Sunday, January 17, 2010

இந்தக் கணம்

கொதிக்கும் தணல்
கடல் எழுந்து
வெண்ணிற உக்கிரம்
தருமந்த பகல்
விடும் மூச்சின்
ஆவி சூழ்ந்து
நாசி இறுக்கும்
நடந்து சலித்த
கால்கள் தேடும்
நிழலோ மஞ்சள்
மேனி எங்கும்
புதிதாய் முளைக்கும்
வியர்வை ஊற்றுகள்
நெற்றி மேடிறங்கி
புருவம் வழிந்து
கண்களில் கரைந்து
திரையிடும் பார்வை
மறையும் தருணம்
தோன்றி விடும்
அடுத்த அடி
விடுக்கும் மூச்சு
அல்ல என்
இறுதி மூச்சு
இருக்கலாம் ஒருவேளை
இருப்பினும் இருப்பினும்
தவழ்ந்தேனும் நகரும்
எனதிந்த அடி
ஒழுகியேனும் நழுவும்
விடுமிந்த மூச்சு

Saturday, January 9, 2010

நிகழ்வு

தலை சாய்க்கவில்லை
இமை செருக இயலவில்லை
உடலறுக்கும்
கவசமன்றி இருப்பதில்லை
கைகளினின்றும்
வாளையும் கேடயத்தையும்
கீழிறக்க இயலுவதில்லை
எப்பொழுதோ
நிகழப் போகுமொன்றுக்காக
எப்பொழுதும்
ஆயத்தமாய் இருப்பது
அலுத்து விட்டது

சேறு

புதுக்கிணற்றில்
பொங்குகிறது நீருற்று
குடிக்க
குளிக்க
வயலுக்கு பாய்ச்ச
தோட்டம் போட
தடையில்லை இனிமேல்
மிக்க
வசதிதான்
தற்கொலை செய்யவும்

ஏது

கண்கள் மூடிக்கொண்டாலும்
கொட்டுகிறது கண்ணீர்
காரணம் தெரிந்தாலும்
ஏற்க மறுக்கிறது மனசு

கப்பிக் கிடக்கும் இருளுக்குள்
கவ்விப் பிடிக்கும் நிசத்தில்
உணர்வே வலியாய்
வலியே சுகமாய்
விடுபட முடியாத
தேவையுமில்லாத
ஒரு
சுயநிர்பந்த சுகமாய்
சகமாய்
பழகிப் போன
இது -
என்
அற்புதங்களில் ஒன்று

Diagnosis

தவறான டயக்னாசிசால்
தள்ளாடும் உடல்போல்
மெஷின்
நுட்பமான தேர்வை
எதிர்பார்க்கும் பண்பு
அதன் நேர்த்தியான
கட்டமைப்பில் பொதிந்திருக்கிறது
CPU வீழ்ந்தது - இல்லை
SCSI பிரச்சனை - இல்லை
RAM தான் - அதுவுமில்லை
என
உள்ளுறுப்புகள் கூறாகி
ஆராயப்படுவதை
ரகசிய வேதனையுடன்
பார்த்தபடி நகர்கிறது
மெஷின்

Thursday, January 7, 2010

இளையராஜாவின் 'இசையில் தொடங்குதம்மா'



சில வருடங்களுக்கு பிறகு, ஹே ராம் படத்தில் வரும் 'இசையில் தொடங்குதம்மா' என்ற பாடலை மீண்டும் அனுபவிக்க நேர்ந்தது. இரண்டு நாட்களுக்கு வேறு பாடல்கள் எதுவும் நினைவில் தங்கவில்லை என்பது மட்டுமல்ல, இளையராஜாவின் இசை ஆளுமையை நேர்கொண்ட உற்சாகம் அவரது உன்னதத்தை உணர வைத்தது.


பல்லாயிரம் பாடல்கள், பல்வேறு இசைகோவைகள் தந்த ராஜாவின் மிக அற்புத பாடல்கள் என்று யார் ஒரு பட்டியலிட்டாலும் 'இசையில் தொடங்குதம்மா' அப்பட்டியலில் இடம் பெறும் என்பதில் ஐயமில்லை. பல காரணங்கள். மிக அபூர்வமாக இசைக்கப்படும் விவாஹப்ரியா ராகம் எப்படி கையாண்டிருக்கிறார், சாஸ்திரிய ஹிந்துஸ்தானி இசை எப்படி கலந்திருக்கிறது என்பது போன்ற வல்லுனர்கள் கூற வேண்டிய எவ்வளவோ விஷயங்கள் அந்த பாடலில் இருக்கலாம்.

