Wednesday, November 4, 2015

ஒற்றைப் பூ


மகிழ மரத்தினின்று
பூக்கள் உதிர்வது போல்
கிரணங்கள் அறைக்குள்
பெய்து  கொண்டிருக்கின்றன

மௌனம் காத்திருந்த நம்மிருவரிடயே
இசை பேசிக் கொண்டிருந்தது 

மெல்லிய
ஆவிபுகையும்
தேநீர்க்கோப்பையை உறிஞ்சிவிட்டு 
என்னை பார்க்கிறாய்

புலர்வெயிலின்
இளவெம்மையுடன் 
மெதுமெதுவே மஞ்சள் மாறும்
அறையின் பரிமாணங்களை
ஹரி பிரசாதின் குழலிசை நிறைக்கிறது

தோடி ராகந்தானே 
என வினவுகிறேன்

தலையசைக்கிறாய்
செவிமடல் பொதிந்த
அணிகள் ஆடுகின்றன
வர்ணங்களை வாரியிறைத்தபடி

என்னுள்ளும்
பொன்னிழைகளாய் மின்னும்
காதோர குழற்கற்றைகளை 
ஒதுக்கிவிட 
தவிக்கும் என் விரல்களின்
தகிப்பை ஏன் மறைக்க வேண்டும்
என எண்ணுகிறேன்

உன் இதழில் இருந்து முறுவலொன்று
நழுவிச் சிந்துகிறது

வெளியே
வெட்கமின்றி
பூக்கள்
உதிர்ந்து கொண்டிருக்கின்றன

அற்றது

நதி நிறம் மாறி 

கால்களுக்காக காத்திருக்கும்
வழுக்கும் பின்னிரவு

நீரின் அடுக்குகளில்
மெல்லிய அசைவுகளூடே
நெளியும் அரவத்தின்
அரவம்

இசை வற்றிய காற்று
அதிராத இலைகளில்
வழிந்து இறங்கி
நீர்ப்பதற்கு முன்
மயங்கி நிற்கும்
பாதத்தின் அழுத்தத்துடன்
பேசிப் பேசி மறையும்
புல்லிதழ்களின் நுனிகள்
எங்கோ ஒரு ஊரின் 
கேட்டு இல்லாமலாகி கேட்கும்
பாடல் 
இங்கு என்ன இந்த நேரம் 
என்று கேட்டால்
பதில் மட்டும் இல்லை என்னிடம்

பதாகை மின்னிதழ்

பதாகை மின்னிதழ்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் 'ஒற்றைப் பூ'

http://padhaakai.com/2015/11/04/flower/

Monday, October 26, 2015

நானும் நானும்

உணர்வின் வெளிப்பாடு 
இயலாமல் ஆகிவிட்டவன் 
சுயம் என்னவாகும் 

உணர்தல் இயலும் அதை 
உரைத்தல் இயலாதான  இது 
சுயமற்றவொரு சடப்பொருள் என 
சூழ்ந்து நின்று விவாதிப்பதை நான் 
விழியசைவின்றி கண்டும் 
உடல் நகர்வின்றி கேட்டும் 
கொண்டிருப்பதை 
எப்படி உணர்த்துவேன் 

நினைவுக் கோளங்களில் 
பளிச்சிடும் 
வெளிச்சத் துணுக்குகளில் 
உங்களைப் போல் நானும் 
அவ்வப்போது
விதிக்கப்பட்டவோர் ஒழுங்குடன் 
நடந்து கொள்வதாக 
நீங்கள் மகிழ்வது புரிகிறது 

எனினும் 
எனக்கும் உங்களுக்கும் 
என்ன வேறுபாடு 
என்னை உங்களைப் போலாக்கும்
தவிப்பெதற்கு

வலிகளில் எது பெரியது 
என்றுதான் 
நீங்களெல்லாம் பேசியும் 
நான் பேசாமலும் 
ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் 

விட்டுவிடுங்கள் 
நானும் நீயும் ஊடாடுவதின் மூலம் 
நாமும் அவர்களும் 
ஒன்றெனக் காட்ட முயலும் 
இந்தச் சமன்பாடு 
எனக்குப் பிடிக்கவில்லை

பதாகை மின் இதழ்

பதாகை மின் இதழில் வெளி வந்திருக்கும் கவிதை:

http://padhaakai.com/2015/10/25/i/

Sunday, October 18, 2015

மோஹ்சின் மக்மல்பஃப் இயக்கிய நிசப்தம்

குறிப்பிடத்தகுந்த இரானிய இயக்குனர்களுள் ஒருவர் மோஹ்சின் மக்மல்பஃப். விருதுகள் பல வென்ற அவரது படங்களுக்கு பல விமர்சனங்களும் குறிப்புகளும் கிடைக்கின்றன எனினும் முதல் முறை இந்த திகைக்கவைக்கும்படி எளிமையான ஆனால் குறியீடுகள் நிறைந்த The Silence என்ற படத்தை பார்த்தபோது என்னளவில் ஒரு சிறு  பதிவை எழுதும் உந்துதல்.

தாயுடன் வாழ்ந்து வரும் பார்வையற்ற சிறுவன் குர்ஷித் இசைக்கருவி செய்யும் ஒரு கூடத்தில், செய்து முடித்த கருவிகளில் சுதி கூட்டும் பணி செய்கிறான். கல்வியும் தந்தையுமற்ற ஆனால் வறுமை நிறைந்த வாழ்வில், அவன்  வருவாயை நம்பித்தான் அவன் தாய் இருக்கிறாள்.

