Showing posts with label Poetry - Tamil. Show all posts
Showing posts with label Poetry - Tamil. Show all posts

Monday, November 13, 2017

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: நீட்சி

https://padhaakai.com/2017/11/10/in-extenso/

நீட்சி

செயலின்மையின் செய்நேர்த்தி
உச்சம்கொண்ட
ஒரு காலம் கடந்தோம்
மனிதத்திரளின் அத்தனை உன்னதமும்
உறைந்து கிடந்ததோர்
காலமும் கடந்தோம்
விடிவதும் கதிர் முடிவதும்
இடையே
எழுவதும் விழுவதும்
உண்பதும் கழிப்பதுமான
தொடர்நியதிகளின் சூழ்வே
வாழ்வென விதித்துக்
கிடந்ததொரு காலமும் கடந்தோம்
ஒரு குரலில்லை அழுகையில்லை
அழுந்திக் கிடக்குமோர் உணர்வுமில்லை
செய்தே அறியமுடியுமெனின்
யாதும் செய்யாதிருத்தல்
யார் நலன் பொருட்டு
என்றும் வினவாதிருந்தோம்
இன்றோ
தவறெனப்படும் பாதைகளிலும் பயணம்
குறையொளியெனினும் திரியேறும் சிறுதீபம்
இயைந்தெழும்
இயக்கத்தின் வெளிப்பாடு
காண்கிறோம்
ஆயினும் கேட்கிறோம்
இன்னும் புதிதாய் சில குரல்கள்
இத்தனைக் காலம்
உறங்கிக் கிடந்த குரல்கள்
பாதையின் வளைவை இடரை
ஒளியின் போதாமையை
சுட்டும் குரல்கள்
அவலம் சிறிதும் தொனிக்கா
கயமைக் குரல்கள்
வேண்டுவது ஒன்றே
இயக்கமின்றி
இம்மானுடத்திரள் தேங்கியழிதல்
முன்னகர்வில்லை
இயங்காதிருப்பின்
இயக்கம் போற்றுதும்
இயக்கம் போற்றுதும்
இன்மை களையும்
இயக்கம் போற்றுதும்

Monday, July 31, 2017

இக்கவிதை

வானின்று பொழியும் நீர்ச்சரங்களில்
மழை வில்லை மண் இறக்கிவிடும்
பிரயத்தனங்களின் கனமில்லாத கவிதை

பதிந்து சென்ற தடங்களின் அழுத்தமும்
புதுப்பாதை சமைக்க நேரும்
நிர்பந்தங்களின் எடையுமற்ற கவிதை

தன் சிறகின் இளைப்பு தவிர
எதன்பொருட்டும்
தோள்தர நேர்ந்துவிடும் கட்டுப்பாடற்ற கவிதை

எளிதில் உருவழிந்துபோகும்
எதிலும் குறிக்கப்பெறா
இந்தக்கணம் போலும்
இக்கணம் வாழும்
இக்கவிதை

Monday, June 26, 2017

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் - நில்லா கணத்தின் கவிதை

https://padhaakai.com/2017/06/25/poetry-of-the-transcient/

நிலையா கணத்தின் கவிதை​

இன்றிரவு மிகச்சரியாக
ஒரு நொடிப்பொழுதில்
இரையிட்டு நெய்சேர்த்து
அணிசேர்த்து ஊன்வளர்த்த
இளமை
முன்வாசல் வழியாக
கடந்து மறையும்
என்பது எப்படித் தெரிந்தது

பிறந்தது முதல் இக்கணம் வரை
ஏற்றிக் கனத்த அனுபவப்பொதிகளில்
கிழிந்தொழுகியது போலும்
நுண்ணுணர்வு

நோயில் புரள்பவனின் சத்தமற்ற வாதை
தொடநீளும் விரல்களின் உதாசீனங்கள்
நிறைந்திருக்கும் இந்த இரவில்
இதுபோன்று யுகங்கள்தோறும்
இளமைகள் கரைந்து வந்திருக்கின்றன
புதிதொன்றுமில்லை

கரைந்துகூடி வரும் முகிற்கருமையின் முன்னே
வாயிலை வெளிச்சப்படுத்தி
விளக்கொன்றும் ஏற்றுவதற்கில்லை
காத்திருப்பவனின் அனுபவம் என்றுமே சிறந்தது

