Showing posts with label IB Saravanan Poems. Show all posts
Showing posts with label IB Saravanan Poems. Show all posts

Wednesday, June 1, 2016

பதாகை மின்னிதழ்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை:

நிறப்பிரிகை: நான்கு - துய்யம்

https://padhaakai.com/2016/06/01/pale-white/


நிறப்பிரிகை: நான்கு - துய்யம்

இறையின் முன் 
கரைந்தொழுகும் கண்ணீர் 
 
இரவும் விடியலும் 
இல்லாதோரின் 
எதிர்நோக்கல் 
எளிமையின் திறப்பு
சாதனையின் உச்சம் 

எதுவும் அறியாத 
எதுவும் நிறையாத 
எதுவாகவும் இல்லாத 
எதுவாகவும் உருமாறும்  
உன்னதம் 
துய்யம் 

Monday, May 23, 2016

நிறப்பிரிகை: மூன்று - மரகதம்

நீர்தேடி 
வேர் நீளும் 
ஒளியாசித்து 
மரமேறும் 
சந்ததி நீள 
விழுதிறங்கும் 

நீரின்றி கருகினாலும் 
ஒரு துளி விழலை 
நினைவிற் பொதித்து 
பெருகிக் கொள்ளும் 




















போர்த்திப் புரந்து 
புரண்டு கொடுத்து 
கலைந்து தாங்கி 
கிளைத்து எழுந்து 
உழைப்பொன்றே கருதி 
உயிரீயும் 
மகிழ்வொன்றே கருதும் 
மரகதம்

பதாகை மின்னிதழ்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: நிறப்பிரிகை: மூன்று – மரகதம்


https://padhaakai.com/2016/05/22/emerald/

Monday, May 16, 2016

நிறப்பிரிகை: இரண்டு - நீலம்

விரி வானை 
விஞ்சும் 
மனிதத்தின் 
மனவிரிவு 

கைவிரல் பற்றி 
படர விடும் 
நம்பிக்கை 

அமைதியற்ற உயிர்
காத்து நிற்கும் 
விடியற் கீற்று  




















கூரை
தாங்கிப்பிடிக்கும் தரை
சூழவமைந்த குடில் 

அகண்டவெளிப் பெருக்கு
அகத்தமைந்த ஞானச்செருக்கு

பதாகை மின்னிதழ்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை:

நிறப்பிரிகை: கவிதை இரண்டு - நீலம் 

https://padhaakai.com/2016/05/15/blue/


Monday, May 9, 2016

நிறப்பிரிகை கவிதைகள்: ஒன்று - சியாமளம்

அடர் 
ஆதி வெம்மையினின்று 
ஒழுகி வந்த   
ஒற்றை முலையமுதம் 
ச்யாமளம் 

கனவின் ஆழம் 
அறியமுடியாஉன்னதம் 

பேதமறியா  
அந்தக உலகின்  
அந்தமில்லா வாஸகி
சியாமளீ 

இன்னும் பின்னும் 
தேடியடைய 
விழையும் கருக்கூடு 
ஆடி அடங்கும் புலன் 
சாயும் மடி ச்யாமளம்

பதாகை மின்னிதழ்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை:  ச்யாமளம்
https://padhaakai.com/2016/05/08/maternal/

Monday, April 25, 2016

தேவதைகளின் இன்றைய களம்

பலிகளம்
தயாராகி விட்டது 

களமெழுதி திரையிறக்கி 
வண்ணமும் சுண்ணமும் சார்த்தி 
நான்மூலைகளில் 
தீபமும் தூபமும் பொருத்தி 
கொட்டும் முழக்கும் கூட்டி 
பலிகளம்
தயாராகி விட்டது 

அம்பும் வில்லும் 
வாளும் சூட்டி 
இளித்தும் அழுதும் 
இன்முகம் காட்டி
கனலென எரியும் 




























கண்கள் உருட்டி
காற்றில் நடிக்கும் 
உடைகள் பூட்டி 
பெருந்தெய்வங்களும்
குறுந்தேவதைகளும் 
களமாடும் நியதி 

கூடி வருவன தனித்து 
ஆடி வருவன 
என 
அவையனைத்தும் 
இந்தக் கதிர்மங்கும் 
அந்தியில் 
களம் வந்து சேர்ந்துவிட்டன  

விடியும் வரை அல்லது 
பலிகள் விழும் வரை 
சந்நதம் அடங்காதாடும் 
அவை 
பெரும்பலிகள் 
கொள்ள வேண்டி 
சினந்தவை இணைவதும் 
கூடியவை பொருதுவதும் 
காத்திருக்கும் பலிகள் 
கண்முன் நிகழ்வதுமோர் 
ஆட்டமே 

