Showing posts with label Tradition. Show all posts
Showing posts with label Tradition. Show all posts

Sunday, May 15, 2011

அன்பே நீ தேடுவது என்னையா?

நான் இதுவரை என் கற்பனைகளில் உன்னோடு தனித்திருந்திருக்கிறேன்
ஓராயிரந்தடவை உன்னிதழ்களில் கனவுகளில் முத்தமிட்டிருந்திருக்கிறேன்
இப்போழ்தும் கூட,
அவ்வப்போது என் வாசல் வெளியில்
உன் வரவை நான் உணர்கிறேன்


                  

அன்பே நீ தேடிக்கொண்டிருப்பது என்னையா?

உன் தேடலை உன் கண்களில் நான் உணர்கிறேன்
அன்பே, அதையுன் புன்னகையில் பார்க்கிறேன்

நான் தேடியலைந்தவை அனைத்தும், அன்பே உன்னிடமே
ஏனின்னும் என் கைகள் விரிந்திருக்கின்றன என கேட்கிறாயா?
அன்பே, நீயறிவாய் என்ன சொல்ல வேண்டுமென்று
உனக்குத் தெரியும் உனதெந்த வார்த்தைகளில்
இவனுயிர் வாழ்கிறதென்று
உன்னிடும் சொல்ல ஏக்கம் அடைகாக்கும்
ஆயிரம் சேதிகளும்...

அன்பே, நானுன்னை நேசிக்கிறேன்

உன் குழல்களினூடே கதிரொளியின் கோலம் காண
என் மனம் துடிக்கிறது
உன்னை அரவணைத்து நேசிக்க எத்தனை
இரவுகளிலும் பகல்களிலும்
நான் துடித்திருப்பேன்

சில போதுகளில், 
காதலினால் என்னிதயம்
பொங்கி வழிந்துவிடும் போல் உணர்கிறேன்

அன்பே, என்னால் இனி தாங்க முடியாது
என் காதல் நீ உணர்ந்தே ஆக வேண்டும்

ஆயினும்...

நீ எங்கிருக்கிறாய் எனத் தேடுகிறேன்
நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்றும் நானறியேன்
எங்கேயோ,
தனிமையில் நீ வாடிக் கொண்டிருக்கக் கூடுமோ
என்றவெண்ணம் வதைக்கிறது

அல்லது அன்பே
யாரேனும் அங்கும்
உன்னை நேசித்துக் கொண்டிருக்கிறார்களா?

உன் நேசம் வெல்ல ஒரு வழி சொல், தோழி
இறுதியாகவும்
நான் சொல்வதிதுதான்
நானுன்னை நேசிக்கிறேன்

-05/03/1990
- லயனல் ரிச்சியின் 'Hello, is it me you are looking for?' பாடலின் மொழிபெயர்ப்பு 

Sunday, February 7, 2010

உள்ளோடும் நதி - 2

பல நாடுகளுக்கு சென்ற என் அனுபவங்களில், நதிகள் விரையும் பெருவெளிகளையும் பள்ளத்தாக்குகளையும் கண்டிருக்கிறேன். மானுடத்தை வாழ்விக்கும் நீராகவும், போக்குவரவு நடைபெறும் ஊடகமாகவும் நதிகளின் தேவை நின்றுவிடுவதின் எல்லை, மனிதன் வகுத்தது.

நதிகள், இயற்கையையும் இவ்வுலகையும், அண்டசராசரங்கள் தோன்றியநாள் முதல் இணைக்கும் தொப்புள்கொடிகளாய், தங்கள் கரைகளின் கருவெளிச் சூழலில் கோடானுகோடி உயிர்களையும், உன்னதமான நாகரிகங்களையும் படைத்து மனிதத்தின் ஆன்மீக தத்துவ தேடல்களின் விதைநிலமாக ஊற்றுக்கண்ணாக விளங்கும் தாயென இங்கு போற்றப்படுவது போல் வேறெங்கும் காணவில்லை.


