Saturday, January 1, 2011

அவன்

அவன் முன் நிற்க
காத்திருந்தேன்
நடுவே திரை

நானும் அவனும்
பேசிக்கொள்ள
திரை தடை அல்ல
என்றபோதும்
திரைகள் சடங்குகள்
என அதுவொரு
விளையாட்டு

சுற்றிலும்
மானுட துக்கங்களின்
உச்சங்கள்

நான் காத்திருந்தேன்

திரை விலகியது
உரையாடல் நின்றது

உதிர்ந்தது
உலகின்
துன்பங்கள் எல்லாவற்றிற்குமான
ஒரு துளி கண்ணீர்

Wednesday, December 22, 2010

நண்பனின் கடிதங்கள்

கடிதம் - 4
17/11/89

பிரிய சரவணா,

உன் கடிதம் கிடைத்தது. மகிழ்ச்சி.   I.C. ஏன் சரியாக எழுதவில்லை? அது ஒன்றும் அவ்வளவு கடினமான பாடம் அல்லவே. எனினும் நீ அதில் தேர்ந்து விடுவாய் என நம்புகிறேன்.  இக்கடிதம் உன்னை அடையும் நேரம் எல்லாப் பரீட்சைகளையும் நல்ல முறையில் எழுதிவிட்டு வீடு சேர்ந்திருப்பாய் என நம்புகிறேன்.

ஹரியின் சித்தப்பாவின் மறைவு மிகவும் வருத்துகிறது. வாழ்வு எவ்வளவு அநித்தியமானது.

யதார்த்தம் வேறு. நம் லட்சிய இலக்கு வேறு; வரையறைகள் வேறு. பொதுமை, பெரும்பான்மை இவையே யதார்த்தம் என்றால் என் யாசகம் யதார்த்தம் அல்ல. "சூழலின் சுக வெம்மை" தேவைப்படுகிறதா? சரவணா! இது சிதை வெம்மையோ, பணிக்குடச் சூடோ அல்ல.  உனது மூச்சில் எனது மூச்சடைக்கும் புழுக்கம். பொறாமை, அறியாமை, கர்வம் இவை இச்சமூகத்தை தீக்கிரையாக்கியுள்ளன. இச்சூழல் வெம்மையா? எனில் எப்பனி தீர்க்க இவ்வெம்மை நாடுகிறாய்.

'ஒரு பானைச் சோற்றுக்கு....' பழமொழி மனித இனத்திற்கு ஒத்து வராது. சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு மனிதனும் ஒரு தனி உலகம். நீ தனி. நான் தனி.  நமது ரசனைகள் ஒத்துப் போகலாம்.  நம் சிந்தனைகள் ஒரே தளத்தில் இறக்கலாம்.  நம் தேவைகள் ஒரே மாதிரி இருக்கலாம்.  எனினும் நான் பார்க்கும் உலகம் தனி. நீ பார்க்கும் உலகம் தனி. நம்மை தனி வர்க்கமாய் காணலாம். வரையறுக்க முடியாது.  நமது வர்க்கத்தின் குணாதிசயமாய் எதையும் நிர்ணயிக்கவும் முடியாது.  இருபதாம் நூற்றாண்டில் ஏறக்குறைய எல்லோருமே சிந்தனையாளர்கள். அவர்களது சிந்தனையின் திக்குதான் வேறு.  எனவே விளக்குகளை வைத்து எதையும் நிர்ணயிக்க முடியாது.  எனவேதான் சூழல் மறுத்து, யதார்த்த நிர்பந்தம் வெறுத்து, வாழ்வின் ஏதோ ஒரு திசையில் என் பாட்டுக்கு போய்க் கொண்டிருக்கிறேன்.

யதார்த்தத்தை ஏற்காததின் காரணம் பயம் அல்ல. இங்கு கற்பிக்கப்பட்டு வரும் யதார்த்தம் முட்டாள்தனமானது. இவர்கள் தங்கள் போக்கில் வாழ்ந்து கொண்டு, யதார்த்த வாழ்க்கை என்று பீற்றிக் கொள்வது வேடிக்கை. இவர்கள் எப்படி வாழ்ந்தாலும் அதுதான் யதார்த்தமா?