யாசித்தல் போல் கையேந்தும் சில 
அபயஹஸ்தம் காட்டும் சில 
உரத்த பாவனைகளில் 
மறைந்து கொள்ளும் சில 
முஷ்டி மடக்கி 
காற்றில் சமர் புரிந்து 
பலிகளை மகிழ்விக்கும் சில 
எனினும் 
கவலை வேண்டாம் 
குழம்ப வேண்டாம் 
தேவதைகளின் தெய்வங்களின் 
தேவை ஒன்றே 

களம்புகக் காத்திருக்கும் 
பலிகளின் 
சித்தத்தின் உறுதியை 
அவ்வப்போது சோதித்துக் 
கொண்டே ஆடுமவை 
பலிகள் 
ஒருநொடி 
கண்கிறங்கி 
உணர்வு மயங்கி 
சிரம் சாய்ந்தால் 
துள்ளிப் பாய்ந்து 
முதற்பலி ஏற்கும் 

துடிக்கும் தாளம் 
துவளா ஆட்டத்திற்கும்
தடுமாறும் பிரக்ஞை 
நிலைதவறும் சித்தத்திற்கும் 
இடையில் 
காத்திருக்கிறது
இந்த பலிகளம் 

அவை ஆடும்
அந்தக் களம் காத்திருக்கும்
சித்தம் சோரும்வரை

Monday, April 11, 2016

தாவர வாழ்க்கை

என் குணங்களை 
யாவரும் அறியும்வண்ணமே 
வைத்திருக்கிறேன் 
விருட்சம் தன் 
அத்தனை இலைகளையும் 
கதிரொளிக்கென 
விரித்தே 
அடுக்கியிருப்பது போல் 

பழகுமிடம் தோறும் 
பகை பொறுத்து 
பண்பருளும் 
விவேகம் 
விதிக்கப்பட்டிருக்கிறேன் 
கரியமிலம் உண்டு 
உயிர்வளி தருதல் போல் 




















வேரோட்டம் போலவே 
பசை தேடி 
போராட்டம் 

பட்டையைச் 
செதுக்கினாலும் 
சுரத்தல் கூடும் 
பால் மரங்கள் போலும் 
சேதம் சகித்தல்

 
ஆறிலொன்று குறைந்தால் 
ஆகாதா என்ன 

Monday, April 4, 2016

நிர்ச்சலனம்

அவளின்
ஒவ்வொரு இமை அசைவுக்கும்
பதறியபடி
அமர்ந்திருக்கிறேன்

இருவருட நோய்மையின்
இறுதியில் ஈன்றவள்

என்னையே நான் பார்ப்பது போல்
என்னை அவள் நோக்குகிறாள்

வலியினூடான பயணம்
வரைந்த நிரந்தரக் கோடுகளன்றி
வேறற்ற அழகிய முகம்

பிடித்திருக்கும் கரத்தின்வழி
ஏதோவொன்று
நழுவித்தொலைவது போல்

வயிற்றினின்று இறங்கி
முலையருந்தி
இடுப்பிலமர்ந்து
மடியிலுறங்கி
தோளிற்கரைந்து
கைபிடித்து
அமர்ந்திருக்கிறேன்
அவள் அயரவென்று

கடந்து போகும்
அளக்கவியலா ஒவ்வொரு நொடிக்கும்
அவள் கைவழி என்னுள் கூடும்
அமைதியின்மை

துடிக்கும் இமைகள்
வலியால் துடிப்பன
எனுமோர்
சலனம் கடந்து
ஓரிமைப் பொழுதில்
துடியா இமைகள்
திறந்தே அமையும்
என்னுள்ளும்
அந்த அறையுள்ளும்
நிர்ச்சலனம் நிறைத்து

Monday, March 7, 2016

யாரும் இறங்கா நிலையம்

கூரை நடைபாதை 
கற்குவியல்கள் 
இருப்புப் பாதை என எங்கும் 
உதிர்ந்த சருகுகள் 

நிறம் மங்கிய 
நீர்வண்ண ஓவியம் 
போலொரு 
களைத்த பொலிவு 

இற்றது போல்வன 
எனினும் 
இறாது நிற்கும் 
நிலையத்தின் 
மரவரிகள் 
ஒரு நூறு 
நினைவுகளின் மௌன சாட்சிகள் 

அவ்வப்போது 
பாதை தேய்த்து 
சலிப்புடன் பெருமூச்செறிந்து 
வந்து நின்று 

பொருமலுடன் 
நீர் சிந்தி 
வேண்டா வெறுப்பாக 
கிளம்பிச் செல்லும் 
புகையற்ற வண்டி தரும் 
கிளர்ச்சியின் 
குற்றவுணர்வுடன் 
இரவில் தனித்திருக்கும் 

பகிர்வுகளில் 
பேதமேதும் 
பாராட்டுவதில்லை 
இருப்புப் பாதையோரம் 
இன்று முளைத்த 
எருக்கம்செடிக்கும் 
நடைமேடையின் 
நடுவீற்றிருக்கும் 
முரட்டு அரசுக்குமிடையே  

செல்லமாய் வருடி  
செந்நிறப் புழுதியை 
வீசியடித்து கழுவும்  
எத்தனையோ மழைக்காலங்களில் 
ஒன்றைக் கடந்து செல்ல 
இன்று காத்திருக்கும் 
உடலம்

பதாகை இணைய இதழில்...

