Sunday, February 22, 2009

மனிதம்


உறை மூடிக் கிடந்த நெல்லுக்குள்
உறங்கிக் கிடந்த உயிர்
உணர்ந்தது ஒரு நாள்
யார் வயிற்று உணவு நான்
எந்த விதையின் ஆதி நான்
புதைந்தழியும்
அந்தக் கணத்திலும்
தோன்றி நிலைக்கும்
மற்றொரு உறை
மற்றொரு உயிர்

Sunday, February 15, 2009

"நான் கடவுள்" - ஒரு விமர்சனம்


சிங்கப்பூரில் பார்த்த இரண்டே கால் மணி நேர படத்தில் (மூன்று பாடல்கள் இல்லை; மற்ற எதெல்லாம் இல்லை என தெரியவில்லை) முதலில் எழுந்த எண்ணங்கள் முதலில்:

பாலா இன்னும் கொஞ்சம் சீரியஸ் -ஆக எடுத்திருக்கலாமே? பிச்சைக்காரர்களின் வாழ்வு பரிதாபம் ஊட்டவில்லை சரி. ஆனால் வேடிக்கையாகவும் இருந்திருக்க வேண்டாமே? ஏறக்குறைய அனைத்து முக்கிய கட்டங்களிலும் நகைச்சுவை மிளிர பேசுவது காட்சியின் அடர்த்தியை குறைக்கிறது.

அகோர கால பைரவன் என்றால் அடித் தொண்டையில் ஏன் பேச வேண்டும்? அம்சவல்லி பிச்சை எடுக்கும்போது பாடும் பழைய தமிழ் திரைப்பட பாடல்கள் ஏன் அந்தந்த ஒரிஜினல் பாடல்களாக இருக்க வேண்டும்? ஏன் அந்த கதா பாத்திரத்தின் குரலில் இருந்திருக்க கூடாது?

ஏழாம் உலகம் படித்து விட்டு படத்தை பார்ப்பதிலும் ஒரு சிக்கல்.
கோலப்ப பிள்ளையின் நார்மல் முகம், தந்தை முகம், கணவனின் முகம் என பல நினைவுகள் ஓடுவதை படம் பார்க்கும்போது தவிர்க்க முடியவில்லை - அந்த முகங்களுக்கும் அவரின் தொழில் முகத்திற்கும் உள்ள முரணே அந்த கதையில் இருந்த ஷாக் வேல்யு. தாண்டவனின் அந்த முகங்கள் இல்லாதது கதையின் பிடிமானத்தை அசைக்கிறது. ஒரு வேளை ஏழாம் உலகம் படிக்காமல் பார்த்திருந்தால் வேறு மாதிரி படுமோ என்னவோ?

ருத்ரனுக்கு கஞ்சா குடிப்பதையும் நீரில் மூழ்கி எழுவதையும், பல வித நிலைகளில் யோகம் புரிவதையும் தவிர (கிளைமாக்ஸ் தவிர) வேறு அழுத்தமான உணர்வுகளை உண்டாக்கும்படி காட்சிகள் இல்லாமலிருப்பது ஏமாற்றமளிக்கிறது.

'நான் கடவுள்' என்ற பதத்திற்கு இன்னும் கதை மாந்தர்கள் மூலமாக நிகழ்வுகளையும், விளக்கங்களையும் கொடுத்திருக்கலாமோ?

காசியின் அந்த அசாதாரண சூழலுக்கும் தாண்டவனின் அந்த பிச்சை கிடங்குக்கும் இடையே ஏதோ ஒரு இணைப்பு இழை ஓடுகிறது என்றாலும் சூக்குமமாக அதை புரிந்து கொள்ள முடியவில்லை.

பின் பாதியில் வரும் காட்சித் தளங்களில் மாற்றம் இல்லாமல் ஒரே படிக்கட்டு, கற்கள், புதர்கள், ருத்ரன் வசிக்கும் பாழடைந்த கோவில் என்றிருப்பது வெறுமை கூட்டுகிறது.

இனி, இப்படி ஒரு கதையை சொல்ல பாலாவால் மட்டுமே முடியும். ஜெயமோகனின் வசனங்கள் கூர்மை; ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு அற்புதம்; இளையராஜா - முற்பாதியில் தோற்கருவிகளும், சிம்பல்சும். பிற்பாதியில் வயலின்களின் சாம்ராஜ்யம். ராஜா கொண்டுவந்திருக்கும் தொழில் நுட்பம், காட்டியிருக்கும் நேர்த்தி மற்றும் கதையின் புரிதலும் அழுத்தமும் மிக மிக உயர்தரம். இன்று இந்திய இசை சூழலில் இந்த படத்திற்கு யாராவது இசை அமைத்திருக்க முடியுமா என்று எடை போட்டால் கிடைக்கும் பதிலில் ராஜாவின் மேதமை தெரிந்து விடும்.

இன்னும், ஒப்பனை கலைஞர்களின் உழைப்பு மெச்சும்படி.

