Friday, March 5, 2010

நகரம்

உயிர்களை உறிஞ்சிக்
கொண்டே
காற்றாடும் தாவரம்
தோலும் சதையுமற்ற
உடலங்கள்
உலவும் இடுகாடு
கெட்டிப்பட்ட அடுக்குகளில்
நேசமும் காதலும்
புதைந்திறுகும்
மணல் மேடு
நாளிலும் இரவிலும்
எண்ணிறந்த நிறங்களுடன்
உறவுகள்
புசிக்கும் பச்சோந்தி
உயிர்ப்பை மறந்த கருக்கூடு
ஆண்மை இறந்த சதைநீட்டம்
சிறகுடன் சேர்த்து
சுதந்திரமிழந்த
ஆயிரம் பறவைகள்
அடையுமொரு வீடு

Monday, March 1, 2010

யன்னல்

கழுத்தின் பின்புறம்
தோல்
பின் சதை
நரம்புக் கூட்டம்
குருதிக் குழாய்கள்
மூச்சுக் குழல்
பின் சதை
தோல்
முடிந்தது
வெட்டுப்பட்டு தனியே
விழுந்தும் தலை
துடிக்கும் சிறிது நேரம்
மிச்சமிருக்கும்
உணர்வுத்துணுக்குகளின்
தன்னிச்சைத் தாண்டவம்
பாய்ந்து ஒழுகி
வெட்டுமேடை நனைக்கும்
என் குருதிக் கறை
எங்கும் படிவது
குறித்த கவலை
எனக்கில்லை


எப்போது
நிகழும் இது

அரசியல் கைதி
அறம் வெறுத்தவனை விடவும்
அபாயமானவன்


என் தனிமைச் சிறையில்
உயர்ந்து சூழ்ந்த
நான்கு சுவர்களிலொன்றின்
உச்சியில் இருந்தது
சதுரச் சன்னல்
உலகம் என்னை பார்க்கவில்லை
நான் அதை பார்த்துக்கொண்டிருந்தேன்


இரவன்று தனிமை
தோன்றும்
வளரும்
முழுமை பெறும்
தேயும்
மறையும்
என
தினமொரு உறவு
இரவொரு உயிர்ப்பு

எப்பொழுது வரும்
எனதழைப்பு


நொடியின் நூற்றில்
ஒரு பங்கில்
முடிந்து விடும்
என்றாலும்
ஒவ்வொரு நொடியும்
அதை மட்டுமே
எண்ணத்தில் சேமித்து
பற்பல கோணங்களில்
மெய்விதிர்க்க
இமையாது
நாடகமென நானே
நின்று
பார்க்கிறேன்


வந்துவிட்டது
ஆணை

ஆட்சிமாறிய
அரசியல் சதுரங்கத்தில்
கொலைக்கள மேடை
மறைந்துவிட்டது
பகலையும் இரவையும்
சேர்த்து சுகிக்கும்படி
கதவுகள் திறந்துவிட்டன
கருவியைத் தாண்டி
நடக்கிறேன்
எதிர்பார்ப்பில்
ஏதோ குறைந்த
ஏமாற்றம் ஊடாட

(Written in the influence of 'The Wall' by Jean Paul Sartre)

Thursday, February 11, 2010

Letters to Jeyamohan - 9

அன்புள்ள ஜெயமோகன்,


தங்கள் மலேசியப் பதிவில் மரபின் மைந்தன் முத்தையா மரபுத் தமிழை சுவைபட பேசி (பாடி?) நீங்கள் ரசித்ததாக எழுதியிருந்தீர்கள். மேலும் தமிழின் சந்தச் சுவையையும் அதன் மூலம் தமிழ் தொடும் நுண் தள சாத்தியங்களையும் சிலாகித்திருந்தீர்கள்.

