Showing posts with label IB Saravanan Poems. Show all posts
Showing posts with label IB Saravanan Poems. Show all posts

Wednesday, October 4, 2017

வேட்கை

Image result for bird drinking water + busy road

பசுமஞ்சள் அலகைச் சாய்த்துச் சாய்த்து
கையகல நீர்த்தேக்கத்தை
துளித்துளியாய் அருந்துகிறாய்
அடுத்தப் பேருந்து வந்து
நீர்த்தேக்கத்தை சிதறடிக்குமுன்
உன்சிறு நாவின் வேட்கை
தணியுமோ ஆறாதோ
தவித்தவாறு நடைமேடையில் நிற்கும்
என்னருகே தாவி நின்று
வந்த பேருந்து கிளம்பக் காத்திருக்கிறோம்
நீயும் நானும்

Monday, July 31, 2017

இக்கவிதை

வானின்று பொழியும் நீர்ச்சரங்களில்
மழை வில்லை மண் இறக்கிவிடும்
பிரயத்தனங்களின் கனமில்லாத கவிதை

பதிந்து சென்ற தடங்களின் அழுத்தமும்
புதுப்பாதை சமைக்க நேரும்
நிர்பந்தங்களின் எடையுமற்ற கவிதை

தன் சிறகின் இளைப்பு தவிர
எதன்பொருட்டும்
தோள்தர நேர்ந்துவிடும் கட்டுப்பாடற்ற கவிதை

எளிதில் உருவழிந்துபோகும்
எதிலும் குறிக்கப்பெறா
இந்தக்கணம் போலும்
இக்கணம் வாழும்
இக்கவிதை

Tuesday, July 11, 2017

பால்மயக்கம்

Image result for sukhumvit street bars

இறுக்கம்கூடிய
திரைகளையும் திறந்துவிடும்
நுட்பமறிந்தோர் மட்டுமே
நிறைந்ததோர் உலகம்
வண்ணம் வழியும் வீதியின்
இருமருங்கும் இடப்பட்டிருக்கும்
உணவு மேசைகளினின்று
ஏந்த யாருமின்றி
சிந்துகின்றன சுவைமிகுந்த மதுக்கள்
அங்கே நடனமாடுவதுபோல் நடிப்பதற்கும்
நடப்பதுபோல் கிடப்பதற்கும்
ஊக்கம் தரும் மிகச் சிறந்த லாகிரிகள்
அவை மட்டுமல்ல
நடைபாதையின் மேலேறி
உதட்டினருகே குவளையைக்
கொணர்கிறாள்
மிக மிக சிவந்த இதழ்ச்சாயம்வழி
ஒன்றையே குறிப்புணர்த்தும்
வியட்நாமிய இளம்பெண்
பர்மிய இசைபொழியும்
மதுக்கடையின் அடுத்து
தாய் உணவகம்
இசை என்று பிரித்தறிய முடியா ஒலிகள்
இன்ன நிறம் என்று பகுத்தறிவியலா ஒளிகள்
இவ்வினம் இது
இச்சுவை அது
எதுவும் கூடும்
விரித்துக் கிடக்குமிந்த பாங்காக் நகரத்து
சுகும்வித் வீதியில்
ஆணோவென்னும் பெண்ணும்
பெண்ணோ எனும் ஆணும்
ஏன் உணர வேண்டும்
இதுவென்ன மயக்கமென

பதாகை மின்னிதழில் கவிதை

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை:

https://padhaakai.com/2017/07/09/sukhumvit-street/

Monday, June 26, 2017

நிலையா கணத்தின் கவிதை​

இன்றிரவு மிகச்சரியாக
ஒரு நொடிப்பொழுதில்
இரையிட்டு நெய்சேர்த்து
அணிசேர்த்து ஊன்வளர்த்த
இளமை
முன்வாசல் வழியாக
கடந்து மறையும்
என்பது எப்படித் தெரிந்தது

பிறந்தது முதல் இக்கணம் வரை
ஏற்றிக் கனத்த அனுபவப்பொதிகளில்
கிழிந்தொழுகியது போலும்
நுண்ணுணர்வு