'அனைவரையும் அப்படியே ஏற்றுக் கொள்ளத் தெரிய வேண்டும்; பழக வேண்டும்'. உண்மை. அதற்காக இவர்களது முட்டாள்தனத்தையும் கபடத்தையும் என்னால் அனுமதிக்க முடியாது.  இவர்களது பாமரத்தனம் என்னைப் பற்றிய தவறான கணிப்பைத் தோற்றுவிக்கிறது என்றால், அது என் நிஜத்தின் தோல்வி. இதை என்னால் ஏற்க முடியாது. இதுவே இச்சமூகத்தின் பெரும்பான்மை.

நான் பொதுனலவாதியல்ல.  இவர்களிடம் போராடி என்னைப் பிரதிபலித்து, ஏதோ ஒரு காலத்தில் என்னைப் பேசுவதற்காய், சிலை வைப்பதற்காய், வெற்றி பெற.  நான் ஓர் உன்னதமான சுயநலமி.  எனக்கு நிகழ்தேதிதான் நிஜம்.  இன்றைய நாள்தான் என் வாழ்வின் அனைத்தும்.  நாளைகள் நிச்சயம் என்றாலும், இன்றைய கணத்தில் நேற்றும் நாளையும் மாயைகளே.  என் நிலைப் பிரக்ஞை என்றும் என்னில் உண்டு.  என் ஜீவாதாரமே அதுதான்.

நான் எதிர்ப்பது இல்லை. விலகிப் போவதுண்டு. வெறுக்கச் செய்து விலக்கி வைப்பதுண்டு.  அந்த வெறுப்பை மீறிய அணுகல் எப்போதாவது ஏற்படுவதுண்டு.  அதுவே எனப்பற்றிய மற்றும் என் புரிதல்களுக்கு வழி வகுக்கும். குறைபாடுகளையும் விகாரங்களையும் (மனதின்) என்னால் புரிந்து கொண்டு விலகி நின்று வேடிக்கை பார்த்து, நேசிக்க முடியும்.  அவற்றை என்னால் மதிக்க முடியாது.

என் குற்றங்களை என்னால் ஒத்துக் கொள்ள முடியும்.  எனக்குள் என்னால் இருமுகம் காட்ட முடியாது, என் சுய கற்பிதங்களால் என் தவறை வெளியில் மறுத்து விளையாடிக் கொள்ளலாம். என்னிடம் மறைக்க முடியாது.  சந்தியில் பல முகம் காட்டுவது நிர்பந்தம்.   வாழ்க்கை. உள்முகத்திற்கு அது வேடிக்கை. பல முகம் காட்டி, உண்மையாக இருக்க முடியுமா? அடிப்படை உண்மையை பாதிக்காமல் எதனை விதமான முகங்களையும் காட்ட முடியும். எனினும், பல முகம் காட்டுதல் கபடம் அல்லவா? ஆம். கபடந்தான். கபடம் இங்கு கட்டாயம். அம்மணமாய் வெளிவரும் நிஜம் அடிபட்டே சாக. கபடம் ஓர் கேடயம். நிஜத்தை விட்டெறிந்து விட்டால், நம் நிர்வாணம் கூட இவர்களுக்கு நாடகமாய்ப் படும்.

பொறுமை முக்கியம். தணலும் தண்மையும் மாறி மாறிச் சூழ்ந்து நிற்க, கனன்று தணியும் பொறுமை அவசியம். உளம் அணைத்து வழிகளிலும் இம்சிக்கப்பட்டும், அழியாமல் அமைதி காட்டும் பொறுமை அவசியம்.  இத்தகு பொறுமையை தவமேற்கொள்ளும்போது அவமானம், துக்கம், புகழ் எல்லாமே அந்நியப்பட்டுப் போகும்.

