னிதழ்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை:  ச்யாமளம்
https://padhaakai.com/2016/05/08/maternal/

Thursday, May 5, 2016

பதாகை மின்னிதழ்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கட்டுரை: எதற்காக எழுதுகிறேன்?
https://padhaakai.com/2016/05/02/ww-saravanan-abhi/

எதற்காக எழுதுகிறேன்?

எதற்காக எழுதுகிறேன்?

எழுதுவதின் லௌகீக தேவை இல்லாத என் போன்றோரிடம் எழுத்தின் தேவை பலவாறாக இருக்கலாம்; அவை காலப் போக்கில் மாறவும் செய்யலாம். நான் எழுதத் தொடங்கிய நாட்களில் இருந்து, இதோ இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் இன்று வரை எனக்கான எழுத்தின் தேவையும் மாறியே வருகிறது, என் எழுத்துக்களைப் போலவே.

மூன்று கால கட்டங்கள்; மூன்று விதமான தேவைகள். மூன்றையும் ஆராய்ந்து பார்க்கும்போது நான் எனக்காக மட்டுமே எழுதுகிறேன் எனப் புரிகிறது.

பதின்ம வயதின் இறுதிக்காலத்தில், புறக்கணிப்பும் (அல்லது அவ்வாறு நினைத்துக் கொள்கிற) அதனால் விளைந்த கொதிப்பும், கொந்தளிப்பும், உணர்வெழுச்சியும், மயக்கமும், பருவமும் அதன் தன்வயப்படலும், கற்று கடந்து விடக்கூடிய, கண்முன் தெரிவதாக நம்பிய தூரங்களும், அறிவின் கர்வமும், சகங்களின் அலைக்கழிப்பும், புலனழிவும், அழிந்து உருமாறுதலுமாக இருந்தபோது எழுதவாரம்பித்தேன்.

எழுத்து அப்போதெனக்கு வலியோடு கூடிய போகம் போல் காட்சியளித்தது. என்னிலிருந்து திமிறி விடுபட்டு, நானாக, என்னில் பகுதியாக, மூச்சுப்பரிதலாக ஆசுவாசம் தந்தது எழுத்து. சூனியங்களில் நிலைத்து, போதை போல் தொலைந்து நின்ற காலங்களில் மீண்டு வரும் வழியாகவும் எழுத்தே இருந்தது.

ஏதும் எதிர்பாராமல் எதுவும் அணிந்து கொள்ளாமல் நானாக இருக்கிற கட்டற்ற விடுதலை உணர்வே எழுத்தையும் என்னையும் பிணைத்திருந்தது.

வேண்டியன தயக்கமின்றி உரைத்தலும், கசடின்றி புனைவின்றி, சிலசமயம் சமநிலை பிறழ்ந்த, எளிதில் கோஷங்கள் போல் தோன்றிவிடக்கூடிய, ஆரவாரமான வெளிப்பாடு அன்றென் எழுத்தின் அடையாளம். அதைத் தரவேண்டிய தேவை எழுத்துக்கு இருந்தது.

காதலும் சகமும் பற்பல உயர்வுகளிலும் தாழ்வுகளிலும் என்னைக் கடத்திச் சென்ற இரண்டாவது காலகட்டத்தில் எழுத்தின் தேவை எப்படியிருந்தது?

ஓர் அடைக்கலமாக, வலியை கசந்து உமிழ்ந்தாலும் சகித்துக்கொள்கிற ஒரு தாதியாக, இரவுகளின் ஆயிரக்கணக்கான கண்ணீர்த்துளிகளை உள்ளிளுத்துக்கொள்கிற வெம்மையான அரவணைப்பாக எழுத்து மாறி விட்டிருந்தது.

பார்க்குமெவற்றிலும் வாழ்வின் உணர்வுகளை சித்தரித்து வடித்துவிடக் கூடிய ஒரு நிரப்பியாக எழுத்து உருமாறியிருந்தது.

இன்றோ, ஆயிரம் உறவுகள் சூழவிருந்தாலும், உள்ளளவில் தனிமை உணர்வதும், அத்தனிமையின் நிறைவில் மகிழ்வதுமான இந்நிலையில், எழுத்தென்பது என்னை எனக்கு பிரதிபலித்துக் கொள்ளும் ஓர் ஆடியாக மாறியிருப்பதைக் காண்கிறேன்.

சூனிய தரிசனங்கள், உறவுச் சிக்கல்கள், மரண பயங்கள் ஆகியவற்றின் உறுத்தல்கள் மெதுமெதுவே மட்டுப்பட்டு, மனிதம் மட்டுமேயான கருதுகோள் எதிலும் தோன்றும்போது, மனிதத்தின் ஒற்றைத்துளியான என்னை இம்மனிதத்தில் எப்படி பொருத்திப் பார்த்துக் கொள்வது என்று (இன்னும் கூட) சுய பரிசோதனை செய்துகொள்கிற ஓர் ஆடியாக எழுத்தின் தேவை இன்றிருக்கிறது.

