Monday, August 19, 2019

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - சுழல்

​சுழல் 


சிறுவிதை
கடித்தெறிந்த கனித்தோல்
கிளையுதிர்ந்த இலை
கனியா பிஞ்சும் பூவும் ​​
அடித்தளம் சுற்றிலும்
உயிரோட்டம்
நில்லாது நடந்தேறும்
நாடகம்
உணவும் உணவின் உணவும்
உண்ணவும் உண்ணப்படவும்
அத்தனைக் களி
எதுவுமில்லை தன்னிரக்கம்
எதிலுமில்லை முயற்றின்மை
பேருரு தாழ்ந்து தாள் சேரும்
எதுவும் ஆவதுமில்லை வீண்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - காத்திருத்தல்

காத்திருத்தல் 

சுருக்கங்கள் நிறைந்த கரங்கள்
வித்வம் நிறைந்தவை
புகைத்துக் கொண்டிருக்கின்றன
காலை நடைபயிலும் கால்கள்
சந்தைவந்த சிறார்
முகர்ந்தலையும் குட்டிநாய்கள்​​
நடுவே இரு நாற்காலிகளில்
ஒன்றில் அக்கரங்களின் தலைவன்
இன்னொன்றில்
நசுங்கிய ஆயினும் அழகிய குவளை
அருகில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறது
வாழ்வைப்போல் அதிர்வுதளர்ந்த
தந்திகள் துவளினும்
எதை வேண்டுமென்றாலும்
இசைக்கக் காத்திருக்கும்
கிதார்

Monday, June 10, 2019

சோஷல் மீடியாவும் சில மரணங்களும்

இறந்துவிட்டதாக முற்றாக

அறியப்பட்ட நண்பனொருவனின்
முகநூல் பக்கம் சிலநாட்களில்
உயிர்தெழுந்தது
விவாதங்கள் நிலைச்செய்திகள்
வாழ்த்துக்கள் ​​
அனைத்தையும் வியப்புடன்
பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு
அவனது இறந்ததின
கண்ணீர் அஞ்சலி தோன்றி
சகிக்க முடியாமலாகியபோது
கண்டுபிடித்தோம்
அவன் மனைவி
அவன் நினைவில்
முகநூலில் எங்களுடன் பேசியது
பள்ளிக்கூட நண்பர்களின்
வாட்ஸப் குழுவில்
நண்பனொருவனின் எண்ணிலிருந்து
நள்ளிரவில் செய்தி
இன்னாரின் மகன் எழுதுகிறேன்
அப்பா இறந்து விட்டாரென
ப்ரொபைல் படத்துடன்
அவன் மரண செய்தி
எப்படி எதிர்கொள்வது
தொழில்நுட்பம் கொணரும்
புத்தம்புது பிரச்னைகளை
புரியாத இறப்புச் செய்திகளை

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - ​சோஷல் மீடியாவும் சில மரணங்களும்

Tuesday, February 12, 2019

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் 3 கவிதைகள்

பதாகை மின்னிதழில்  வெளிவந்திருக்கும் 3 கவிதைகள்

https://padhaakai.com/2019/02/11/saranabhi-poetry-2/


நதி - 2

அத்வைதம் தேடிய 
சங்கரனைத் தேடி 
காலடி போனவொரு நாள் 
பயணங்கள் திசைமறந்த நாட்கள் 
பற்பல நாட்களில் 
பேசிய முதல் வார்த்தை 
அங்காமலி சங்கரன் அம்பலம் 




















துகிலோடு நாணமும் களைந்து 
பெரியாறின் படிகளிலிறங்கி 
எதிர்கரை காணா 
இருளும் தொலைவும் 
நினைவில்லாது 
மயக்கம்போலும் ஓருணர்வில் 
முதலடி ஈரடி 
பனிக்குட வெம்மைக்குள் 

நாசியின்கீழ் உடலம்தழுவி 
நகர்ந்த நீர் பொழிந்ததெங்கு
வழிந்ததென்று 
புதைந்தமர்ந்திருந்தது 
எத்தனைக் காலம் 

நதி - 1

சாகச பயணம்போலும் 
தலையில் கட்டோடும் 
இடைநழுவும் முண்டோடும் 
நகர்நீங்கி நான்காம்நாள் 

கருமையும் பச்சையும் நீலமும் 
கலந்தடர்ந்த கானகம் 
புள்ளினங்களும் இயம்பா 
புலரிளங்காலை 

துயிலெழுப்பி விரிநீங்கி 
தந்தையின் தோளமர்ந்து 
மென்சருகென மினுங்கும் 
பம்பையின் கரையோரம் 

















தோளிறக்கி துண்டுரித்து 
அடற்கருமையில் அசைவின்றி 
நெளியும் நீரோரம் அமர்த்தி 
நிகழ்வதென்ன அறியாதவன் 

பனிக்குளிர்நீரில் முதல்முழுக்கு 
ஆயிரம் ஊசிகள் ஓராயிம்துளைகள் 
விறைத்துநின்ற சிறுஉடல் 
சினம்கண்டு சிரித்த தகப்பன் 

Pandit Venkatesh Kumar and Raag Hameer