Showing posts with label Friends. Show all posts
Showing posts with label Friends. Show all posts

Sunday, October 2, 2011

இரசனை விளிம்புகள்


கடப்பதற்காக
ஏற்றுக் கொண்ட
தூரங்கள்
கடமைகளின் காயங்கள்
கடந்து போன கவலைகளின்
காய்ந்து போன வடுக்கள்

இற்று விழும் நேரம்
உற்ற துணை யார்

இரசனைகள்

இரசனைகளின் விளிம்புகள்
வரையறுக்க பட்டவையா
அதன் வீச்சுகள்
வகிரும் கோணம் என்ன

ஆழ்ந்த புரைகளில்
புழுக்கள் நெளிய
நிர்ப்பந்த அடிகள்
குருதி தெறிக்கும்
வலியாற்றும் விடை
இரசனை

அணையவிருந்த அக்கினியை
வளர்த்துவிட்ட பொறிகள்
மறையவிருந்த ஒளியை
இழுத்து நிறுத்திய துருவங்கள்

ஒவ்வொரு கடலின் 
ஆழமும்
அளக்கப்பட்டவை
அளந்த நிறைகளில்
வேறுபாடு கானலும்
அதிக ஆழம்
நிறுத்தலும்
குறித்தவை தக்கவை
அல்லவெனாலும்
எமக்கே உரியவை

ஆழத் தேடலின்
அழுத்த வேதும்பல்களில்
அடுத்த கடலுக்கு
அலை பாய்தலும் உண்டு 

துணை இல் தனிமையும்
தனிமையின் துணையும்
அழுத்திக் கிழித்த ஊனங்களும்
அணைத்துத் திளைத்த ஆனந்தமும்
இரசனை

வாழ்வில் கடக்கும் எவ்வொரு கணமும்
வெறுக்கத் தகுந்ததல்ல 
வெளிப்பாடு எதுவாயினும்
இரசிக்க மறுத்து விடாதே

அதுவே
நீ நான் தேடிக்கொண்டிருந்த
இரசனையாக இருக்கக் கூடும்
அதுவே
உன் என் கடைசி 
இரசனையாகவும்
இருந்துவிடக் கூடும்

- 13/10/86

Monday, May 16, 2011

தோழிக்கு ஒரு கடிதம்

அன்புள்ள தோழி,

கொடி! 

அது பற்றிப் படரும்; காற்றில் சஞ்சலமடையும்; புயலில் துடிக்கும்; தேர் தரும் பாரியை தேடும்.

நீ?

நீ கொடி போலவா? உனக்குள் இருக்கும் வண்ணங்கள் வியப்பூட்டுவன; உணர்வுகள் அதிர்வூட்டுவன. தவறாக கைபட்டால் எளிதில் உடைந்துவிடக்கூடிய மென்மையுடையதாய் தோன்றி, அதனால் தொடவே சிறிது அச்சத்தை ஊட்டக் கூடியவை, உன் பரிமாணங்கள்.

மென்மையானவள் நீ; ஈடு செய்யும் வகையில், உன் நேரடியான (அதனாலேயே எனக்கு மிகவும் பிடித்தமான) வெளிப்பாடுகளில் வன்மையானவள்; உண்மையானவள்.

கொடி பற்றிப் படரும்; நீயும் பற்றிப் படர்கிறாய். படரவும் ஆக்கி விடுகிறாய்.  உன் அன்பை இப்படியெல்லாம் வெளிப்படுத்த யாருனக்கு கற்றுக் கொடுத்தது?
உணர்பவை அனைத்தும் (இன்பமோ துன்பமோ) பகிர்ந்து கொள்ள நீ தேடும் சகம், அதிலுன் தேர்வு, உன் தீர்மானம், உன் பற்றுதல், நீ எதிர்பார்க்கும் வெளிப்பாடு, உன் limitations பற்றிய முன்கூட்டிய உன் தெளிவு...

சஞ்சலங்கள். எளிதில் பெண்கள் உணர்ச்சிவசப்படுவார்களாம். ஏன் விதிவிலக்குகள் இருக்கக் கூடாது? கோபப்படுகிறாய் அதிகம். ' சாதிக்க இயலாதவனே கோபப்படுவான்'. சொல்லியிருக்கிறேன். உன் கோபம் உன் குடும்பத்தையுமல்லாது என்னையும் சமயங்களில் கூர்பார்க்கையில் மனம் வேதனை அடைகிறது. கொடி கோபப்படக் கூடாது. 

எங்கே உன் சுயம்,  வாழ்வுரிமை, லட்சியம் முதலியன பறிக்கப்படுமோ அங்கே உன் கோபம் தார்மீகமானது; அர்த்தமுள்ளது; வீரமானது.

மற்றும் பல உணர்ச்சிகள் உன்னில் எளிதில் தீவிரமாக தாக்குகின்றன. கவர்கிறாய், எளிதில் கவரப்படுகிறாய். உணர்வுகளால் விரைந்து எடுக்கும் எம்முடிவும் வேதனை தரும். தவறு! இவ்வுலகம் மிகச்சில நல்லவர்களையே கொண்டது. யார் மீதும் விரைந்து அன்புறுவதும் தவறு. அதிக எதிர்பார்ப்பு மிகுந்த ஏமாற்றத்தைத் தரும்.

உன் அறிவு, உன் உலக ஞானம் கொண்டு நீ ஆராயக் கற்றுக் கொள்ள வேண்டும். எதிலும் எளிதில் மனம் பறிகொடாதே. (எவரிடமும்) முதலில், யார் எத்தகையவர், அவர் கண்ணோட்டம், லாப நஷ்டங்கள் எடைபோட பழகு. சுயநலமியாய் இரு. இவ்வுலகில் சுயநலமில்லாமல் வேறொன்றுமில்லை. 

கல்வியில் உன்னார்வம் என்னை மகிழ்விக்கிறது. மென்மேலும் நீ கற்க வேண்டும்.  உன் எல்லைகளை விரிவுபடுத்தும் தருணமிது.

இரசனைகள் இயற்கையானவை. எனவே, இன்பமானவை. ஒரு கவிதையோ, உரைநடையோ அன்றி இரசனை குறித்த பேச்சோ உன்னிடம் வீசப்பட்டால் நீ சோர்ந்து போகிறாய்.  ஏன்? உலகியல் வாழ்வின் உயிர்நாடி இரசனை.

அதுவொன்றில்லாமல் நானில்லை.

எதையும் இரசிக்க வேண்டும்.  நீ துன்பமடையும் கணங்களிலும், சோக நிகழ்வுகளினின்று, வெளி நின்று, "இக்கணம் நம் வாழ்வில் ஒரு முறை வருவதை இருந்தால், இப்போதே இதை வாழ்ந்து விட வேண்டும்" என்று எண்ணி அனுபவி. இச்சக்தி எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மனநிலை தரும்.

'நம்மை மீறி என்ன வரும்? என்னால் சாதிக்க முடியும். உயிரைத் தவிர பெரிதாய் வேறொன்றும் போய்விட முடியாது' போன்ற எண்ணங்கள் உன்னில் வளரவேண்டும். அவை, உன்னில் இப்போது காணப்படாத சகிப்புத்தன்மை, பொறுமை, வெல்லும் விடாமுயற்சி, முடிவில் இரசனை போன்ற, உன்னை மற்றவரிடமிருந்து தனித்து உயர்த்தக்கூடிய பண்புகளைப் பெற்றுத் தரும்.