நோயில் புரள்பவனின் சத்தமற்ற வாதை
தொடநீளும் விரல்களின் உதாசீனங்கள்
நிறைந்திருக்கும் இந்த இரவில்
இதுபோன்று யுகங்கள்தோறும்
இளமைகள் கரைந்து வந்திருக்கின்றன
புதிதொன்றுமில்லை

கரைந்துகூடி வரும் முகிற்கருமையின் முன்னே
வாயிலை வெளிச்சப்படுத்தி
விளக்கொன்றும் ஏற்றுவதற்கில்லை
காத்திருப்பவனின் அனுபவம் என்றுமே சிறந்தது

நிலைச்சட்டத்திற்குள் நிலையாது
அசையும் திரைச்சீலையில்
அகப்படாதலையும் வண்ணக்குலைவு

இத்தனை பெரிய அறை
எத்தனையோ சன்னல்கள்
இருப்பினும்
வலமிருந்து குதித்து இடம் செல்கிறது
தொலைவில் பதிந்திருக்கும்
மின்னும் கண்களுடன்
கரிந்து கவிந்துவரும்
இருளின் நிறம்தோய்ந்த கரும்பூனை

எனைத் தவிர எதுவும்
உடைந்துவிடக்கூடாதென்பதில்
உறுதியாகவிருக்கிறேன்
வாடித்தலைக்கவிழ்ந்த பூச்சருகுகளை
மென்மையாக வருடும் இந்த இரவின்
கூதற்காற்றை என்ன சொல்வது

விளக்கின்றி என் வெம்மை மட்டுமே
துணையிருக்கும் இந்த அறையில்
கனத்த சத்தமெழுப்பாத மெத்தையில்
கால்கள் மடித்துக் காத்திருக்கிறேன்
குளிர்காற்று மெதுவே நகரும்
முன்வாசலை நோக்கியபடி

எனக்கு மிகுந்த நேரமில்லை
புலர்வதற்குள் பார்த்துவிடவேண்டும்
கடக்கும் கணத்தை ​

Monday, May 22, 2017

ஜகார்த்தாவின் மாஸ்யூஸ்

நறுமணத் தேநீரும்
ஜாவாவின் மெல்லிய தந்தியிசையும்
கமழும் வரவேற்பறை
உட்சென்று உடைமாற்றி
உடலைத் தளர்த்தி நீட்டிப் படுத்தால்
உள்வருகிறாள் இளம் பெண்ணொருத்தி
அழுத்தி இழுத்து
தடவி நீவி
மிதித்து முறுக்கி
ஒரு மணி நேரமும்
இரு மெல்லிய தோள்கள்
இரு மெல்லிய கரங்கள்
மிக மெல்லிய விரல்கள்
சின்னஞ்சிறு உருவம்
புன்னகைமாறா இயக்கம்
அசதி களைந்து
உறக்கம் மேவ
வெளிக்கிளம்புகையில்
கடிகாரத்தை ஏறிட்டபடி
கைகள் நீட்டி
சோம்பல் முறிக்கிறாள்
என் உடல்வலி
தான் மாற்றிக்கொண்டு
அடுத்த வாடிக்கையாளரை
எதிர்நோக்கும்
ஜகார்த்தாவின் மாஸ்யூஸ்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: ஜகார்த்தாவின் மாஸ்யூஸ்

https://padhaakai.com/2017/05/21/the-masseuse-of-jakarta/

Monday, February 20, 2017

எதிரே ஓடும் நதி

எதிரே ஓடிக் கொண்டிருந்த 
நதியைப் போலொரு பெருக்கு 
என்னுள்ளும் 


உயர்ந்து அமிழ்ந்து 
மறைந்து போயினும் 
காலாதீதமாய் விரைந்த தடம் 
காணக்கிடக்கிறது 

உயிர் அருந்தி 
வறண்ட கரைகளில் 
விடாது அள்ளினாலும் 
என் தடம் மறைய 
ஆகும் இன்னும் 
ஆயிரம் காலம் 