நாளை, உயிரின் மதுவாக, கடைவழியின் இறுதிச்சுவையாக எழுத்து என்னுடன் பயணிக்கும் என்ற நம்பிக்கையில் இன்னும் எழுதுகிறேன். எழுதுவேன்.

Monday, April 25, 2016

Padhaakai

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - 'தேவதைகளின் இன்றைய களம்'  - https://padhaakai.com/2016/04/24/angels/

தேவதைகளின் இன்றைய களம்

பலிகளம்
தயாராகி விட்டது 

களமெழுதி திரையிறக்கி 
வண்ணமும் சுண்ணமும் சார்த்தி 
நான்மூலைகளில் 
தீபமும் தூபமும் பொருத்தி 
கொட்டும் முழக்கும் கூட்டி 
பலிகளம்
தயாராகி விட்டது 

அம்பும் வில்லும் 
வாளும் சூட்டி 
இளித்தும் அழுதும் 
இன்முகம் காட்டி
கனலென எரியும் 




























கண்கள் உருட்டி
காற்றில் நடிக்கும் 
உடைகள் பூட்டி 
பெருந்தெய்வங்களும்
குறுந்தேவதைகளும் 
களமாடும் நியதி 

கூடி வருவன தனித்து 
ஆடி வருவன 
என 
அவையனைத்தும் 
இந்தக் கதிர்மங்கும் 
அந்தியில் 
களம் வந்து சேர்ந்துவிட்டன  

விடியும் வரை அல்லது 
பலிகள் விழும் வரை 
சந்நதம் அடங்காதாடும் 
அவை 
பெரும்பலிகள் 
கொள்ள வேண்டி 
சினந்தவை இணைவதும் 
கூடியவை பொருதுவதும் 
காத்திருக்கும் பலிகள் 
கண்முன் நிகழ்வதுமோர் 
ஆட்டமே 

யாசித்தல் போல் கையேந்தும் சில 
அபயஹஸ்தம் காட்டும் சில 
உரத்த பாவனைகளில் 
மறைந்து கொள்ளும் சில 
முஷ்டி மடக்கி 
காற்றில் சமர் புரிந்து 
பலிகளை மகிழ்விக்கும் சில 
எனினும் 
கவலை வேண்டாம் 
குழம்ப வேண்டாம் 
தேவதைகளின் தெய்வங்களின் 
தேவை ஒன்றே 

களம்புகக் காத்திருக்கும் 
பலிகளின் 
சித்தத்தின் உறுதியை 
அவ்வப்போது சோதித்துக் 
கொண்டே ஆடுமவை 
பலிகள் 
ஒருநொடி 
கண்கிறங்கி 
உணர்வு மயங்கி 
சிரம் சாய்ந்தால் 
துள்ளிப் பாய்ந்து 
முதற்பலி ஏற்கும் 

துடிக்கும் தாளம் 
துவளா ஆட்டத்திற்கும்
தடுமாறும் பிரக்ஞை 
நிலைதவறும் சித்தத்திற்கும் 
இடையில் 
காத்திருக்கிறது
இந்த பலிகளம் 

அவை ஆடும்
அந்தக் களம் காத்திருக்கும்
சித்தம் சோரும்வரை

Wednesday, April 13, 2016

தாவர வாழ்க்கை - ஒரு குறிப்பு

'வாடிய பயிரை கண்ட போதெல்லாம்' வாடியவனும், 'வெள்ளத்தனைய மலர் நீட்டம்' என்று உவமை சொன்னவனும் பிற உயிர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவே சொன்னார்கள். 

மரங்கள் தன் சுயம் இழப்பதில்லை; பொறாமையில் போட்டியிடுவதில்லை; தன்னளவிலான நிறைவும், நிறைவின் பெருமிதமற்ற வெளிப்பாடும் நிறைந்தவை. நீர்தேடி வேரனுப்பும் சாகசமும் மண்ணுக்கடியே. மானுடம் கற்றுக்கொள்ள குரலின்றி அநேகம் உரைப்பவை. 

ஒரு நான்-லீனியர் விவாதத்தின்படி, ஆறறிவில் குறைந்தவை இவ்வளவு ஆழமான பொருள் பொதிந்து நிற்கையில், ஆறறிவு கைகூடிய மானுடம் என்னவெல்லாம் சாதிக்கக் கூடும்? எத்தனை அணுக்கமான உறவு இப்புவியுடனும் சக மனிதருடனும், பிற உயிர்களுடனும் பேண இயலும்?

