Saturday, February 10, 2018

நனவின் நீட்சி

கதிரணையும் அந்தி
இலைகளுதிர்த்த எலும்புக்கரங்கள்
பற்றிப் பிடித்திருக்கும்
செந்நிற கருங்கல் கட்டிடம்
கற்பலகைகள் பாவிய படிகளில்
தாவிப் பாய்ந்து இறங்குகிறேன்
யாருமில்லாத தாழ்வாரங்களில்
இறங்கும் படிகள்
மீண்டும் மீண்டும்
கொண்டென்னைச் சேர்க்கும்
அத்தனை வாயில்களுக்குள்ளும்
பார்மலின் திரவக்குடுவைகளில்
மிதக்கும் அரைகுறை உருவங்கள்

புகைவண்டி சன்னல் கம்பிகளின்
காலைநேர குளிர்ச்சியும்
கரிப்புகை தூசியும்
முகம்பூசும் பயணம்
ஏறியதெங்கென்றும்
இறங்குவதெங்கென்றும் அறியாது
இடைவழி நிற்காது நீளும்
இளம்பருவத் தனிமை


சிறுகுழந்தையாய் வாழ்ந்திருந்த
வீட்டின் பின்புறம்
யாருமில்லாத பின்னிரவில்
மரங்களின் பின்னிருந்தும்
தரையின் குழிகளிலிருந்தும்
தீராதெழுந்து
விரட்டும் பிரேதங்கள்

கரைகாணாது
தரை அறுந்து
முடிவற்று வீழ்ந்துகொண்டேயிருக்கும்
இரவின் ஆழங்கள்

விரல் நுழையவியலா
துவாரம்
உடல் சுருக்கிச் செலுத்தும்
விசைகள் வலிகள்

களிப்பூட்டவென்று
ஏறி நின்ற மேடை
ஆயிரம் கண்களின்முன்
ஒரு வார்த்தையும் விரியா
விளங்கவியலா கணம்

போதாமைகள் குறைகள்
அச்சங்கள் இருண்மைகள்
நம்மை நாம் படிக்க
நனவில்லாததும்
ஓர் வழி

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer