Monday, June 10, 2019

சோஷல் மீடியாவும் சில மரணங்களும்

இறந்துவிட்டதாக முற்றாக

அறியப்பட்ட நண்பனொருவனின்
முகநூல் பக்கம் சிலநாட்களில்
உயிர்தெழுந்தது
விவாதங்கள் நிலைச்செய்திகள்
வாழ்த்துக்கள் ​​
அனைத்தையும் வியப்புடன்
பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு
அவனது இறந்ததின
கண்ணீர் அஞ்சலி தோன்றி
சகிக்க முடியாமலாகியபோது
கண்டுபிடித்தோம்
அவன் மனைவி
அவன் நினைவில்
முகநூலில் எங்களுடன் பேசியது
பள்ளிக்கூட நண்பர்களின்
வாட்ஸப் குழுவில்
நண்பனொருவனின் எண்ணிலிருந்து
நள்ளிரவில் செய்தி
இன்னாரின் மகன் எழுதுகிறேன்
அப்பா இறந்து விட்டாரென
ப்ரொபைல் படத்துடன்
அவன் மரண செய்தி
எப்படி எதிர்கொள்வது
தொழில்நுட்பம் கொணரும்
புத்தம்புது பிரச்னைகளை
புரியாத இறப்புச் செய்திகளை

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - ​சோஷல் மீடியாவும் சில மரணங்களும்

Tuesday, February 12, 2019

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் 3 கவிதைகள்

பதாகை மின்னிதழில்  வெளிவந்திருக்கும் 3 கவிதைகள்

https://padhaakai.com/2019/02/11/saranabhi-poetry-2/


நதி - 2

அத்வைதம் தேடிய 
சங்கரனைத் தேடி 
காலடி போனவொரு நாள் 
பயணங்கள் திசைமறந்த நாட்கள் 
பற்பல நாட்களில் 
பேசிய முதல் வார்த்தை 
அங்காமலி சங்கரன் அம்பலம் 




















துகிலோடு நாணமும் களைந்து 
பெரியாறின் படிகளிலிறங்கி 
எதிர்கரை காணா 
இருளும் தொலைவும் 
நினைவில்லாது 
மயக்கம்போலும் ஓருணர்வில் 
முதலடி ஈரடி 
பனிக்குட வெம்மைக்குள் 

நாசியின்கீழ் உடலம்தழுவி 
நகர்ந்த நீர் பொழிந்ததெங்கு
வழிந்ததென்று 
புதைந்தமர்ந்திருந்தது 
எத்தனைக் காலம் 

நதி - 1

சாகச பயணம்போலும் 
தலையில் கட்டோடும் 
இடைநழுவும் முண்டோடும் 
நகர்நீங்கி நான்காம்நாள் 

கருமையும் பச்சையும் நீலமும் 
கலந்தடர்ந்த கானகம் 
புள்ளினங்களும் இயம்பா 
புலரிளங்காலை 

துயிலெழுப்பி விரிநீங்கி 
தந்தையின் தோளமர்ந்து 
மென்சருகென மினுங்கும் 
பம்பையின் கரையோரம் 

















தோளிறக்கி துண்டுரித்து 
அடற்கருமையில் அசைவின்றி 
நெளியும் நீரோரம் அமர்த்தி 
நிகழ்வதென்ன அறியாதவன் 

பனிக்குளிர்நீரில் முதல்முழுக்கு 
ஆயிரம் ஊசிகள் ஓராயிம்துளைகள் 
விறைத்துநின்ற சிறுஉடல் 
சினம்கண்டு சிரித்த தகப்பன் 

நிகழும்

கருந்திரை கீழிறங்கியது 
கண்முன் ஒளிந்து மறைந்தது ஒளி 
சூழ நின்ற 
மலையடுக்குகளின் இடுக்கினூடே 
அலையென மிதந்து வரும் 
மென்னீர காற்று 
கமழும் உன் தோள் வாசம் 

எப்போதோ முகர்ந்தது 
இன்னும் புலன்களில் 
அழியா தடம் 
இப்போதும் 
முகர்ந்துகொள்ளும் அண்மையில் 





























விருப்பங்களின் சின்னமென 
இடையில் எரியும் கணப்பு 
வழியும் ஹரிப்ரஸாதின் குழலிசை 
சகமொருத்தி சொன்னது 
இன்று இப்போது இக்கணம் 
நினைவில் மென்மையாய் அதிரும் 
'ஒரு குழல்,
ஒரு முணுமுணுப்பு,
ஒரு பெருமூச்சு,
ஒரு முனகல்,
ஒரு மெல்லிய அழுகை,
ஒரு தேன்சிட்டின் சிறகசைவு,
சுவாசம்,
தென்றல்,
மரங்களின் உயிர்ப்பு,
இடையோடும் நிசப்தம்,
சொற்களேதுமற்ற இந்நிலை...'

அநித்யங்களின் காதல் 
வலியது 

Thursday, January 10, 2019

தொலைவில் வழியும் இசை


அலுவலகம் செல்லும்
அவசரத்தில் அனைவரும்
தத்தம் பேசியில் புத்தகத்தில் உரையாடலில்
அமர்ந்திருந்த எனக்கெதிரே
தலைநிமிர்ந்து அமர்ந்திருந்தாள்
மறுமுறை நோக்க வைக்கும் முகம்
ஏதோவோர் எண்ணம்
ஏதோவொரு நாடகம்
எங்கோ நோக்கிய
தளும்பிய விழிகள்
கணப்போதும் இமைக்காமல்
பார்வையேதும் அசையாமல்
தன்னிச்சையாக மேலெழும்பும் கை
யாருமறியாமல்
நீரூறும் நாசியைத் துடைக்கும்
சிறிதே விரிந்த உதடுகளிலும்
உறைந்த சலனம்
யாருமே அவளைப் பார்க்கவில்லை
அவளைத் தவிர யாரையுமே நான் பார்க்கவில்லை
இருக்கையைவிட்டு எழாமல்
வெறித்து எதுவும் பார்த்துவிடாமல்
வழியப்போகிற அந்தத் துளிகள்
ஏன் என் தோள் வீழக்கூடாது

Pandit Venkatesh Kumar and Raag Hameer