Sunday, October 2, 2011

சுயம்

உன்
வார்த்தைக் கரங்கள்
களைந்த உடைகள்;

என்
நிர்வாணத்தின்
பிரகாசம்
எனக்கே கூச்சம்

Sunday, September 25, 2011

எங்கேயும் எப்போதும் - ஆனந்த விகடன் விமர்சனம்


மிகத் தரமான ஒரு படத்திற்கு மிக அழகான விமர்சனம்.  மற்றுமொருமுறை விகடன் புதுத் திறமைகளை அடையாளம் கண்டு வரவேற்கும் தலை வாசல் என்ற எண்ணம் உறுதிப்பட்டது.  

வழக்கம் போல் உங்கள் விமர்சனம் படித்து விட்டு படம் பார்த்து முடித்ததும் இயக்குனர் சரவணன் படத்தின் முடிவில் சொல்ல நினைத்திருக்கக் கூடிய இன்னொரு கோணம் தோன்றியது.  

ஜெய் - அஞ்சலி காதலில் அனைத்து நிகழ்வுகளுமே முன்கூட்டி தீர்மானிக்கப் பட்டவை. அவள் அவன் அறைக்குள் புகுந்து சம்பளம் என்ன என்று பார்ப்பதிலிருந்து, தன் தந்தையை பார்க்கச் சொல்வது, அவன் தாயிடம் சொல்லச் சொல்வது என அவள் அவனுடனான தற்கால வாழ்க்கை மட்டுமல்லாது எதிர்கால பந்தத்தையும் சேர்த்தே திட்டமிடுகிறாள். "அம்பது வருஷம் உன் கூட வாழ வேண்டாமா?" என்று கேட்கிறாள்.

ஆனால் எதிர்பாராத அந்த விபத்து அவர்களை பிரிக்கிறது.

அனன்யா-சர்வா காதலிலோ எதுவுமே திட்டமிட்டவை அல்ல. அவர்கள் சந்திப்பு, அந்த ஒரு நாளில் அவர்கள் ஏறி இறங்கும் பயணங்கள் என முன்னறிவிப்பில்லாமல் நகர்கிறது. பேருந்தில் அவனருகில் இருக்கை காலியானதும் அமர எழுந்து, அந்த நிறுத்தத்திலேயே இறங்கும் அந்த ஏமாற்ற தருணங்கள் உட்பட.  பெயரோ, தொலைபேசி எண்ணோ கூடத் தெரியாத ஒரு நிச்சயமின்மை.  வாழ்வில் இனி எப்போதும் சந்திப்போமா என்ற சந்தேகம் அவர்களை இயக்குகிறது. 

அவர்களின் நிச்சயமற்ற தருணங்களை அந்த விபத்து அவர்களை சேர்ப்பதின் மூலம் நிறைவு செய்கிறது.

இயக்குனர் தேர்ந்தெடுத்த முடிவின் மூலம் இந்த கான்ட்ராஸ்ட்-ஐ அடையாளப்படுத்துகிறார்  என நினைக்கிறேன்.

மிகத் தெளிவாகவும் மிக நேர்த்தியாகவும் சரவணன் இந்த கான்ட்ராஸ்ட்-ஐ படம் நெடுகிலும் முடிவை நோக்கி கொண்டு சென்றிருக்கிறார்.

ரசனையின் எதிர்பார்ப்பில் மற்றொரு நல்ல படத்தை விரைவில் தருவார் என எதிர்பார்க்கும்,

சரவணன் 

Monday, May 16, 2011

இரவு பிரதிக்ஞைகள்

இந்த இரவு
என்னுடயதாவென்று
எண்ணிப் பார்க்கிறேன்

ஆற்று மணலை
அளைகையில்
விரல்வழியோடும் குறுமணல் போல்
பற்பல நினைவுகள்

ஆயிரம் தாரகைகள்
அள்ளி இறைத்திருக்கும் வானம்
என் துருவம் நீ
அற்புத சொல்லாட்சியின்
அருந்தமிழ் வடிவம்
ஆழ்கடல் செல்வம்
புலன்வழி புனைந்தவை
உனக்கே அர்ப்பணம்

மண் பார்க்க குமைந்து
மேலே பார்த்து
தடுக்கி விழுந்த தவறுகள்;
காயங்கள் எனது
கைதரத்தான் ஆளில்லை

ஊர் சிரித்தது
சிரிப்பொலியின் எதிரலை
செவிப்பறை முழுதும்
அனர்த்தம்

                                                   இந்த இரவு
                                                   என்னுடையதா தெரியவில்லை

உறக்கம் தப்பிய
இரவுகள்
உறங்கவே மறுத்த
இமைகள்
வாட்டுதல் மட்டுமே
குறிக்கோள்

பூவில் களிநடம் புரியும் காற்று
நுகர்ந்து
மனம் மரணத்திலிருந்து
மீளும்
நித்தியம் பெறும்
அத்தகு தருணம்
கைகளில் தேங்கிய
காவியங்களோடு நான்
குருடர்களும்
செவிடர்களும்
செங்கோல்

ஏன்?

பாலைவனத் தாகமாய்
பிறந்த கேள்வி
மறையாக் கானலாய்
மாதுயரூட்டும்

                                                    இந்த இரவு
                                                    என்னுடையதா தெரியவேண்டும்

உறையாத அறியாமையும்
நெகிழாத மௌனங்களும்
என்
அன்றாட எதிர்பார்ப்புகள்

இறுகிக் கிடந்து
மூச்சு முட்டி வெம்பிய
கோர உணர்வு நெரிசல்களுக்குள்
விடுதலை வேள்வி
அணு அணுவாய்
துடித்தது

விரைவில்
வழிய விட்டாலன்றி
விபத்து வெடிக்கும் எனும் நிலை

வல்லூறொன்று
சிறகுகளை கோதிக் கொண்டு
அலகை
அலட்சியமாய் திருப்பி
அசுரபலத்துடன்
கிளைத்து பறந்தது

நாள் செல்லச் செல்ல
அனுபவச் சுமை
அதிகமாயிற்று
பயணம்
இன்பமாயிற்று

வெற்றியே வேதம்
வேதத்தின் பிரணவம்
திருவினையாக்கும்
ஒருமுகம்
சிந்தனைத் தீவிரம்

அம்பின் கூரிய நுனியில்
ஆயிரமாயிரம் அணுக்கள்

என் 
சுடரொளிச் சிந்தனையின் 
ஒவ்வொரு தணலும்
வெப்பமும் வியாபிப்பும்
வெற்றியே பரப்பும்

தீயின் நிறமும் மாறும்
நாக்குகள் பொசுக்கும் பொசுங்கும்

ஓமப்புகை வானிட்ட பாலத்தில்
வெற்றி ஊர்வலம்
மண் நோக்கிக் கவிழ்ந்த
மானுடம் நிமிரும்

அம்பறாத் தூணிகள்
சிந்தனை நிரப்ப
சிறியோர் மேல்
சினமிகு போரிடும்

கடமை ஒருகை
காவியம் மறுகையென
கையிணைத்த
நெறிகள் வரலாறாகும் 

கடமைக் களங்களில் 
கண்ட காயங்கள்
ஒவ்வோர் உயிரும்
ஏங்கும்

காயக்கதை பேசி
காதற்க் கடலில்
கலந்திட்ட நதிகளே
காட்டாறுகளே

                                      இன்னும்,
                                                            இந்த இரவும்
                                                            என்னுடையதா என்று
                                                            தெரிய வேண்டும்
-12/07/1988




Pandit Venkatesh Kumar and Raag Hameer