நிலைச்சட்டத்திற்குள் நிலையாது
அசையும் திரைச்சீலையில்
அகப்படாதலையும் வண்ணக்குலைவு

இத்தனை பெரிய அறை
எத்தனையோ சன்னல்கள்
இருப்பினும்
வலமிருந்து குதித்து இடம் செல்கிறது
தொலைவில் பதிந்திருக்கும்
மின்னும் கண்களுடன்
கரிந்து கவிந்துவரும்
இருளின் நிறம்தோய்ந்த கரும்பூனை

எனைத் தவிர எதுவும்
உடைந்துவிடக்கூடாதென்பதில்
உறுதியாகவிருக்கிறேன்
வாடித்தலைக்கவிழ்ந்த பூச்சருகுகளை
மென்மையாக வருடும் இந்த இரவின்
கூதற்காற்றை என்ன சொல்வது

விளக்கின்றி என் வெம்மை மட்டுமே
துணையிருக்கும் இந்த அறையில்
கனத்த சத்தமெழுப்பாத மெத்தையில்
கால்கள் மடித்துக் காத்திருக்கிறேன்
குளிர்காற்று மெதுவே நகரும்
முன்வாசலை நோக்கியபடி

எனக்கு மிகுந்த நேரமில்லை
புலர்வதற்குள் பார்த்துவிடவேண்டும்
கடக்கும் கணத்தை ​

Monday, August 29, 2016

கடைவரி

செய்தி கிடைத்தவுடன்
விரைந்து சென்றேன்
அவள் கவிதைகளைப் போலவே
அவளையும் பிடிக்கும்

சிறிதே பிரிந்திருந்த
இதழ்களில்
கவிதை
இன்னும் தொக்கி நிற்பதுபோல்
ஓர் உறைந்த குறுநகை

எதிர் எதிரே அமர்ந்து
புகையும் காப்பிக்கோப்பைகளின்
உன்னத நறுமணத்திற்கிடையே
கடைப்பார்வை ஏதுமின்றி
கண்களை நேராய் கவ்வும்
உனது கவிதைகளுடனான
மாலைகள்

எரியும் மஞ்சள் சுடரின்
மெல்லிய ஒளியில்
சாய்ந்துகிடந்த
உன் நெஞ்சின்
தாளத்திற்கியைந்த கவிதைகள்
அறாதுதித்த
இரவுகள்

எத்தனையோ இடைவெளிகள்
எதெதெற்காகவோ பிணக்குகள்
ஒரு கவிதையின் தரிசனத்தில்
ஓர் அந்தரங்க சிலாகிப்பில்
இயற்கையாக
மிக இயற்கையாக
விரல்களின் பிணைப்பாக
முடிந்திருக்கின்றன

சூழவும் நோக்கினேன்

அவளின் கவிதைகள் வழியும்
அத்தனை முகங்கள்
அங்கே 

Monday, August 22, 2016

அபத்தக் கவிகளும் அற்ப மதுவும்


உடலை உருக்கி
சொற்களில்
வடிக்கும் வாதை
கரைந்து நெளிந்து உருமாறி
கனவுகள்
வழியும் ரசவாதம்
கோடியிலொருவனாய்
கற்ற வித்தை

ஆயிரமாயிரம் வருடம்
கோடானுகோடி பாக்கள்
கொட்டித் தேடி
சலித்து வடித்து
சுவை தேர்ந்து
உயர்த்தும் சமூகம்
அரற்றுவது ஒன்றே

அற்ப மது
தனியொருவனின் முயக்கம்

பீடம் தேர்ந்த
நீயோ
எங்களில் கோடியிலொருவன்
பேசாப் பொருள்
பேசத் துணிந்தவன்

பணயப் பொருளாய்
உயிரைத் தொலைப்பவன்

கூறவந்தது முடிந்ததா
தவறற்ற மொழியின்
தேர்வு
நிச்சயப்படுத்தப்பட்டுவிட்டதா
திரும்பிப் பார்ப்பதற்கும்
எதிர்நோக்குவதற்கும்
உன் தடம்
குழப்பமின்றி
பதிக்கப்பட்டுவிட்டதா

இல்லையெனின்
உன் அற்ப மது
உன்னோடு
எங்கள் ஆதங்கம்
எங்களோடு 

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை:

https://padhaakai.com/2016/08/21/homage-2/

Monday, August 8, 2016

ஹைட்டியின் பூகம்பத்தில் பிழைத்தவன்

அவன் 
வண்டியோட்டிக் கொண்டிருந்தான் 

கனத்த குரல் 
இடையறாத 
உற்சாகக் குரலோசையிடையே 
பரபரவென 
காற்றில் அலையும் 
கரங்கள் 
முழுதும் பாதியுமாய் 
வெண்சுண்ணம் பூசி 
உயராது நிற்கும் 
போர்ட் ஆ பிரின்ஸின் கட்டிடங்கள் 
காட்டி 
போக்குவரத்தின் நெரிசல் கண்டு 
பதறி நான் அலறும் போது 
சிரித்து காரை 
நெறிப்படுத்தும் 