தினமும் வீட்டிலிருந்து நடந்து ஒரு சந்தையை கடந்து, பேருந்து பயணித்து, உலோக வேலைக்கூடங்கள் தாண்டி அவன் பணியிடம் சேர்வதில் ஒரே ஒரு  சிக்கல்: ஓர் அழகிய பாடலோ, இசையோ, குரலோ கேட்டால் அவன் செய்வதறியாது அந்த இசையின் பின் சென்று விடுகிறான். நடக்கும் போது வழி தவறுவதும், பேருந்தில் இருந்து இறங்கி குரல்களை தொடர்ந்து எதிர் வழி சென்று விடுவதுமாக, பல நாள் பணிக்கு உரிய நேரத்தில் செல்ல முடிவதில்லை.

இசைக் கூட முதலாளி பல முறை கடிந்தும் வேலையை விட்டு நிறுத்தி விடுவதாக மிரட்டியும் கூட, அவனால் அவனறியாமல் செய்வதை மாற்றிக்கொள்ள முடிவதில்லை. மாறாக, சுதியும் லயமும் கூடிய எதுவும் அவனை ஈர்ப்பதை அவன் இயற்கையாகவும் இன்பமாகவும் கருதுகிறான்.

பல நாட்களில் வேலைக்குக் கிளம்பும்போது அவன் தாய் மேலும் பணம் முதலாளியிடம் பெற்று வரா விட்டால் வீட்டு வாடகை கட்ட முடியாமல் (ஏற்கனவே வீட்டுச் சொந்தக்காரன் அடிக்கடி வந்து வாடகை பாக்கி கேட்டு மிரட்டுகிறான்) வீதிக்குத்தான் வரவேண்டியிருக்கும் என்று எச்சரித்து அனுப்புவது அவனுக்கு நினைவில் இருக்கிறது, ஏதோவொரு இனிய குரலோ, இசையோ கேட்கும் வரை.

மிக அழகிய காட்சிகளில் அற்புதமான படப்பதிவுக் கோணங்கள்; மிகக் குறைந்த படப்பதிவு அசைவுகள்; யதார்த்தத்திற்கு  அருகில் இருக்கும் பின்னணி இசைக்கோர்வை என இப்படம் தரும் அனுபவம் உயரியது.

இரு காட்சிகளை குறிப்பிடலாம்:

- இசைக்கருவிக்கூடத்தில் குர்ஷித் கருவிகளுக்கு சுதி கூட்டும்போது அவன் தோழி நாதிரா அந்த இசையற்ற வெறும் சுதிக்கு மெதுவே மிக மெதுவே ஆடுவதும் அபிநயிப்பதும் - கவிதையான காட்சிப்படுத்தல்.

- நாதிராவும் குர்ஷித்தும் கானகத்தின் ஊடாக பொய்கை நோக்கி செல்லும் காட்சிகளில் இயற்கை ஒளியும் காட்சியின் கோணமும்  நடிகர்களின் உணர்ச்சிகளை பெருக்கும் ஒரு ஆடியாக பயன்படுத்தப் பட்டிருப்பது ஒரு சுகானுபவம்.

இது தவிர, படத்தின் பல நிலைகளிலும் குறியீடுகளை உணர முடிகிறது:

- வேலையிழந்த பிறகு தான் கேட்டு மயங்கிய ஏதோவொரு குரலை மீண்டும் கேட்க நகரத்  தெருக்களில் தேடித் திரிவது

- தோழி நாதிரா காட்டுக்குள் ஒருவன் தலையை மறைத்துக் கொள்ளாத பெண்களை  மிரட்டுவதாகக் கூறி குர்ஷித்தை வேறொரு வழியில் கூட்டிச் செல்கிறாள்; அந்த வழியில் அவன் இருக்கிறான், ஒரு அழகிய நரம்பு வாத்தியத்தை மீட்டிக் கொண்டு - அவனிலிருந்து சற்று விலகி அவன் இயந்திரத் துப்பாக்கி!

- உச்சக் காட்சியில் உலோக வேலைக்கூடத்தினூடே மெதுவே நடந்து கொண்டே வேலை செய்பவர்களை தன் தாளத்திற்கேற்ப பின் தொடருமாறு ஆணையிடுவது (மேலிருந்து பொழியும் ஓர் ஒளிக் கற்றையின் கீழ் தன் மேற்சட்டையை கழற்றியவாறு அவன் நிற்கையில் காட்சியும் இசையும் முடிகிறது!)

இந்தக் காட்சிகள் பல படிமங்களை எனக்களித்தது.

தீவிரவாதமும் இசையும்

தீவிரவாதமும் வறுமையும்.

மற்றும் தன்னை அறியாமலேயே ஓர் இசைக்கலைஞனாக உரமேறும் சிறுவனின் கால்களைத்  நகர விடாமல் தளைக்கும் அற்பக் கவலைகள்;

பெரும் வாழ்க்கைப் போராட்டங்களை சித்தரிப்பதான எந்தவொரு பசப்பும் இல்லாது ஆனால் இசை எப்படி எளிய மனங்களின் மிக எளிய மனங்களின் மிக எளிய, மிக இனிய இணைப்பு மொழியாக நிகழ்கிறது என காட்சிப்படுத்தும் இந்தத் திரைப்படம் நிச்சயம் வசியப்படுத்தும் ஓர் அனுபவம்.




Monday, October 12, 2015

Pandit Venkatesh Kumar and Raag Hameer