எனக்கென்னவோ, அந்நிகழ்வின் தாக்கமே ஈராறு கால்கொண்டெழும் புரவியாக கட்டற்று உங்களை, உங்கள் தமிழை பாய வைத்திருக்கிறது இந்தக் கதையில் என்று தோன்றுகிறது. உங்களின் எந்தக் கதையிலும் இல்லாதவோர் நடை. ஒரு வித்தைச் செழுமைக்காக எழுதிப் பார்த்ததிலும் உழைப்பின் தீவிரமும் ஆற்றலும் தெரிகிறது.

"கரஞ்சு விளிச்சா கஞ்சி வந்துடுமுண்ணு குட்டிக நெனைக்கும், நீரு நெனைக்க முடியுமா வேய் ? உம்ம உலகம் மாறியாச்சு. நடந்து வந்திட்டேரு.. இனி நீரு பொறகால போக முடியாது பாத்துக்கிடும்…”- இதைத்தான் பிள்ளை அறிந்து கொண்டு விடாமல் ஜீவனை கடத்தி விட்டாரோ? இன்னொரு இடத்தில், பிள்ளையை நெருஞ்சி முள்ளென்று ஞானமுத்தன் சொல்வான். பிள்ளையின் தீராத அலைச்சல் அவரது குணசித்திரமாக மற்றவர்கள் மூலம் வெளிப்படும் இரு இடங்கள் இவை. தவிர, பிள்ளை அவர்மட்டில், அந்தந்த கணத்தில் அவர் தேடி அலையும் தண்ணீராகட்டும், மனைவியின் சுகமாகட்டும், அந்தத் தேடலில் உண்மையாகவும், கவனச்சிதறலோ ஆன்ம சேதனமோ இல்லாமல் thaan தேடுகிறார்.

மத்தகத்தை விடவும், எழுத்தில் நுணுக்கமாக பல இடங்களில் காமம் விரவிக் கிடக்கிறது. வயது குறைந்து கொண்டே வருகிறது!

நன்றி ஜெயமோகன்

சரவணன்
சிங்கப்பூர்

Sunday, February 7, 2010

உள்ளோடும் நதி - 2

பல நாடுகளுக்கு சென்ற என் அனுபவங்களில், நதிகள் விரையும் பெருவெளிகளையும் பள்ளத்தாக்குகளையும் கண்டிருக்கிறேன். மானுடத்தை வாழ்விக்கும் நீராகவும், போக்குவரவு நடைபெறும் ஊடகமாகவும் நதிகளின் தேவை நின்றுவிடுவதின் எல்லை, மனிதன் வகுத்தது.

நதிகள், இயற்கையையும் இவ்வுலகையும், அண்டசராசரங்கள் தோன்றியநாள் முதல் இணைக்கும் தொப்புள்கொடிகளாய், தங்கள் கரைகளின் கருவெளிச் சூழலில் கோடானுகோடி உயிர்களையும், உன்னதமான நாகரிகங்களையும் படைத்து மனிதத்தின் ஆன்மீக தத்துவ தேடல்களின் விதைநிலமாக ஊற்றுக்கண்ணாக விளங்கும் தாயென இங்கு போற்றப்படுவது போல் வேறெங்கும் காணவில்லை.


மேற்கை போலல்லாமல் எனது நாட்டில் நதிகளுக்கும் மனிதத்துக்குமான உறவு, தாய்க்கும் சேய்களுக்கும் ஆன உறவென்றோ, தலைவன்-வழிபடுனர் என்றோ அல்லது இறைமை-பக்தன் என்றோ பாகுபடுத்த இயலாமல் ஒன்றுடன் ஒன்று முயங்கி, பல்வேறு வடிவங்களில் இயைந்து கிடக்கிறது. ஏனெனில், உயிர் தோன்றுவதிலிருந்து எரிந்து அடங்குவது வரை நதியோடு இணைந்தே வாழ்வுமுறை இயங்குகிறது.


