Showing posts with label IB Saravanan Kavithaigal. Show all posts
Showing posts with label IB Saravanan Kavithaigal. Show all posts

Saturday, April 24, 2021

மூன்று கவிதைகள்

 நல்லூழ்

நாடி வந்தன
நல்லனவெல்லாம்
ஆசிரியனும் ஞானமும்
இரசனையும் நட்பும்
இசையும் நூல்களும்
பயணங்களும் அனுபவங்களும்
தேடிவந்தமைகின்றன
அறியாமலேதும்
கிடைக்கின்றபோதும்
அற்புதமாய் உன்னதமாய்
அமையப்பெறுவது
நல்லூழ் அன்றி
வேறென்ன?

வேறுரு

மிக மெல்லிய மென்தென்றலின்
கடந்துபோய்விடும்
ஒரு வருடலில் பொதிந்திருக்கிறது
கரைப்பதும்
கரைந்துகொள்ள இசைவதுமான
முடிவு

சலசலத்து விரையும் ஆற்றின் போக்கில்
ஓரிடம் சிக்குண்டு
மேனியுரு மாறும் கல்லின்
போக்கற்ற தீர்வில்
அமைந்திருக்கிறது
நகர்ந்து செல்வதும்
நிலைகொண்டு எதிர்நிற்பதற்குமான
தெளிவு

முகம்வருடி மெய்தீண்டி
காலடியில் அறுந்துவீழும்
மலரின்
அழகிய அநித்தியத்தில்
மறைந்திருக்கிறது
பயன்பெறுவதற்கும்
பயன்மட்டும் படுவதற்குமுண்டான
முரண்

மேன்மை

சிற்றலைகள் வந்துவந்து
கால்கள் அலப்ப
மேவிக்கிடக்கும் மணற்பரல்களில்
ஒரு சிப்பியைத் தேடி
மிகமெதுவே காதங்கள் கடக்கும்
இந்த வாழ்க்கை
ஏனோ விருப்பமாகவேயிருக்கிறது

தரையூரும் புழுவைத் தவிர்க்க
கால்களும் கைகளும் தேய
சைக்கிளினின்று தரைவிழுவதிலும்
தயக்கமொன்றுமில்லை

நுண்ணுணர்வுகள் மென்ரசனைகள்
எத்தனையிருப்பினும்
இங்கிருந்து எதையும்
எதிர்நோக்காதிருத்தல்
மேலான உணர்வு
மென்மையான ரசனை

Monday, November 9, 2020

சொல்வனம் மின்னிதழில் வெளிவந்திருக்கும் மூன்று கவிதைகள்

 என்னவென்பது


நியதிகளேதுமற்றதே போல் தோன்றும்
இந்தக் கானகத்தில்
பற்ற ஒரு நியமம் தேடியலைகிறேன்
எப்போதும் உடுத்து அலையும்
வெண்ணிற உடையில்
களிகூடி மிதந்து
காடே சொந்தம்போல்
இறங்கிவரும் பட்டுப்பூச்சிகள்
அவ்வப்போது தீற்றிச் செல்வதை
கறையெனக் கொள்வதா
வண்ணமா

உயிர்பற்றிக் கொண்டாடும்
இவ்வாழ்வில்
கால்கள் இடறியும்
கலைகள் பயின்றும்
கைகள் பிணைக்குற்றும்
மாண்பை தரிசித்தும்
இன்னும்
இன்னுமோர் தருணம்
என்றலைதல்
ஆட்டத்தின் ஓரங்கம் என்பதா
அதுவே ஆட்டமென்பதா

பற்றிலேதும் வரவின்றி
உதித்து விரைந்து
உதிரும் நாட்களுக்குள்
கணக்கேதுமின்றி
எதையும் பதியாமல்
தடமெதுவும் இல்லாமல்
மகிழ்வேதும் தாராமல்
துயரதுவும் கொள்ளாமல்
மறைந்து போவது
குறைவென்பதா அன்றி அதுவே
நிறைவென்பதா

உரைகல்

வீதியெங்கும் வழியும்
உன்னதம்பொழியும் இசை
யாருமுணரா வித்வம்
விரல்களின் நர்த்தனம்
அரங்கம் ஒன்றிருந்தால்
கோடிகள் பெறும் படைப்பு
தெருமுனையில் தன்னந்தனியே
தவிப்பேதுமின்றி
தன்னிலை நினைப்பேதுமின்றி
வாசிப்பவனின் யாசகம்
யாதாக இருக்கக்கூடும்
கடந்தவர் நின்றவர்
விரைந்தவர் இரந்தவர்
யாவரும் யாரவன்
என்றறியாதவரே
ஏந்திய குவளையில்
சிந்திய இக்காசுகள்
இழந்துபோன நுண்ணுணர்வுகள்
வீழ்ந்துபோன அறிதல்
வணிகமே வாழ்வென்றாதல்