இது எங்கள் தேவாலயம் 
இதுதான் நாடாளுமன்றம் 
இது என் தந்தை சிக்கிக் கிடந்த 
சிறைச்சாலை 
இது தான் என் தாய் 
நிலம்விளை பொருள்விற்கும் 
வாரச்சந்தை 
நானும் என் தங்கையரும் 
ஆடி மகிழ்ந்த பூங்கா 
பாதியில் நின்ற பள்ளி 
புன்சிரிப்பு வழியும் 
கனத்த குரலில் 
சொல்லிச்சென்றவனின் 
கரம்தொடர்ந்து 
பார்வை தொடர 
எதுவும் இல்லை 
எங்கும் 

இடையில் விழுந்த
அமைதி உணராது 
கூடைச்சுமை தாங்கித்திரியும் 
ஆடவர் பெண்டிர் 
கூட்டம் தவிர்த்து 
நிலைச்சின்னம் இருமருங்கும் 
தேடி 
திரும்பிப் பார்த்தேன் 
அவனை 

கண்ணாடியின் முன்னால் 
பதிந்திருந்த 
அவன் பார்வையில் 
இன்றுமில்லை 
நாளையுமில்லை 

விழித்து எழுந்தால் 
ஆடியிருந்த 
எந்தச்சின்னமும் இல்லை
கூடிமகிழ்ந்த 
பள்ளி இல்லை பூங்கா இல்லை 
சந்தை இல்லை வீடு இல்லை 
ஆலயம் இல்லை சாலையும் இல்லை 

பின்னிக் கிடந்த 
எந்த 
நினைவுகளும் இல்லை 

திரும்பிக் கேட்டான் 
கண்ணீர் வழிய 
என் புன்னகை உறைய 

துடைத்தெறியப்பட்டுவிட்ட 
எங்கள் நினைவுச்சின்னங்கள் 
சுவடின்றி மறைந்த  பாலியங்கள் 
புரியுமோ என்னவோ 
உங்களுக்கு 
புரியுமோ என்னவோ 

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை

https://padhaakai.com/2016/08/07/a-survivor-from-haiti/

Monday, June 6, 2016

பதாகை மின்னிதழ்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை:


நிறப்பிரிகை: ஐந்து - அரிசனம் 

https://padhaakai.com/2016/06/05/turmeric/

நிறப்பிரிகை: ஐந்து - அரிசனம்

இலைகள் தோறும் 
இழையாடைகள் சரிந்து 
மெதுவே மிக மெதுவே 
சருமம் போர்த்திய 
சருகுகள் ஒதுக்கி 
நிலம் மெல்ல நடுங்கிட 
காதல் செய்யும் வீர்யன் 

இருத்தலின் சுடர் 
இயக்கத்தின் தீ 
அளையிடை இருக்கவொன்னா 
அக்கினிக்குஞ்சு 

மேன்மையொன்றே கருதி 
எரிந்தழித்து 
முளைத்தெழும் 
அரிசனம் 

Wednesday, June 1, 2016

பதாகை மின்னிதழ்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை:

நிறப்பிரிகை: நான்கு - துய்யம்

https://padhaakai.com/2016/06/01/pale-white/


நிறப்பிரிகை: நான்கு - துய்யம்

இறையின் முன் 
கரைந்தொழுகும் கண்ணீர் 
 
இரவும் விடியலும் 
இல்லாதோரின் 
எதிர்நோக்கல் 
எளிமையின் திறப்பு
சாதனையின் உச்சம் 

எதுவும் அறியாத 
எதுவும் நிறையாத 
எதுவாகவும் இல்லாத 
எதுவாகவும் உருமாறும்  
உன்னதம் 
துய்யம் 

Monday, May 23, 2016

நிறப்பிரிகை: மூன்று - மரகதம்

நீர்தேடி 
வேர் நீளும் 
ஒளியாசித்து 
மரமேறும் 
சந்ததி நீள 
விழுதிறங்கும் 

நீரின்றி கருகினாலும் 
ஒரு துளி விழலை 
நினைவிற் பொதித்து 
பெருகிக் கொள்ளும் 




















போர்த்திப் புரந்து 
புரண்டு கொடுத்து 
கலைந்து தாங்கி 
கிளைத்து எழுந்து 
உழைப்பொன்றே கருதி 
உயிரீயும் 
மகிழ்வொன்றே கருதும் 
மரகதம்

