Showing posts with label Saravanan Kavithaigal. Show all posts
Showing posts with label Saravanan Kavithaigal. Show all posts

Monday, February 20, 2017

எதிரே ஓடும் நதி

எதிரே ஓடிக் கொண்டிருந்த 
நதியைப் போலொரு பெருக்கு 
என்னுள்ளும் 


உயர்ந்து அமிழ்ந்து 
மறைந்து போயினும் 
காலாதீதமாய் விரைந்த தடம் 
காணக்கிடக்கிறது 

உயிர் அருந்தி 
வறண்ட கரைகளில் 
விடாது அள்ளினாலும் 
என் தடம் மறைய 
ஆகும் இன்னும் 
ஆயிரம் காலம் 

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் 7 ஹைக்கூ கவிதைகளின் மொழியாக்கம்

Friday, January 6, 2017

அந்தக் கணம்


எத்தனையோ சொல்லிமுடித்தும்

எஞ்சி நிற்கிறது புரிதலின் குறை
குற்றம் உனதல்ல
அறிதலின் குறை
மொழியின் குறை
அசந்தர்ப்பங்களின் பங்கும்
இல்லாமலில்லை
பற்பல உறவுகளில்
புதுப்புது நிகழ்வுகளில்
புலன்களின் புரிதல்
மொழிகளின்றியும்
நிகழ்ந்தவண்ணமே
இருந்தபோதிலும்
இழந்ததும் பெற்றதும்
இவையென இத்தருணத்தில்
கடைவிரிக்க வேண்டியதில்லை
ஒரு திரியினின்று மற்றொன்று
பற்றிக் கொள்ளும்
அந்தக்
கணம் மட்டுமே வேண்டும்

Solvanam

சொல்வனம் மின்னிதழில் வெளிவந்திருக்கும் எனது கவிதை: அந்தக் கணம்

http://solvanam.com/?p=47878

Monday, October 17, 2016

ஏதுமற்று

 த்திய ஜாவாவின் 
யோக்யகர்த்தா நகரில் 
விரைந்து சாயும் 
மழைஅந்திகளின் 
முன்மாலைப் பொழுது 

தொலைவில் எரிந்தடங்கும் 
ஒளியின் முன் 
விண்ணைத் தீண்டக் கிளம்பும் 
மூன்று எரிகலன்கள்போல் நிற்கும் 
பிரம்பனான் கோவிற்சிகரங்களை 
நோக்கிக் கொண்டு 
மதுவை அருந்திக் கொண்டிருக்கிறேன் 



கருமையும் அடர்த்தியும் 
கலந்து சாயும் மழைத்தீற்றலினூடே 
தெருவின் இரைச்சலைப் பின்விட்டுவிட்டு 
விடுதியின் சாளரத்தில் 
தனித்து அமர்ந்திருக்கும் 
என்னெதிரில் அமர்கிறாள் அவள் 

சிறகை சிலிர்த்து நீர்த்துளிகள் 
உதிர்க்கும் பறவைபோல் 
நீவிக்கொள்கிறாள் 

இந்தியனா என்கிறாள் 
எனக்குத் தெரியும் 
இதையும் இதற்கடுத்த 
எந்த இரு கேள்விகளையும் 
நான் எதிர்பார்க்கலாமென 

ஆமோதிக்கும் புன்னகைக்குப்பிறகு 
பிரம்பனான் கோவில்வளாகம் பார்த்தேனா 
என்று வினவுகிறாள் 

மழையின் ஓசை 
ஒரு சுதியேறி சீரான கதியில் பெய்கிறது 

பதிலாக 
அவள் அருந்த 
என்ன வேண்டுமென கேட்கிறேன் 

இரு கோப்பைகள் 
நிறைந்தும் குறைந்தும் 
மழைச்சாரலில் நனைந்த 
புன்னகைகள் கடந்தும் 
இருவரும் தத்தம் 
கோப்பைகளை ஏந்திக்கொண்டு 
கவியும் இருளில் 
கரைந்து கொண்டிருக்கிறோம் 