சரவணா! நானும் நீயும் விளக்குகள் அல்ல. விலகத் துடிக்கும் ஜீவன்கள்.  இன்னும் இச்சமூகத்தில் நாம் விழையும் சிற்றின்பங்கள் ஏராளம். பாலகுமாரன் மிக நன்றாக (significantly) விலகியிருக்கிறான். சுந்தர ராமசாமி, அக்னிபுத்திரன் ஆகியோரும் நல்ல விலக்குகள் அத்தகைய ஒரு தீவிரமான விலகல் தேவை. நாம் விலக்குகள் அல்ல.  நாம் எளிதில் உணர்ச்சி வயப்படுகிறோம். பாலியல் நட்பில் அதீத கவனம் செலுத்துகிறோம். நாம் நம் திசை வரையறுக்கப்படாமல், போகும் திசையை நம் திசையை கற்பித்துக் கொண்டு பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

சரவணா! "காலச் சுழற்சியில் காணாமற் போவது" அச்சுழற்சியின் நியாயம்; கட்டாயம்.  களிப்பும், சிலிர்ப்பும், சோர்வும், சோகமும், சுழற்சியின் அத்தியாயங்கள். இதை அனுபவித்து அதன் போக்கிலேயே போவோம்.  சுழலும் சக்கரத்தில் நம்மைப் பிணைத்துச் சுற்ற, நமக்குச் சக்கரமும், சக்கரத்திற்கு நாமும் நித்தியங்கள் (relativity).  இச்சுழற்சி சத்தியம். நாம் சுழவதும் சத்தியம். இதில் அசத்தியமாய் நான் காண்பது ஏதுமில்லை. எனக்காகப் பிறர் வாழ வேண்டாம். நானும் எவர்க்காகவும் வாழ்வதில்லை.  ஆயினும் என்னைப் போருக்க உனது வாழ்வு, எனக்காகத் தான், என்னை சிந்திப்பதாய் தான் அமைய வேண்டும். இதன் நேர்மாறும் நிஜம்.

நேற்றைய உண்மை இன்றைக்குப் பொய்யாகாது. உண்மை என்றைக்குமே உண்மைதான். ஆனால், சில வேளைகளில், உண்மை மறைந்திருக்க, ஒரு சில பொய்கள் வேஷம் போட்டுக் கொண்டிருக்கும்.  முற்றிலுமான உண்மை என்றுமே பொய்யாகாது. புவியீர்ப்பு தத்துவம் பொய்யாகுமா? இற்றைய கணத்தில் நாம் உண்மை என்று கற்பிதப் படுத்திக் கொண்டிருக்கும் எந்த உண்மையான உண்மையும் என்றுமே உண்மைதான்.

----------பற்றி நான் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ளவும் விடவில்லை. புரிந்து கொள்ள அனுமதிக்காதது கபடமில்ல.  ஒரு விழைவு.  சிற்றின்பம். கொஞ்சம் sadism  கலந்தது. நான் அதீதமாய் கற்பனை செய்யப்பட்டு  விடுவேனோ என்ற பயம். என் கடந்த காலங்களில் ஏற்பட்ட சில தவறான புரிவுகளின் விளைவுகள் இன்னும் என்னைத் தண்டித்துக் கொண்டுள்ளன. தவறு செய்யாமலே தண்டிக்கப்படுகிறேன். அந்த தண்டனை உணர்த்தும் எச்சரிக்கை இது.  --------இடம் நிறைய பேச வேண்டும். என் நிலை தெளிவாக. நான் தெளிய.

சென்ற ஞாயிற்றுகிழமை சுருளி அருவிக்குச் சென்றோம். லேசான சாறல் வேறு.  நண்பர்களாக ஆறு பேர். சரியான குளியல். அதன்பின் இதுவரை சென்றிராத ஒரு பாதையில் சென்ற போது, அருமையான ஒரு இடம் அமைந்தது. வளைந்து செல்லும் ஓடை. சுற்றிலும் அடர்த்தியான மரங்கள். அவற்றைக் கிழித்து உள்வரும் கிரணக் கீற்றுகள். ஓடைக்கரையில் வழுவழுப்பான சரளைக் கற்கள்.  ஓடையின் நடுவே ஆங்காங்கே பாறைகள். அதில் ஒரு பெரிய பாறையின் நடுவில் அமர்ந்து கொண்டு celebrate பண்ணிவிட்டு, ஒரே பாட்டும் கவிதையும் தான். மிகவும் நன்றாக இருந்தது.

