Showing posts with label Children of Hunger. Show all posts
Showing posts with label Children of Hunger. Show all posts

Wednesday, September 12, 2018

பசியின் பிள்ளைகள்



Children of Hunger by Karl Iagnemma
சௌல்ட் செயின்ட் மேரி, 1822
துப்பாக்கிப்புகையின் மணம் நீரிணை மேல் மிதந்து வந்த அந்த இரவை அவள் நினைவுகூர்ந்தாள். துடிக்கும் நெருப்புத்தழல்கள் ஆங்காங்கே நிழல் போல் நடனமாடும் வழிப்போக்கர்களைச் சித்தரிக்கின்றன; அவ்வப்போது பழங்குடி இளம்பெண்ணொருத்தி நெருப்பின் முன் தோன்றி ஆடுகிறாள். வியாபாரிகளும் பழங்குடி ஆண்களும் ஒழுங்கற்ற சிறுசிறு வட்டங்களாக அமர்ந்திருக்க, பனிமூட்டம் போல் கொசுக்கூட்டம் மிதக்கிறது. ஒற்றை வயலினின் கிரீச்சிடும் ஸ்தாயி சாம்பல் நிற வானில் கலந்து மறைகிறது.
குருமார் தேவாலயத்தின் அருகே அவர்களது சிறுமரக்குடிலுக்குள் ஒரு முனகல்; ஈரச்சதையின் மேல்விழும் ஓர் அறையின் சத்தம்; சன்னல் வழி நழுவி, தலையணையில் பரந்து கிடக்கும் அவள் வெண்ணிற தலைமுடியைச் சுட்டும் நிலவு விரல். கூர்ந்த கவனத்துடன், மெல்லிய பட்டுச்சருகு போல் சுருக்கங்களுடன் மூடிக்கிடக்கும் தன் கணவனின் கண்ணிமைகளை வெகு அருகே ஜூலியா பார்க்கிறாள். அந்தக் காட்சி அவளை மயக்குகிறது; ஏனோ மேலும் கிளர்ச்சியூட்டுகிறது. அவன் சட்டை அவள் கைகளில் கசங்குகிறது.
அப்போது மரக்கதவின் மேல் யாரோ படபடவென தட்டும் ஒலி: கரடுமுரடான பிரெஞ்சு மொழியில்: டாக்டர், அவசரம், கதவை திறவுங்கள்! தயவுசெய்து, டாக்டர்!
அவள் தனது கால்களை அவன் பின்புறம் பின்னிக்கொண்டாள். முடித்துவிடு, என்றாள்.
என்னை எழுந்திருக்க விடு.
வில்லியம், போகாதே, தயவுசெய்து.
கதவுக்குப்பின் இப்போது சத்தம் உரத்துக் கேட்கிறது, டாக்டர் கொஞ்சம் வருகிறீர்களா? தட்டலில் சமையலறை கொண்டியில் தொங்கும் சட்டிகள் ஆடி ஓசையெழுப்புகின்றன.
ஒரு நிமிடம்! அவள் கால்களை விலக்கிவிட்டு தள்ளாடி எழுந்தான். முட்டாள் பெண்ணே, என்றவாறு தன் கால்சட்டையை அணிந்து கொண்டான். இது போன்ற நேரங்கள் எவ்வளவு முக்கியம் என்று தெரியுமா உனக்கு?
வியர்வை பூத்த புருவத்தை அவள் நீவிக்கொண்டாள். யாராவது கலப்பின ஆள் வயிற்றுவலி என்று வந்திருப்பான்.
வில்லியம் எரிச்சல் தெரிய தனது காலணிகளை அணிந்து கொண்டான். சிறுபிள்ளை போல் நடந்து கொள்கிறாய்; அதற்கேற்றாற்போல் நான் நடத்தினால் குறை மட்டும் பட்டுக்கொள்கிறாய். யாருக்கும் ஒன்றும் ஆகியிருக்கக் கூடாதென்று வேண்டிக்கொள்; உன்னைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காமல்.
தயவுசெய்து அப்படி சொல்லாதே வில்லியம். மனைவியுடன் படுக்கையில் இருக்கச்சொல்வது அப்படியொன்றும் மோசமான வேண்டுகோள் இல்லையே?