உயரிய, தொலைநோக்கு மிகுந்த கொள்கைகள் உன்னில் குறைவு. இது உன் கல்விக்கும், சிந்தனை தெளிவிற்கும் பொருத்தமற்றதாய் இருக்கிறது. எப்படி வாழ வேண்டும், எங்கே, எவருடன், சாதனைகளின் குறிக்கோள், உன் கல்வி, உன் படிப்படியான வளர்ச்சி, உன் குடும்பம் பற்றிய முழுமையான திட்டங்களை நீ கொண்டிருக்க வேண்டும். 

இல்லையெனில், இப்பொழுது ஆரம்பி. சிந்தனைகளை பெரிதாக செய். எல்லைகளை தள்ளி வை. இலக்குகளை சிறந்தவையாய் நிர்ணயி. அதை அடைய பாடுபடும் வழிமுறைகள், தேவைப்படும் காலம், பொருள், மனித முயற்சி பற்றி திட்டமிட்டிருக்கிறாயா? இல்லையெனில், உடனே ஆரம்பி.

வேறே? உன் மென்மையும், பெண்மையும், அன்பும், பரிவும், கல்வியும், ஞானமும், உணர்ச்சிகளும் உயர்ந்தவை.

இவை இருக்கவேண்டிய இடம் இப்போது நீ இருப்பதல்ல. 

நீ உயர வேண்டும்; மூட நம்பிக்கைகளுக்கு உடன்படாமல், இல்லறக் கட்டுப்பாடுகளுக்கு இடங்கொடாமல் , நீ உயர வேண்டும்.

செய்வாயா, எனக்காக?

சரவணன் 
07/1990

Sunday, May 15, 2011

நண்பனின் கடிதங்கள்

ரமேஷ் சண்முகம்
02-03-88

நண்பா,

              நீ
              நின் மனிதம்
              உன் கவிதைகள்
              உன் கவித்துவம்
              உன் நேசம்
             உன் நியாயம்
             ....
             ....

                     இவை என்னை பொறாமைப்பட தூண்டுவன. பாராட்டக் கட்டளையிடுகின்றன. 

                     உனக்கு ஒரு முத்தம்.

                     உன் பேனாவுக்கு....
                     ....கோடி முத்தங்கள்.

                                                                         அன்புடன்,
                                                                          ரமேஷ்.

Monday, May 2, 2011

Letter to a friend

Hi friend,


Happy to know that you are partially relieved of your workload.

Thanks for appreciating the photograph. I loved the 'the whining
schoolboy' bit, though the comment was deceptively flattering, since
the 'schoolboy' photo was done at the age of 40.

I am not going to argue with you on Arundhati Roy. I was, I must admit
now in retrospection, disillusioned when I had read her novel a few years ago. Her
subsequent writings have failed to create any interest and on re-reading
God of small things, I could understand a very weak craft.

Her politics, I believe, is not soulful and is mostly
attention-seeking. You may differ with this observation and that is
exactly what Jeyamohan is trying to present as the current state of affairs
in Indian media and social activism. This pseudo intellectualism, fanned by foreign media and
foreign-supported Indian media, places a solution which is not action
intensive, sacrifice oriented but just a pseudo uprising with mere empty
words.

I am reading 'Reality Check' by Guy Kawasaki (on entrepreneurism) and
The Kamasutra by Vatsyayana - A translation by Richard Burton,
Bhagavanlal Indrajit and Shivaram Parashuram Bhide.

Kamasutra! 



I am sure you are aware that this treatise is not entirely
about sex. Though I have 
scandalously read the book in parts during our college
days, printed only to highlight the sexual positions and
about how to acquire women, the current reading has opened a door through which I
could see how this 6 century AD book has impacted the cultural forms,
literature and the social psychology of Indian people and am amazed at the
fact, how still it remains the centre of the relationships of man-woman and have-have nots
(yes, that too). That is, if you are prepared to view through that
that sense.

At some point of time in near future, may be during my annual year
leave (December), I am planning to write a long article to analyse how
the book has been a result of rich (previously existing)
psycho-analysis of sex, sexual behaviour and the interpersonal relations
before its time and how it has got ingrained subconsciously and is affecting the psyche of the people even now.

All that I could see in Indian films, the day-to-day life (husband-wife
relationships in a typically Indian marriage - to what I
am accustomed, inferences drawn from the lives of my parents, my friends, my relatives, neighbours and that of my own), to all the art forms and to the subtle and
not so subtle vagaries and ideologies of manhood and womanhood, transcended to us by
the elders and mothers - are very closely connected to this extensive
research work by Vatsyayana.

Interesting?

Concerning your observation of what I would have done regarding
the energy situation in India: honestly, I have been slowly shedding
my invincibilities and vulnerabilities alike, as I am seeing the life
in a more practical light nowadays and am no more nurturing huge ambitions
of a professional changing the course of the destined lives.

I am setting smaller, achievable targets for myself and work upwards in a
typically bottom-up approach that has been working well for the last 3
years, rather than the more ambitious top-down approach. That way,
If I could proceed as I am doing as now, should be entering the Indibiofuel industry when I am 50 years old.

Pardon me for a pretty uninteresting mail.

Take care of yourself,

Love
IB Saravanan

Wednesday, December 22, 2010

நண்பனின் கடிதங்கள்

கடிதம் - 4
17/11/89

பிரிய சரவணா,

உன் கடிதம் கிடைத்தது. மகிழ்ச்சி.   I.C. ஏன் சரியாக எழுதவில்லை? அது ஒன்றும் அவ்வளவு கடினமான பாடம் அல்லவே. எனினும் நீ அதில் தேர்ந்து விடுவாய் என நம்புகிறேன்.  இக்கடிதம் உன்னை அடையும் நேரம் எல்லாப் பரீட்சைகளையும் நல்ல முறையில் எழுதிவிட்டு வீடு சேர்ந்திருப்பாய் என நம்புகிறேன்.

ஹரியின் சித்தப்பாவின் மறைவு மிகவும் வருத்துகிறது. வாழ்வு எவ்வளவு அநித்தியமானது.

யதார்த்தம் வேறு. நம் லட்சிய இலக்கு வேறு; வரையறைகள் வேறு. பொதுமை, பெரும்பான்மை இவையே யதார்த்தம் என்றால் என் யாசகம் யதார்த்தம் அல்ல. "சூழலின் சுக வெம்மை" தேவைப்படுகிறதா? சரவணா! இது சிதை வெம்மையோ, பணிக்குடச் சூடோ அல்ல.  உனது மூச்சில் எனது மூச்சடைக்கும் புழுக்கம். பொறாமை, அறியாமை, கர்வம் இவை இச்சமூகத்தை தீக்கிரையாக்கியுள்ளன. இச்சூழல் வெம்மையா? எனில் எப்பனி தீர்க்க இவ்வெம்மை நாடுகிறாய்.