இங்கு நசீமும் (Loyola) அவனது தோழர்களும் வந்திருக்கிறார்கள்.  அவர்களை கவனித்துக் கொள்வதில் நேரம் போகிறது.

மற்றபடி வேறு விசேஷமில்லை.

அன்புடன்,
ரமேஷா 

Sunday, December 12, 2010

நண்பனின் கடிதங்கள்

கடிதம் - 3

உத்தமபாளையம்


அன்புள்ள சரவணனுக்கு,

நலம், நலமே விளைக! நலமே விழைக!

உன் வாழ்த்து அட்டை கிடைத்தது. மிகவும் மகிழ்ந்தேன். மிகவும் ரசித்தேன்.

நீ தீபாவளி எப்படிக் கொண்டாடினாய்? தீபாவளியன்று உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.  இந்த முறை தீபாவளி பழைய உற்சாகத்துடன் இல்லை. பால்ய காலத்து நினைவுகளில்தான் கொஞ்சம் குளிர் காய்ந்து கொண்டேன். பெரும்பாலான நண்பர்களால் ஊருக்கு வர முடியவில்லை.  மேலும், கலவரங்களால் சகஜ வாழ்க்கை அக்கம் பக்கத்துக்கு கிராமங்களில் பெரிதும் பாதிக்கபட்டிருந்ததால் தீபாவளியே சோபையிழந்து கிடந்தது. எனது பிறந்த தினத்தைப் போலவே தீபாவளியையும் எளிமையாக, மிக அமைதியான முறையில் கொண்டாடினேன்.  எனது நெருக்கமான நண்பர்களான பகவதிமுத்துவும், ஜெகனும் என் அருகில் இருந்தது சற்று உற்சாகம் ஊட்டியது.  உனது சேய்மை கொஞ்சம் உறுத்தியது உண்மை.

இங்கு தற்போது நிலவும் காலநிலை. நண்பா! நான் இதில் உன்னை விடுத்துச் சுகம் சுகிக்கும் சுயநலமி ஆகிவிட்டேன். கடந்த பருவநிலையில் பெய்த பெருமழை போய், தற்போது மேகங்கள் கவிந்து மோடம் போட்டு திடீரென்று, "சிரித்துப் போன கீதாவாய்" 'சடசடத்து', கையில் பிடிக்குமுன் காணாமல் போகும் சிறுமழையுடன். எனினும் தோழா! எனைப் புரிந்து கொண்டு சுகமூட்டும் உன் சேய்மையில் மனம் வலிப்பது நிஜம். இதே கால நிலை. அடுத்த மாதமே மாறும் என்பது எனக்குத் தெரியும். சூரியனை நாடுகடத்தி குளிரும் மார்கழிப் பணியில் மௌனம் சாதிக்கும் என் இரவுகள் இனிதான் வரவிருக்கின்றன.

சரி சரி! நீ எப்படிப் படித்துக் கொண்டிருக்கிறாய்? நண்பர் ஹரி, எப்படி இருக்கிறார்? மற்றும் நம் பிற நண்பர்கள் எப்படி இருக்கிறார்கள்? எல்லாம் எழுது. உடனடியாக எழுது.

சரவணா! தற்போது என்னிடம் நல்லதாக நான்கு ஆய்வுக்கட்டுரைகள் - புத்தங்கங்கள் இருக்கின்றன. அதைதான் தற்போது படித்துக் கொண்டிருக்கிறேன்.  முதல் புத்தகம் க.நா.சு. எழுதியது.

எங்களது 'பட்டமளிப்பு விழ' என்றைக்கு நடக்கவுள்ளது என்பது பற்றிய சரியான விபரம் தெரிந்தால் எழுது.