Monday, September 19, 2016

அணைதல்

கண்கள் எரிய 
பார்த்துக் கொண்டிருந்தேன் 

வெளியும் இருளும் 
கலங்கிக் குழம்பி 
வண்ணங்கள் மறைந்து தோன்றி 
வடக்குவான் ஒளித்திரையின்  
நினைவையழிக்கும் 
குழப்பச் சித்திரம் போல் 
நிறமற்ற நிறம் 
ஒளியற்ற ஒளி 

தெளிவைத் 
தேடவும் தோன்றா 
சுயஅழிவின் கவர்ச்சி 

திரைவிலக்கி இருள்கூர்ந்து 
ஒற்றைச்சுடர் ஒளிர்வில் 
நிலைக்கக் கண்டேன் 

ஒரு சுடரின் பிறந்த சுடர் 
ஓராயிரம் சுடரூட்டுதல் 
உயர்வன்றி வேறென்ன

Monday, June 6, 2016

நிறப்பிரிகை: ஐந்து - அரிசனம்

இலைகள் தோறும் 
இழையாடைகள் சரிந்து 
மெதுவே மிக மெதுவே 
சருமம் போர்த்திய 
சருகுகள் ஒதுக்கி 
நிலம் மெல்ல நடுங்கிட 
காதல் செய்யும் வீர்யன் 

இருத்தலின் சுடர் 
இயக்கத்தின் தீ 
அளையிடை இருக்கவொன்னா 
அக்கினிக்குஞ்சு 

மேன்மையொன்றே கருதி 
எரிந்தழித்து 
முளைத்தெழும் 
அரிசனம் 

Monday, May 16, 2016

நிறப்பிரிகை: இரண்டு - நீலம்

விரி வானை 
விஞ்சும் 
மனிதத்தின் 
மனவிரிவு 

கைவிரல் பற்றி 
படர விடும் 
நம்பிக்கை 

அமைதியற்ற உயிர்
காத்து நிற்கும் 
விடியற் கீற்று  




















கூரை
தாங்கிப்பிடிக்கும் தரை
சூழவமைந்த குடில் 

அகண்டவெளிப் பெருக்கு
அகத்தமைந்த ஞானச்செருக்கு

பதாகை மின்னிதழ்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை:

நிறப்பிரிகை: கவிதை இரண்டு - நீலம் 

https://padhaakai.com/2016/05/15/blue/


Monday, April 25, 2016

தேவதைகளின் இன்றைய களம்

பலிகளம்
தயாராகி விட்டது 

களமெழுதி திரையிறக்கி 
வண்ணமும் சுண்ணமும் சார்த்தி 
நான்மூலைகளில் 
தீபமும் தூபமும் பொருத்தி 
கொட்டும் முழக்கும் கூட்டி 
பலிகளம்
தயாராகி விட்டது 

அம்பும் வில்லும் 
வாளும் சூட்டி 
இளித்தும் அழுதும் 
இன்முகம் காட்டி
கனலென எரியும் 




























கண்கள் உருட்டி
காற்றில் நடிக்கும் 
உடைகள் பூட்டி 
பெருந்தெய்வங்களும்
குறுந்தேவதைகளும் 
களமாடும் நியதி 

கூடி வருவன தனித்து 
ஆடி வருவன 
என 
அவையனைத்தும் 
இந்தக் கதிர்மங்கும் 
அந்தியில் 
களம் வந்து சேர்ந்துவிட்டன  

விடியும் வரை அல்லது 
பலிகள் விழும் வரை 
சந்நதம் அடங்காதாடும் 
அவை 
பெரும்பலிகள் 
கொள்ள வேண்டி 
சினந்தவை இணைவதும் 
கூடியவை பொருதுவதும் 
காத்திருக்கும் பலிகள் 
கண்முன் நிகழ்வதுமோர் 
ஆட்டமே 

யாசித்தல் போல் கையேந்தும் சில 
அபயஹஸ்தம் காட்டும் சில 
உரத்த பாவனைகளில் 
மறைந்து கொள்ளும் சில 
முஷ்டி மடக்கி 
காற்றில் சமர் புரிந்து 
பலிகளை மகிழ்விக்கும் சில 
எனினும் 
கவலை வேண்டாம் 
குழம்ப வேண்டாம் 
தேவதைகளின் தெய்வங்களின் 
தேவை ஒன்றே 