'ஒரு பானைச் சோற்றுக்கு....' பழமொழி மனித இனத்திற்கு ஒத்து வராது. சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு மனிதனும் ஒரு தனி உலகம். நீ தனி. நான் தனி.  நமது ரசனைகள் ஒத்துப் போகலாம்.  நம் சிந்தனைகள் ஒரே தளத்தில் இறக்கலாம்.  நம் தேவைகள் ஒரே மாதிரி இருக்கலாம்.  எனினும் நான் பார்க்கும் உலகம் தனி. நீ பார்க்கும் உலகம் தனி. நம்மை தனி வர்க்கமாய் காணலாம். வரையறுக்க முடியாது.  நமது வர்க்கத்தின் குணாதிசயமாய் எதையும் நிர்ணயிக்கவும் முடியாது.  இருபதாம் நூற்றாண்டில் ஏறக்குறைய எல்லோருமே சிந்தனையாளர்கள். அவர்களது சிந்தனையின் திக்குதான் வேறு.  எனவே விளக்குகளை வைத்து எதையும் நிர்ணயிக்க முடியாது.  எனவேதான் சூழல் மறுத்து, யதார்த்த நிர்பந்தம் வெறுத்து, வாழ்வின் ஏதோ ஒரு திசையில் என் பாட்டுக்கு போய்க் கொண்டிருக்கிறேன்.

யதார்த்தத்தை ஏற்காததின் காரணம் பயம் அல்ல. இங்கு கற்பிக்கப்பட்டு வரும் யதார்த்தம் முட்டாள்தனமானது. இவர்கள் தங்கள் போக்கில் வாழ்ந்து கொண்டு, யதார்த்த வாழ்க்கை என்று பீற்றிக் கொள்வது வேடிக்கை. இவர்கள் எப்படி வாழ்ந்தாலும் அதுதான் யதார்த்தமா?

'அனைவரையும் அப்படியே ஏற்றுக் கொள்ளத் தெரிய வேண்டும்; பழக வேண்டும்'. உண்மை. அதற்காக இவர்களது முட்டாள்தனத்தையும் கபடத்தையும் என்னால் அனுமதிக்க முடியாது.  இவர்களது பாமரத்தனம் என்னைப் பற்றிய தவறான கணிப்பைத் தோற்றுவிக்கிறது என்றால், அது என் நிஜத்தின் தோல்வி. இதை என்னால் ஏற்க முடியாது. இதுவே இச்சமூகத்தின் பெரும்பான்மை.

நான் பொதுனலவாதியல்ல.  இவர்களிடம் போராடி என்னைப் பிரதிபலித்து, ஏதோ ஒரு காலத்தில் என்னைப் பேசுவதற்காய், சிலை வைப்பதற்காய், வெற்றி பெற.  நான் ஓர் உன்னதமான சுயநலமி.  எனக்கு நிகழ்தேதிதான் நிஜம்.  இன்றைய நாள்தான் என் வாழ்வின் அனைத்தும்.  நாளைகள் நிச்சயம் என்றாலும், இன்றைய கணத்தில் நேற்றும் நாளையும் மாயைகளே.  என் நிலைப் பிரக்ஞை என்றும் என்னில் உண்டு.  என் ஜீவாதாரமே அதுதான்.

நான் எதிர்ப்பது இல்லை. விலகிப் போவதுண்டு. வெறுக்கச் செய்து விலக்கி வைப்பதுண்டு.  அந்த வெறுப்பை மீறிய அணுகல் எப்போதாவது ஏற்படுவதுண்டு.  அதுவே எனப்பற்றிய மற்றும் என் புரிதல்களுக்கு வழி வகுக்கும். குறைபாடுகளையும் விகாரங்களையும் (மனதின்) என்னால் புரிந்து கொண்டு விலகி நின்று வேடிக்கை பார்த்து, நேசிக்க முடியும்.  அவற்றை என்னால் மதிக்க முடியாது.

என் குற்றங்களை என்னால் ஒத்துக் கொள்ள முடியும்.  எனக்குள் என்னால் இருமுகம் காட்ட முடியாது, என் சுய கற்பிதங்களால் என் தவறை வெளியில் மறுத்து விளையாடிக் கொள்ளலாம். என்னிடம் மறைக்க முடியாது.  சந்தியில் பல முகம் காட்டுவது நிர்பந்தம்.   வாழ்க்கை. உள்முகத்திற்கு அது வேடிக்கை. பல முகம் காட்டி, உண்மையாக இருக்க முடியுமா? அடிப்படை உண்மையை பாதிக்காமல் எதனை விதமான முகங்களையும் காட்ட முடியும். எனினும், பல முகம் காட்டுதல் கபடம் அல்லவா? ஆம். கபடந்தான். கபடம் இங்கு கட்டாயம். அம்மணமாய் வெளிவரும் நிஜம் அடிபட்டே சாக. கபடம் ஓர் கேடயம். நிஜத்தை விட்டெறிந்து விட்டால், நம் நிர்வாணம் கூட இவர்களுக்கு நாடகமாய்ப் படும்.

பொறுமை முக்கியம். தணலும் தண்மையும் மாறி மாறிச் சூழ்ந்து நிற்க, கனன்று தணியும் பொறுமை அவசியம். உளம் அணைத்து வழிகளிலும் இம்சிக்கப்பட்டும், அழியாமல் அமைதி காட்டும் பொறுமை அவசியம்.  இத்தகு பொறுமையை தவமேற்கொள்ளும்போது அவமானம், துக்கம், புகழ் எல்லாமே அந்நியப்பட்டுப் போகும்.

சரவணா! நானும் நீயும் விளக்குகள் அல்ல. விலகத் துடிக்கும் ஜீவன்கள்.  இன்னும் இச்சமூகத்தில் நாம் விழையும் சிற்றின்பங்கள் ஏராளம். பாலகுமாரன் மிக நன்றாக (significantly) விலகியிருக்கிறான். சுந்தர ராமசாமி, அக்னிபுத்திரன் ஆகியோரும் நல்ல விலக்குகள் அத்தகைய ஒரு தீவிரமான விலகல் தேவை. நாம் விலக்குகள் அல்ல.  நாம் எளிதில் உணர்ச்சி வயப்படுகிறோம். பாலியல் நட்பில் அதீத கவனம் செலுத்துகிறோம். நாம் நம் திசை வரையறுக்கப்படாமல், போகும் திசையை நம் திசையை கற்பித்துக் கொண்டு பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

சரவணா! "காலச் சுழற்சியில் காணாமற் போவது" அச்சுழற்சியின் நியாயம்; கட்டாயம்.  களிப்பும், சிலிர்ப்பும், சோர்வும், சோகமும், சுழற்சியின் அத்தியாயங்கள். இதை அனுபவித்து அதன் போக்கிலேயே போவோம்.  சுழலும் சக்கரத்தில் நம்மைப் பிணைத்துச் சுற்ற, நமக்குச் சக்கரமும், சக்கரத்திற்கு நாமும் நித்தியங்கள் (relativity).  இச்சுழற்சி சத்தியம். நாம் சுழவதும் சத்தியம். இதில் அசத்தியமாய் நான் காண்பது ஏதுமில்லை. எனக்காகப் பிறர் வாழ வேண்டாம். நானும் எவர்க்காகவும் வாழ்வதில்லை.  ஆயினும் என்னைப் போருக்க உனது வாழ்வு, எனக்காகத் தான், என்னை சிந்திப்பதாய் தான் அமைய வேண்டும். இதன் நேர்மாறும் நிஜம்.

