Monday, April 25, 2016

Padhaakai

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - 'தேவதைகளின் இன்றைய களம்'  - https://padhaakai.com/2016/04/24/angels/

தேவதைகளின் இன்றைய களம்

பலிகளம்
தயாராகி விட்டது 

களமெழுதி திரையிறக்கி 
வண்ணமும் சுண்ணமும் சார்த்தி 
நான்மூலைகளில் 
தீபமும் தூபமும் பொருத்தி 
கொட்டும் முழக்கும் கூட்டி 
பலிகளம்
தயாராகி விட்டது 

அம்பும் வில்லும் 
வாளும் சூட்டி 
இளித்தும் அழுதும் 
இன்முகம் காட்டி
கனலென எரியும் 




























கண்கள் உருட்டி
காற்றில் நடிக்கும் 
உடைகள் பூட்டி 
பெருந்தெய்வங்களும்
குறுந்தேவதைகளும் 
களமாடும் நியதி 

கூடி வருவன தனித்து 
ஆடி வருவன 
என 
அவையனைத்தும் 
இந்தக் கதிர்மங்கும் 
அந்தியில் 
களம் வந்து சேர்ந்துவிட்டன  

விடியும் வரை அல்லது 
பலிகள் விழும் வரை 
சந்நதம் அடங்காதாடும் 
அவை 
பெரும்பலிகள் 
கொள்ள வேண்டி 
சினந்தவை இணைவதும் 
கூடியவை பொருதுவதும் 
காத்திருக்கும் பலிகள் 
கண்முன் நிகழ்வதுமோர் 
ஆட்டமே 

யாசித்தல் போல் கையேந்தும் சில 
அபயஹஸ்தம் காட்டும் சில 
உரத்த பாவனைகளில் 
மறைந்து கொள்ளும் சில 
முஷ்டி மடக்கி 
காற்றில் சமர் புரிந்து 
பலிகளை மகிழ்விக்கும் சில 
எனினும் 
கவலை வேண்டாம் 
குழம்ப வேண்டாம் 
தேவதைகளின் தெய்வங்களின் 
தேவை ஒன்றே 

களம்புகக் காத்திருக்கும் 
பலிகளின் 
சித்தத்தின் உறுதியை 
அவ்வப்போது சோதித்துக் 
கொண்டே ஆடுமவை 
பலிகள் 
ஒருநொடி 
கண்கிறங்கி 
உணர்வு மயங்கி 
சிரம் சாய்ந்தால் 
துள்ளிப் பாய்ந்து 
முதற்பலி ஏற்கும் 

துடிக்கும் தாளம் 
துவளா ஆட்டத்திற்கும்
தடுமாறும் பிரக்ஞை 
நிலைதவறும் சித்தத்திற்கும் 
இடையில் 
காத்திருக்கிறது
இந்த பலிகளம் 

அவை ஆடும்
அந்தக் களம் காத்திருக்கும்
சித்தம் சோரும்வரை

Wednesday, April 13, 2016

தாவர வாழ்க்கை - ஒரு குறிப்பு

'வாடிய பயிரை கண்ட போதெல்லாம்' வாடியவனும், 'வெள்ளத்தனைய மலர் நீட்டம்' என்று உவமை சொன்னவனும் பிற உயிர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவே சொன்னார்கள். 

மரங்கள் தன் சுயம் இழப்பதில்லை; பொறாமையில் போட்டியிடுவதில்லை; தன்னளவிலான நிறைவும், நிறைவின் பெருமிதமற்ற வெளிப்பாடும் நிறைந்தவை. நீர்தேடி வேரனுப்பும் சாகசமும் மண்ணுக்கடியே. மானுடம் கற்றுக்கொள்ள குரலின்றி அநேகம் உரைப்பவை. 

ஒரு நான்-லீனியர் விவாதத்தின்படி, ஆறறிவில் குறைந்தவை இவ்வளவு ஆழமான பொருள் பொதிந்து நிற்கையில், ஆறறிவு கைகூடிய மானுடம் என்னவெல்லாம் சாதிக்கக் கூடும்? எத்தனை அணுக்கமான உறவு இப்புவியுடனும் சக மனிதருடனும், பிற உயிர்களுடனும் பேண இயலும்?

புலனடக்கத்தோடு, தீமைகளையும் துரோகங்களையும் செரித்து, நன்மை ஈயக்கூடிய ஒரு தாவரத் தன்மை மானுடத்திற்கு வாய்த்து விட்டால் எப்படியிருக்கும்...

Monday, April 11, 2016

தாவர வாழ்க்கை

என் குணங்களை 
யாவரும் அறியும்வண்ணமே 
வைத்திருக்கிறேன் 
விருட்சம் தன் 
அத்தனை இலைகளையும் 
கதிரொளிக்கென 
விரித்தே 
அடுக்கியிருப்பது போல் 

பழகுமிடம் தோறும் 
பகை பொறுத்து 
பண்பருளும் 
விவேகம் 
விதிக்கப்பட்டிருக்கிறேன் 
கரியமிலம் உண்டு 
உயிர்வளி தருதல் போல் 




















வேரோட்டம் போலவே 
பசை தேடி 
போராட்டம் 

பட்டையைச் 
செதுக்கினாலும் 
சுரத்தல் கூடும் 
பால் மரங்கள் போலும் 
சேதம் சகித்தல்

 
ஆறிலொன்று குறைந்தால் 
ஆகாதா என்ன 

Padhaakai

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை:
தாவர வாழ்க்கை - https://padhaakai.com/2016/04/10/arboreal/

Friday, April 8, 2016

‘நிச்சலனம்’ குறித்து...


பின்னிரவில் ஓர் அழைப்பு. நண்பனின் தாய் இரு வருட புற்றுநோய் போராட்டத்தின் முடிவில் மறைந்த செய்தி. என் தாய் மிக நீண்ட நோய்ப்படுக்கையில் கிடந்து மறைந்த  வருடத்திற்குள் இன்னொரு அன்னையின் ஈமச்செய்தி. சிறு வயதில் அவன் வீட்டிற்கு விளையாடச் சென்று எத்தனையோ நாள் அவள் கையால் பசியாறியிருக்கிறேன். கனிவே குரலும் உருவுமானவள்.

நண்பன் மிக அமைதியானவன்; உணர்வுகள் மீதான கட்டுப்பாடு பிடிகிட்டிய வரம் பெற்றவன். அழாமல், குரல் நடுங்காமல் சொன்னான் - 'அருகிலிருந்தேன், கையைப் பற்றியிருந்தாள். முகத்தைப் பார்த்தவாறிருந்தேன் - வேறெங்கும் நான் பார்த்திருந்திருக்கலாம். ஆனால் பார்க்கவில்லை. ஒரு விக்கல், இமையின் ஓர் அசைவு. என் கைவழியே போய்விட்டாள்'.

அவன் எப்படி அந்தக் கணத்தைக் கடந்தானோ தெரியாது. 

நான் எப்படி அந்தக் கணத்தைக் கடக்கப் போகிறேன் என்றும் தெரியவில்லை. 

யாரின் தாயும் யாவரின் தாய்தானே. 

Monday, April 4, 2016

Padhaakai

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் எனது கவிதை - நிர்ச்சலனம்
http://padhaakai.com/2016/04/03/stillness/

Pandit Venkatesh Kumar and Raag Hameer