Sunday, May 15, 2011

முரண்களுக்கு

உடல் அழகால் ஈர்க்கப்படாத காதலிற்கு இணைப்பும் பிரிவும் வலியற்றதாக இருக்கும், இயற்கையாக.

விமர்சனத்துக்கஞ்சி படைக்கப்படுவது படைப்பன்று.

உன் இரசனைக்குட்படாத உன் படைப்புகள் உயரியதன்று.


உரிமை

அவளிடம் மிக நெருங்கிப் பழகுகின்ற, அந்தரங்கங்களை பகிர்ந்துகொள்ளக் கூடிய தகுதியோ உரிமையோ உடையவர்களுக்கு மட்டுமே உரித்தானது போன்று ஒரு நறுமணம் அவளிடமிருந்து கமழ்ந்ததாக தோன்றியது.

- 03/12/1989 


நாட்டின் எதிர்காலம்

சீறும், உலகை வெல்லப் பாயும் 
           சிங்கங்களே, அடக்க வியலா
வீறும் கொண்ட இளஞ் சமுதாயமே
          விண்ணை வளைக்கும் நம்பிக்கையும் 
மீறும் உழைப்பும் துணிவுள்ளமும்
         மிஞ்சும் இளைஞரைக் காணும்
பேறும் எமக்கிலையோ வென்றிருந்தேன்
          பாரத ஏறுகளை காணும்வரை

நமதருமை பாரதத்தை சூழ்ந்திடும்
        நயவஞ்சகர் தம்மிடம் தந்திடவே
உமதுள்ளம் பொறுத்திடுமோ - அன்றி
       உயிர் துடித்திடுமோ உடல் கொதித்திடுமோ
சமன்பாடு பரப்பிய எம்மாருயிர்
       சத்தியத்தாய் உயிரின்விலை என்ன என்ன
எமக்குள்ளே எம்மிளைய சமூகத்தினுள்ளே
       என்றும் நிலவும் ஒற்றுமையே

- 03/05/1984

இந்த சங்கீதம்

இந்த சங்கீதம்
இந்தக் கவிதை
அவள் வீணையில் எழுகிறது
வீணைகள் பிணைக்கப்பட்டவை
அவள் வீணையின் தந்தி
நிரடப்படும் பொது
என் வீணையின் தந்திகள்
சிலிர்க்கின்றன

ஒரு சங்கீதம்
ஜனிக்கிறது

ஓர் உன்மத்தம்
எதற்காகவோ 
எழுந்தடங்குகிறது 

விரல்கள்
ரகசிய வித்வான்கள்
அவைஎழுப்பும்
உணர்ச்சி சங்கீதம்
மனமெங்கும் அலைபாய்கிறது
நானும் அவளும்

இருவீணைகளும் சங்கீத உற்சவம்
நடத்துகின்றன
இசைவேள்வியின் உச்ச உணர்ச்சியில்
அறுந்த தந்தியிரண்டும் 
தழுவிக் கிடக்கின்றன

-19/03/1987

ஞானஸ்நானம்

அதோ,
அந்த வனாந்திரம்...

ஈரத்தோடு கூடிய
இலைகளின் மேல்
அவளும் நானும்
நடக்கையில்
இவள் பாதம்
இடர்ப்ப்படுமோவென
அஞ்சத் தோன்றுகிறது

மண்ணின் அந்த வாசம்

என் தோள்மேல்
புரளும் அவள் தலைமயிர்
பொன்னிறக் கோடுகளாய்
கோலம் போடுகிறது

பறவைகள்
இவள்குரலைக் கேட்டு
வாயடைத்துப் போகின்றன

துணிந்த சிலகுயில்கள்
பலமுறை பாடிப் பார்க்கின்றன

அவளை
அணைத்துச் சாய்த்து
மெதுவாய் நடக்கையில்
உலகின் கோடியை
அடைந்து
வெளிச்சென்றார்ப் போல்
தோன்றுகிறது

கதிரவன்
புகையோடு கூடிய தன்
கைகளை நீட்டி
அந்த அடர்ந்த கானகத்தில்
எங்களை ஆசீர்வதிக்கிறான்
1515342953_4d17f59a3b.jpg (500×451)
அந்த நிசப்தத்தில்
எங்களுயிர்
காதலுக்கு ஏங்குவது கூட
கேட்கிறது

நடக்கிறோம்
நடந்து கொண்டேயிருக்கிறோம்

ஓர் எல்லையற்ற வெளியில்
இயற்கையின் அழகோடு
அவளோடு
வாழ்நாளெல்லாம் இருந்துவிடலாம்போல்
இருக்கிறது

மனம்
அக்கணம்
இன்பமா துன்பமா
வேண்டுமா போதுமா என
உணர்வதை நிறுத்திவிட்டது
அனிச்சையா ஆணையிட்டதா
என்பதுகூட
புரியவில்லை

அந்தக் கானகம்
அடர்ந்து விட்டது

காற்று இலைகளாய்
அட்சதை தூவுகிறது
இவள் மேலுதிர்ந்த
இலைகள் 
கன்னம் தடவை
சாபல்யமடைந்து மெதுவாய்
கீழே விழுகின்றன

அந்த அழகிய காட்டில்
அவளும் நானும்

- 22/07/1986

உயிர்த்தவம்

உன் நினைவுகளை
என் மனபீடத்தில்
வேள்வித்தீயாய்
வளர்த்தேன்

கடைசியில்தான் தெரிந்தது
நினைவுகள் மட்டுமல்லாது
நானுமே
ஆகுதியாய் ஆகிவிட்டேனென்று

ஆயினும்
இத்தனைத் தவத்திற்குப் பின்னும்
நீயேன்
இன்னுமுன்
அவிர்ப்பாகத்தை
அடையவரவில்லை காதலி?

- 04/09/1985


மென்மை

நான்
அவளுக்காக காத்திருக்கிறேன்
நேரம்
நிசப்தக் கத்தியைக் கொண்டு
என்னை அறுக்கிறது ...

அதோ, பூக்கள் மலரும்
சப்தம் கேட்கிறது
வந்தது
என் காதலி

- 07/08/1985

Pandit Venkatesh Kumar and Raag Hameer