மேற்கை போலல்லாமல் எனது நாட்டில் நதிகளுக்கும் மனிதத்துக்குமான உறவு, தாய்க்கும் சேய்களுக்கும் ஆன உறவென்றோ, தலைவன்-வழிபடுனர் என்றோ அல்லது இறைமை-பக்தன் என்றோ பாகுபடுத்த இயலாமல் ஒன்றுடன் ஒன்று முயங்கி, பல்வேறு வடிவங்களில் இயைந்து கிடக்கிறது. ஏனெனில், உயிர் தோன்றுவதிலிருந்து எரிந்து அடங்குவது வரை நதியோடு இணைந்தே வாழ்வுமுறை இயங்குகிறது.


மிக அழகிய ஒரு விஷுக் காலத்தில், ஒரு முறை நான் ஜகத்குரு ஆதிசங்கரர் அவதரித்த கேரளாவிலுள்ள காலடி என்றொரு சிற்றூருக்கு சென்றிருந்தேன். சென்ற களைப்பு தீர அங்காமலி என்னும் ஓரழகிய நகரில் இரவு தங்கி விட்டு, காலை இன்னும் கொஞ்சம் பயணக் களைப்பு மிச்சமிருக்க, சங்கரரின் கோவிலை அடைந்தேன்.

அது ஓரினிய புலர்காலைப் பொழுது. மிக மெல்லிய குளிர்ந்த தென்றல் வருடிச்செல்லும் அப்பொழுதில், பெரியாற்றின் கரையை அடைந்தேன். வேத மந்திரங்கள் எங்கோ தொலைவில் ஓதப்பட, இன்னும் விடியா அந்த குளிரில் என் முன் ஓசையில்லாமல் நகர்ந்துகொண்டிருந்த ஆனால் உறைந்து கிடப்பதுபோல் தோன்றின அந்நதியின் அழகும் அமைதியும் பிரம்மாண்டமும் என்னை உறைய வைத்தது.


தாய் தன் நெடுநாள் பிரிந்த மகன் வந்ததும் மார்போடு அணைத்து தழுவக் காத்திருப்பது போல் நதி ஆழம் அதிகமற்று அகண்ட பெருக்காய் காத்துக் கிடந்தது. கணிக்க முடியாததோர் கணத்தில் இவ்வுலகுடனான என் பந்தங்கள் அனைத்தும் அறுந்து விழுந்தன நானறியாமலே. என் கல்வி, என் கற்பிதம், என் செல்வம், என் குறைகள், என் நிறைகள்... ஒரு மகன், ஒரு கணவன், ஒரு தந்தை என என் உறவுகள் என் கண்முன் இல்லாமலானது. எதுவுமற்று நான் நின்றேன். என் திரைகள் விலகி, முகமூடி கழன்று நானும் நதியும் மட்டும் அங்கிருந்தோம்.


என்ன மனிதம் நமது, என்ன இருப்பு எமது!


வானம் மிக மெதுவாக நிறம் மாறி கொண்டிருக்க, நதியின் முன் பரிபூரண நிர்மலமான நிர்வாணம் நிறைக்க நின்றது போல் நின்றேன். கரையில் நான் மட்டும் இருந்தேன், அல்லது அவ்வாறு உணர்ந்தேன். என்னை அனைத்து புலன்களிலிருந்தும் விடுபட செய்த, என்னையும் அந்நதியையும் படைத்தோனை, எல்லாம் வல்லவனை இன்றும் தொழுகிறேன்.

நதியின் மெல்லிய மேற்பரப்பு பொன்னிறமாக மாறுவதை, குவிந்த கரங்களுடனும் தொழுத மனதுடனும் எத்துணை பொழுது பார்த்தவாறு நின்றிருந்தேன்... அவள் தன் மேனிமூடிய சருகன்ன துகிலை சிற்சிறு பொன்னிற இழைகளால் அலங்கரித்து கொண்டிருந்தாள். அலைகளின் மேல் அலைகளை என் பாதம் படச் செயதவாரிருந்தாள்.

