ஆர்ப்பரித்து
அடங்காதெழுந்தலையும்
சர்ப்பம்
மண்ணுக்குள் எப்போது
தன் படம் புதைக்கும்
இரவெப்போதும்
உறங்காமல்
ருசியற்ற பிளந்த நாவுகளை
கடைவாயோரம் தீட்டிக்கொள்வது
என்று ஓயும்
உதிர்ந்து சரியும்
இலைத் துணுக்குகளையும்
உடலசையாமல் தலைசுழற்றி
தன்னிருப்பின் எதிர்ப்பென
சீறும்
இறந்து கிடக்கும்
தான் உண்ணா
மிருகங்களின் மேலும்
வேறேதும் தேடி
சலனமின்றி நெளிந்து நகரும்
மிக அழகிய
செதில்களிலான கருநிற
வளைவுகளை
தானே உற்றுப்பார்த்தபடி
கண்கள் மின்ன
பகலிலும் இரவிலும்
பொழுதுகளின் ஓரங்கமென
ஒளியில் ஒளியென
நிழலில் இருளென
கலந்து மறையும்
நளினம்
இரையை விழுங்கும்போது
மாற்றுரு கொள்ளும்
தன் மணம் விளங்கும்
எல்லை குறித்த
அச்சம்
என்றும் விலகாதபோது
ஓயாது உறங்காது
நகர்ந்தே கழிக்கவேண்டிய
அவலம்
வால் சூழலிலும்
வளைமுறுக்கிலும்
தோன்றும்
எந்த இரவின்
துயர்ச்சூழலில்
தன் தோலை
தானே கழற்றுமது
1 comment:
Obsolutelty true. The feelings arised and its manner of expression is excellent.
Post a Comment