Sunday, September 25, 2011

எங்கேயும் எப்போதும் - ஆனந்த விகடன் விமர்சனம்


மிகத் தரமான ஒரு படத்திற்கு மிக அழகான விமர்சனம்.  மற்றுமொருமுறை விகடன் புதுத் திறமைகளை அடையாளம் கண்டு வரவேற்கும் தலை வாசல் என்ற எண்ணம் உறுதிப்பட்டது.  

வழக்கம் போல் உங்கள் விமர்சனம் படித்து விட்டு படம் பார்த்து முடித்ததும் இயக்குனர் சரவணன் படத்தின் முடிவில் சொல்ல நினைத்திருக்கக் கூடிய இன்னொரு கோணம் தோன்றியது.  

ஜெய் - அஞ்சலி காதலில் அனைத்து நிகழ்வுகளுமே முன்கூட்டி தீர்மானிக்கப் பட்டவை. அவள் அவன் அறைக்குள் புகுந்து சம்பளம் என்ன என்று பார்ப்பதிலிருந்து, தன் தந்தையை பார்க்கச் சொல்வது, அவன் தாயிடம் சொல்லச் சொல்வது என அவள் அவனுடனான தற்கால வாழ்க்கை மட்டுமல்லாது எதிர்கால பந்தத்தையும் சேர்த்தே திட்டமிடுகிறாள். "அம்பது வருஷம் உன் கூட வாழ வேண்டாமா?" என்று கேட்கிறாள்.

ஆனால் எதிர்பாராத அந்த விபத்து அவர்களை பிரிக்கிறது.

அனன்யா-சர்வா காதலிலோ எதுவுமே திட்டமிட்டவை அல்ல. அவர்கள் சந்திப்பு, அந்த ஒரு நாளில் அவர்கள் ஏறி இறங்கும் பயணங்கள் என முன்னறிவிப்பில்லாமல் நகர்கிறது. பேருந்தில் அவனருகில் இருக்கை காலியானதும் அமர எழுந்து, அந்த நிறுத்தத்திலேயே இறங்கும் அந்த ஏமாற்ற தருணங்கள் உட்பட.  பெயரோ, தொலைபேசி எண்ணோ கூடத் தெரியாத ஒரு நிச்சயமின்மை.  வாழ்வில் இனி எப்போதும் சந்திப்போமா என்ற சந்தேகம் அவர்களை இயக்குகிறது. 

அவர்களின் நிச்சயமற்ற தருணங்களை அந்த விபத்து அவர்களை சேர்ப்பதின் மூலம் நிறைவு செய்கிறது.

இயக்குனர் தேர்ந்தெடுத்த முடிவின் மூலம் இந்த கான்ட்ராஸ்ட்-ஐ அடையாளப்படுத்துகிறார்  என நினைக்கிறேன்.

மிகத் தெளிவாகவும் மிக நேர்த்தியாகவும் சரவணன் இந்த கான்ட்ராஸ்ட்-ஐ படம் நெடுகிலும் முடிவை நோக்கி கொண்டு சென்றிருக்கிறார்.

ரசனையின் எதிர்பார்ப்பில் மற்றொரு நல்ல படத்தை விரைவில் தருவார் என எதிர்பார்க்கும்,

சரவணன் 

Monday, May 16, 2011

இரவு பிரதிக்ஞைகள்

இந்த இரவு
என்னுடயதாவென்று
எண்ணிப் பார்க்கிறேன்

ஆற்று மணலை
அளைகையில்
விரல்வழியோடும் குறுமணல் போல்
பற்பல நினைவுகள்

ஆயிரம் தாரகைகள்
அள்ளி இறைத்திருக்கும் வானம்
என் துருவம் நீ
அற்புத சொல்லாட்சியின்
அருந்தமிழ் வடிவம்
ஆழ்கடல் செல்வம்
புலன்வழி புனைந்தவை
உனக்கே அர்ப்பணம்

மண் பார்க்க குமைந்து
மேலே பார்த்து
தடுக்கி விழுந்த தவறுகள்;
காயங்கள் எனது
கைதரத்தான் ஆளில்லை

ஊர் சிரித்தது
சிரிப்பொலியின் எதிரலை
செவிப்பறை முழுதும்
அனர்த்தம்

                                                   இந்த இரவு
                                                   என்னுடையதா தெரியவில்லை

உறக்கம் தப்பிய
இரவுகள்
உறங்கவே மறுத்த
இமைகள்
வாட்டுதல் மட்டுமே
குறிக்கோள்

பூவில் களிநடம் புரியும் காற்று
நுகர்ந்து
மனம் மரணத்திலிருந்து
மீளும்
நித்தியம் பெறும்
அத்தகு தருணம்
கைகளில் தேங்கிய
காவியங்களோடு நான்
குருடர்களும்
செவிடர்களும்
செங்கோல்

ஏன்?

