Wednesday, December 13, 2017

ஆதி கதை

Image result for animals gods humans

கதை சொல்லத் தொடங்குகிறேன்

இன்று போலல்ல
அது தேவதைகளும் யக்ஷிகளும்
மிருகங்களும் மனிதர்களும்
தத்தமது உலகம் வாழ்ந்த காலம்

கூடியும் ஊடியும்
களியென யக்ஷிகள்
ஒருநாள் மனிதத்தடம் பதிந்திராத
கருமலைகளின் விண்பொதிந்த
உயரங்களினின்று
மண்வந்து சேர்ந்தன

சிகரங்களின் பனிமுகில்கள்
கொடுமுடிகள் விட்டிறங்கி
கானகத்தின் இலைப்படுகை
கால்நுனி தீண்டிப்பார்க்கும்
அந்நீர்தொடர்ந்து ஆடிவந்த
தேவதைகளும் யக்ஷிகளும்
பிறிதொரு கரைநின்ற
விலங்குகளும் மனிதமும்
கண்டுகொண்டன

அதன்பின் கடந்துமறைந்த
காலங்கள்தோறும்
யாருக்கு பூசனை யாரிடும் படையல்
யாருக்கு ப்ரீதி யார் செய்வதென
கனவுகளிலும் தீரா போர்களில்
கழிந்தன தலைமுறைகள்

ஒருபோது மனிதம் வேண்டி
யக்ஷிகள் தெண்டனிடும்
மறுபோதோ
படையலும் பலியும் கொள்ளுமவை

எழுந்தும் அமிழ்ந்தும்
அவை சன்னதம்
அடங்காதாடும்தோறும்
அவற்றிலொன்றென ஆயினும்
இதுவேதும் கலவா தேவதைகளோ
கூர்பார்வையும் அரிதென சிரியுமென
பனிமூடிச்சிகரங்கள் ஏறியவாறிருந்தன

போர்களில்
படைப்பும் காதலும் ஊக்கமும்
அழிந்துகிடந்த
யக்ஷிகள் மனிதர்கள்முன்
தோன்றின தேவதைகள் ஒருநாள்
யாரும் கேட்டிரா ஒலிகளில் உன்னதம்நிறைத்து
யாரும் கண்டிரா வினைகளில் மர்மம்புதைத்து
தேவதைகள் கூறும்
வேடம் மாற்றுக
முகமூடி களைக
யக்ஷியும் நீ மானுடமும் நீவிர்
விலங்கினமும் நாம்
அனைத்தும் நாமே
வீழ்ந்தன அனைத்தும்
பணிந்தன பாதம்

கதைமுடிந்தது
எனினும்
கனவுமுடியாதென
நாமும் அறிவோம்
அவையும் அறியும்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: ஆதி கதை

https://padhaakai.com/2017/12/10/the-foundational-myth/


Monday, November 13, 2017

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: நீட்சி

https://padhaakai.com/2017/11/10/in-extenso/

நீட்சி

செயலின்மையின் செய்நேர்த்தி
உச்சம்கொண்ட
ஒரு காலம் கடந்தோம்
மனிதத்திரளின் அத்தனை உன்னதமும்
உறைந்து கிடந்ததோர்
காலமும் கடந்தோம்
விடிவதும் கதிர் முடிவதும்
இடையே
எழுவதும் விழுவதும்
உண்பதும் கழிப்பதுமான
தொடர்நியதிகளின் சூழ்வே
வாழ்வென விதித்துக்
கிடந்ததொரு காலமும் கடந்தோம்
ஒரு குரலில்லை அழுகையில்லை
அழுந்திக் கிடக்குமோர் உணர்வுமில்லை
செய்தே அறியமுடியுமெனின்
யாதும் செய்யாதிருத்தல்
யார் நலன் பொருட்டு
என்றும் வினவாதிருந்தோம்
இன்றோ
தவறெனப்படும் பாதைகளிலும் பயணம்
குறையொளியெனினும் திரியேறும் சிறுதீபம்
இயைந்தெழும்
இயக்கத்தின் வெளிப்பாடு
காண்கிறோம்
ஆயினும் கேட்கிறோம்
இன்னும் புதிதாய் சில குரல்கள்
இத்தனைக் காலம்
உறங்கிக் கிடந்த குரல்கள்
பாதையின் வளைவை இடரை
ஒளியின் போதாமையை
சுட்டும் குரல்கள்
அவலம் சிறிதும் தொனிக்கா
கயமைக் குரல்கள்
வேண்டுவது ஒன்றே
இயக்கமின்றி
இம்மானுடத்திரள் தேங்கியழிதல்
முன்னகர்வில்லை
இயங்காதிருப்பின்
இயக்கம் போற்றுதும்
இயக்கம் போற்றுதும்
இன்மை களையும்
இயக்கம் போற்றுதும்

Wednesday, October 4, 2017

வேட்கை

Image result for bird drinking water + busy road

பசுமஞ்சள் அலகைச் சாய்த்துச் சாய்த்து
கையகல நீர்த்தேக்கத்தை
துளித்துளியாய் அருந்துகிறாய்
அடுத்தப் பேருந்து வந்து
நீர்த்தேக்கத்தை சிதறடிக்குமுன்
உன்சிறு நாவின் வேட்கை
தணியுமோ ஆறாதோ
தவித்தவாறு நடைமேடையில் நிற்கும்
என்னருகே தாவி நின்று
வந்த பேருந்து கிளம்பக் காத்திருக்கிறோம்
நீயும் நானும்

Padhaakai - Kavithai

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை:

https://padhaakai.com/2017/10/04/desire/

Monday, July 31, 2017

இக்கவிதை

வானின்று பொழியும் நீர்ச்சரங்களில்
மழை வில்லை மண் இறக்கிவிடும்
பிரயத்தனங்களின் கனமில்லாத கவிதை

பதிந்து சென்ற தடங்களின் அழுத்தமும்
புதுப்பாதை சமைக்க நேரும்
நிர்பந்தங்களின் எடையுமற்ற கவிதை

தன் சிறகின் இளைப்பு தவிர
எதன்பொருட்டும்
தோள்தர நேர்ந்துவிடும் கட்டுப்பாடற்ற கவிதை

எளிதில் உருவழிந்துபோகும்
எதிலும் குறிக்கப்பெறா
இந்தக்கணம் போலும்
இக்கணம் வாழும்
இக்கவிதை

Pandit Venkatesh Kumar and Raag Hameer