பதிலொன்றும் பேசாமல் ஓர் உறுமலுடன் தனது தோல்பையை எடுத்துக்கொண்டு நடந்தவன் கதவருகே சிறிது நிதானித்தான். கழுத்து நனைந்திருக்க, நெற்றியில் கேசம் வியர்வையில் ஒட்டிக்கிடந்தது. ஓங்குதாங்கான உடல்; எளிதில் எரிச்சலடையக்கூடியவன், தனது வேலையில் ஒரு வீம்புடன் ஈடுபடக்கூடியவன். குறிப்பேடுகளில் மணிக்கணக்காக எழுதிக் கொண்டிருக்கும்போது அவனை அழைப்பதோ அல்லது அவனில்லாத நேரங்களில் அவனது பாடப்புத்தங்களை தூசித்தட்ட தொடுவதோகூட அவளுக்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. அறையின் ஒரு மூலையில் தோல் உறையிட்டு ஒருவித வாசனை பரப்பியபடி குவிந்து கிடக்கும் புத்தகங்களை பார்க்கும்போது, ஒருசேர அவனது ஈடுபாட்டையும் அது அவளுக்கு உண்டாக்கும் தொல்லையையும் நினைத்துக் கொள்வாள். சில மாலைகளில், நிமிராமல் உணவை முடித்து, ஒரு வார்த்தையும் பேசாமல் சட்டையை மாற்றிக்கொண்டு படுக்கையில் சரிந்துறங்கும் அவனுக்கு தானொருத்தி இருப்பதே நினைவிருக்கிறதா என்றுகூட சமயங்களில் சந்தேகமாக இருக்கும். ஆனால் குறிப்பேட்டில் விசித்திரமான சொற்கள் நிறைந்த, அவர்களிருவரும் ஆளற்ற கடற்கரையில் தனித்திருப்பதாக, அவன் எழுதி வைத்திருக்கும் கவிதைகளை சிலசமயம் படிக்க நேரும்போதெல்லாம் ஜூலியாவுக்கு எங்கோ ஒருமூலையில் நம்பிக்கை துளிர்க்கும்.
ஒரு வார்த்தையும் கூறாமல் திறந்த கதவை அடைத்தவாறு அவன் வெளியேறினான்.
டெட்ராய்ட், 1860
ஜூலியாவைப் பற்றி பல வருடங்களாக நினைத்துக் கொண்டிருப்பதாக டாக்டர் பெயர்ஸ் கூறிக் கொண்டிருந்தார். காப்பியின் கசப்பான மணம் சுவாசத்தில் வீச அவளருகே சோபாவில் அமர்ந்திருந்தார். நாற்பது வயதிருக்கலாம் என்று ஜூலியா அனுமானித்தாள். ஆனால் தாடியை இளமையாக அலங்காரம் செய்துகொண்டு ஒரு துடுக்கான தன்னம்பிக்கையுடன் பேசுவதை பார்த்தால் குறைத்துச் சொல்லலாம் போலிருந்தது. டாக்டர் ஜேக்கப்ஸனையும் டாக்டர் லீயையும் விட இவர் பரவாயில்லை. அவர்களிருவரும் ஏற்கனவே இரவுணவுக்கான அழைப்பை நிராகரித்து விட்டவர்கள்.
“என்னைப் போல் ஒரு முதிய பெண்ணுக்கு துணையாக வருவதற்கும் தாராள மனம் வேண்டும்,” என்றாள் ஜூலியா. “அறை முழுதும் குடிபோதையில் பழம்பெருமை பேசிக்கொண்டிருக்கும் டாக்டர்கள் நிரம்பி வழியும் இது போன்ற மாலைகள் எளிதில் போரடித்துவிடக்கூடும்.”
“அது என் கௌரவம்,” என்றார் டாக்டர் பெயர்ஸ். “நகரின் அத்தனை முக்கியமான மருத்துவர்களும் இன்றிரவு இங்கிருப்பார்கள்; மட்டுமல்ல – உங்களுக்கொன்றும் அத்தனை வயதாகிவிடவில்லையே. உங்கள் மலர்ச்சியும் இளமையும் அமைந்தால் எந்த இளம்பெண்ணும் அதிர்ஷ்டசாலி என்றே கூறுவேன்.” அவர் பார்வை ஒரு நொடி அவளது க்ரினொலின் உள்ளாடையைத் தடவிச் சென்றது.
ஓரளவு இன்னும் அழகாகவே இருக்கிறேன் என்று அவள் நினைத்துக் கொண்டாள். கூந்தல் நரைத்து விட்டாலும் பளபளப்பும் அடர்த்தியும் குறையவில்லை. அவள் கணவனின் சக மருத்துவர்கள் எத்தனை பேர் ஓர் எதிர்பார்ப்போடு கூடிய ஆர்வத்துடன் அவளைப் பார்த்திருக்கிறார்கள்? ப்ரூசார்ட், மெக் ஆடம், லோவல். கிப்சன் – அந்த அழகிய இளைஞன். வேறுவேறான மனிதர்களாக இருந்தாலும் அவர்களின் பொறாமையின் அச்சு வில்லியம் செய்துவந்த அந்த ஆராய்ச்சி.