மிக அழகிய ஒரு விஷுக் காலத்தில், ஒரு முறை நான் ஜகத்குரு ஆதிசங்கரர் அவதரித்த கேரளாவிலுள்ள காலடி என்றொரு சிற்றூருக்கு சென்றிருந்தேன். சென்ற களைப்பு தீர அங்காமலி என்னும் ஓரழகிய நகரில் இரவு தங்கி விட்டு, காலை இன்னும் கொஞ்சம் பயணக் களைப்பு மிச்சமிருக்க, சங்கரரின் கோவிலை அடைந்தேன்.

அது ஓரினிய புலர்காலைப் பொழுது. மிக மெல்லிய குளிர்ந்த தென்றல் வருடிச்செல்லும் அப்பொழுதில், பெரியாற்றின் கரையை அடைந்தேன். வேத மந்திரங்கள் எங்கோ தொலைவில் ஓதப்பட, இன்னும் விடியா அந்த குளிரில் என் முன் ஓசையில்லாமல் நகர்ந்துகொண்டிருந்த ஆனால் உறைந்து கிடப்பதுபோல் தோன்றின அந்நதியின் அழகும் அமைதியும் பிரம்மாண்டமும் என்னை உறைய வைத்தது.


தாய் தன் நெடுநாள் பிரிந்த மகன் வந்ததும் மார்போடு அணைத்து தழுவக் காத்திருப்பது போல் நதி ஆழம் அதிகமற்று அகண்ட பெருக்காய் காத்துக் கிடந்தது. கணிக்க முடியாததோர் கணத்தில் இவ்வுலகுடனான என் பந்தங்கள் அனைத்தும் அறுந்து விழுந்தன நானறியாமலே. என் கல்வி, என் கற்பிதம், என் செல்வம், என் குறைகள், என் நிறைகள்... ஒரு மகன், ஒரு கணவன், ஒரு தந்தை என என் உறவுகள் என் கண்முன் இல்லாமலானது. எதுவுமற்று நான் நின்றேன். என் திரைகள் விலகி, முகமூடி கழன்று நானும் நதியும் மட்டும் அங்கிருந்தோம்.


என்ன மனிதம் நமது, என்ன இருப்பு எமது!


வானம் மிக மெதுவாக நிறம் மாறி கொண்டிருக்க, நதியின் முன் பரிபூரண நிர்மலமான நிர்வாணம் நிறைக்க நின்றது போல் நின்றேன். கரையில் நான் மட்டும் இருந்தேன், அல்லது அவ்வாறு உணர்ந்தேன். என்னை அனைத்து புலன்களிலிருந்தும் விடுபட செய்த, என்னையும் அந்நதியையும் படைத்தோனை, எல்லாம் வல்லவனை இன்றும் தொழுகிறேன்.

நதியின் மெல்லிய மேற்பரப்பு பொன்னிறமாக மாறுவதை, குவிந்த கரங்களுடனும் தொழுத மனதுடனும் எத்துணை பொழுது பார்த்தவாறு நின்றிருந்தேன்... அவள் தன் மேனிமூடிய சருகன்ன துகிலை சிற்சிறு பொன்னிற இழைகளால் அலங்கரித்து கொண்டிருந்தாள். அலைகளின் மேல் அலைகளை என் பாதம் படச் செயதவாரிருந்தாள்.

அலைப்பரப்பின் மேல்போலல்லாது உட்புறம் வெதுவெதுப்பாக இருப்பதை உள்ளிறங்கியதும் உணர்ந்தேன். ஆயிரம் ஆச்சர்யங்களை தன்னுள் ஒளித்துக் கொண்டு மகன் வந்ததும் பல்லாயிரம் கைகளால் வாரியணைத்து அன்பும் வெம்மையும் சேர்ந்து விம்மும் மார்போடு இறுக்கி, விளையாட்டுக் காட்டும் என் தாய்.