இயற்கையின் கவிதை

haiku1
அவ்வப்போது
நிலவின் ரசிகர்களுக்கு
ஓய்வளிக்கும் முகில்கள்
– மட்சுவோ பாஷோ
haiku2
மேற்கின் காற்றில் எறியுண்டு
கிழக்கில் சேர்கின்றன
உதிர்ந்த இலைகள்
– யோசா புஸோன்
haiku3
என் வாழ்வு –
இன்னும் எவ்வளவு மீதம்?
இது குறுகிய இரவு
– மசஓகா ஷிகி
haiku4
குளிர்காலக் காடெங்கும்
உதிர்ப்பதற்கு இலைகளின்றி
கடுஞ்சினத்துடன் ஓலமிடும் காற்று
– நட்சுமே சோசெகி
haiku5
இந்தப் பாதையில்
யாரும் பயணிப்பதில்லை என்னைத் தவிர,
இந்த இலையுதிர்கால மாலையில்
– மட்சுவோ பாஷோ
haiku6
இலையுதிர்காலத்தின் முதற்காலை
நான் பார்க்கும் கண்ணாடி
என் தந்தையின் முகத்தைக் காட்டுகிறது
– முரகாமி கிஜோ
haiku7
விளக்கு அணைந்ததும்
சன்னல் சட்டகத்தினுள்
நுழைகின்றன குளிர் விண்மீன்கள்
– நட்சுமே சோசெகி

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் 7 ஹைக்கூ கவிதைகளின் மொழியாக்கம்

Friday, January 6, 2017

அந்தக் கணம்


எத்தனையோ சொல்லிமுடித்தும்

எஞ்சி நிற்கிறது புரிதலின் குறை
குற்றம் உனதல்ல
அறிதலின் குறை
மொழியின் குறை
அசந்தர்ப்பங்களின் பங்கும்
இல்லாமலில்லை
பற்பல உறவுகளில்
புதுப்புது நிகழ்வுகளில்
புலன்களின் புரிதல்
மொழிகளின்றியும்
நிகழ்ந்தவண்ணமே
இருந்தபோதிலும்
இழந்ததும் பெற்றதும்
இவையென இத்தருணத்தில்
கடைவிரிக்க வேண்டியதில்லை
ஒரு திரியினின்று மற்றொன்று
பற்றிக் கொள்ளும்
அந்தக்
கணம் மட்டுமே வேண்டும்

Solvanam

சொல்வனம் மின்னிதழில் வெளிவந்திருக்கும் எனது கவிதை: அந்தக் கணம்

http://solvanam.com/?p=47878

Monday, October 17, 2016

ஏதுமற்று

 த்திய ஜாவாவின் 
யோக்யகர்த்தா நகரில் 
விரைந்து சாயும் 
மழைஅந்திகளின் 
முன்மாலைப் பொழுது 

தொலைவில் எரிந்தடங்கும் 
ஒளியின் முன் 
விண்ணைத் தீண்டக் கிளம்பும் 
மூன்று எரிகலன்கள்போல் நிற்கும் 
பிரம்பனான் கோவிற்சிகரங்களை 
நோக்கிக் கொண்டு 
மதுவை அருந்திக் கொண்டிருக்கிறேன் 



கருமையும் அடர்த்தியும் 
கலந்து சாயும் மழைத்தீற்றலினூடே 
தெருவின் இரைச்சலைப் பின்விட்டுவிட்டு 
விடுதியின் சாளரத்தில் 
தனித்து அமர்ந்திருக்கும் 
என்னெதிரில் அமர்கிறாள் அவள் 

சிறகை சிலிர்த்து நீர்த்துளிகள் 
உதிர்க்கும் பறவைபோல் 
நீவிக்கொள்கிறாள் 

இந்தியனா என்கிறாள் 
எனக்குத் தெரியும் 
இதையும் இதற்கடுத்த 
எந்த இரு கேள்விகளையும் 
நான் எதிர்பார்க்கலாமென 

ஆமோதிக்கும் புன்னகைக்குப்பிறகு 
பிரம்பனான் கோவில்வளாகம் பார்த்தேனா 
என்று வினவுகிறாள் 