செல்வி. விஜயலட்சுமி அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களுக்கு என் அன்பைத் தெரிவி.  தம்பி எப்படி படிக்கிறான்? அவனையும் கேட்டதாகச் சொல். ________ என்ன ஆயிற்று என எனக்கே தெரியவில்லை. .....................

சரி விடு.  நீ என்னென்ன சினிமா பார்த்தாய்? எதாவது நல்ல படம்? தீபாவளியன்று அழியாத கோலங்கள் பார்த்திருப்பாய் என நம்புகிறேன். ரொம்ப top இல்ல? இன்றைக்கு வெற்றிகரமாக 6 - வது தடவையாக 'அபூர்வ சகோதரர்கள்' பார்த்தேன். இன்னும் 4 - தடவை (குறைந்தது) பார்ப்பேன். இந்தத் தியேட்டர்களில் படம் பார்பதே தேவசுகம். 'சோலைக்குயில்' பார்த்தேன்.

மற்றபடி இங்கு சொல்லத்தக்க விஷயங்கள் ஏதுமில்லை.

கொஞ்சம் சீக்கிரம் பதில் போடு.

அன்புடன்,
ரமேஷ் சண்முகம்


மனித மரம்


விழுது போட்டு,
அடிமரம் நீங்க  யத்தனிக்க,
அடி நழுவிப் போகும்.
அந்தரத்தில் கைவீசும்
விழுது.
அரிக்கப்பட்ட அடிமரம்
காற்று நினைந்து
கவலையுறும்.
உள்ளுள் கிளை ஒன்று
தளிர்விட்டு
புது விழுது பரப்பப்
புறப்பட்டு போகும் -
- அடியின் நித்தியம்
  தெரியாது.

ஆரங்கள்

நான், நீ, ஹரி நம்மூவரிடயேயுள்ள உறவு நட்பென்னும் பெரும் வட்டத்திற்குள் சுழன்று கொண்டிருக்கிறது.  அச்சாய், மிக மெல்லிய, கண்ணிற்ககப்படாத மிக நுண்ணிய புரிதலைக் கொண்டு, யாரும் தகர்க்கவோ, தலையிடவோ முடியாது சுழலும் இவ்வட்டத்திற்குள் நாம் ஆரங்களாய் அடைபட்டு கிடக்கிறோம்; ஓருடலோடு உடல் தழுவி, ஓருயிரோடு உயிர் பொருந்தி, கைகோர்த்து, இமை சேர்த்து மகிழ்வாய் சிறை கிடக்கிறோம்; சிறையே சுகம்; யாரும் வெளிவர விரும்பாத, இயலாத, கூடாத ஒரு வினோத சிறை.

யாருக்காகவும் வட்டத்தின் சுழற்சி நின்றுவிடாதபடி, இயக்க விதிகளுக்கப்பாற்பட்டு, வட்டம் சுழகிறது; சுழலும். தன் அச்சில் வெவ்வேறு வித படைப்புகளை சமைத்துக் கொண்டு, புரிதல் மேலும் வலுப்பட, அச்சு நிமிரும். அச்சின் இயைவில், சக்கரம் வளியாய் சுழலும்; படைப்பு எண்ணிறக்கும், அழகுறும். இதில் ஆரங்களற்ற சக்கரமோ, சக்கரத்திலினையாத ஆரண்களோ மதிப்பற்றவை; பயனிழப்பவை... மறந்து விடு... நாம் ஒரே சக்கரத்தின் ஆரங்கள்.
- 12/11/88

இறந்த ஒளியோடு

ஒளி

பிரபஞ்சத்தை
உய்விக்கின்ற ஒளி
விண்ணிலிருந்து
வெள்ளமாய் காற்றாய்
துகளாய் நுரையாய்
நுரைத்து வழிந்து
மூச்சுத் திணற
ஆக்கிரமிக்கிற ஒளி
சிகப்பாய் நீளமாய்
பச்சையாய் மஞ்சளாய்
நிறம்பிரிகிற ஒளி

எப்படியிருக்கும்?

தாயின் முகமும்
தாய்மொழி வரியும்
எப்படியிருக்கும்?