“நான் அவருடைய மாணவன்,” தொடர்ந்தார் டாக்டர். “அற்புதமான ஆள் உங்கள் கணவர் என்று எங்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. ஒரு நாள் – எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது – அவர் அன்று எடுக்க வேண்டிய பாடத்திற்கான குறிப்பேட்டைக் கொண்டுவர மறந்துவிட்டார் என நினைக்கிறேன், எந்த உதவியும் இல்லாமல் நினைவிலிருந்தே அன்று இரண்டு மணிநேரம் பாடம் நடத்தினார் என்றால் பாருங்கள். நம்ப மாட்டீர்கள், அந்த பாடத்தின் குறிப்புகளை இன்னும்கூட வைத்திருக்கிறேன்!”
குறுஞ்சிரிப்புடன் தன் கோட் பைக்குள்ளிருந்து ஒரு சிறிய, கசங்கிய செந்நிற தோலட்டை போட்டிருந்த, முனைகளும் முதுகும் வளைந்துபோன ஒரு புத்தகத்தை எடுத்தார். வில்லியம் பார்பர் M. D எழுதிய ‘பசி பற்றிய பரிசோதனைகள் மற்றும் செரிமானத்தின் உடலியல் கூறுகள்’. ஜூலியா அதை வாங்கி புரட்டி பார்த்தாள்.
தான் அதைப் படித்ததில்லை என்று ஒரு சிறு குற்றவுணர்ச்சியுடன் எண்ணிக்கொண்டாள். ஆனால் அதன் பெரும்பாலான பக்கங்கள் அவளை பல இரவுகளில் படுக்கையில் தனியே புரள விட்டுவிட்டு வில்லியம் எழுதிய குறிப்புகளிலிருந்து உருவானவை என்பது அவளுக்குத் தெரியும். மறுநாள் காலைகளில் பேச்சொன்றும் இல்லாமல் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு ராணுவ மருத்துவமனைக்கு அவன் போய்விட்டபிறகு ஜூலியா மேசையிலிருந்து அந்தக் குறிப்புகளை எடுத்து படிப்பாள்.
டாக்டர் மேலே தொடர்ந்தார்: “ஒரு நான்கு வருடங்களுக்கு முன் பேராசிரியர் பென்சன் வீட்டில் நானும் உங்கள் கணவரும் இரவுணவு அருந்திக் கொண்டிருந்தோம் – அப்போதுதான் முதல்முதலாக உங்களைப்பற்றி அவர் பேசிக் கேட்டேன் .”
வியப்பை மறைத்தபடி அவள் கேட்டாள், “என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்ளலாமா?”
“அவரது ஆராய்ச்சிகளுக்கு நீங்கள் அதி முக்கியம் என்றார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது: ‘ஒவ்வொரு இளம் மருத்துவனும் தன் முதல் கருவியை வாங்குவதற்கு முன்பே செய்ய வேண்டியது, நான் செய்தது போல எதற்கும் ஒத்துப்போகிற ஒரு மனைவியைப் அடைவதுதான். அதுவே உங்கள் மருத்துவப்பணியில் செய்யக்கூடிய ஆகப்பெரிய முதலீடு.”
சட்டென்று எழுந்த சினம் ஜூலியாவிற்கு விரக்தியாக மாறியது. ஆம், முதலீடுதான். மிகச்சரியான வார்த்தை; மிகச்சரியான வர்ணனை. அவனது பணி முன்னேற்றத்திற்கு ஈடாக அவளுக்கு வில்லியம் என்ன கொடுத்தான்? நிச்சயமற்ற கணங்களை எண்ணிக் காத்திருந்த கணக்கற்ற நாட்கள்; ஒவ்வொரு சிறு சந்தோஷத்தையும் தொடர்ந்து ஆவலோடு ஓடி ஏமாற்றத்திலும் வேதனையிலும் முடிந்த நாட்கள். ஒரு மகன், ஜேக்கப், பிறந்ததனால் இந்த ஏற்பாடு அவ்வளவு ஒன்றும் மோசமில்லையோ என்னவோ?
“உங்கள் அன்பிற்கு நன்றி. நான் கிளம்ப வேண்டும், என் மகன் அங்கே இரவுணவிற்கு வருவதற்குள் நான் அங்கிருக்க வேண்டும்.”