பதாகை மின்னிதழ்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: நிறப்பிரிகை: மூன்று – மரகதம்


https://padhaakai.com/2016/05/22/emerald/

Monday, May 16, 2016

நிறப்பிரிகை: இரண்டு - நீலம்

விரி வானை 
விஞ்சும் 
மனிதத்தின் 
மனவிரிவு 

கைவிரல் பற்றி 
படர விடும் 
நம்பிக்கை 

அமைதியற்ற உயிர்
காத்து நிற்கும் 
விடியற் கீற்று  




















கூரை
தாங்கிப்பிடிக்கும் தரை
சூழவமைந்த குடில் 

அகண்டவெளிப் பெருக்கு
அகத்தமைந்த ஞானச்செருக்கு

Monday, May 9, 2016

நிறப்பிரிகை கவிதைகள்: ஒன்று - சியாமளம்

அடர் 
ஆதி வெம்மையினின்று 
ஒழுகி வந்த   
ஒற்றை முலையமுதம் 
ச்யாமளம் 

கனவின் ஆழம் 
அறியமுடியாஉன்னதம் 

பேதமறியா  
அந்தக உலகின்  
அந்தமில்லா வாஸகி
சியாமளீ 

இன்னும் பின்னும் 
தேடியடைய 
விழையும் கருக்கூடு 
ஆடி அடங்கும் புலன் 
சாயும் மடி ச்யாமளம்

பதாகை மின்னிதழ்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை:  ச்யாமளம்
https://padhaakai.com/2016/05/08/maternal/

Monday, April 25, 2016

தேவதைகளின் இன்றைய களம்

பலிகளம்
தயாராகி விட்டது 

களமெழுதி திரையிறக்கி 
வண்ணமும் சுண்ணமும் சார்த்தி 
நான்மூலைகளில் 
தீபமும் தூபமும் பொருத்தி 
கொட்டும் முழக்கும் கூட்டி 
பலிகளம்
தயாராகி விட்டது 

அம்பும் வில்லும் 
வாளும் சூட்டி 
இளித்தும் அழுதும் 
இன்முகம் காட்டி
கனலென எரியும் 




























கண்கள் உருட்டி
காற்றில் நடிக்கும் 
உடைகள் பூட்டி 
பெருந்தெய்வங்களும்
குறுந்தேவதைகளும் 
களமாடும் நியதி 

கூடி வருவன தனித்து 
ஆடி வருவன 
என 
அவையனைத்தும் 
இந்தக் கதிர்மங்கும் 
அந்தியில் 
களம் வந்து சேர்ந்துவிட்டன  

விடியும் வரை அல்லது 
பலிகள் விழும் வரை 
சந்நதம் அடங்காதாடும் 
அவை 
பெரும்பலிகள் 
கொள்ள வேண்டி 
சினந்தவை இணைவதும் 
கூடியவை பொருதுவதும் 
காத்திருக்கும் பலிகள் 
கண்முன் நிகழ்வதுமோர் 
ஆட்டமே 

யாசித்தல் போல் கையேந்தும் சில 
அபயஹஸ்தம் காட்டும் சில 
உரத்த பாவனைகளில் 
மறைந்து கொள்ளும் சில 
முஷ்டி மடக்கி 
காற்றில் சமர் புரிந்து 
பலிகளை மகிழ்விக்கும் சில 
எனினும் 
கவலை வேண்டாம் 
குழம்ப வேண்டாம் 
தேவதைகளின் தெய்வங்களின் 
தேவை ஒன்றே 

களம்புகக் காத்திருக்கும் 
பலிகளின் 
சித்தத்தின் உறுதியை 
அவ்வப்போது சோதித்துக் 
கொண்டே ஆடுமவை 
பலிகள் 
ஒருநொடி 
கண்கிறங்கி 
உணர்வு மயங்கி 
சிரம் சாய்ந்தால் 
துள்ளிப் பாய்ந்து 
முதற்பலி ஏற்கும் 

துடிக்கும் தாளம் 
துவளா ஆட்டத்திற்கும்
தடுமாறும் பிரக்ஞை 
நிலைதவறும் சித்தத்திற்கும் 
இடையில் 
காத்திருக்கிறது
இந்த பலிகளம் 

அவை ஆடும்
அந்தக் களம் காத்திருக்கும்
சித்தம் சோரும்வரை

Pandit Venkatesh Kumar and Raag Hameer