"வாழ இயலாதவர்களுக்கு நான் தரும் மரணம் வரம்; வாழ கூடாதவர்களுக்கு தரும் மரணம் சாபம்" - இந்த கான்செப்ட் தெளிவுபட சொல்லப்பட்டிருப்பதாக எண்ணலாம். ஆனால் மரணம்தான் இயலாதவர்க்கும், கூடாதவர்க்கும் விடையா? வாழ்தல் என்பதற்கு என்ன பொருள்?

ஒரு வேளை, ருத்ரன் என்பதால்தான் மரணம் விடையோ?

Saturday, February 14, 2009

Published Poems in Uyirosai

Poems published in 'Uyirosai' - by Manushyaputhran

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=583

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=617

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=645

Letters to Jeyamohan - 4

அன்புள்ள ஜெயமோகன்,

சில கருத்துகள் தீவிரமாக இருந்த போதிலும், உங்கள் பதிவில் இருக்கும் மத, மொழி தாண்டிய நேர்மை சுடுகிறது. அத்தனையும் சத்தியம். போன வாரம் தன் சாரு நிவேதிதாவின் 'இந்தியா குப்பை; தேறாது' என்னும் பதிவை ஏறிட நேர்ந்தது.
வயிறு எரிந்தது.

இன்னும் கொஞ்சம் ஆழ்ந்த தேடுதலோடு இந்த பதிவை நீங்கள் முன்னகர்த்த வேண்டும் என்பது என் விருப்பம்.
கூறியிருக்கும் வெளி சக்திகள், ஆயுத பண பலங்கள், இங்கு குழி தோண்டும் 'நமது சொந்த சகோதரர்கள்', மற்றும் போலி அறிவு ஜீவிகள் அனைத்திற்கு நடுவிலும் ஒரே பலம், நாமும் நம்மை போன்ற என் நாட்டை நேசிக்கும், அதன் பண்பை விரும்பி போற்றும் மக்களே பெரும்பான்மை என்பதே.

"ஒரு தேசத்தின் அறிவுஜீவிகளில் பெரும்பான்மை அந்த தேசத்தின் பாரம்பரியத்தை அழிக்க எண்ணுவதும் ,அதுவே முற்போக்கு என்று அங்கே நம்புவதும் வேறு எந்த தேசத்திலாவது உள்ளதா?" - ஒரு கொடுங்கோன்மை தேசத்திலோ அன்றி வறிய செயலற்ற அன்றி கருத்து சுதந்திரம் சிறிதும் அற்ற ஒரு நாட்டிலோ இவ்வகையான நிலை நீடிப்பதை புரிந்து கொள்ள முடியும்.

இந்நாடு அழிகிறது, அடக்குமுறை தாண்டவமாடுகிறது என்பதற்கு நேர்மையற்ற அழிவு சக்திகளால் என்ன ஆதாரம் கொடுத்து விட முடியும், அவர்களது "ஒருவரை ஒருவர் சொரிந்து கொள்ளும்' சுகத்திற்காக செய்வதை தவிர?

மிக்க உணர்ச்சி பூர்வமாகவெல்லாம், "ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை; ஆணை இட்டே யார் தடுத்தாலும் அலை கடல் ஓய்வதில்லை" என்றெல்லாம் கூவ வேண்டியதில்லை.

பொருளாதார, அரசியல் சமூக ரீதியின் படி பாரதம் இன்னும் இருபது வருடங்களில் உலகின் இரண்டாவது பெரிய வர்த்தக மையமாக திகழும் ( சீனத்திற்கு அடுத்தபடி) என்பதை ஐஎம்எப், உலக வங்கி, ஆசிய முன்னேற்ற வங்கி, யுஎன் எனும் கருத்து கூடங்களும், அமெரிக்கா உள்ளிட்ட (இவர்களுக்கு சொறிவதற்கு கூலி கொடுக்கும் முதலாளிகள் உட்பட) அனைவரும் ஏற்று கொண்ட ஒரு நிதர்சனம்.

இவர்களின் அறைகூவல்கள், சதி வேலைகள், பரப்பு கூலிகள் எல்லாம் கடந்த அறுபது வருடங்களாக தொடர்ந்த போதிலும், பாரதம் எவ்விதத்திலும் சளைக்கவில்லையே; நமது விஞ்ஞான, பொருளாதார வளர்ச்சி சுனங்கவில்லையே;

இந்த சக்திகளை பாரதம் அடி பணிய செய்யும்.
அது காலத்தின் கட்டாயம்.

சரவணன்

Letters to Jeyamohan - 3

அன்புள்ள ஜெயமோகன்,

வர வர, எழுத்தாள இடைவெளி குறைந்து, பலரும் தோழமையும், வழிக்காட்டுதலும் தேடி அணுக்கமாய் உணரும் தளத்துக்கு செல்கிறீர்கள் என தோன்றுகிறது.