பாலைவனத் தாகமாய்
பிறந்த கேள்வி
மறையாக் கானலாய்
மாதுயரூட்டும்

                                                    இந்த இரவு
                                                    என்னுடையதா தெரியவேண்டும்

உறையாத அறியாமையும்
நெகிழாத மௌனங்களும்
என்
அன்றாட எதிர்பார்ப்புகள்

இறுகிக் கிடந்து
மூச்சு முட்டி வெம்பிய
கோர உணர்வு நெரிசல்களுக்குள்
விடுதலை வேள்வி
அணு அணுவாய்
துடித்தது

விரைவில்
வழிய விட்டாலன்றி
விபத்து வெடிக்கும் எனும் நிலை

வல்லூறொன்று
சிறகுகளை கோதிக் கொண்டு
அலகை
அலட்சியமாய் திருப்பி
அசுரபலத்துடன்
கிளைத்து பறந்தது

நாள் செல்லச் செல்ல
அனுபவச் சுமை
அதிகமாயிற்று
பயணம்
இன்பமாயிற்று

வெற்றியே வேதம்
வேதத்தின் பிரணவம்
திருவினையாக்கும்
ஒருமுகம்
சிந்தனைத் தீவிரம்

அம்பின் கூரிய நுனியில்
ஆயிரமாயிரம் அணுக்கள்

என் 
சுடரொளிச் சிந்தனையின் 
ஒவ்வொரு தணலும்
வெப்பமும் வியாபிப்பும்
வெற்றியே பரப்பும்

தீயின் நிறமும் மாறும்
நாக்குகள் பொசுக்கும் பொசுங்கும்

ஓமப்புகை வானிட்ட பாலத்தில்
வெற்றி ஊர்வலம்
மண் நோக்கிக் கவிழ்ந்த
மானுடம் நிமிரும்

அம்பறாத் தூணிகள்
சிந்தனை நிரப்ப
சிறியோர் மேல்
சினமிகு போரிடும்

கடமை ஒருகை
காவியம் மறுகையென
கையிணைத்த
நெறிகள் வரலாறாகும் 

கடமைக் களங்களில் 
கண்ட காயங்கள்
ஒவ்வோர் உயிரும்
ஏங்கும்

காயக்கதை பேசி
காதற்க் கடலில்
கலந்திட்ட நதிகளே
காட்டாறுகளே

                                      இன்னும்,
                                                            இந்த இரவும்
                                                            என்னுடையதா என்று
                                                            தெரிய வேண்டும்
-12/07/1988




தோழிக்கு ஒரு கடிதம்

அன்புள்ள தோழி,

கொடி! 

அது பற்றிப் படரும்; காற்றில் சஞ்சலமடையும்; புயலில் துடிக்கும்; தேர் தரும் பாரியை தேடும்.

நீ?

நீ கொடி போலவா? உனக்குள் இருக்கும் வண்ணங்கள் வியப்பூட்டுவன; உணர்வுகள் அதிர்வூட்டுவன. தவறாக கைபட்டால் எளிதில் உடைந்துவிடக்கூடிய மென்மையுடையதாய் தோன்றி, அதனால் தொடவே சிறிது அச்சத்தை ஊட்டக் கூடியவை, உன் பரிமாணங்கள்.

மென்மையானவள் நீ; ஈடு செய்யும் வகையில், உன் நேரடியான (அதனாலேயே எனக்கு மிகவும் பிடித்தமான) வெளிப்பாடுகளில் வன்மையானவள்; உண்மையானவள்.

கொடி பற்றிப் படரும்; நீயும் பற்றிப் படர்கிறாய். படரவும் ஆக்கி விடுகிறாய்.  உன் அன்பை இப்படியெல்லாம் வெளிப்படுத்த யாருனக்கு கற்றுக் கொடுத்தது?
உணர்பவை அனைத்தும் (இன்பமோ துன்பமோ) பகிர்ந்து கொள்ள நீ தேடும் சகம், அதிலுன் தேர்வு, உன் தீர்மானம், உன் பற்றுதல், நீ எதிர்பார்க்கும் வெளிப்பாடு, உன் limitations பற்றிய முன்கூட்டிய உன் தெளிவு...

சஞ்சலங்கள். எளிதில் பெண்கள் உணர்ச்சிவசப்படுவார்களாம். ஏன் விதிவிலக்குகள் இருக்கக் கூடாது? கோபப்படுகிறாய் அதிகம். ' சாதிக்க இயலாதவனே கோபப்படுவான்'. சொல்லியிருக்கிறேன். உன் கோபம் உன் குடும்பத்தையுமல்லாது என்னையும் சமயங்களில் கூர்பார்க்கையில் மனம் வேதனை அடைகிறது. கொடி கோபப்படக் கூடாது. 