பதாகை இணைய இதழில் வெளிவந்திருக்கும் கவிதை:

http://padhaakai.com/2016/03/06/nobodys-station-saravanan-abi/

Thursday, February 11, 2016

தினமும் தினமும்

உதறும் உடைகளில்
ஆயிரம் அட்டைகள்
வீட்டின்
பின்புற வழிமுழுதும்
செழித்துப் பிணையும்
நாக்குப் பூச்சிகள்

கனவின் திரையில்
நெளியும் துல்லிய சலனம்

திடுக்கிடாமல் எழுந்தமர்ந்து
உதற வேண்டியதையும்
உட்கொள்வதையும்
எண்ணித் துணியும்
தெளிவும் திடமும்
வேண்டும் வேண்டும்

தினமும் வேண்டும்

Friday, February 5, 2016

இருவர்

கருவறையின் இருட்டில் 
குறைபட்ட கையிறக்கி 
குருட்டு ஈயை 
காப்பாற்றி மகிழ்ந்தார் 
தேவன் 

பல்லிக்கு 
படியளப்பதெப்படி என 
கவலையில் மூழ்கினாள் 
தேவி 

திரிபுரமெரித்த தேவன்மாரும் 
பழத்துக்கு பிள்ளையை 
பரிதவிக்கவிட்ட தேவியரும் 
நிறைந்த இப்பூவுலகில் 
இப்படியும் இருவர் 

Friday, January 29, 2016

காலமருள்

இலைகள் விழுந்து சருகாவதிலும் 
சருகாகி காற்றில் வீழ்வதிலும் 
நியதிகள் எங்கும் மீறப்படாதபோது 

கதிர்க்கற்றைகள் நிறம் தேய்ந்து
சுடர்  அடங்கி அணைந்தாலும் 
ஒற்றை விளக்கின் திரியிழுத்து 
இருளின் கருமையில்  இணைந்தாலும் 
புலரியின் பொலிவு குறைபடாதபோது 

சொற்களின் குறைவில் பிறந்தாலும்  
மிகுசொல் சேர்ந்து நிறைந்தாலும் 
கவிகளின் வீச்சு கறைபடாதபோது 

அலை வீசி ஆர்ப்பரித்து
கரை தாண்டி சென்றாலும் 
கால்தடவி கலம்தாங்கி 
கட்டுக்குள் நின்றாலும் 
ஆழியின் அற்புதம் புரிபடாதபோது

அனைத்தும் ருசிக்க
அனைத்தும் புரிய
அனைத்திலும் இழுபட
அனைத்திலும் இழிபட

நான் 
காத்திருப்பதில் தவறென்ன?

பதாகை-யில் கவிதை

பதாகை இணைய இதழில் வெளிவந்திருக்கும் கவிதை - காலமருள்

http://padhaakai.com/2016/01/24/kaala-marul/


Wednesday, January 20, 2016

அற்றது கேட்கின்



குறுகித் திணிந்த
முடியா துவாரம்

பத்திரம் தேடி
நுழைய வேண்டுமொரு யோனி

ஓயத் துரத்தும்
அருவங்கள்

விழுந்தும் தீரா
இருளடர்ந்த ஆழம் 

கால்கள் தளைத்தும்
படுக்கை நனைக்கும் நனவு 

சளைத்து அறும்
உடலவயங்கள்

தொடவியலா முலைகள்
விழித்து எழினும் அதே

Thursday, December 10, 2015

திணை மயக்கம்

நாட்காட்டியில் தாள்கள் கிழியும் சத்தம்
நொடிகள் கழியும் சத்தம்

யன்னலின் வெளியே
நிறம் மாறி மாறித் தோன்றும்
இரவின் வெக்கையும்
பகலின் மழைஈரமும்

வாழ்வு என்பதும்
நகர்தல் என்பதும்
அர்த்தமற்ற ஒலிக்குறிப்புகள்

சருகாகவும் தளிராகவும்
மிக மென்மையாக
மிக மிக அமைதியாக
உதிர்த்துக் கொண்டிருக்கிறது
காலம்

திறந்தே கிடந்தும்
யாரும் நுழையா
இக்கதவுகள்

திங்களொரு முறை
தோன்றும் மகனோ மகளோ
வருவது கூட
அசையா கதவுகளின்
மன்றாடலின் பேரில்

அசையா நாற்காலி அஃறிணை
அசையா கட்டில் அஃறிணை
அவற்றினூடே
உயிர்ப்புடனொரு
நாட்காட்டியும் கடிகாரமும்
பதாகை  மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: திணை மயக்கம்

http://padhaakai.com/2015/12/09/exotica/

Pandit Venkatesh Kumar and Raag Hameer