  • ஜீன் வெய்ன்கார்ட்டென் (Gene Weingarten), ஜோஷுவா பெல் என்ற புகழ்பெற்ற அமெரிக்க வயலின் இசைக்கலைஞரைக் கொண்டு நடத்திய ‘த கிரேட் சப்வே வயலின் எக்ஸ்பெரிமெண்ட்’ – டின் தாக்கத்தில்.

கடந்த வழி

காண்பதெதுவும் புதிதல்ல
யாரும் மாறிவிடவோ
மாற முயற்சிக்கவோ
ஒன்றுமில்லை
பதற வேண்டாம்
இருண்ட கண்டத்திலிருந்து
கிளம்பிப் பரவிய
காலங்களிலிருந்து
இப்படித்தான் இருந்திருக்கிறது
ஓரங்கள் வெடிப்புற
அடிப்பாதம் தேயத்தேய
நடந்து கடந்த
மலைகளும் நதிகளும்
வனங்களும் பாலைகளும்
எதையும் எப்போதும்
மாற்றி விடவில்லை
இணைப்பதை விட
பிரிப்பது எளிது
ஆக்குவதை விட
அழிப்பது
எளிய வழிகள்
எல்லாருக்குமானவை
எனவே என்றுமுள்ளவை
உங்கள் வழியை
இன்றே தேர்ந்தெடுங்கள்
அவ்வப்போது எழும்
அவ்வரிய குரல்களைக்
கேட்டு பதற வேண்டாம்
நம் வழி
மனிதத்தின் வழி

***

சொல்வனம் மின்னிதழில் மூன்று கவிதைகள்

 சொல்வனம் மின்னிதழில் வெளிவந்திருக்கும் மூன்று கவிதைகள் 


https://solvanam.com/2020/11/08/%e0%ae%89%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3/


Monday, October 5, 2020

ஒற்றைச் செருப்பு

இருபுற சாலையின்

ஒருபுற பாதையில்
ஒரேபுறமாக
அடித்து செல்லப்படுமந்த
ஒற்றைச் செருப்பு
திரும்பிச்செல்லவோ
எதிர்ப்புறம் விரையவோ
இணையுடன் சேரவோ
எதற்கும் இயலாத
எதற்கும் உதவாத
எதற்கும் மசிகிற
எதிர்ப்பேதும் இல்லாத
இல்லாத
இருப்பு

Tuesday, September 1, 2020

பெருகாத கோப்பைகள்

பருகப்படாமல் காத்திருக்கின்றன

புகையும் இரு தேநீர் கோப்பைகள்
சரிந்திறங்கும் மாலைவெயிலில்
சருகுபோல் அலைகிறது தேநீர் வாசம்
இருபுறமும்
இருவேறுதிசைகள் நோக்கி
எதையோ காத்து நின்ற
எண்ணங்கள்
ஒன்றையொன்று நோக்கக்
குவிந்துவிட்டால்
பருகப்பட்டு விடலாம்
காத்திருக்கும் இக்கோப்பைகள்

என்னை நிறைத்துக்கொள்ளும்
ஒரு கோப்பை
ஏதென்று
அறியாதிருந்தது ஒரு  காலம்
எதற்கென்று
அலைபாய்ந்தது இன்னொரு காலம்
நிறைக்கமுடியாது
நிறைந்துவழிவதாய்
நினைவிலழியும்
ஈதொரு முடியாக்காலம்

இரு கவிதைகள் - பெருகாத கோப்பைகள்

 பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் இரு கவிதைகள்: 


https://padhaakai.com/2020/09/01/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/


Sunday, May 10, 2020

​காத்திருத்தல்

​காத்திருத்தல்


சுருக்கங்கள் நிறைந்த கரங்கள்
வித்வம் நிறைந்தவை
புகைத்துக் கொண்டிருக்கின்றன
காலை நடைபயிலும் கால்கள்
சந்தைவந்த சிறார்
முகர்ந்தலையும் குட்டிநாய்கள்​​
நடுவே இரு நாற்காலிகளில்
ஒன்றில் அக்கரங்களின் தலைவன்
இன்னொன்றில்
நசுங்கிய ஆயினும் அழகிய குவளை
அருகில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறது
வாழ்வைப்போல் அதிர்வுதளர்ந்த
தந்திகள் துவளினும்
எதை வேண்டுமென்றாலும்
இசைக்கக் காத்திருக்கும்
கிதார்