இருள்
எங்கும் கருமை
அதுவொன்றே நிரந்தரம்
ஒலியாலே
வாழப் பழகினோம்
இரவிற்கூட
கனவற்ற மலட்டு
நித்திரைகள்

கருவறையின்
இளஞ்சூட்டில்
தாயின் கனவோடு
கண்மூடி
இருள்விட்டுப் பிறந்து
இருளோடு வாழ்வோம்

அந்திம இருட்டையும்
சுவைபிரித்து
புதைகுழியின் இருளடங்கி
ஒளியோடு கலந்து மறைவோம்

ஒளி
அது எப்படியிருக்கும்?
- 11/08/90

Saturday, December 11, 2010

கி. பி. 2350

அம்மா இன்று வரும் நேரம் 11:10:33:27 மில்லி செகண்டுகள்.

இந்த கதையை கேட்கும் நீங்கள் என்ன 2011 இல் வாழ்கிறீர்கள் இல்லையா?

வீட்டின் நிலவறையில் வந்து சேரும் நிலத்தடி குழாய் வாகனத்தில் இருந்து துல்லியமான நேரத்திற்கு, இதோ அம்மா வந்து விட்டாள்.

'என்னம்மா, அப்பா வரலியா?" என்று நான் கேட்கவில்லை. எங்கள் காலத்தில் single parent lineage எனப்படும் ஒற்றை பெற்றோர் முறை வந்து விட்டது. ஆணோ பெண்ணோ திருமணம் தேவையில்லாமல், தன் ஸ்டெம் செல்லில் இருந்தே குழந்தைகளை உருவாக்கி வளர்த்து கொள்வது. எத்தனை வேண்டுமானாலும் பெற்று கொள்ளலாம். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். மனைவி இல்லாமல்.

அம்மா, "united tps ல தான் வரலாம்னு நெனெச்சேன். இன்னும் சிஸ்டம் சரியாகலன்னு ரிபோர்ட்ஸ்" என்றாள்.

"சரிம்மா, நீ போய் ரெஸ்ட் எடு" என்றேன்.

TPS என்பது டெலிபோர்டேஷன் வழியாக ஆட்களை போட்டான் துகள்களாக உருமாற்றி இழையிலி வழியாக எத்தனை தூரத்திற்கும் அனுப்பி அங்கு மீண்டும் ஒருசேர்த்து கொள்வது. 99% சரியாக இருந்தாலும், ஓரிரண்டு இடங்களில் திருப்பி சேர்க்கும் போது, கைவிரல்களோ காது மூக்கோ குறைந்து விடுகிறது. அல்லது முதுகில் கூடுதலாக ஏதாவது.

இதெல்லாம் அனுபவித்து கொண்டு இதையெல்லாம் உங்களுக்கு விவரித்து கொண்டு இருப்பதிலிருந்து உங்கள் காலத்து விஷயங்கள் ஒன்றும் எனக்கு தெரியாது என்று எண்ணி விடாதீர்கள். நேரம் கிடைக்கும் போது அந்தக் காலத்து இலக்கியங்கள், கணினி கட்டுரைகள் (கொடுமை!), மனித உணர்ச்சிகள், உளவியல் என்று கலந்து கட்டி படிப்பதுண்டு.

அம்மா உள்ளே குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருப்பது கேட்டது. ஒரு பெருமூச்சோடு நாளை செய்ய விருக்கும் முக்கியமான அறுவை சிகிச்சைக்கான குறிப்புகளை புரட்டினேன்.


பெரியவளுக்கு நாளைக்கு லோபோக்டோமி எனப்படும் மூளை மாற்று சிகிச்சை. அம்மாவுக்கு துளி கூட சம்மதமில்லாமல் தான் இதை செய்ய போகிறேன்.

றுநாள் காலை.

அம்மா தூக்கி வைத்த முகத்தோடு என்னெதிரே வந்து நின்றாள்.

"என்னம்மா?" என்றேன்.

"இது அவசியமாடா?'

"கட்டாயம். நீயே பார்த்தல்ல. உன்கூட எப்படி ஆடிக்கிட்டு பாடிக்கிட்டு. சின்னவ எப்படி இருக்கா. எல்லாம் extreme".