என் காலடியில் அசையாக் குறுமணல். இடையளவு நிதானமாக ஓடுகின்ற நதிக்குள் கால்கள் மடக்கி சப்பணமிட்டு அமர்ந்ததும், நீர் என் நெஞ்சை உயர்ந்து நாசியின் கீழ் நகர்ந்தது. என் இறைவனை தொழவெழுந்த எண்ணம் பொருளற்றது என உடனே உணர்ந்தேன்.

சிந்தை ஒரு கணம் எதுவுமற்று நிர்ச்சலனமாகி நிலைத்தது; சூன்யம், எண்ணமெதுவுமற்ற சூன்யப் பரவெளி.

எத்தனை கோடிக் காலம் அப்படி அமர்ந்திருந்தேன். எத்தனையோ கோடானு கோடிக்காலம் புவி நனைத்து, உயிர் நனைத்து அழியா இளமையுடனும் பேராற்றலுடனும் ஓடிக்கொண்டிருப்பவள் என்னுள்ளும் தன் அன்பின், காதலின், கருணையின் பல்லாயிரம் வடிவங்கள் சூழ அமிழ்த்தி, எனக்கும் அழியா வல்லமையும் பொலிவும் தந்தாள். அவளுடன் ஒன்றென நானற்று ஒன்றாகி. அவ்வொரு இணைவை கண் திறந்து கலைக்க துணிவற்று மனமற்று எத்தனையோ கோடிக்காலம் அமர்ந்திருந்தேன். எங்கே கண் விழித்தால் அவளிலிருந்து விலகுவதாய், அவளின் இணையற்ற நேசத்தை பொருட்படுத்தாததாய், உலகை விரும்பிப் பிரிவதாய் எண்ணி விடுவாளோ, எண்ணி மருகி விடுவாளோ என்று அஞ்சிக் அப்படியே கிடந்தேன்...


காலமும் நதியும் என்னிலும் என்னைச் சுற்றியும் மிதந்தன.


என்னைச் சுற்றி அவள் பின்னியிருந்த மோனத்தவத்திலிருந்து விழித்தேன்; மெல்லக் கரையேறினேன் அவளுடலின் சூட்டை என்னில் உணர்ந்தவாறே. மேலேழுந்துவிட்ட ஆதவனின் கதிரொளியில் நதியின் அடங்காப் பேரழகும் விரிந்த வடிவமும் துலங்கின.

தோன்றிய நாள்முதல் படைத்தும் காத்தும் அணைத்துக் கிடந்தவளுக்கு, எதுவுமே விட்டுச்செல்லாமல் மறையப் போகும் ஒரு மானிட அணுவினும் சிறியேனையும், அன்பின்பால் பொருட்டாய் சேர்த்தாய் என நன்றியுடன், என் குறைகளுடன் ஏற்று, அமைதி சூழச் செய்து, விலகும்போது ஒரு வார்த்தையேனும் புகலாமல், செல்ல அனுமதித்தாயே என நெகிழ்வுடன் கரையேறினேன்.


அவள் மெளனமாக பார்த்து நிற்க, நான் கரை விலகினேன், வேதங்கள் தொலைவில் தெளிவாக கேட்க.
 
(A translation of my previous post 'The River Within')

சூடிக்கொண்டலையும்

தட்டுத் தடவி நிற்றல்
தள்ளாடி தான் நடை
காத்திருந்தே நிறையும் வயிறு
உடற்சுத்தமோ உதவியோடே
வந்துதித்த நாள்முதல்
சூடிக்கொண்டலையும்
எதிர்பார்ப்புகளினாலும்
ஏமாற்றங்களினாலும்
அருளப்பட்ட
இந்த இடைதூரத்தை
கடக்கும் வழி
உரைக்கக் காத்திருக்கிறாய்
கடந்தும்
வந்துதித்த உன்னிலைபோலும்
இந்நிலைமாறா
என்னால்
எப்படி ஏலும் என

The Intercontinental Grand Stanford, Hong Kong

Posing with my event!

Pandit Venkatesh Kumar and Raag Hameer