புலன்

புலன் 


வலது கையில்லை
வலது காலில்லை
இழுபடும் நடை
மெதுமெதுவே குறைந்து
படுக்கைவசம்
சன்னலருகே பின்னொளியில்
அசைவற்ற சித்திரம்போல்
உணர்வின்றி துவளும் கரத்தைத்
எப்போதும் தாங்கும் இடக்கை
அருகமரும்
என்தலை கோதவே
தன் பிடிதளரும்
எனைப்பிரிந்து
இத்தனை வருடம் கழிந்தும்
உடல் ஒருபுறம் இழுபட
கனிந்த முகமும்
கலங்கிய விழிகளும்
சாலையில் காணுந்தோறும்
அவளையன்றி
வேறாரும் காணேன்
வேறொன்றும் உணரேன்

Monday, August 19, 2019

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - சுழல்

​சுழல் 


சிறுவிதை
கடித்தெறிந்த கனித்தோல்
கிளையுதிர்ந்த இலை
கனியா பிஞ்சும் பூவும் ​​
அடித்தளம் சுற்றிலும்
உயிரோட்டம்
நில்லாது நடந்தேறும்
நாடகம்
உணவும் உணவின் உணவும்
உண்ணவும் உண்ணப்படவும்
அத்தனைக் களி
எதுவுமில்லை தன்னிரக்கம்
எதிலுமில்லை முயற்றின்மை
பேருரு தாழ்ந்து தாள் சேரும்
எதுவும் ஆவதுமில்லை வீண்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - காத்திருத்தல்

காத்திருத்தல் 

சுருக்கங்கள் நிறைந்த கரங்கள்
வித்வம் நிறைந்தவை
புகைத்துக் கொண்டிருக்கின்றன
காலை நடைபயிலும் கால்கள்
சந்தைவந்த சிறார்
முகர்ந்தலையும் குட்டிநாய்கள்​​
நடுவே இரு நாற்காலிகளில்
ஒன்றில் அக்கரங்களின் தலைவன்
இன்னொன்றில்
நசுங்கிய ஆயினும் அழகிய குவளை
அருகில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறது
வாழ்வைப்போல் அதிர்வுதளர்ந்த
தந்திகள் துவளினும்
எதை வேண்டுமென்றாலும்
இசைக்கக் காத்திருக்கும்
கிதார்

Tuesday, February 12, 2019

நதி - 2

அத்வைதம் தேடிய 
சங்கரனைத் தேடி 
காலடி போனவொரு நாள் 
பயணங்கள் திசைமறந்த நாட்கள் 
பற்பல நாட்களில் 
பேசிய முதல் வார்த்தை 
அங்காமலி சங்கரன் அம்பலம் 




















துகிலோடு நாணமும் களைந்து 
பெரியாறின் படிகளிலிறங்கி 
எதிர்கரை காணா 
இருளும் தொலைவும் 
நினைவில்லாது 
மயக்கம்போலும் ஓருணர்வில் 
முதலடி ஈரடி 
பனிக்குட வெம்மைக்குள் 

நாசியின்கீழ் உடலம்தழுவி 
நகர்ந்த நீர் பொழிந்ததெங்கு
வழிந்ததென்று 
புதைந்தமர்ந்திருந்தது 
எத்தனைக் காலம் 

நதி - 1

சாகச பயணம்போலும் 
தலையில் கட்டோடும் 
இடைநழுவும் முண்டோடும் 
நகர்நீங்கி நான்காம்நாள் 

கருமையும் பச்சையும் நீலமும் 
கலந்தடர்ந்த கானகம் 
புள்ளினங்களும் இயம்பா 
புலரிளங்காலை 

துயிலெழுப்பி விரிநீங்கி 
தந்தையின் தோளமர்ந்து 
மென்சருகென மினுங்கும் 
பம்பையின் கரையோரம் 

















தோளிறக்கி துண்டுரித்து 
அடற்கருமையில் அசைவின்றி 
நெளியும் நீரோரம் அமர்த்தி 
நிகழ்வதென்ன அறியாதவன் 

பனிக்குளிர்நீரில் முதல்முழுக்கு 
ஆயிரம் ஊசிகள் ஓராயிம்துளைகள் 
விறைத்துநின்ற சிறுஉடல் 
சினம்கண்டு சிரித்த தகப்பன் 