மழையின் ஓசை 
ஒரு சுதியேறி சீரான கதியில் பெய்கிறது 

பதிலாக 
அவள் அருந்த 
என்ன வேண்டுமென கேட்கிறேன் 

இரு கோப்பைகள் 
நிறைந்தும் குறைந்தும் 
மழைச்சாரலில் நனைந்த 
புன்னகைகள் கடந்தும் 
இருவரும் தத்தம் 
கோப்பைகளை ஏந்திக்கொண்டு 
கவியும் இருளில் 
கரைந்து கொண்டிருக்கிறோம் 

Monday, September 19, 2016

அணைதல்

கண்கள் எரிய 
பார்த்துக் கொண்டிருந்தேன் 

வெளியும் இருளும் 
கலங்கிக் குழம்பி 
வண்ணங்கள் மறைந்து தோன்றி 
வடக்குவான் ஒளித்திரையின்  
நினைவையழிக்கும் 
குழப்பச் சித்திரம் போல் 
நிறமற்ற நிறம் 
ஒளியற்ற ஒளி 

தெளிவைத் 
தேடவும் தோன்றா 
சுயஅழிவின் கவர்ச்சி 

திரைவிலக்கி இருள்கூர்ந்து 
ஒற்றைச்சுடர் ஒளிர்வில் 
நிலைக்கக் கண்டேன் 

ஒரு சுடரின் பிறந்த சுடர் 
ஓராயிரம் சுடரூட்டுதல் 
உயர்வன்றி வேறென்ன

Monday, August 29, 2016

கடைவரி

செய்தி கிடைத்தவுடன்
விரைந்து சென்றேன்
அவள் கவிதைகளைப் போலவே
அவளையும் பிடிக்கும்

சிறிதே பிரிந்திருந்த
இதழ்களில்
கவிதை
இன்னும் தொக்கி நிற்பதுபோல்
ஓர் உறைந்த குறுநகை

எதிர் எதிரே அமர்ந்து
புகையும் காப்பிக்கோப்பைகளின்
உன்னத நறுமணத்திற்கிடையே
கடைப்பார்வை ஏதுமின்றி
கண்களை நேராய் கவ்வும்
உனது கவிதைகளுடனான
மாலைகள்

எரியும் மஞ்சள் சுடரின்
மெல்லிய ஒளியில்
சாய்ந்துகிடந்த
உன் நெஞ்சின்
தாளத்திற்கியைந்த கவிதைகள்
அறாதுதித்த
இரவுகள்

எத்தனையோ இடைவெளிகள்
எதெதெற்காகவோ பிணக்குகள்
ஒரு கவிதையின் தரிசனத்தில்
ஓர் அந்தரங்க சிலாகிப்பில்
இயற்கையாக
மிக இயற்கையாக
விரல்களின் பிணைப்பாக
முடிந்திருக்கின்றன

சூழவும் நோக்கினேன்

அவளின் கவிதைகள் வழியும்
அத்தனை முகங்கள்
அங்கே 

Monday, August 22, 2016

அபத்தக் கவிகளும் அற்ப மதுவும்


உடலை உருக்கி
சொற்களில்
வடிக்கும் வாதை
கரைந்து நெளிந்து உருமாறி
கனவுகள்
வழியும் ரசவாதம்
கோடியிலொருவனாய்
கற்ற வித்தை

ஆயிரமாயிரம் வருடம்
கோடானுகோடி பாக்கள்
கொட்டித் தேடி
சலித்து வடித்து
சுவை தேர்ந்து
உயர்த்தும் சமூகம்
அரற்றுவது ஒன்றே

அற்ப மது
தனியொருவனின் முயக்கம்

பீடம் தேர்ந்த
நீயோ
எங்களில் கோடியிலொருவன்
பேசாப் பொருள்
பேசத் துணிந்தவன்

பணயப் பொருளாய்
உயிரைத் தொலைப்பவன்

கூறவந்தது முடிந்ததா
தவறற்ற மொழியின்
தேர்வு
நிச்சயப்படுத்தப்பட்டுவிட்டதா
திரும்பிப் பார்ப்பதற்கும்
எதிர்நோக்குவதற்கும்
உன் தடம்
குழப்பமின்றி
பதிக்கப்பட்டுவிட்டதா

