Sunday, December 13, 2015

கால்கள்

மழைக்கால நடைபாதைகளில்
கவனியாது விரையும்
மாபலிக் கால்களினூடே
கூன்சுமந்து ஊரும்
நத்தைகளை
பதைபதைத்து நோக்குகிறேன்

அறியாது அவை
மாபலிக்கும்
காத்திருக்கும்
பிறிதொரு வாமனக் கால்கள் 

Thursday, December 10, 2015

திணை மயக்கம்

நாட்காட்டியில் தாள்கள் கிழியும் சத்தம்
நொடிகள் கழியும் சத்தம்

யன்னலின் வெளியே
நிறம் மாறி மாறித் தோன்றும்
இரவின் வெக்கையும்
பகலின் மழைஈரமும்

வாழ்வு என்பதும்
நகர்தல் என்பதும்
அர்த்தமற்ற ஒலிக்குறிப்புகள்

சருகாகவும் தளிராகவும்
மிக மென்மையாக
மிக மிக அமைதியாக
உதிர்த்துக் கொண்டிருக்கிறது
காலம்

திறந்தே கிடந்தும்
யாரும் நுழையா
இக்கதவுகள்

திங்களொரு முறை
தோன்றும் மகனோ மகளோ
வருவது கூட
அசையா கதவுகளின்
மன்றாடலின் பேரில்

அசையா நாற்காலி அஃறிணை
அசையா கட்டில் அஃறிணை
அவற்றினூடே
உயிர்ப்புடனொரு
நாட்காட்டியும் கடிகாரமும்
பதாகை  மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: திணை மயக்கம்

http://padhaakai.com/2015/12/09/exotica/

Wednesday, November 4, 2015

ஒற்றைப் பூ


மகிழ மரத்தினின்று
பூக்கள் உதிர்வது போல்
கிரணங்கள் அறைக்குள்
பெய்து  கொண்டிருக்கின்றன

மௌனம் காத்திருந்த நம்மிருவரிடயே
இசை பேசிக் கொண்டிருந்தது 

மெல்லிய
ஆவிபுகையும்
தேநீர்க்கோப்பையை உறிஞ்சிவிட்டு 
என்னை பார்க்கிறாய்

புலர்வெயிலின்
இளவெம்மையுடன் 
மெதுமெதுவே மஞ்சள் மாறும்
அறையின் பரிமாணங்களை
ஹரி பிரசாதின் குழலிசை நிறைக்கிறது

தோடி ராகந்தானே 
என வினவுகிறேன்

தலையசைக்கிறாய்
செவிமடல் பொதிந்த
அணிகள் ஆடுகின்றன
வர்ணங்களை வாரியிறைத்தபடி

என்னுள்ளும்
பொன்னிழைகளாய் மின்னும்
காதோர குழற்கற்றைகளை 
ஒதுக்கிவிட 
தவிக்கும் என் விரல்களின்
தகிப்பை ஏன் மறைக்க வேண்டும்
என எண்ணுகிறேன்

உன் இதழில் இருந்து முறுவலொன்று
நழுவிச் சிந்துகிறது

வெளியே
வெட்கமின்றி
பூக்கள்
உதிர்ந்து கொண்டிருக்கின்றன

அற்றது

நதி நிறம் மாறி 

கால்களுக்காக காத்திருக்கும்
வழுக்கும் பின்னிரவு

நீரின் அடுக்குகளில்
மெல்லிய அசைவுகளூடே
நெளியும் அரவத்தின்
அரவம்

இசை வற்றிய காற்று
அதிராத இலைகளில்
வழிந்து இறங்கி
நீர்ப்பதற்கு முன்
மயங்கி நிற்கும்
பாதத்தின் அழுத்தத்துடன்
பேசிப் பேசி மறையும்
புல்லிதழ்களின் நுனிகள்
எங்கோ ஒரு ஊரின் 
கேட்டு இல்லாமலாகி கேட்கும்
பாடல் 
இங்கு என்ன இந்த நேரம் 
என்று கேட்டால்
பதில் மட்டும் இல்லை என்னிடம்

பதாகை மின்னிதழ்

பதாகை மின்னிதழ்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் 'ஒற்றைப் பூ'

http://padhaakai.com/2015/11/04/flower/

Monday, October 26, 2015

நானும் நானும்

உணர்வின் வெளிப்பாடு 
இயலாமல் ஆகிவிட்டவன் 
சுயம் என்னவாகும் 

உணர்தல் இயலும் அதை 
உரைத்தல் இயலாதான  இது 
சுயமற்றவொரு சடப்பொருள் என 
சூழ்ந்து நின்று விவாதிப்பதை நான் 
விழியசைவின்றி கண்டும் 
உடல் நகர்வின்றி கேட்டும் 
கொண்டிருப்பதை 
எப்படி உணர்த்துவேன் 

நினைவுக் கோளங்களில் 
பளிச்சிடும் 
வெளிச்சத் துணுக்குகளில் 
உங்களைப் போல் நானும் 
அவ்வப்போது
விதிக்கப்பட்டவோர் ஒழுங்குடன் 
நடந்து கொள்வதாக 
நீங்கள் மகிழ்வது புரிகிறது 

எனினும் 
எனக்கும் உங்களுக்கும் 
என்ன வேறுபாடு 
என்னை உங்களைப் போலாக்கும்
தவிப்பெதற்கு

வலிகளில் எது பெரியது 
என்றுதான் 
நீங்களெல்லாம் பேசியும் 
நான் பேசாமலும் 
ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் 

விட்டுவிடுங்கள் 
நானும் நீயும் ஊடாடுவதின் மூலம் 
நாமும் அவர்களும் 
ஒன்றெனக் காட்ட முயலும் 
இந்தச் சமன்பாடு 
எனக்குப் பிடிக்கவில்லை

Pandit Venkatesh Kumar and Raag Hameer