நிகழும்

கருந்திரை கீழிறங்கியது 
கண்முன் ஒளிந்து மறைந்தது ஒளி 
சூழ நின்ற 
மலையடுக்குகளின் இடுக்கினூடே 
அலையென மிதந்து வரும் 
மென்னீர காற்று 
கமழும் உன் தோள் வாசம் 

எப்போதோ முகர்ந்தது 
இன்னும் புலன்களில் 
அழியா தடம் 
இப்போதும் 
முகர்ந்துகொள்ளும் அண்மையில் 





























விருப்பங்களின் சின்னமென 
இடையில் எரியும் கணப்பு 
வழியும் ஹரிப்ரஸாதின் குழலிசை 
சகமொருத்தி சொன்னது 
இன்று இப்போது இக்கணம் 
நினைவில் மென்மையாய் அதிரும் 
'ஒரு குழல்,
ஒரு முணுமுணுப்பு,
ஒரு பெருமூச்சு,
ஒரு முனகல்,
ஒரு மெல்லிய அழுகை,
ஒரு தேன்சிட்டின் சிறகசைவு,
சுவாசம்,
தென்றல்,
மரங்களின் உயிர்ப்பு,
இடையோடும் நிசப்தம்,
சொற்களேதுமற்ற இந்நிலை...'

அநித்யங்களின் காதல் 
வலியது 

Thursday, January 10, 2019

தொலைவில் வழியும் இசை


அலுவலகம் செல்லும்
அவசரத்தில் அனைவரும்
தத்தம் பேசியில் புத்தகத்தில் உரையாடலில்
அமர்ந்திருந்த எனக்கெதிரே
தலைநிமிர்ந்து அமர்ந்திருந்தாள்
மறுமுறை நோக்க வைக்கும் முகம்
ஏதோவோர் எண்ணம்
ஏதோவொரு நாடகம்
எங்கோ நோக்கிய
தளும்பிய விழிகள்
கணப்போதும் இமைக்காமல்
பார்வையேதும் அசையாமல்
தன்னிச்சையாக மேலெழும்பும் கை
யாருமறியாமல்
நீரூறும் நாசியைத் துடைக்கும்
சிறிதே விரிந்த உதடுகளிலும்
உறைந்த சலனம்
யாருமே அவளைப் பார்க்கவில்லை
அவளைத் தவிர யாரையுமே நான் பார்க்கவில்லை
இருக்கையைவிட்டு எழாமல்
வெறித்து எதுவும் பார்த்துவிடாமல்
வழியப்போகிற அந்தத் துளிகள்
ஏன் என் தோள் வீழக்கூடாது

Friday, December 28, 2018

இல்லப்பணிப் பெண்டிரின் ஒருநாள்


எதிரும் புதிருமான
தெருக்களிலெல்லாம்
காலடி ஓசைகள்
அதிகாலை
அத்தனை பாதங்களும்
அழகிய பெரும் வீடுகளின்
தானியங்கிக் கதவுகள் திறந்து
சாலைகள் நோக்கி
சாரி சாரியாக நடக்கும்
பேருந்து நிறுத்தங்கள்தோறும்
இந்தோனேசிய தலைமுக்காடுகள்
இந்திய கைப்பைகள் குளிர்க் கண்ணாடிகள்
பிலிப்பினோ விரிந்த கூந்தல் அலங்காரங்கள்
சந்தனச் சுண்ணம் பூசிய பர்மிய கன்னங்கள்
குறைவும் நிறைவுமாக விதவிதமான ஆடைகள்
ஏதேதோ மொழிகள்
சுழலும் அத்தனைக் கண்களிலும்
ஒன்றே தாபம்
ஊடலும் கோபமும்
மகிழ்வும் பிணக்கும்
பேருந்து நிறுத்தங்களில் தொடங்கி
பேரங்காடிகளில் தொடர்ந்து
நிறுத்தங்களில் நிறையும் இன்று
சிங்கப்பூரில் ஞாயிறு

இல்லப்பணிப் பெண்டிரின் ஒருநாள்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - இல்லப்பணிப் பெண்டிரின் ஒருநாள்


https://padhaakai.com/2018/12/23/saranabhi-poetry/#two

Thursday, December 27, 2018

இருக்கலாம்

வடிவதற்கேதும் வழியின்றி
பொங்கி நிரம்பி
ஆவியாவதொன்றல்லாமல்
தன்னைக் கரைத்துக் கொள்ளவியலா
இந்தக் கடல்
ஈர்ப்பு விசையனைத்துக்கும் மேலென
ஏதோவொன்று அழுத்தி வைத்திருக்கும்
அத்தனை நீரும்
பொதிந்து வைத்திருக்கும் இருள் அறியா
அத்தனை அந்தகாரங்களும்
என் சுயமாகக்கூட இருக்கலாம்.