"எதுடா extreme? அதுதான் இயற்கை. அந்தகாலத்தில இப்படித்தான் பிள்ளைகள்லாம் இருக்கணம்னு ஆசைப்படுவோம். நீ என்னடானா. வேண்டாண்டா".

"நீ சும்மா இரும்மா. உனக்கு ஒன்னும் தெரியாது. society - ல ஏத்துக்க மாட்டான்".

"தயவு செய்து நான் சொல்றத கேளுடா".

"நீயேன் இதுக்கு இவ்வளவு அதிகமா react பண்ற? நீயே சரியில்லையே. உனக்கும் ஒரு ஆபரேஷன் பண்ணனும்னு நினைக்கிறேன்".

அம்மா பேசாமல் கொண்டு வந்த குளிர் பானத்தை வைத்து விட்டு என் முகத்தையே பார்த்தபடி நின்றாள் .

ஆயுதங்களை தயார் செய்து கொண்டே பானத்தை பருகினேன். கோப்பையை மேசையின் மேல் வைப்பதற்குள்ளாகவே கால் தரையிலிருந்து நழுவியது. மற்றொரு கையில் பிடித்திருந்த கத்தி பெரும் சத்தத்தோடு கீழே விழுந்தது.

கண்கள் மூடி நினைவு தப்புவதற்குமுன், அம்மா குனிந்து என்னைப் புரட்டி, கழுத்தின் பின்புறம் எதையோ துண்டிப்பது கேட்டது.

Sunday, December 5, 2010

A Letter to a Friend

Dear friend,

Continuing our discussion yesterday, the mail I sent you drained me.

Unlike your observations, I am very happy about this life. It is short, it is absurd and yet is a capricious blend of enjoyable moments and emotional let downs. But no situation, in my opinion, needs to be over emoted with, as I have realised that these are all impermanent; transient moments.

"This too will pass" were the wise words my father gave me when my chips were down. Now, I believe that as my life's defining statement.

I have divided carefully my connections and experiences with the external world into two strata; life as I see it and experience, mostly internal and dictated by my senses, my knowledge and tastes, is the first stratum. The second is, experiences with people - who are external to me, uncontrollable factors, all fired by different passions, mired in different expectations and entangled in different connections with me. This has no exceptions with close or distant connections - wife, parents, siblings, children etc.

They all expect certain things from you and failure of or only a partial accomplishment leads to varying degrees of friction. And the reverse is also true. You expect your wife to love you and be committed to you; you expect your children to be affectionate, respectful and be successful; you expect your siblings to be of help when in you are in trouble; you expect your friends to listen,console and comfort you.

How many times do we satisfy each other? How often and how vainly do we attempt to be reciprocative to these external elements? What vanity?

Contrarily, my connection to the world - known and experienced only through my senses, gives me immense pleasure. New places, unknown people, new circumstances, new food, new music and new knowledge... all excite me endless. I feel I am blessed to have so much to learn and rejoice and cherish. Every passing new experience makes me move one step toward greater happiness and self realisation. A realisation which will consummate with my death which I know is not very far, which makes rejoicing and cherishing more special.

Are there any strings attached? Are we asked to pay and reciprocate with material things and an equivalent emotional currency to be a part of this? None.

I have no regrets of this wonderful life and if I am to die this minute after this mail, I would die a contented man having enjoyed finer moments in both the strata I mentioned. My parents loved me. My wife loved me. My daughter loves me. My friends love and respect me. My God had never let me down. My knowledge has never failed me.

As you could see, my observations are neither philosophical nor pessimistic. My continual longing for love will not diminish the respect and value I have for this life.

What I may regret though is the unbelievably painful middle path that I am treading currently on - between neither being a pure existentialist (stating Sartre's words - Life is absurd and Existence precedes essence) deploring senseless human equations and assuming complete responsibility to one's life; nor with the familial values which we have been fed on for centuries.

That is the dilemma. A painful one. Yet, decisive and cherished.

Saravanan

Pandit Venkatesh Kumar and Raag Hameer