அலைப்பரப்பின் மேல்போலல்லாது உட்புறம் வெதுவெதுப்பாக இருப்பதை உள்ளிறங்கியதும் உணர்ந்தேன். ஆயிரம் ஆச்சர்யங்களை தன்னுள் ஒளித்துக் கொண்டு மகன் வந்ததும் பல்லாயிரம் கைகளால் வாரியணைத்து அன்பும் வெம்மையும் சேர்ந்து விம்மும் மார்போடு இறுக்கி, விளையாட்டுக் காட்டும் என் தாய்.

என் காலடியில் அசையாக் குறுமணல். இடையளவு நிதானமாக ஓடுகின்ற நதிக்குள் கால்கள் மடக்கி சப்பணமிட்டு அமர்ந்ததும், நீர் என் நெஞ்சை உயர்ந்து நாசியின் கீழ் நகர்ந்தது. என் இறைவனை தொழவெழுந்த எண்ணம் பொருளற்றது என உடனே உணர்ந்தேன்.

சிந்தை ஒரு கணம் எதுவுமற்று நிர்ச்சலனமாகி நிலைத்தது; சூன்யம், எண்ணமெதுவுமற்ற சூன்யப் பரவெளி.

எத்தனை கோடிக் காலம் அப்படி அமர்ந்திருந்தேன். எத்தனையோ கோடானு கோடிக்காலம் புவி நனைத்து, உயிர் நனைத்து அழியா இளமையுடனும் பேராற்றலுடனும் ஓடிக்கொண்டிருப்பவள் என்னுள்ளும் தன் அன்பின், காதலின், கருணையின் பல்லாயிரம் வடிவங்கள் சூழ அமிழ்த்தி, எனக்கும் அழியா வல்லமையும் பொலிவும் தந்தாள். அவளுடன் ஒன்றென நானற்று ஒன்றாகி. அவ்வொரு இணைவை கண் திறந்து கலைக்க துணிவற்று மனமற்று எத்தனையோ கோடிக்காலம் அமர்ந்திருந்தேன். எங்கே கண் விழித்தால் அவளிலிருந்து விலகுவதாய், அவளின் இணையற்ற நேசத்தை பொருட்படுத்தாததாய், உலகை விரும்பிப் பிரிவதாய் எண்ணி விடுவாளோ, எண்ணி மருகி விடுவாளோ என்று அஞ்சிக் அப்படியே கிடந்தேன்...


காலமும் நதியும் என்னிலும் என்னைச் சுற்றியும் மிதந்தன.


என்னைச் சுற்றி அவள் பின்னியிருந்த மோனத்தவத்திலிருந்து விழித்தேன்; மெல்லக் கரையேறினேன் அவளுடலின் சூட்டை என்னில் உணர்ந்தவாறே. மேலேழுந்துவிட்ட ஆதவனின் கதிரொளியில் நதியின் அடங்காப் பேரழகும் விரிந்த வடிவமும் துலங்கின.

தோன்றிய நாள்முதல் படைத்தும் காத்தும் அணைத்துக் கிடந்தவளுக்கு, எதுவுமே விட்டுச்செல்லாமல் மறையப் போகும் ஒரு மானிட அணுவினும் சிறியேனையும், அன்பின்பால் பொருட்டாய் சேர்த்தாய் என நன்றியுடன், என் குறைகளுடன் ஏற்று, அமைதி சூழச் செய்து, விலகும்போது ஒரு வார்த்தையேனும் புகலாமல், செல்ல அனுமதித்தாயே என நெகிழ்வுடன் கரையேறினேன்.


அவள் மெளனமாக பார்த்து நிற்க, நான் கரை விலகினேன், வேதங்கள் தொலைவில் தெளிவாக கேட்க.
 
(A translation of my previous post 'The River Within')

Monday, August 24, 2009

Letters to Jeyamohan

அன்புள்ள ஜெயமோகன்,


நண்பர் பிரபுவிற்கு தாங்கள் அளித்த பதில் கண்டேன். தங்கள் வாயிலாக அவருக்கு என் எண்ணங்களை கூற விரும்புகிறேன்.

