Sunday, October 2, 2011

அனைத்துமுணர்தல்


யூதாசுக்கு தெரியும்
யேசுவுக்கு தெரியும்
உனக்கு தெரியும்
எனக்கும் தெரியும்
அன்றாட வாழ்வில்
அவரவர்க்கு 
அளந்து தரப்பட்ட
அவரவர் பங்கு துரோகங்கள் 
அஹம் பிரம்மாஸ்மி 

இரசனை விளிம்புகள்


கடப்பதற்காக
ஏற்றுக் கொண்ட
தூரங்கள்
கடமைகளின் காயங்கள்
கடந்து போன கவலைகளின்
காய்ந்து போன வடுக்கள்

இற்று விழும் நேரம்
உற்ற துணை யார்

இரசனைகள்

இரசனைகளின் விளிம்புகள்
வரையறுக்க பட்டவையா
அதன் வீச்சுகள்
வகிரும் கோணம் என்ன

ஆழ்ந்த புரைகளில்
புழுக்கள் நெளிய
நிர்ப்பந்த அடிகள்
குருதி தெறிக்கும்
வலியாற்றும் விடை
இரசனை

அணையவிருந்த அக்கினியை
வளர்த்துவிட்ட பொறிகள்
மறையவிருந்த ஒளியை
இழுத்து நிறுத்திய துருவங்கள்

ஒவ்வொரு கடலின் 
ஆழமும்
அளக்கப்பட்டவை
அளந்த நிறைகளில்
வேறுபாடு கானலும்
அதிக ஆழம்
நிறுத்தலும்
குறித்தவை தக்கவை
அல்லவெனாலும்
எமக்கே உரியவை

ஆழத் தேடலின்
அழுத்த வேதும்பல்களில்
அடுத்த கடலுக்கு
அலை பாய்தலும் உண்டு 

துணை இல் தனிமையும்
தனிமையின் துணையும்
அழுத்திக் கிழித்த ஊனங்களும்
அணைத்துத் திளைத்த ஆனந்தமும்
இரசனை

வாழ்வில் கடக்கும் எவ்வொரு கணமும்
வெறுக்கத் தகுந்ததல்ல 
வெளிப்பாடு எதுவாயினும்
இரசிக்க மறுத்து விடாதே

அதுவே
நீ நான் தேடிக்கொண்டிருந்த
இரசனையாக இருக்கக் கூடும்
அதுவே
உன் என் கடைசி 
இரசனையாகவும்
இருந்துவிடக் கூடும்

- 13/10/86

இருள்

பகலின் கர்ப்பம்
வான வீட்டுக்கு வந்த
வரதட்சணையில்லா மருமகள்
சூரிய ஸ்பரிசத்திற்கு
காத்திருக்கும் அகலிகை
விண்வெளி வீட்டுக்கு
இரவில் அடித்த வர்ணம்
பகலில் வெளுத்த சாயம்

அச்சச்சோ
தொடுக்க வைத்திருந்த
முல்லை மல்லிகை கொட்டிய
தென்றல் 
வானமெங்கும்
பூப்பூவாய் மலர்த்தியது
அழகு பார்த்தது

மண்
தன இரவுமகளை
மணமுடிக்க ஏற்பாடு
எத்தனை அலங்காரம்
எத்தனை கும்மாளம்
கருப்பாக இருந்தாலும்
பொன்குஞ்சு அன்றோ
நிலவே தோழிப்பெண்
சிறுமிகளெல்லாம் வெண்ணிற உடையில்
சித்திரங்கள், நட்சத்திரங்கள்  
சிரித்து மகிழ
தலை குனிந்த இரவுப்பென்னை
யாரும் பார்க்கவில்லை

திருமண நேரம் நெருங்க
மணவாளன் அருகமர
மணப்பெண்ணின் கரிய முகத்திலும்
செந்நின்ற வெட்கம்

தென்றல்
மலர்களை காற்றோடு
அட்சதை தூவியது
குருவிகள் நாகஸ்வரம்
காக்கைகள் மேளம்
வானமெங்கும் ஊர்வலம்


சிறுமேக கூட்டங்களில்
சிங்கார மாப்பிள்ளை அழைப்பு
உயர உயர மரங்களிலெல்லாம் 
பந்தல் தோரணம்
இலைகளாடியது

மகளை கட்டிக்கொடுத்த 
மண்தாயின்
ஆயிரமாயிரம் கண்களில்
ஆனந்தக் கண்ணீர்
துளித்துளியாய்

கணவன் வீட்டுக்கு
சென்று மறைந்த
கண்மணி மகளை
காண்பதெப்போ?

- 12/09/85

சுயம்

உன்
வார்த்தைக் கரங்கள்
களைந்த உடைகள்;

என்
நிர்வாணத்தின்
பிரகாசம்
எனக்கே கூச்சம்

Pandit Venkatesh Kumar and Raag Hameer