நேற்றைய உண்மை இன்றைக்குப் பொய்யாகாது. உண்மை என்றைக்குமே உண்மைதான். ஆனால், சில வேளைகளில், உண்மை மறைந்திருக்க, ஒரு சில பொய்கள் வேஷம் போட்டுக் கொண்டிருக்கும்.  முற்றிலுமான உண்மை என்றுமே பொய்யாகாது. புவியீர்ப்பு தத்துவம் பொய்யாகுமா? இற்றைய கணத்தில் நாம் உண்மை என்று கற்பிதப் படுத்திக் கொண்டிருக்கும் எந்த உண்மையான உண்மையும் என்றுமே உண்மைதான்.

----------பற்றி நான் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ளவும் விடவில்லை. புரிந்து கொள்ள அனுமதிக்காதது கபடமில்ல.  ஒரு விழைவு.  சிற்றின்பம். கொஞ்சம் sadism  கலந்தது. நான் அதீதமாய் கற்பனை செய்யப்பட்டு  விடுவேனோ என்ற பயம். என் கடந்த காலங்களில் ஏற்பட்ட சில தவறான புரிவுகளின் விளைவுகள் இன்னும் என்னைத் தண்டித்துக் கொண்டுள்ளன. தவறு செய்யாமலே தண்டிக்கப்படுகிறேன். அந்த தண்டனை உணர்த்தும் எச்சரிக்கை இது.  --------இடம் நிறைய பேச வேண்டும். என் நிலை தெளிவாக. நான் தெளிய.

சென்ற ஞாயிற்றுகிழமை சுருளி அருவிக்குச் சென்றோம். லேசான சாறல் வேறு.  நண்பர்களாக ஆறு பேர். சரியான குளியல். அதன்பின் இதுவரை சென்றிராத ஒரு பாதையில் சென்ற போது, அருமையான ஒரு இடம் அமைந்தது. வளைந்து செல்லும் ஓடை. சுற்றிலும் அடர்த்தியான மரங்கள். அவற்றைக் கிழித்து உள்வரும் கிரணக் கீற்றுகள். ஓடைக்கரையில் வழுவழுப்பான சரளைக் கற்கள்.  ஓடையின் நடுவே ஆங்காங்கே பாறைகள். அதில் ஒரு பெரிய பாறையின் நடுவில் அமர்ந்து கொண்டு celebrate பண்ணிவிட்டு, ஒரே பாட்டும் கவிதையும் தான். மிகவும் நன்றாக இருந்தது.

இங்கு நசீமும் (Loyola) அவனது தோழர்களும் வந்திருக்கிறார்கள்.  அவர்களை கவனித்துக் கொள்வதில் நேரம் போகிறது.

மற்றபடி வேறு விசேஷமில்லை.

அன்புடன்,
ரமேஷா 

Sunday, December 12, 2010

நண்பனின் கடிதங்கள்

கடிதம் - 3

உத்தமபாளையம்


அன்புள்ள சரவணனுக்கு,

நலம், நலமே விளைக! நலமே விழைக!

உன் வாழ்த்து அட்டை கிடைத்தது. மிகவும் மகிழ்ந்தேன். மிகவும் ரசித்தேன்.

நீ தீபாவளி எப்படிக் கொண்டாடினாய்? தீபாவளியன்று உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.  இந்த முறை தீபாவளி பழைய உற்சாகத்துடன் இல்லை. பால்ய காலத்து நினைவுகளில்தான் கொஞ்சம் குளிர் காய்ந்து கொண்டேன். பெரும்பாலான நண்பர்களால் ஊருக்கு வர முடியவில்லை.  மேலும், கலவரங்களால் சகஜ வாழ்க்கை அக்கம் பக்கத்துக்கு கிராமங்களில் பெரிதும் பாதிக்கபட்டிருந்ததால் தீபாவளியே சோபையிழந்து கிடந்தது. எனது பிறந்த தினத்தைப் போலவே தீபாவளியையும் எளிமையாக, மிக அமைதியான முறையில் கொண்டாடினேன்.  எனது நெருக்கமான நண்பர்களான பகவதிமுத்துவும், ஜெகனும் என் அருகில் இருந்தது சற்று உற்சாகம் ஊட்டியது.  உனது சேய்மை கொஞ்சம் உறுத்தியது உண்மை.

இங்கு தற்போது நிலவும் காலநிலை. நண்பா! நான் இதில் உன்னை விடுத்துச் சுகம் சுகிக்கும் சுயநலமி ஆகிவிட்டேன். கடந்த பருவநிலையில் பெய்த பெருமழை போய், தற்போது மேகங்கள் கவிந்து மோடம் போட்டு திடீரென்று, "சிரித்துப் போன கீதாவாய்" 'சடசடத்து', கையில் பிடிக்குமுன் காணாமல் போகும் சிறுமழையுடன். எனினும் தோழா! எனைப் புரிந்து கொண்டு சுகமூட்டும் உன் சேய்மையில் மனம் வலிப்பது நிஜம். இதே கால நிலை. அடுத்த மாதமே மாறும் என்பது எனக்குத் தெரியும். சூரியனை நாடுகடத்தி குளிரும் மார்கழிப் பணியில் மௌனம் சாதிக்கும் என் இரவுகள் இனிதான் வரவிருக்கின்றன.

சரி சரி! நீ எப்படிப் படித்துக் கொண்டிருக்கிறாய்? நண்பர் ஹரி, எப்படி இருக்கிறார்? மற்றும் நம் பிற நண்பர்கள் எப்படி இருக்கிறார்கள்? எல்லாம் எழுது. உடனடியாக எழுது.

சரவணா! தற்போது என்னிடம் நல்லதாக நான்கு ஆய்வுக்கட்டுரைகள் - புத்தங்கங்கள் இருக்கின்றன. அதைதான் தற்போது படித்துக் கொண்டிருக்கிறேன்.  முதல் புத்தகம் க.நா.சு. எழுதியது.

எங்களது 'பட்டமளிப்பு விழ' என்றைக்கு நடக்கவுள்ளது என்பது பற்றிய சரியான விபரம் தெரிந்தால் எழுது.

செல்வி. விஜயலட்சுமி அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களுக்கு என் அன்பைத் தெரிவி.  தம்பி எப்படி படிக்கிறான்? அவனையும் கேட்டதாகச் சொல். ________ என்ன ஆயிற்று என எனக்கே தெரியவில்லை. .....................

சரி விடு.  நீ என்னென்ன சினிமா பார்த்தாய்? எதாவது நல்ல படம்? தீபாவளியன்று அழியாத கோலங்கள் பார்த்திருப்பாய் என நம்புகிறேன். ரொம்ப top இல்ல? இன்றைக்கு வெற்றிகரமாக 6 - வது தடவையாக 'அபூர்வ சகோதரர்கள்' பார்த்தேன். இன்னும் 4 - தடவை (குறைந்தது) பார்ப்பேன். இந்தத் தியேட்டர்களில் படம் பார்பதே தேவசுகம். 'சோலைக்குயில்' பார்த்தேன்.

மற்றபடி இங்கு சொல்லத்தக்க விஷயங்கள் ஏதுமில்லை.