"அக்காலகட்டத்தின் களியாட்ட மனநிலையை பின்னர் நான் அறிந்ததே இல்லை. இளமையும் கலைகளும் கலந்து உருவான போதை அது" -

அட, என்ன ஒரு அற்புதமான வெளிப்பாடு!

பலரும் அவரவர் உணரும் தருணங்களை, அவற்றின் நுணுக்கமான ரசனைகளை, கால ஓட்டத்தில் மாறும் சுவை வேறுபாடுகளை வெளிப்படுத்த அறியாதவர்கள். அல்லது அந்த சுவைகளை பதியலாம் என்பதே தெரியாதவர்கள்.

நான் நினைக்கிறேன், அவர்களுக்கெல்லாம் உங்களின் இத்தகைய பதிவுகள் உணர்வு பூர்வமான வடிகால் மட்டுமல்ல, மீண்டும் வாழ்வை திரும்பி பார்த்து சுவை கூட்டிகொள்ளும் கிளர்ச்சியையும் தருமென்று.

நான் உட்பட, எத்தனை பேர் ஒத்த நண்பர்களுடன் இளமை வேகத்தில், கலைகளில் சுவையுடன், சாதிக்கும் கனவுகளுடன் எத்தனைஎத்தனை பேசியிருப்போம், எத்தனை நெகிழ்வோடு அந்த பருவத்தை கடந்திருப்போம் என்பன போன்ற எண்ணங்கள் ஒரு மின்னல் நொடியில் எனக்குள் ஒளிர்ந்தது, அந்த வரிகளை படித்த போது.

நன்றி, ஜெயமோகன்.

என் தெய்வம்

அச்சம் இல்லை
துன்பம் இல்லை
கண்ணீர் இல்லை
கவலை இல்லை.
தெய்வம் துணை.
வேல் உண்டு பயமில்லை
வேல் உண்டு பயமில்லை
தெய்வம் உண்டு தனி இல்லை

மன வலிமை தரும்
தோள் வலிவும் தரும்
நல்லறிவு தரும்
நாளும் வேண்டுவன
தெய்வம் தரும்
முந்தி வரச் செய்யும்
வினை திட்பம் தரும்
வேல் உண்டு பயமில்லை
தெய்வம் உண்டு தனி இல்லை

Letters to Jeyamohan - 2

அன்புள்ள ஜெயமோகன்,

தங்களின் 'வேராழம்' கண்டேன். எண்ணக்குவியல்களை கிளறிய பதிவு.

ப்ரீ யு.கே.ஜி காலத்துக்கு முன்பிருந்தே (ஒரு வயது?) என் நினைவுகள் மிகத் துல்லியமாக என்னை தொடர்கின்றன. பெரிதும், என் அம்மா அப்பாவின் நண்பர்கள், நாங்கள் குடியிருந்த அத்தனை வீடுகள், அவற்றின் போர்ஷன்கள், அங்கிருந்த குடும்பங்கள், வீடிருந்த தெருக்கள், மணங்கள், கேட்ட பாடல்கள், வைத்திருந்த பொருட்கள், தோழர் தோழிகள், செய்த பாலியல் சேட்டைகள் (நம்ப மாட்டீர்கள்!), அனைத்தும் - நீங்கள் சொல்வது போல், நினைவு கூர்ந்தால் மீட்டெடுக்க முடியாத வாழ்வின் கட்டமே இல்லை எனலாம். பின்னாளில் இவற்றை நான் சொல்லும் போதெல்லாம், என் தாய் தந்தை தவிர, என் தம்பி ஒரு நம்ப முடியாத பாவனையுடன் கேட்டதும் நினைவில் இருக்கிறது.

தாங்கள் Sigmund Freud படித்திருப்பீர்கள். அவரது வாழ்விலும் நினைவுகள் ஆறு மாதத்தில் துவங்குகின்றன. பெரிதும் அவை பாலியல் அடையாளக் (தன் தாயினதும் உட்பட) கூறுகளை ஆராய்தல், இருப்பை உணர்தல் மற்றும், சூழலின் வகைகளை உணர்தல் என்றே நினைவுகள் ஆரம்பிப்பதாக அவர் கூறியிருக்கிறார். இரண்டு வயதில் மேசை மீதிருந்து கீழே உணவை எடுக்க எட்டி, விழுந்து கீழ் தாடையில் தையல் இட்டதைப் போல.

இளைய பதிவுகள் என்னவோ அனைத்து மாந்தருக்கும் பொதுவென தோன்றுகிறது; ஆயினும், அந்நினைவுகளை பின்னாளில் மீட்டெடுப்பது சிலருக்கு மட்டுமே சாத்தியமாகிறது. அக்காரணங்களையும் அவர் விரிவாக ஆராய்ந்திருக்கிறார் (சில நம்மளவில் ஏற்க முடிவதில்லை என்றாலும்).

சரவணன்

Pandit Venkatesh Kumar and Raag Hameer