வெண்ணிற பனித்துகில்
தொங்கும் திரைச்சீலை
அசைவற்ற நிசப்தம்
கொதித்தடங்கிய பாலின்
மென்சருகாடை மோனம்
கரையின் மீது காத்திருந்து
பறக்கத் துவங்கும்
முதல் சிறகசைவில்
கலையும் நீர்ப்பரப்பு
என் சிந்தையாகக்கூட இருக்கலாம்.
அசைந்து கொண்டேயிருக்கும் உணர்வுகளை
அசையா ஒரு காட்சியென
பிழையேதுமின்றி ஒரு முறை
ஒரே முறை
வடிக்க முடிந்துவிட்டால்
ஓய்ந்துவிடும் இதுவென்
ஆவியாகக்கூட இருக்கலாம்.

Tuesday, April 10, 2018

காட்சிப்பொருள்



Image result for ashokamitran
(அசோகமித்திரனின் 'காட்சி' சிறுகதையின் தாக்கத்தில்)

ஏன் போக வேண்டும்
யாரும் வழியறியா ஓரிடம்
ஏறும் இறங்கும் பயணிகள்
கலையாத சாம்பல் முகங்கள்
இறப்பதற்காக காத்திருக்கிறார்கள்
இறப்பதற்காக போகிறார்கள்
எரித்துவிட்டு
எரிக்கப்பட வருகிறார்கள்
இருப்பதினிமித்தம் மரணம்
இருண்மையின்
இருநிலைகளினிடையே
இழப்பதற்கேதுமற்ற
இந்த மனமும் உடலும்
போர்க்களங்களிலும்
போரல்லாத களங்களிலும்
பகடைகளாக மடிந்துபோகும்
அத்தனை உடலங்களிலும்
மரிக்காது நினைவில்
தரிக்கும் இவை
அவரவர் பிறந்த பூமி
யாரெங்கிலும்
எங்கேயேனும்
பாடிவிடுங்கள்
நேற்று நேர்ந்ததே
நாளையுமென
ஆயிரம் கோடி
உயிர்களை மூட்டியெரித்த
எங்கள் சிதைகள்
இன்று எரியும்
இந்த மண்
எங்கள் நிலமென 

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: காட்சிப்பொருள்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: 

காட்சிப்பொருள்

Saturday, February 10, 2018

நனவின் நீட்சி

கதிரணையும் அந்தி
இலைகளுதிர்த்த எலும்புக்கரங்கள்
பற்றிப் பிடித்திருக்கும்
செந்நிற கருங்கல் கட்டிடம்
கற்பலகைகள் பாவிய படிகளில்
தாவிப் பாய்ந்து இறங்குகிறேன்
யாருமில்லாத தாழ்வாரங்களில்
இறங்கும் படிகள்
மீண்டும் மீண்டும்
கொண்டென்னைச் சேர்க்கும்
அத்தனை வாயில்களுக்குள்ளும்
பார்மலின் திரவக்குடுவைகளில்
மிதக்கும் அரைகுறை உருவங்கள்

புகைவண்டி சன்னல் கம்பிகளின்
காலைநேர குளிர்ச்சியும்
கரிப்புகை தூசியும்
முகம்பூசும் பயணம்
ஏறியதெங்கென்றும்
இறங்குவதெங்கென்றும் அறியாது
இடைவழி நிற்காது நீளும்
இளம்பருவத் தனிமை


சிறுகுழந்தையாய் வாழ்ந்திருந்த
வீட்டின் பின்புறம்
யாருமில்லாத பின்னிரவில்
மரங்களின் பின்னிருந்தும்
தரையின் குழிகளிலிருந்தும்
தீராதெழுந்து
விரட்டும் பிரேதங்கள்

கரைகாணாது
தரை அறுந்து
முடிவற்று வீழ்ந்துகொண்டேயிருக்கும்
இரவின் ஆழங்கள்

விரல் நுழையவியலா
துவாரம்
உடல் சுருக்கிச் செலுத்தும்
விசைகள் வலிகள்

களிப்பூட்டவென்று
ஏறி நின்ற மேடை
ஆயிரம் கண்களின்முன்
ஒரு வார்த்தையும் விரியா
விளங்கவியலா கணம்

போதாமைகள் குறைகள்
அச்சங்கள் இருண்மைகள்
நம்மை நாம் படிக்க
நனவில்லாததும்
ஓர் வழி

Pandit Venkatesh Kumar and Raag Hameer