கொஞ்சம் சீக்கிரம் பதில் போடு.

அன்புடன்,
ரமேஷ் சண்முகம்


மனித மரம்


விழுது போட்டு,
அடிமரம் நீங்க  யத்தனிக்க,
அடி நழுவிப் போகும்.
அந்தரத்தில் கைவீசும்
விழுது.
அரிக்கப்பட்ட அடிமரம்
காற்று நினைந்து
கவலையுறும்.
உள்ளுள் கிளை ஒன்று
தளிர்விட்டு
புது விழுது பரப்பப்
புறப்பட்டு போகும் -
- அடியின் நித்தியம்
  தெரியாது.

ஆரங்கள்

நான், நீ, ஹரி நம்மூவரிடயேயுள்ள உறவு நட்பென்னும் பெரும் வட்டத்திற்குள் சுழன்று கொண்டிருக்கிறது.  அச்சாய், மிக மெல்லிய, கண்ணிற்ககப்படாத மிக நுண்ணிய புரிதலைக் கொண்டு, யாரும் தகர்க்கவோ, தலையிடவோ முடியாது சுழலும் இவ்வட்டத்திற்குள் நாம் ஆரங்களாய் அடைபட்டு கிடக்கிறோம்; ஓருடலோடு உடல் தழுவி, ஓருயிரோடு உயிர் பொருந்தி, கைகோர்த்து, இமை சேர்த்து மகிழ்வாய் சிறை கிடக்கிறோம்; சிறையே சுகம்; யாரும் வெளிவர விரும்பாத, இயலாத, கூடாத ஒரு வினோத சிறை.

யாருக்காகவும் வட்டத்தின் சுழற்சி நின்றுவிடாதபடி, இயக்க விதிகளுக்கப்பாற்பட்டு, வட்டம் சுழகிறது; சுழலும். தன் அச்சில் வெவ்வேறு வித படைப்புகளை சமைத்துக் கொண்டு, புரிதல் மேலும் வலுப்பட, அச்சு நிமிரும். அச்சின் இயைவில், சக்கரம் வளியாய் சுழலும்; படைப்பு எண்ணிறக்கும், அழகுறும். இதில் ஆரங்களற்ற சக்கரமோ, சக்கரத்திலினையாத ஆரண்களோ மதிப்பற்றவை; பயனிழப்பவை... மறந்து விடு... நாம் ஒரே சக்கரத்தின் ஆரங்கள்.
- 12/11/88

Sunday, December 5, 2010

A Letter to a Friend

Dear friend,

Continuing our discussion yesterday, the mail I sent you drained me.

Unlike your observations, I am very happy about this life. It is short, it is absurd and yet is a capricious blend of enjoyable moments and emotional let downs. But no situation, in my opinion, needs to be over emoted with, as I have realised that these are all impermanent; transient moments.

"This too will pass" were the wise words my father gave me when my chips were down. Now, I believe that as my life's defining statement.

I have divided carefully my connections and experiences with the external world into two strata; life as I see it and experience, mostly internal and dictated by my senses, my knowledge and tastes, is the first stratum. The second is, experiences with people - who are external to me, uncontrollable factors, all fired by different passions, mired in different expectations and entangled in different connections with me. This has no exceptions with close or distant connections - wife, parents, siblings, children etc.

They all expect certain things from you and failure of or only a partial accomplishment leads to varying degrees of friction. And the reverse is also true. You expect your wife to love you and be committed to you; you expect your children to be affectionate, respectful and be successful; you expect your siblings to be of help when in you are in trouble; you expect your friends to listen,console and comfort you.

How many times do we satisfy each other? How often and how vainly do we attempt to be reciprocative to these external elements? What vanity?

Contrarily, my connection to the world - known and experienced only through my senses, gives me immense pleasure. New places, unknown people, new circumstances, new food, new music and new knowledge... all excite me endless. I feel I am blessed to have so much to learn and rejoice and cherish. Every passing new experience makes me move one step toward greater happiness and self realisation. A realisation which will consummate with my death which I know is not very far, which makes rejoicing and cherishing more special.

Are there any strings attached? Are we asked to pay and reciprocate with material things and an equivalent emotional currency to be a part of this? None.

I have no regrets of this wonderful life and if I am to die this minute after this mail, I would die a contented man having enjoyed finer moments in both the strata I mentioned. My parents loved me. My wife loved me. My daughter loves me. My friends love and respect me. My God had never let me down. My knowledge has never failed me.

As you could see, my observations are neither philosophical nor pessimistic. My continual longing for love will not diminish the respect and value I have for this life.

What I may regret though is the unbelievably painful middle path that I am treading currently on - between neither being a pure existentialist (stating Sartre's words - Life is absurd and Existence precedes essence) deploring senseless human equations and assuming complete responsibility to one's life; nor with the familial values which we have been fed on for centuries.

That is the dilemma. A painful one. Yet, decisive and cherished.

Saravanan

Sunday, August 29, 2010

Narthaki

Following are few Indian ink sketches I made for my Poem Manuscript, during the college days titled - "Rasanai Vilimbugal'.

நண்பனின் கடிதங்கள்

கடிதம் - 2

உத்தமபாளையம்
17 /08 /89

பேரன்புள்ள நண்பா,

நலம், நலமறிய ஆவல்.

மிக்க அவசரத்தில் வந்ததால் உன்னிடம் சொல்லிக் கொள்ள முடியவில்லை. உன்னை பலதடவை இவ்வாறே வருத்த நேர்ந்ததற்கு மிகவும் வருந்துகிறேன்.

நான் இங்கு திங்கட் கிழமை காலை வந்தேன். மிகவும் தட்பமான சூழ்நிலை. நம் மனப் போக்கையும் விஞ்சும் வண்ணம் வினாடிக்கு விநாடி மனதை மாற்றி, தூறலாய் புன்னகைத்தும், மழையாய் காமம் காட்டியும் காதல் செய்யும் பூமிக்கும் வானத்திற்கும் நடுவே, கள்ளங்கபடமற்ற மக்களுடனும், கால்நடைகளுடனும், கால்வாயுடனும்.



என் சொந்த தேசத்தில் ஒரு விருந்தினனாய், ஒரு பூ மௌன அமைதியுடனும், சுகத்துடனும் காலத்தை களித்து கழித்துக் கொண்டிருக்கிறேன்.

இன்று மதியத்தில் அருகிலிருந்த சுருளி அருவிக்குச் சென்றிருந்தோம். அதன் பெருமையை என்னென்று சொல்ல. மென்மையான தூறலின் போது அருவியில் குளிப்பதென்பது தேவ சுகம் நண்பா! அந்த நீரின் வேகத்தை எதிர்த்து பலம் காத்தும் போதும், தோற்றுத் துவண்டு வெளிவரும் போதும், வந்த பின் அருகில் மென்மையாய் விழுந்து கொண்டிருக்கும் சின்ன வீழ்ச்சியின் மௌனத் தடவலில் மயங்கி நிற்பதும்...