என்னை போன்ற ஒரு சாதாரண ராஜா ரசிகனின் பார்வையிலும் அந்த பாடல் உள்ளத்தை உறைய வைப்பதற்கு சில காரணங்கள் உண்டு. அந்த பாடலை எழுதியதும் ராஜாதான். பாடியது பண்டிட் அஜய் சக்ரபோர்த்தி. படத்தில் அந்த பாடல் இடம் பெறும் சூழ்நிலையை இங்கே விவரிக்க வேண்டும். நாலாயிர திவ்ய பிரபந்தம், ஆண்டாள் பாசுரம் பாடும் தீவிர வைணவ குடும்பத்து இளைஞன்; புதிதாக திருமணமானவன்; மிக அழகிய, அவனை தவிர வேறொன்றும் அறியாத, மேலெங்கும் அறியாமை போர்த்திய மனைவி; இந்து இயக்க புரவலரான (இந்தியாவின் மேற்கில் ஒரு) மகாராஜா தரும் விருந்து; சூழலில் மது; திடீரென சமூக தளத்தில் கிடைக்க பெறும் அந்தஸ்து, கவனிப்பு - இந்த பின்புலத்தில் நடக்கும் இராவண வதம் விழாவில், இடம்பெறும் பாடல் அது.

இயக்குனர் கமல் ஹாசன் ராஜாவிடம் என்ன சொல்லியிருக்க முடியும், எவ்வளவு சொல்லியிருக்க முடியும் என எண்ணிப் பார்க்கிறேன். மதுவின் போதை, அழகி மனைவியின் போதை, ஒரு வகையில் தீவிரவாத அதிகாரம் தரும் போதை என்று நாயகன் தடுமாறுகிறான். காமம் அவனை சுழற்றுகிறது. சுற்றிலும் ஆட்டம், களி, வண்ணங்கள், விழாவின் மயக்கம் தரும் சைகெடலிக் குழப்பம்.

பாடல் ஒரு பின்னணி இசை போல அங்கே துவங்குகிறது. அவனது பேசும் குரல்கள் முன்னணியில் ஒலிக்கின்றன. மனைவி அறியாமையின் அழகோடு வாசனையோடு அருகே இருக்கிறாள். சோம பானம் அவனை வெறிகொள்ள செய்கிறது. இந்த மனநிலை, இந்த கலாசார பின்புலம்,  நாட்டின் தனித்தன்மை வாய்ந்த ஒரு பகுதியில் நடைபெறும் நிகழ்வின் பாடல்.

'இசையில் தொடங்குதம்மா' வில் வேறுபட்ட ராஜாவை காண்கிறோம்.

நௌஷாத் மற்றும் சலீல் சௌதுரி போன்ற மேதைகள் வெறும் தாள வாத்தியங்களின் ரிதம் அமைப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு மாபெரும் வெற்றி பாடல்களை உருவாக்கினார்கள். ராஜாவும் சில பாடல்கள் அப்படி தந்திருக்கிறார். அதில் 'இசையில் தொடங்குதம்மா' உச்சத்தில் இருக்கும். நாயகனை சுழற்றியடிக்கும் பல்வேறு போதைகள் பாடலிலும் சுழல்கின்றன, தாள வாத்தியங்களின் விரைந்த அடுக்குகள், ஒன்றின் மேல் மற்றொன்று என ஒரு காம்ப்ளெக்ஸ் கோர்வையாக அமைக்கபட்டிருக்கிறது. தோலக், தபலா, முழவுகள், ராம லீலா உர்ச்சவத்தின் போது இசைக்கப்படும் கொட்டுகள் மற்றும் சிம்பல்கள்... முன்னெப்போதும் ராஜாவின் பாடல்களில் கேட்டிராத நரம்புகளை சுண்டும், உடலை பதற செய்யும் ஒரு தாளம்.

பொதுவாக ராஜாவின் பாடல்கள் அனைத்திலும் ஒரு கிரியேடிவ் ரஷ் தெரியும், முன்னிசை அல்லது இடையிசை ஆகட்டும், ஒரு ஸ்ட்ரிங், ஒரு விண்ட், ஒரு பெர்குஷன், மீண்டும் ஒரு ஸ்ட்ரிங் Orchestration என அடுத்தடுத்து இசைகோர்வைகள் ஒன்றை தொடர்ந்து இன்னொன்று வந்து கொண்டேயிருக்கும். அவற்றில் ஒரு பீஸ் 8 - 10 நொடிகளுக்குள் முடிந்து விடும். உதாரணங்கள் - தென்றல் வந்து என்னை தொடும், நினைவெல்லாம் நித்யா பாடல்கள்.