களம்புகக் காத்திருக்கும் 
பலிகளின் 
சித்தத்தின் உறுதியை 
அவ்வப்போது சோதித்துக் 
கொண்டே ஆடுமவை 
பலிகள் 
ஒருநொடி 
கண்கிறங்கி 
உணர்வு மயங்கி 
சிரம் சாய்ந்தால் 
துள்ளிப் பாய்ந்து 
முதற்பலி ஏற்கும் 

துடிக்கும் தாளம் 
துவளா ஆட்டத்திற்கும்
தடுமாறும் பிரக்ஞை 
நிலைதவறும் சித்தத்திற்கும் 
இடையில் 
காத்திருக்கிறது
இந்த பலிகளம் 

அவை ஆடும்
அந்தக் களம் காத்திருக்கும்
சித்தம் சோரும்வரை

Monday, April 11, 2016

தாவர வாழ்க்கை

என் குணங்களை 
யாவரும் அறியும்வண்ணமே 
வைத்திருக்கிறேன் 
விருட்சம் தன் 
அத்தனை இலைகளையும் 
கதிரொளிக்கென 
விரித்தே 
அடுக்கியிருப்பது போல் 

பழகுமிடம் தோறும் 
பகை பொறுத்து 
பண்பருளும் 
விவேகம் 
விதிக்கப்பட்டிருக்கிறேன் 
கரியமிலம் உண்டு 
உயிர்வளி தருதல் போல் 




















வேரோட்டம் போலவே 
பசை தேடி 
போராட்டம் 

பட்டையைச் 
செதுக்கினாலும் 
சுரத்தல் கூடும் 
பால் மரங்கள் போலும் 
சேதம் சகித்தல்

 
ஆறிலொன்று குறைந்தால் 
ஆகாதா என்ன 

Monday, April 4, 2016

Padhaakai

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் எனது கவிதை - நிர்ச்சலனம்
http://padhaakai.com/2016/04/03/stillness/

நிர்ச்சலனம்

அவளின்
ஒவ்வொரு இமை அசைவுக்கும்
பதறியபடி
அமர்ந்திருக்கிறேன்

இருவருட நோய்மையின்
இறுதியில் ஈன்றவள்

என்னையே நான் பார்ப்பது போல்
என்னை அவள் நோக்குகிறாள்

வலியினூடான பயணம்
வரைந்த நிரந்தரக் கோடுகளன்றி
வேறற்ற அழகிய முகம்

பிடித்திருக்கும் கரத்தின்வழி
ஏதோவொன்று
நழுவித்தொலைவது போல்

வயிற்றினின்று இறங்கி
முலையருந்தி
இடுப்பிலமர்ந்து
மடியிலுறங்கி
தோளிற்கரைந்து
கைபிடித்து
அமர்ந்திருக்கிறேன்
அவள் அயரவென்று

கடந்து போகும்
அளக்கவியலா ஒவ்வொரு நொடிக்கும்
அவள் கைவழி என்னுள் கூடும்
அமைதியின்மை

துடிக்கும் இமைகள்
வலியால் துடிப்பன
எனுமோர்
சலனம் கடந்து
ஓரிமைப் பொழுதில்
துடியா இமைகள்
திறந்தே அமையும்
என்னுள்ளும்
அந்த அறையுள்ளும்
நிர்ச்சலனம் நிறைத்து

Monday, March 7, 2016

யாரும் இறங்கா நிலையம்

கூரை நடைபாதை 
கற்குவியல்கள் 
இருப்புப் பாதை என எங்கும் 
உதிர்ந்த சருகுகள் 

நிறம் மங்கிய 
நீர்வண்ண ஓவியம் 
போலொரு 
களைத்த பொலிவு 

இற்றது போல்வன 
எனினும் 
இறாது நிற்கும் 
நிலையத்தின் 
மரவரிகள் 
ஒரு நூறு 
நினைவுகளின் மௌன சாட்சிகள் 

அவ்வப்போது 
பாதை தேய்த்து 
சலிப்புடன் பெருமூச்செறிந்து 
வந்து நின்று 

பொருமலுடன் 
நீர் சிந்தி 
வேண்டா வெறுப்பாக 
கிளம்பிச் செல்லும் 
புகையற்ற வண்டி தரும் 
கிளர்ச்சியின் 
குற்றவுணர்வுடன் 
இரவில் தனித்திருக்கும் 