என் மனத் தேவைகளை உடம்பு தீர்த்துக் கொண்டு கர்வப்படுகிறதே! இவையனைத்தும் என் சொந்த தேசத்து சொர்க்கங்கள் எனத் தெரிய வரும்போது... சரவணா! நான் மிக்க தலைக்கனம் பிடித்தவனோ? இருக்கலாம் நண்பா! எனினும் என் சோகங்களை பகிர்ந்து கொண்ட நீ என் சுகங்களையும் சுகிக்க வேண்டாவா?

நல்லது நண்பா! தற்போது உன் கல்வி, கவிதை, கலை, காதல், கனவுகள் ஆகியனவெல்லாம் எப்படி இருக்கின்றன? உனது கவிதைத் தொகுப்புக்கு நிச்சயமாக ஒரு நல்ல முன்னுரையை, கூடிய விரைவில் எழுதி அனுப்புகிறேன். தம்பி கார்த்தி எப்படி படிக்கிறான்? அப்பா, அம்மா எப்படி இருக்கிறார்கள்? நண்பர் ஹரி எப்படி இருக்கிறார்? இவர்கள் அனைவருக்கும் என் அன்பையும் நல விசாரிப்பையும் தெரிவி. மற்றபடி உனது மற்றும் நமது நண்பர்கள் எப்படி இருக்கிறார்கள்? அனைவருக்கும் என் அன்பைத் தெரிவி.

'மெர்க்குரிப் பூக்கள்' படித்தேன். பாலகுமாரன் தன்னை ஒரு பெண் வயப்பட்ட கபடதாரி என்பதை நிரூபித்துவிட்டான். நேரில் பேசலாம். முழுக்க முழுக்க நமக்கு ஒத்து வராத பாத்திரப் படைப்புகள் . நேரில் பேசலாம் . இனிமேல் யாராவது (எவளாவது) பாலகுமாரனைப் பற்றி பெருமையாகப் பேசினால் சும்மா விடாதே .

வேறு விசேஷமில்லை .

அன்புடன்,
ரமேஷ் சண்முகம்

Sunday, August 22, 2010

நண்பனின் கடிதங்கள்

ரமேஷ் சண்முகம் –


என் கல்லூரிக்காலம் தொடங்கி இன்றும் தொடரும் சகம்.

சுயம் நேசிக்கக் கற்றுத் தந்தவன்.
கவிதையும் இலக்கியமும்
'பாலின் தெளி நீராய்' பகுத்தாய வகுத்தவன்.
நடுவே நிலைகொண்டிருக்கும்
காலமும் இடமும்
கவிதைகள் கடிதங்கள் வழியே
கடந்து சென்ற பற்பல நினைவுகளில் இருந்து...


 
கடிதம் - 1

04 /11 /1989

பிரிய சரவணா,

உன் கடிதம் கிடைத்தது. எதிர்பார்த்திருந்த ஓர் ஆனந்தத்தின் கொந்தளிப்பை கொஞ்சம் அதிகமாகவே அனுபவித்தேன். மிக்க நன்றி. 'எதற்கடா மடையா? இதற்குப் போய் நன்றி?' என்கிறாயா? நிஜ நேச பரிமாறலுக்கு விலை மதிப்பதோ அன்றி சம்பிரதாய பாராட்டல்களோ ஏற்புடையதன்று எனினும், ஏமாற்றத் தொடர்வுகளின் மத்தியில் எதிர்பார்த்த நிஜம் தொட, நண்பா! என் ஜீவா சிலிர்ப்பின் வெளிப்பாடு இதில் மட்டுமே சாத்தியமாகிறது. மிக்க நன்றி, நண்பா! நன்றி.


உன் கவிதை படித்தேன். நீ சொல்ல விழைந்த அத்தனை குழப்பங்களும் தெளிவாய் புரிந்தது. இக்குழப்பம் நம் கொள்கைகளின் முரண். ஆனால் யதார்த்தத்தின் நிர்ப்பந்தம். நாம் இருவருமே இதன் கைதிகள். நம் சிந்தனையின் வேகத்திற்குச் சூழல் பயணிக்க இயலாது; அன்றி விழையாதிருக்கலாம். இதற்குத் தீர்வுகளாய் நான் கருதுவது, நம் சிந்தனையின் வேகத்தை கட்டுப்படுத்துவது அல்லது சூழலை நம் வேகத்திற்கு பயணிக்கச் செய்வது. இரண்டுமல்லையேல் சூழலை மறுத்து நம் சிந்தனையின் வேகத்தில் பறப்பது. இதில் முதலாவது தீர்வு முற்றிலும் அசாத்தியம். இரண்டாவது மிகவும் கடினம் மற்றும் வெகுபல காரணிகளை பொறுத்தது. மூன்றாவது, நான் மிகவும் விரும்புவது (நீயும் விரும்பலாம்). இதன் சாத்தியக் கூறுகளை நாம் தெளிவாக பகுத்தாய்ந்து விவாதிக்க வேண்டும். அதை நேரில் செய்யலாம்.

இவ்விடம் என் வாழ்க்கை மிகச் சுலபமாக இருக்கிறது. சரவணா! யாருக்கும் கட்டுப்பட வேண்டாத சூழல். அப்பா அம்மாவின் அருகண்மை. சுலபமான உறவுகள். புரிய முற்படாத, (அதனால் தவறான புரிவுகளுக்குச் சந்தர்ப்பமில்லாத) நம்மை நாமாகவே பார்க்கிற நண்பர்கள். அவர்களுடனான அளவளாவுதல்கள். மரங்களடர்ந்து இருள் கவிந்து கிடக்கும் ஊருக்கு வெளியே போகும் சாலைகளில், சாரல் சப்தத்தூடே மாட்டு வண்டிகளும், கதிரறுத்துக் களைத்தும் சலசலத்து வரும் நாட்டுப்புறப் பெண்களும்,புதிய உற்சாகத்துடன் கிளர்ந்து வர, நண்பா! இந்த இயற்கைக்கு எப்படி நன்றி பயப்பது, என் நிஜத் தோழர்களுக்கு இந்த நிஜத்தை எப்போது பரிசளிப்பது? என் காதலிக்கு இதை பரிசமாய் கொடுப்பது எப்போது?

இயற்கையின் வினோதங்கள் என்னை ஏளனமாய் பார்க்கிறது. நானோ பிரமிப்பில் சக மனிதர்களை ஏளனமாய்ப் பார்க்கிறேன்.

இக்குளிரும் பணியும் எத்தனைக் காலம்? குளிர் தாண்டி கோடை வருமே? கோடை போக குளிர் வருமே? எது நித்தியம்? இது எல்லாமே நித்தியந்தான். இச்சுழற்சி நிச்சயம். சுழல்வுடன் நாமும் சுழல நம் இருப்பும் நித்தியம். இக்கணம் இதோடு சாவதாயினும் அடுத்த கணம் இல்லாமல் போகாது.

நாளை என்பது இன்றின் கர்ப்பம். இன்று - நேற்றின் சமாதி. நாளை மற்றுமொரு இன்றே. இதில் நித்தியமில்லை என்று சொல்ல முடியாது. It is not transient , but periodic . so is our life . வாழ்வை ஒவ்வொரு கட்டமாய் கடந்து போவோம். காலத்துடன் நாமும் போக, கட்டங் கட்டமாய் களித்துச் சிலிர்த்து கால முடிவில் காத்திராமல் காணாமர்ப் போவோம்; காலமாகிப் போவோம்.

