Sunday, October 2, 2011

இருள்

பகலின் கர்ப்பம்
வான வீட்டுக்கு வந்த
வரதட்சணையில்லா மருமகள்
சூரிய ஸ்பரிசத்திற்கு
காத்திருக்கும் அகலிகை
விண்வெளி வீட்டுக்கு
இரவில் அடித்த வர்ணம்
பகலில் வெளுத்த சாயம்

அச்சச்சோ
தொடுக்க வைத்திருந்த
முல்லை மல்லிகை கொட்டிய
தென்றல் 
வானமெங்கும்
பூப்பூவாய் மலர்த்தியது
அழகு பார்த்தது

மண்
தன இரவுமகளை
மணமுடிக்க ஏற்பாடு
எத்தனை அலங்காரம்
எத்தனை கும்மாளம்
கருப்பாக இருந்தாலும்
பொன்குஞ்சு அன்றோ
நிலவே தோழிப்பெண்
சிறுமிகளெல்லாம் வெண்ணிற உடையில்
சித்திரங்கள், நட்சத்திரங்கள்  
சிரித்து மகிழ
தலை குனிந்த இரவுப்பென்னை
யாரும் பார்க்கவில்லை

திருமண நேரம் நெருங்க
மணவாளன் அருகமர
மணப்பெண்ணின் கரிய முகத்திலும்
செந்நின்ற வெட்கம்

தென்றல்
மலர்களை காற்றோடு
அட்சதை தூவியது
குருவிகள் நாகஸ்வரம்
காக்கைகள் மேளம்
வானமெங்கும் ஊர்வலம்


சிறுமேக கூட்டங்களில்
சிங்கார மாப்பிள்ளை அழைப்பு
உயர உயர மரங்களிலெல்லாம் 
பந்தல் தோரணம்
இலைகளாடியது

மகளை கட்டிக்கொடுத்த 
மண்தாயின்
ஆயிரமாயிரம் கண்களில்
ஆனந்தக் கண்ணீர்
துளித்துளியாய்

கணவன் வீட்டுக்கு
சென்று மறைந்த
கண்மணி மகளை
காண்பதெப்போ?

- 12/09/85

சுயம்

உன்
வார்த்தைக் கரங்கள்
களைந்த உடைகள்;

என்
நிர்வாணத்தின்
பிரகாசம்
எனக்கே கூச்சம்

Sunday, September 25, 2011

எங்கேயும் எப்போதும் - ஆனந்த விகடன் விமர்சனம்


மிகத் தரமான ஒரு படத்திற்கு மிக அழகான விமர்சனம்.  மற்றுமொருமுறை விகடன் புதுத் திறமைகளை அடையாளம் கண்டு வரவேற்கும் தலை வாசல் என்ற எண்ணம் உறுதிப்பட்டது.  

வழக்கம் போல் உங்கள் விமர்சனம் படித்து விட்டு படம் பார்த்து முடித்ததும் இயக்குனர் சரவணன் படத்தின் முடிவில் சொல்ல நினைத்திருக்கக் கூடிய இன்னொரு கோணம் தோன்றியது.  

ஜெய் - அஞ்சலி காதலில் அனைத்து நிகழ்வுகளுமே முன்கூட்டி தீர்மானிக்கப் பட்டவை. அவள் அவன் அறைக்குள் புகுந்து சம்பளம் என்ன என்று பார்ப்பதிலிருந்து, தன் தந்தையை பார்க்கச் சொல்வது, அவன் தாயிடம் சொல்லச் சொல்வது என அவள் அவனுடனான தற்கால வாழ்க்கை மட்டுமல்லாது எதிர்கால பந்தத்தையும் சேர்த்தே திட்டமிடுகிறாள். "அம்பது வருஷம் உன் கூட வாழ வேண்டாமா?" என்று கேட்கிறாள்.

ஆனால் எதிர்பாராத அந்த விபத்து அவர்களை பிரிக்கிறது.

அனன்யா-சர்வா காதலிலோ எதுவுமே திட்டமிட்டவை அல்ல. அவர்கள் சந்திப்பு, அந்த ஒரு நாளில் அவர்கள் ஏறி இறங்கும் பயணங்கள் என முன்னறிவிப்பில்லாமல் நகர்கிறது. பேருந்தில் அவனருகில் இருக்கை காலியானதும் அமர எழுந்து, அந்த நிறுத்தத்திலேயே இறங்கும் அந்த ஏமாற்ற தருணங்கள் உட்பட.  பெயரோ, தொலைபேசி எண்ணோ கூடத் தெரியாத ஒரு நிச்சயமின்மை.  வாழ்வில் இனி எப்போதும் சந்திப்போமா என்ற சந்தேகம் அவர்களை இயக்குகிறது. 

அவர்களின் நிச்சயமற்ற தருணங்களை அந்த விபத்து அவர்களை சேர்ப்பதின் மூலம் நிறைவு செய்கிறது.

இயக்குனர் தேர்ந்தெடுத்த முடிவின் மூலம் இந்த கான்ட்ராஸ்ட்-ஐ அடையாளப்படுத்துகிறார்  என நினைக்கிறேன்.

மிகத் தெளிவாகவும் மிக நேர்த்தியாகவும் சரவணன் இந்த கான்ட்ராஸ்ட்-ஐ படம் நெடுகிலும் முடிவை நோக்கி கொண்டு சென்றிருக்கிறார்.

ரசனையின் எதிர்பார்ப்பில் மற்றொரு நல்ல படத்தை விரைவில் தருவார் என எதிர்பார்க்கும்,

சரவணன் 

Pandit Venkatesh Kumar and Raag Hameer