புலனடக்கத்தோடு, தீமைகளையும் துரோகங்களையும் செரித்து, நன்மை ஈயக்கூடிய ஒரு தாவரத் தன்மை மானுடத்திற்கு வாய்த்து விட்டால் எப்படியிருக்கும்...

Monday, April 11, 2016

தாவர வாழ்க்கை

என் குணங்களை 
யாவரும் அறியும்வண்ணமே 
வைத்திருக்கிறேன் 
விருட்சம் தன் 
அத்தனை இலைகளையும் 
கதிரொளிக்கென 
விரித்தே 
அடுக்கியிருப்பது போல் 

பழகுமிடம் தோறும் 
பகை பொறுத்து 
பண்பருளும் 
விவேகம் 
விதிக்கப்பட்டிருக்கிறேன் 
கரியமிலம் உண்டு 
உயிர்வளி தருதல் போல் 




















வேரோட்டம் போலவே 
பசை தேடி 
போராட்டம் 

பட்டையைச் 
செதுக்கினாலும் 
சுரத்தல் கூடும் 
பால் மரங்கள் போலும் 
சேதம் சகித்தல்

 
ஆறிலொன்று குறைந்தால் 
ஆகாதா என்ன 

Padhaakai

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை:
தாவர வாழ்க்கை - https://padhaakai.com/2016/04/10/arboreal/

Friday, April 8, 2016

‘நிச்சலனம்’ குறித்து...


பின்னிரவில் ஓர் அழைப்பு. நண்பனின் தாய் இரு வருட புற்றுநோய் போராட்டத்தின் முடிவில் மறைந்த செய்தி. என் தாய் மிக நீண்ட நோய்ப்படுக்கையில் கிடந்து மறைந்த  வருடத்திற்குள் இன்னொரு அன்னையின் ஈமச்செய்தி. சிறு வயதில் அவன் வீட்டிற்கு விளையாடச் சென்று எத்தனையோ நாள் அவள் கையால் பசியாறியிருக்கிறேன். கனிவே குரலும் உருவுமானவள்.

நண்பன் மிக அமைதியானவன்; உணர்வுகள் மீதான கட்டுப்பாடு பிடிகிட்டிய வரம் பெற்றவன். அழாமல், குரல் நடுங்காமல் சொன்னான் - 'அருகிலிருந்தேன், கையைப் பற்றியிருந்தாள். முகத்தைப் பார்த்தவாறிருந்தேன் - வேறெங்கும் நான் பார்த்திருந்திருக்கலாம். ஆனால் பார்க்கவில்லை. ஒரு விக்கல், இமையின் ஓர் அசைவு. என் கைவழியே போய்விட்டாள்'.

அவன் எப்படி அந்தக் கணத்தைக் கடந்தானோ தெரியாது. 

நான் எப்படி அந்தக் கணத்தைக் கடக்கப் போகிறேன் என்றும் தெரியவில்லை. 

யாரின் தாயும் யாவரின் தாய்தானே. 

Monday, April 4, 2016

Padhaakai

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் எனது கவிதை - நிர்ச்சலனம்
http://padhaakai.com/2016/04/03/stillness/

நிர்ச்சலனம்

அவளின்
ஒவ்வொரு இமை அசைவுக்கும்
பதறியபடி
அமர்ந்திருக்கிறேன்

இருவருட நோய்மையின்
இறுதியில் ஈன்றவள்

என்னையே நான் பார்ப்பது போல்
என்னை அவள் நோக்குகிறாள்

வலியினூடான பயணம்
வரைந்த நிரந்தரக் கோடுகளன்றி
வேறற்ற அழகிய முகம்

பிடித்திருக்கும் கரத்தின்வழி
ஏதோவொன்று
நழுவித்தொலைவது போல்

வயிற்றினின்று இறங்கி
முலையருந்தி
இடுப்பிலமர்ந்து
மடியிலுறங்கி
தோளிற்கரைந்து
கைபிடித்து
அமர்ந்திருக்கிறேன்
அவள் அயரவென்று

கடந்து போகும்
அளக்கவியலா ஒவ்வொரு நொடிக்கும்
அவள் கைவழி என்னுள் கூடும்
அமைதியின்மை

துடிக்கும் இமைகள்
வலியால் துடிப்பன
எனுமோர்
சலனம் கடந்து
ஓரிமைப் பொழுதில்
துடியா இமைகள்
திறந்தே அமையும்
என்னுள்ளும்
அந்த அறையுள்ளும்
நிர்ச்சலனம் நிறைத்து

Friday, April 1, 2016

St. Paul’s in Vepery Completes Triple Century

So proud of being an alumnus of this grand old institution! Very nostalgic today. I studied there from 1978 -79 till 1986, when I finished my 12th Standard there.