ஒவ்வொரு விஷயமும் ஏதாவது மற்றொரு விஷயத்தை பொறுத்தே வரையறுக்கப் படுகிறது. இத் தொடர்பின் புரிதலே வாழ்க்கையை ஜெயித்தல். வாழ்வும் இவ்விதமே. சமூகம் என்று நம்மை பெரும்பாடு படுத்தும் காரணியின் அதிமூலம் இதுவே. நமது வாழ்வு; வாழ்வின் ஒவ்வொரு செய்கையும் சமூகம் என்ற பிற ஒரு காரணியை பொறுத்தே மதிப்பிடப்படுகிறது. இதைப் புரிந்து ஜெயிக்க முற்படுகையில் சாதாரண மனிதம் தென்படுகிறது. இதைப் புரிந்து பொருட்படுத்தாமல் போகையில் நம் சிந்தனை ஜெயிக்கிறது.

எங்கோ ஆரம்பித்து வேறெங்கோ போய் விட்டேன் போல் படுகிறதா? நண்பா, இல்லை நம் நித்தியத் தேடலில் சற்றாழமாய் சிந்தித்து விட்டேன். நீயும் சிந்தியேன். சிந்திப்பாய் - நான் சொல்லா விட்டாலும்.

மற்றபடி, க.நா.சு. கட்டுரைகள் கொஞ்சம் சுவையாகவும் கொஞ்சம் வரண்டதாகவும் இருக்கிறது. மேலும் நண்பர்களுடன் ஊர் சுற்றி அரட்டை அடிக்கவே நேரமில்லாதிருப்பதால் அதைச் சரியாகப் படிக்க முடியவில்லை. சென்ற வாரம் கமல் ஹாசனின் "மய்யம்" வார இதழ் படித்தேன். அதில் ஒரு கவிதை. ரொம்ப ரொம்ப டாப் மாப்பிளே. எழுதுன கம்மனாட்டி யார் தெரியுமா? கமலேதான். அப்படியே பிரம்மராஜன் ஞானக்கூத்தன் trend . அசந்துட்டேன் மாப்பிளே. வாரா வாரம் எழுதுறானாம். ரொம்ப டாப். படிச்சு பார். நாம குமுதத்துக்கு எழுதலாம்னு நெனச்ச கடித்தத இவனுக்கே எழுதலாம் போல இருக்கு. நேரில் பேசலாம் நெறைய.

தம்பியை கொஞ்சம் நன்றாக படிக்கச் சொல். அறிவாளிக்கு அனுபவ அறிவைவிட கேள்வி அறிவே ரொம்பப் பயன் தரும். அவனிடம் நிறையப் பேசு. ஒரு வழிக்குக் கொண்டு வா. இது ரொம்ப ரொம்ப மோசமான stage . பையனை உருப்படி தேற்று.

இங்கு ஜெகன், பகவதி இருவருமே இல்லை. ஜெகன் மெட்ராசுக்கு வந்து விட்டான். பகவதி மதுரைக்கு போய்விட்டான். நான் மட்டும் உள்ளுக்குள் - தனியனாய். என் உலகம் நினைப்பதை ஒரு நிர்பந்தத்தில் மறுத்து, இவ்வுலகம் பார்த்துச் சிரித்து அதனூடேயே மிகச் சுலபமாய், சில சமயம் சுவராசியமாயும், சில சமயம் கட்டாயத்திற்காயும் வாழ்ந்து வருகிறேன். இரண்டு மூன்று கவிதைகள் எழுதினேன்.

பொழுது போகிறது. பொழுதுடனே நானும் போகிறேன்.

மற்றபடி நண்பர் ஹரி, கார்த்தி, விஜி, அப்பா, அம்மா ஆகியோருக்கு என் அன்பைத் தெரிவி. நான் convocation இக்கு முதல் இரு தினங்களில் சென்னை வந்துவிட்டு உடனடியாக திரும்பி விடுவேன். மற்றபடி வேறு விசேஷமில்லை.

உடனடியாக பதில் போட்டால் மகிழ்வேன்.

அன்புடன்,
ரமேஷ்

Sunday, January 24, 2010

240 பீடா

பள்ளியில் படித்து கொண்டிருந்த பதின்ம பருவம். அப்போது என் மிக நெருங்கிய ஒரே தோழனின் பெயர் சுரேஷ். கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு அவன் வீட்டுக்கு முதல் நாளே சென்று விடுவேன்; இரண்டு நாட்கள் கழித்து தான் வீடு திரும்புவேன். அதே போல் அவனும், தீபாவளி, பொங்கலுக்கு எங்கள் வீட்டுக்கு வந்து விடுவான்.

அப்படி ஒரு தீபாவளி. வயது 15 அல்லது 16 இருக்கும் என நினைக்கிறேன். ஆளுக்கொரு சைக்கிள் இருந்தாலும், பல இடங்களுக்கு பேசியவாறே நடந்து செல்வதுதான் எனக்கும் அவனுக்கும் பிடித்திருந்தது. அயனாவரத்தில் இருந்த எங்கள் வீட்டில் இருந்து வாரக் கடைசியில் செல்லும் கன்னிமாரா நூலகமாகட்டும் அல்லது எப்போதாவது செல்லும் மெரீனா கடற்கரையாகட்டும், அப்படியே மெதுவாக பேசிக்கொண்டே நடையை போட்டு விடும் எங்கள் பழக்கம் எங்கள் வீட்டில் தெரிந்திருந்ததால், மதியம் அம்மா தந்த கறிச்சோறு சாப்பிட்டவுடன், "கெல்லீஸ் வரைக்கும் போயிட்டு வர்றோம்பா", என்று கிளம்பியதை யாரும் பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை.


கைனேகாலஜியிளிருந்து கன் மேகிங் வரை பேசிக்கொண்டே கெல்லீஸ் வந்து அபிராமி திரைஅரங்கு வந்து சேர்ந்தோம். கூட்டத்தில் மிதந்து நுழைந்து, இந்தப் பக்கம் நாலு விளம்பர பலகைகள், அந்த பக்கம் நாலு என்று புதுப் படங்களுக்கு வைத்திருந்ததை வேடிக்கை பார்த்து கொண்டே படிகள் ஏறி உள்ளே சென்று, ஏதோ ஜேம்ஸ் பான்ட் படமும் அப்போது ஓடி கொண்டிருந்தது, ஸ்டில் பார்த்து விட்டு, மிதந்து மிதந்து சாலைக்கே வந்து விட்டோம்.

திரையரங்குக்கு எதிர் புறம் இருந்த கடைதொகுப்பின் ஓரம் ஒரு பான்பீடா கடை இருக்கும். கடை எல்லாம் இல்லை அது. குடை. குடையின் கீழ் ஒரு பெரிய சதுர பெட்டி; பேட்டியின் மேல் பற்பல நிறங்களில் டப்பாக்கள். அவை அடுக்கப்பட்டிருந்த அழுக்குப்படிந்த தாம்பாளத்தில் முரட்டு வெற்றிலைகள். அதே அள்வு முரட்டுத்தனமும் அழுக்கும் கொண்ட அவனிடம் தான் நானும் சுரேஷும், அபிராமிக்கோ அல்லது நாங்கள் வழமையாக புத்தகம் வாடகைக்கு பெறும் கந்தன் லென்டிங் லைப்ரரிக்கோ, வரும்போது ஸ்வீட் பீடா போடுவது.