ஆனால் ஹே ராம் பட பாடலில், ராஜா அந்த கிரியேடிவ் ரஷ்ஷை முறைபடுத்தி, ஒரு கட்டுக்குள் வெளிபடுத்தியிருக்கிறார். முதல் interlude இல், ஒரு ஷெனாய்; இரண்டாவது interlude இல், ஒற்றை வயலின், பின்னால் ஒரு வட இந்திய நரம்பு கருவி (சாரங்கி / தில்ரூபா?). அவ்வளவுதான். அதுவும் ஒரு இண்டர்லுடில் ஒரே ஒரு அசைவு/movement . மற்றபடி பாடல் முழுதும் மிக சிக்கலான தாளம், தாளம் மட்டுமே. இது ராஜாவின் பாடல்களில் அபூர்வம். இரண்டாவது இடை இசையில் 12 தாள அளவுக்கு எந்த accompaniment -இம் இல்லாமல் தாளம் மட்டும் இயங்குவது ராஜாவின் வேறெந்த பாடலிலும் கேட்டதில்லை. இந்த கிரியேடிவ் அமைதியை ராஜா கைகொண்ட பாடல்கள் எல்லாம் (மிகசிலவேயானாலும்) அற்புதமான அமைப்புகள்: கண்ணே கலைமானே (மூன்றாம் பிறை), தூரத்தில் நான் கண்ட உன் மனம் (நிழல்கள்), தாலாட்டுதே வானம் (கடல் மீன்கள்)....

இவற்றிலும் மற்றும் மிகப் பல பாடல்களிலும், ரிதம் ஸ்டார்ட் - ஸ்டாப் முன்னிசை, இடை இசைகளுக்குள், சரணத்தில் என தாள நடை நின்று, நடை மாறுவதும், நின்று வேறு வாத்தியங்கள் துவங்குவதும் ராஜாவின் ஓர் உத்தி. 'இசையில் தொடங்குதம்மா' அதிலும் மாறுபட்ட பாடல். துவக்கத்திலிருந்து முடிவு வரை தாளம் எங்கும் நிற்பதில்லை. சுழன்று சுழன்று ஓர் உச்சத்திற்கு செல்வதும் சரணம் துவங்கியதும் மயங்கி மயங்கி கீழே சரிவதும் என அலகிலா மருகுதலாகவே இசை நிகழ்கிறது.

'நாளில் பாதி இருளில் போகும் இயற்கையில்
வாழ்வில் பாதி நன்மை தீமை தேடலில்
உயிர்களே
உயிர்களே
உலகிலே இன்பத்தை தேடி தேடி
தேகத்தில் வந்ததே'

- இது இரண்டாவது சரணம். இதற்கு முன்னும் பின்னும் வரும் சுர சங்கதிகளில் அஜய் சக்ரபர்தியும் தாளமும் பிரிக்க முடியாதபடி பின்னி துள்ளுவது எழுத்தில் வடிக்க முடியாத அழகு.

உலக இசையை விடுங்கள், இந்திய இசையில், இந்த சூழ்நிலைக்கு, இந்த பாத்திரப் படைப்புக்கு, இந்தக் கலாச்சார பின்புலத்திற்கு இசை வேறு யாரால் சிந்தித்திருக்க முடியும்? எவ்வளவு ஓர் ஆழமான புரிதலும், உள்வாங்குதலும், மேதைமையும் இருப்பின், இந்த பாடல் பிறந்திருக்கும்? கை கூப்பி தொழத் தோன்றியது, அந்த பாடலை எத்தனையாவது முறையாகவோ அந்த நள்ளிரவில் கேட்ட போது...

இனி 'இசையில் தொடங்குதம்மா'....



IsayilThodanguthamma.mp3












Monday, January 4, 2010

கிரியா வித்வம்


பள்ளத்தில்
பொருந்தியது கோல்
கையின்
வலிவு ஏற
சக்கரசுழற்சியின் தளம்
நேரென்று ஆகும்
பத்து விரல்கள்
போய் பதிய
இயைந்து வளைந்து
அழுத்தம் பெற்று
பெற்ற இடத்தில்
வட்டப்பாதை கொள்ளும்
உயர்ந்து எழும்
உருவம்
விரல்களின்
வித்வ வேகம்

சிறிய
மேடிட்ட ஒரு வட்டம்
கீழ்
உட்குழிந்த
நாலு விரற்கடை பள்ளம்
மெல்ல பக்கவாட்டில்
சரிந்து
உச்சமடைந்து
உள்வாங்கி
முடியும்
பானை

முதலில் தெரியுமா
உங்களுக்கு

அந்த
விரல்களுக்கு?

Pandit Venkatesh Kumar and Raag Hameer