Thursday, March 17, 2016

அனைத்தும் உடலில் ஆரம்பித்து உடலில் முடிந்து விடுகிறது

யாரும் சீண்டாத, முதுமை குடியேறி, காலத்தால் நரை கண்டு விட்ட ஒரு ரயில் நிலையம்; 

துணை யார், நாள் பொழுது எப்படிக் கழியும், அதன் இருப்பில் வரும் போகும் வரும் போகும் வெயிலும், பனியும், கோடையும், கொடும் மழையும் ஆயினும், எவ்வித சலனமுமில்லாமல் வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் அதன்  வெளியுருவை எங்ஙனம் காட்சிப்படுத்துவது என எண்ணினேன்.

நடைமேடையும், நிறம் மங்கிய சருகுக் கூட்டமும், வரியோடிய விலா எலும்புகள் தெரியும் கட்டிடமும் துலங்கி கவிதை நகர்ந்தது. 

கிளர்ச்சி தரும் வருகை; அது தரும் குற்றவுணர்ச்சி என்ற படிமங்கள் தோன்றி அமைந்ததும், மற்ற வரிகள் அடுத்தடுத்து அமைந்து கொண்டன. 

ரயிலின் சலிப்பிலும், நிலையத்தின் குற்றவுணர்வு சூழ்ந்த கிளர்ச்சியிலும், அதை நினைத்துத் தனித்திருக்கும் இரவுகளிலும் - ஒரு முதிய மனித வாழ்வின் பொருந்தாக் காமத்தையும், அந்திமத்தை நோக்கி நகரும் ஒரு வழிப் பயணத்திலும் பகிரும் சகம் தேடும் இயல்பையும் காண்பதாய்த் தோன்றியது.

அனைத்தும் உடலில் ஆரம்பித்து உடலில் முடிந்து விடுகிறது  என்றொரு வரியும் இறுதியில் தோன்றியது.

பதாகை பதிவு

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் பதிவு:

http://padhaakai.com/2016/03/09/saravanan-abi-note/

Monday, March 7, 2016

யாரும் இறங்கா நிலையம்

கூரை நடைபாதை 
கற்குவியல்கள் 
இருப்புப் பாதை என எங்கும் 
உதிர்ந்த சருகுகள் 

நிறம் மங்கிய 
நீர்வண்ண ஓவியம் 
போலொரு 
களைத்த பொலிவு 

இற்றது போல்வன 
எனினும் 
இறாது நிற்கும் 
நிலையத்தின் 
மரவரிகள் 
ஒரு நூறு 
நினைவுகளின் மௌன சாட்சிகள் 

அவ்வப்போது 
பாதை தேய்த்து 
சலிப்புடன் பெருமூச்செறிந்து 
வந்து நின்று 

பொருமலுடன் 
நீர் சிந்தி 
வேண்டா வெறுப்பாக 
கிளம்பிச் செல்லும் 
புகையற்ற வண்டி தரும் 
கிளர்ச்சியின் 
குற்றவுணர்வுடன் 
இரவில் தனித்திருக்கும் 

பகிர்வுகளில் 
பேதமேதும் 
பாராட்டுவதில்லை 
இருப்புப் பாதையோரம் 
இன்று முளைத்த 
எருக்கம்செடிக்கும் 
நடைமேடையின் 
நடுவீற்றிருக்கும் 
முரட்டு அரசுக்குமிடையே  

செல்லமாய் வருடி  
செந்நிறப் புழுதியை 
வீசியடித்து கழுவும்  
எத்தனையோ மழைக்காலங்களில் 
ஒன்றைக் கடந்து செல்ல 
இன்று காத்திருக்கும் 
உடலம்

பதாகை இணைய இதழில்...

பதாகை இணைய இதழில் வெளிவந்திருக்கும் கவிதை:

http://padhaakai.com/2016/03/06/nobodys-station-saravanan-abi/

Thursday, February 11, 2016

தினமும் தினமும்

உதறும் உடைகளில்
ஆயிரம் அட்டைகள்
வீட்டின்
பின்புற வழிமுழுதும்
செழித்துப் பிணையும்
நாக்குப் பூச்சிகள்

கனவின் திரையில்
நெளியும் துல்லிய சலனம்

திடுக்கிடாமல் எழுந்தமர்ந்து
உதற வேண்டியதையும்
உட்கொள்வதையும்
எண்ணித் துணியும்
தெளிவும் திடமும்
வேண்டும் வேண்டும்

தினமும் வேண்டும்

Pandit Venkatesh Kumar and Raag Hameer