Showing posts with label science fiction. Show all posts
Showing posts with label science fiction. Show all posts

Saturday, December 11, 2010

கி. பி. 2350

அம்மா இன்று வரும் நேரம் 11:10:33:27 மில்லி செகண்டுகள்.

இந்த கதையை கேட்கும் நீங்கள் என்ன 2011 இல் வாழ்கிறீர்கள் இல்லையா?

வீட்டின் நிலவறையில் வந்து சேரும் நிலத்தடி குழாய் வாகனத்தில் இருந்து துல்லியமான நேரத்திற்கு, இதோ அம்மா வந்து விட்டாள்.

'என்னம்மா, அப்பா வரலியா?" என்று நான் கேட்கவில்லை. எங்கள் காலத்தில் single parent lineage எனப்படும் ஒற்றை பெற்றோர் முறை வந்து விட்டது. ஆணோ பெண்ணோ திருமணம் தேவையில்லாமல், தன் ஸ்டெம் செல்லில் இருந்தே குழந்தைகளை உருவாக்கி வளர்த்து கொள்வது. எத்தனை வேண்டுமானாலும் பெற்று கொள்ளலாம். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். மனைவி இல்லாமல்.

அம்மா, "united tps ல தான் வரலாம்னு நெனெச்சேன். இன்னும் சிஸ்டம் சரியாகலன்னு ரிபோர்ட்ஸ்" என்றாள்.

"சரிம்மா, நீ போய் ரெஸ்ட் எடு" என்றேன்.

TPS என்பது டெலிபோர்டேஷன் வழியாக ஆட்களை போட்டான் துகள்களாக உருமாற்றி இழையிலி வழியாக எத்தனை தூரத்திற்கும் அனுப்பி அங்கு மீண்டும் ஒருசேர்த்து கொள்வது. 99% சரியாக இருந்தாலும், ஓரிரண்டு இடங்களில் திருப்பி சேர்க்கும் போது, கைவிரல்களோ காது மூக்கோ குறைந்து விடுகிறது. அல்லது முதுகில் கூடுதலாக ஏதாவது.

இதெல்லாம் அனுபவித்து கொண்டு இதையெல்லாம் உங்களுக்கு விவரித்து கொண்டு இருப்பதிலிருந்து உங்கள் காலத்து விஷயங்கள் ஒன்றும் எனக்கு தெரியாது என்று எண்ணி விடாதீர்கள். நேரம் கிடைக்கும் போது அந்தக் காலத்து இலக்கியங்கள், கணினி கட்டுரைகள் (கொடுமை!), மனித உணர்ச்சிகள், உளவியல் என்று கலந்து கட்டி படிப்பதுண்டு.

அம்மா உள்ளே குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருப்பது கேட்டது. ஒரு பெருமூச்சோடு நாளை செய்ய விருக்கும் முக்கியமான அறுவை சிகிச்சைக்கான குறிப்புகளை புரட்டினேன்.


பெரியவளுக்கு நாளைக்கு லோபோக்டோமி எனப்படும் மூளை மாற்று சிகிச்சை. அம்மாவுக்கு துளி கூட சம்மதமில்லாமல் தான் இதை செய்ய போகிறேன்.

றுநாள் காலை.

அம்மா தூக்கி வைத்த முகத்தோடு என்னெதிரே வந்து நின்றாள்.

"என்னம்மா?" என்றேன்.

"இது அவசியமாடா?'

"கட்டாயம். நீயே பார்த்தல்ல. உன்கூட எப்படி ஆடிக்கிட்டு பாடிக்கிட்டு. சின்னவ எப்படி இருக்கா. எல்லாம் extreme".

"எதுடா extreme? அதுதான் இயற்கை. அந்தகாலத்தில இப்படித்தான் பிள்ளைகள்லாம் இருக்கணம்னு ஆசைப்படுவோம். நீ என்னடானா. வேண்டாண்டா".

"நீ சும்மா இரும்மா. உனக்கு ஒன்னும் தெரியாது. society - ல ஏத்துக்க மாட்டான்".

"தயவு செய்து நான் சொல்றத கேளுடா".

"நீயேன் இதுக்கு இவ்வளவு அதிகமா react பண்ற? நீயே சரியில்லையே. உனக்கும் ஒரு ஆபரேஷன் பண்ணனும்னு நினைக்கிறேன்".

அம்மா பேசாமல் கொண்டு வந்த குளிர் பானத்தை வைத்து விட்டு என் முகத்தையே பார்த்தபடி நின்றாள் .

ஆயுதங்களை தயார் செய்து கொண்டே பானத்தை பருகினேன். கோப்பையை மேசையின் மேல் வைப்பதற்குள்ளாகவே கால் தரையிலிருந்து நழுவியது. மற்றொரு கையில் பிடித்திருந்த கத்தி பெரும் சத்தத்தோடு கீழே விழுந்தது.

கண்கள் மூடி நினைவு தப்புவதற்குமுன், அம்மா குனிந்து என்னைப் புரட்டி, கழுத்தின் பின்புறம் எதையோ துண்டிப்பது கேட்டது.

Pandit Venkatesh Kumar and Raag Hameer