பகிர்வுகளில் 
பேதமேதும் 
பாராட்டுவதில்லை 
இருப்புப் பாதையோரம் 
இன்று முளைத்த 
எருக்கம்செடிக்கும் 
நடைமேடையின் 
நடுவீற்றிருக்கும் 
முரட்டு அரசுக்குமிடையே  

செல்லமாய் வருடி  
செந்நிறப் புழுதியை 
வீசியடித்து கழுவும்  
எத்தனையோ மழைக்காலங்களில் 
ஒன்றைக் கடந்து செல்ல 
இன்று காத்திருக்கும் 
உடலம்

பதாகை இணைய இதழில்...

பதாகை இணைய இதழில் வெளிவந்திருக்கும் கவிதை:

http://padhaakai.com/2016/03/06/nobodys-station-saravanan-abi/

Wednesday, January 20, 2016

அற்றது கேட்கின்



குறுகித் திணிந்த
முடியா துவாரம்

பத்திரம் தேடி
நுழைய வேண்டுமொரு யோனி

ஓயத் துரத்தும்
அருவங்கள்

விழுந்தும் தீரா
இருளடர்ந்த ஆழம் 

கால்கள் தளைத்தும்
படுக்கை நனைக்கும் நனவு 

சளைத்து அறும்
உடலவயங்கள்

தொடவியலா முலைகள்
விழித்து எழினும் அதே

Thursday, December 10, 2015

திணை மயக்கம்

நாட்காட்டியில் தாள்கள் கிழியும் சத்தம்
நொடிகள் கழியும் சத்தம்

யன்னலின் வெளியே
நிறம் மாறி மாறித் தோன்றும்
இரவின் வெக்கையும்
பகலின் மழைஈரமும்

வாழ்வு என்பதும்
நகர்தல் என்பதும்
அர்த்தமற்ற ஒலிக்குறிப்புகள்

சருகாகவும் தளிராகவும்
மிக மென்மையாக
மிக மிக அமைதியாக
உதிர்த்துக் கொண்டிருக்கிறது
காலம்

திறந்தே கிடந்தும்
யாரும் நுழையா
இக்கதவுகள்

திங்களொரு முறை
தோன்றும் மகனோ மகளோ
வருவது கூட
அசையா கதவுகளின்
மன்றாடலின் பேரில்

அசையா நாற்காலி அஃறிணை
அசையா கட்டில் அஃறிணை
அவற்றினூடே
உயிர்ப்புடனொரு
நாட்காட்டியும் கடிகாரமும்
பதாகை  மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: திணை மயக்கம்

http://padhaakai.com/2015/12/09/exotica/

Wednesday, November 4, 2015

ஒற்றைப் பூ


மகிழ மரத்தினின்று
பூக்கள் உதிர்வது போல்
கிரணங்கள் அறைக்குள்
பெய்து  கொண்டிருக்கின்றன

மௌனம் காத்திருந்த நம்மிருவரிடயே
இசை பேசிக் கொண்டிருந்தது 

மெல்லிய
ஆவிபுகையும்
தேநீர்க்கோப்பையை உறிஞ்சிவிட்டு 
என்னை பார்க்கிறாய்

புலர்வெயிலின்
இளவெம்மையுடன் 
மெதுமெதுவே மஞ்சள் மாறும்
அறையின் பரிமாணங்களை
ஹரி பிரசாதின் குழலிசை நிறைக்கிறது

தோடி ராகந்தானே 
என வினவுகிறேன்

தலையசைக்கிறாய்
செவிமடல் பொதிந்த
அணிகள் ஆடுகின்றன
வர்ணங்களை வாரியிறைத்தபடி

என்னுள்ளும்
பொன்னிழைகளாய் மின்னும்
காதோர குழற்கற்றைகளை 
ஒதுக்கிவிட 
தவிக்கும் என் விரல்களின்
தகிப்பை ஏன் மறைக்க வேண்டும்
என எண்ணுகிறேன்

உன் இதழில் இருந்து முறுவலொன்று
நழுவிச் சிந்துகிறது

வெளியே
வெட்கமின்றி
பூக்கள்
உதிர்ந்து கொண்டிருக்கின்றன

Pandit Venkatesh Kumar and Raag Hameer