கறிச்சோறு நெஞ்சை நிறைத்துகொண்டிருக்க, மிதப்போடு அவனிடம் சென்று, "ரெண்டு பீடா" என்றோம். அப்போதுதான் அவன் அந்த சரித்திரப் புகழ் வாய்ந்த அந்த கேள்வியை கேட்டான், "240 யா, 320 யா?" நானும் சுரேஷும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டோம். "என்னடா சொல்றே" என்றேன். "நீ என்ன சொல்றே' என்றான் அவன். ஒரு மிகச் சிறிய சிந்தனைக்கு பிறகு, "240 " என்றோம் கோரசாக. அதற்கு முன் வரை அந்த பீடாவை போட்டதில்லை. அதில் என்ன இருக்கும் என்றும் தெரியாது. ஹ, என்ன இருந்து விடப்போகிறது என்றுதான் சொன்னது. அப்போதும் அந்தப் பாவி கேட்டது ஞாபகம் இருக்கிறது, "இதுக்கு முன்னாடி போட்டிருக்கீங்க தான?' ஒரு கெத்தில் ஆமென்று விட்டோம்.




பின் மதிய வெயில். சாலையில் இருந்த கூட்டமெல்லாம் திரையரங்குக்குள் சென்று விட, அந்த தீபாவளி தெரு காலியாக இருந்தது. கையில் வாங்கியவுடன் அந்த பீடாவை வாயில் இடாமல், பேசிக்கொண்டே வீட்டை நோக்கி கிளம்பினோம். அப்போந்திருந்த உமா திரையரங்கு தாண்டி, கூவம் பாலம் தாண்டி மேடவாக்கம் நோக்கி இருந்கும் போது, ஆளரவமற்ற அந்த சாலையில், மிக அசால்டாக பீடாக்களை வாயில் போட்டோம்.

ஓரிரு நிமிடங்கள் சென்றிருக்கும். வழமையான ஸ்வீட் பீடா சுவைக்கும்போது எதையும் வெளியே உமிழ்வதில்லை. அதேபோல, வாயில் ஊறிய சாற்றினை கொஞ்சம் உள்ளே இறக்கியது தான் தெரியும். நின்ற இடத்திலேயே உலகம் தலை கீழாக சுற்றுவது போல் ஆடுகிறது. கால்களுக்கு கீழே தரையையே காணவில்லை; நெஞ்சை அடைக்கிறது; கண்கள் இருள்கிறது; ஒரே நொடியில் உயிர்பயம் வந்து விட்டது. 'சரவணா, தீபவளியோடு நீ காலி' என்று நெஞ்சை ஒரு கையால் பிடித்து கொண்டு, இன்னொரு கையால் நடைபாதையின் ஓரம் நிற்கும் சிமின்ட் தடுப்புகளை பற்றிக் கொண்டு, திரும்பி பார்த்தால், அங்கே நிலைமை இன்னும் மோசம். அதே சிமின்ட் தடுப்புகளை தலையால் முட்டு கொடுத்து கொண்டிருந்தான் சுரேஷ். என்னடா என்று கேட்பதற்குள் வாயில் மூக்கில் எல்லாம் வாந்தி. நிற்க வேறு முடியவில்ல இருவருக்கும். கிளாக் வொர்க் போல ஒரே நேரத்தில் பக்கத்தில் பக்கத்தில் நின்று கொண்டு கூட்டாக வாந்தி எடுத்து கொண்டிருந்தோம்.

அடிவயிற்றை சுருட்டி வெளியில் கொண்டு வந்து விடும் போலிருந்தது.
ஒரு நான்கைந்து தடவைகளுக்கு பிறகு மனிதபிறவியாக நின்று கொண்டு பேசுவதோ வாந்தி எடுப்பதோ இயலாத காரியமாகி, மெதுவாக அப்படி அப்படியே அவரவர் எடுத்த வாந்திகளுக்கு அருகிலேயே ஆளுக்கொரு திசையை பார்த்து கொண்டு, நடைப்பாதையிலேயே செட்டிலாகி விட்டோம். வாயில் வழிந்த எச்சிலை கூட துடைக்க திராணியில்லாமல், உள்மனது சிந்தனையின் வாயிலாக நம்மை தாக்கியது 240 பீடாதான் என்று கண்டுபிடித்தோம் (வெளிமனது முழுதும் சிந்திக்க முடியாமல் வாந்தி).

பஸ்ஸில் ஏறி வீட்டுக்கு மட்டுமல்ல, வேறெங்கும் போவதை நினைத்து பார்த்தாலே மீண்டும் ஒங்கரித்தது. ஆகவே இந்த முகங்களோடு வீட்டுக்கு இப்போது போக முயற்சிப்பதை விட, கொஞ்ச நேரம் சென்றால் தெளிந்து விடும், மீண்டும் நடந்து ஆசுவாசமாக போகலாம் என்று உட்கார்ந்திருந்தோம். இனி வெளியே வருவதற்கு குடலை தவிர வேறொன்றும் உள்ளே இல்லை என்றான பிறகு, வானம் மேலேயும் , பூமி கீழேயும் ஒருவாறு நிலைத்தது.

எழுந்து நின்றால், பயங்கரமாக ஆடியதை ஒருவர் தோள் மீது மற்றவர் கை போட்டுக் கொண்டு, ஒரு கூட்டு முயற்சியில் நகர்ந்து நகர்ந்து டீக்கடை ஒன்றிற்கு வந்து விட்டோம். 'என்ன தம்பிகளா, டீயா' என்று கேட்டவர்க்கு பதிலொன்றும் சொல்லாமல், ஆளுக்கு இரண்டு கிளாஸ் தண்ணீர் முகர்ந்து முகத்தில் அடித்து கொண்டதை பார்த்ததும் புரிந்திருக்கும். ஒன்றும் பேசாமல் இரண்டு ஸ்ட்ராங் டீ போட்டு கொடுத்தார் அந்த நல்ல மனுஷன். குடித்து விட்டு டீக்கடையில் ஒரு மணிநேரம் உட்கார்ந்திருந்தோம் என்று மரியாதையாக சொல்வதை விட அவமரியாதையாக கிடந்தோம் என்று சொன்னாலும் தப்பில்லை.

இருட்டி விட்டது. ஆனால் தெளிந்து விட்டது. நாலு கிமீ தூரத்தை மூன்று மணிநேரம் நடந்து (உருண்டு என்றும் பாடம்) வீட்டுக்கு சென்று சேர்ந்தோம். நாங்களிருந்த கோலத்தை பார்த்து பதறிய அம்மாவை, அப்பா, என்ன புரிந்து கொண்டாரோ, 'விடு விடு, நடந்து களைப்பா வந்துருக்கானுங்க, கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடட்டும்' என்றார். என் அறைக்குள் சென்று இருவரும் விழுந்தது தான், நடுநிசியில் எழுந்து தான் அடுக்களையில் சாப்பாட்டுக்கு உருட்டினோம், மறக்க முடியாத அந்த தீபாவளியில்!

Pandit Venkatesh Kumar and Raag Hameer