இல்லையெனின்
உன் அற்ப மது
உன்னோடு
எங்கள் ஆதங்கம்
எங்களோடு 

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை:

https://padhaakai.com/2016/08/21/homage-2/

Monday, August 8, 2016

ஹைட்டியின் பூகம்பத்தில் பிழைத்தவன்

அவன் 
வண்டியோட்டிக் கொண்டிருந்தான் 

கனத்த குரல் 
இடையறாத 
உற்சாகக் குரலோசையிடையே 
பரபரவென 
காற்றில் அலையும் 
கரங்கள் 
முழுதும் பாதியுமாய் 
வெண்சுண்ணம் பூசி 
உயராது நிற்கும் 
போர்ட் ஆ பிரின்ஸின் கட்டிடங்கள் 
காட்டி 
போக்குவரத்தின் நெரிசல் கண்டு 
பதறி நான் அலறும் போது 
சிரித்து காரை 
நெறிப்படுத்தும் 

இது எங்கள் தேவாலயம் 
இதுதான் நாடாளுமன்றம் 
இது என் தந்தை சிக்கிக் கிடந்த 
சிறைச்சாலை 
இது தான் என் தாய் 
நிலம்விளை பொருள்விற்கும் 
வாரச்சந்தை 
நானும் என் தங்கையரும் 
ஆடி மகிழ்ந்த பூங்கா 
பாதியில் நின்ற பள்ளி 
புன்சிரிப்பு வழியும் 
கனத்த குரலில் 
சொல்லிச்சென்றவனின் 
கரம்தொடர்ந்து 
பார்வை தொடர 
எதுவும் இல்லை 
எங்கும் 

இடையில் விழுந்த
அமைதி உணராது 
கூடைச்சுமை தாங்கித்திரியும் 
ஆடவர் பெண்டிர் 
கூட்டம் தவிர்த்து 
நிலைச்சின்னம் இருமருங்கும் 
தேடி 
திரும்பிப் பார்த்தேன் 
அவனை 

கண்ணாடியின் முன்னால் 
பதிந்திருந்த 
அவன் பார்வையில் 
இன்றுமில்லை 
நாளையுமில்லை 

விழித்து எழுந்தால் 
ஆடியிருந்த 
எந்தச்சின்னமும் இல்லை
கூடிமகிழ்ந்த 
பள்ளி இல்லை பூங்கா இல்லை 
சந்தை இல்லை வீடு இல்லை 
ஆலயம் இல்லை சாலையும் இல்லை 

பின்னிக் கிடந்த 
எந்த 
நினைவுகளும் இல்லை 

திரும்பிக் கேட்டான் 
கண்ணீர் வழிய 
என் புன்னகை உறைய 

துடைத்தெறியப்பட்டுவிட்ட 
எங்கள் நினைவுச்சின்னங்கள் 
சுவடின்றி மறைந்த  பாலியங்கள் 
புரியுமோ என்னவோ 
உங்களுக்கு 
புரியுமோ என்னவோ 

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை

https://padhaakai.com/2016/08/07/a-survivor-from-haiti/

Monday, June 6, 2016

நிறப்பிரிகை: ஐந்து - அரிசனம்

இலைகள் தோறும் 
இழையாடைகள் சரிந்து 
மெதுவே மிக மெதுவே 
சருமம் போர்த்திய 
சருகுகள் ஒதுக்கி 
நிலம் மெல்ல நடுங்கிட 
காதல் செய்யும் வீர்யன் 

இருத்தலின் சுடர் 
இயக்கத்தின் தீ 
அளையிடை இருக்கவொன்னா 
அக்கினிக்குஞ்சு 

மேன்மையொன்றே கருதி 
எரிந்தழித்து 
முளைத்தெழும் 
அரிசனம் 

Pandit Venkatesh Kumar and Raag Hameer