எங்கே உன் சுயம்,  வாழ்வுரிமை, லட்சியம் முதலியன பறிக்கப்படுமோ அங்கே உன் கோபம் தார்மீகமானது; அர்த்தமுள்ளது; வீரமானது.

மற்றும் பல உணர்ச்சிகள் உன்னில் எளிதில் தீவிரமாக தாக்குகின்றன. கவர்கிறாய், எளிதில் கவரப்படுகிறாய். உணர்வுகளால் விரைந்து எடுக்கும் எம்முடிவும் வேதனை தரும். தவறு! இவ்வுலகம் மிகச்சில நல்லவர்களையே கொண்டது. யார் மீதும் விரைந்து அன்புறுவதும் தவறு. அதிக எதிர்பார்ப்பு மிகுந்த ஏமாற்றத்தைத் தரும்.

உன் அறிவு, உன் உலக ஞானம் கொண்டு நீ ஆராயக் கற்றுக் கொள்ள வேண்டும். எதிலும் எளிதில் மனம் பறிகொடாதே. (எவரிடமும்) முதலில், யார் எத்தகையவர், அவர் கண்ணோட்டம், லாப நஷ்டங்கள் எடைபோட பழகு. சுயநலமியாய் இரு. இவ்வுலகில் சுயநலமில்லாமல் வேறொன்றுமில்லை. 

கல்வியில் உன்னார்வம் என்னை மகிழ்விக்கிறது. மென்மேலும் நீ கற்க வேண்டும்.  உன் எல்லைகளை விரிவுபடுத்தும் தருணமிது.

இரசனைகள் இயற்கையானவை. எனவே, இன்பமானவை. ஒரு கவிதையோ, உரைநடையோ அன்றி இரசனை குறித்த பேச்சோ உன்னிடம் வீசப்பட்டால் நீ சோர்ந்து போகிறாய்.  ஏன்? உலகியல் வாழ்வின் உயிர்நாடி இரசனை.

அதுவொன்றில்லாமல் நானில்லை.

எதையும் இரசிக்க வேண்டும்.  நீ துன்பமடையும் கணங்களிலும், சோக நிகழ்வுகளினின்று, வெளி நின்று, "இக்கணம் நம் வாழ்வில் ஒரு முறை வருவதை இருந்தால், இப்போதே இதை வாழ்ந்து விட வேண்டும்" என்று எண்ணி அனுபவி. இச்சக்தி எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மனநிலை தரும்.

'நம்மை மீறி என்ன வரும்? என்னால் சாதிக்க முடியும். உயிரைத் தவிர பெரிதாய் வேறொன்றும் போய்விட முடியாது' போன்ற எண்ணங்கள் உன்னில் வளரவேண்டும். அவை, உன்னில் இப்போது காணப்படாத சகிப்புத்தன்மை, பொறுமை, வெல்லும் விடாமுயற்சி, முடிவில் இரசனை போன்ற, உன்னை மற்றவரிடமிருந்து தனித்து உயர்த்தக்கூடிய பண்புகளைப் பெற்றுத் தரும்.

உயரிய, தொலைநோக்கு மிகுந்த கொள்கைகள் உன்னில் குறைவு. இது உன் கல்விக்கும், சிந்தனை தெளிவிற்கும் பொருத்தமற்றதாய் இருக்கிறது. எப்படி வாழ வேண்டும், எங்கே, எவருடன், சாதனைகளின் குறிக்கோள், உன் கல்வி, உன் படிப்படியான வளர்ச்சி, உன் குடும்பம் பற்றிய முழுமையான திட்டங்களை நீ கொண்டிருக்க வேண்டும். 

இல்லையெனில், இப்பொழுது ஆரம்பி. சிந்தனைகளை பெரிதாக செய். எல்லைகளை தள்ளி வை. இலக்குகளை சிறந்தவையாய் நிர்ணயி. அதை அடைய பாடுபடும் வழிமுறைகள், தேவைப்படும் காலம், பொருள், மனித முயற்சி பற்றி திட்டமிட்டிருக்கிறாயா? இல்லையெனில், உடனே ஆரம்பி.

வேறே? உன் மென்மையும், பெண்மையும், அன்பும், பரிவும், கல்வியும், ஞானமும், உணர்ச்சிகளும் உயர்ந்தவை.

இவை இருக்கவேண்டிய இடம் இப்போது நீ இருப்பதல்ல. 

நீ உயர வேண்டும்; மூட நம்பிக்கைகளுக்கு உடன்படாமல், இல்லறக் கட்டுப்பாடுகளுக்கு இடங்கொடாமல் , நீ உயர வேண்டும்.

செய்வாயா, எனக்காக?

சரவணன் 
07/1990

Pandit Venkatesh Kumar and Raag Hameer