கடந்த மூன்று வருடங்களாக தென் கிழக்கு ஆசியாவில் வாழ்ந்து வருகிறேன். இங்கு சிறுபான்மை இனமாக வசித்து வரும் இந்திய சமூகத்தினரோடு உள்ள நட்பின் காரணம் எனது இன்னொரு தகுதி, இப்பதிலை எழுதுவதில்.


பிரபு, மரபின் தொடர்ச்சியை நீங்கள் வேண்டுமானால் உணர மறுக்கலாம்; அல்லது உங்கள் மரபையே மறுதலிக்கலாம். ஆயினும், உங்களையும் உங்கள் சந்ததியையும் உலகம் எப்படி அடையாளம் காணும்? நீங்கள் உங்கள் மரபை, உணர்வை, பற்றை, உடையை, மொழியை, உணவை, மதத்தை, அமெரிக்க, ஐரோப்பிய மரபில் இணைத்தாலும் அவர்கள் எந்நாளும் உங்களை அவர்களில் ஒருவராக அடையாளம் காண மாட்டார்கள்.


உங்கள் தனித்துவமே உங்கள் அடையாளம். அதுவே உங்கள் மரபாகவும் பண்பாடாகவும் இருக்க முடியும்.


மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வாழும் (மூன்று நான்கு தலைமுறையாக) இந்திய தமிழர்களில் தான் இத்தகைய போக்கை கண்டு மனம் வெதும்பினால், புலம் பெயர்ந்த இந்தத் தலைமுறையினரும் இவ்வாறு கருதுவது ஒரு கலாசார சீரழிவே.


இங்கு வாழும் இந்திய தமிழர்களுக்கு, இந்தியா ஓர் ஏழை நாடு; பண்பாடற்ற மக்களின் கூடம், பிழைக்க வழியற்று அவர்கள் நாட்டை தஞ்சமடைந்த (மிக பல பேர் திருட்டுத்தனமாக) ஒரு கூட்டம், மலம், அழுக்கு, பிச்சைகாரர்கள், பன்றிகள், நாய்கள், சில கோவில்கள், தி.நகர்... சுருங்க கூறின், நமது கலாச்சாரமும் பண்பாடும் அவர்களுக்கு தமிழ் திரைப்படங்கள் காட்டுவதே.


இத்தகையவர்களிடம் பல முறை வாதிட்டு இருக்கிறேன் - மூவாயிரம் வருட பாரம்பரியம் உள்ள நாடு எனது; எனது கலைகள், எனது கோவில்கள், எனது இசை, எனது தர்க்கம், எனது இறையியல் கொள்கை, - இந்த நாடுகளில் காட்டுங்கள்?


ஜெயமோகன், இந்தியா ஏழை நாடாகவும், அவ்வப்போது பொய்க்கும் பருவ மழையினூடே ஒரு பில்லியன் மக்களுக்கு உணவு அளிக்கும் சுமை கொண்டதாகவும் காட்சியளிப்பது தான் (மேற் பட்டியலிட்ட இணையற்ற செல்வங்கள் இருந்தும், இருப்பது தெரிந்தும்), இவர்களுக்கு உள்ள - 'இந்திய அடையாளத்தில்' உள்ள மனத்தடை.


இன்னும் இருபது வருடங்களில், உலகின் முதல் நிலை பொருளாதாரமாக மாறி வளர்ந்த நாடாக மாறி விட்டால், இவர்களுக்கெல்லாம் இந்தியாவும் அதன் மரபும் பிடித்தமானதாக மாறிவிடும். 'நான் இந்தியன்' என்று அப்போது தலை நிமிர்ந்து (நம்மோடும் சேர்ந்து) கூவவும் ஒரு கூட்டம் இருக்கும், நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்!

Pandit Venkatesh Kumar and Raag Hameer