“சரி, வண்டியை வரச் சொல்கிறேன்,” தடுமாறியபடி எழுந்தார் டாக்டர் பெயர்ஸ்.
புத்தகத்தை வாங்கும்போது அவள் கையை உரசிச்சென்றது அவர் கை. அந்த கணநேர வெம்மை அவள் கையில் படிந்திருக்க, முன் கதவைச் சாத்திக்கொண்டு அவர் வெளியேறும் சத்தம் கேட்டபிறகு அவள் மெல்ல படியேறி வில்லியமின் நூலகத்திற்குள் நுழைந்து கதவைச் தாழிட்டுக்கொண்டாள். சன்னமான செந்நிற ஒளி அரைகுறையாக மூடப்பட்டிருந்த சன்னல்வழி அறைக்குள் வழிந்து கிடந்தது. ஓர் ஈர மற்றும் பைப் புகை வாசம் காற்றில் விரவிக் கிடந்தது. அவன் கைவிரல் ரேகைகளைப்போல சன்னமான சுருக்கங்களுடன் பலவகையான மருத்துவ குறிப்பேடுகள்; தோல் அட்டையிட்ட புத்தகங்கள். குளிர் அறையை நோட்டம்விட்ட ஜூலியாவிற்கு அவளது முதலிரவு நினைவில் தோன்றியது. படுக்கையில் போர்வைக்குள் உடலெல்லாம் வலிக்க அவள் படுத்திருக்கிறாள்; வில்லியம் ஜன்னலுக்கு அருகே நின்றுகொண்டு தனது இதயத்துடிப்பை ஸ்டெதாஸ்கோப் வைத்து தானே கேட்டு கொண்டு தொலைவிலெங்கோ பார்த்துக்கொண்டு மேற்சட்டையில்லாமல் நின்றுகொண்டிருக்கிறான். என்ன ஓர் அற்புதம், அவள் எண்ணிக்கொண்டாள், எத்தனை உறுதியுடன் இருந்திருக்கிறேன், எவ்வளவு நம்பிக்கை, என்னுடனே எத்தனை போராட்டம். இருந்தும், இதோ இந்த இரவில் இங்கு நின்றிருக்கிறேன். மதகுருக்கள் சொல்வதுபோல் உலகமொன்றும் அத்தனை பயங்கரமானதில்லை போலும்.
***
மரக்குடிலின் நோயாளிகளுக்கான அறையில் அவர்கள் அடிபட்ட அந்தப் பையனைக் கிடத்திவிட்டுப் போன பிறகான நான்கு நாட்களுக்கு அவன் காய்ச்சலுக்குள் விழுவதும் நினைவு திரும்புவதுமாகக் கிடந்தான், ஏதேதோ பிதற்றிக்கொண்டும் உதடுகள் வலியில் சுளித்துக் கொண்டும். ஓரிரு வேளைகளில் அவன் அம்மாவென்று அலறியதில் ஜூலியா திடுக்கிட்டு ஓடிப்போய் பார்த்ததுமுண்டு. ஐந்தாம் நாள் காலை, அறையின் கதவுவழியே பார்த்தபோது அவள் கணவன் பையனின் காயத்தை துடைத்து மருந்திட்டுக் கொண்டிருக்கக் கண்டாள்.
கதவை சாத்திவிட்டு சாப்பிட்ட பாத்திரங்களைச் சேகரித்துக்கொண்டு கழுவச் சென்றாள் . குடில் சிறியதுதான். ஒரு சேமிப்பறை, ஒரு புகை படிந்த சமையலறை, ஒரு சிறிய படுக்கையறை மற்றும் நோயாளிகளை வில்லியம் பார்க்கும் அறை – அனைத்தும் நடுவிலிருந்த கணப்புமேடையைச் சுற்றி. தனியே மேசையேதும் இல்லாததால், சமையல் மேடையின் மீதே ஜூலியாவின் பொக்கிஷங்கள் வீற்றிருந்தன; பீங்கான் குடுவைக்குள் பதப்படுத்திய போன்சாய் மரமொன்று, தலையை சாய்த்துப் பார்க்கும், பஞ்சடைக்கப்பட்ட சிறுகுருவியொன்று; குழலூதும் தேவதை படம் போட்ட சிறுபெட்டி ஒன்று. தனது வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் பார்க்கவென்று அவள் டெட்ராய்ட்டில் இருந்து கொணர்ந்தவை. ஆனால் ராணுவ மருத்துவமனையில் வெறும் சிப்பாய்களும், வியாபாரிகளும், கருநிற தலைமுடி கொண்ட பழங்குடிமக்களும் புழங்குமிடத்தில் அவள் வீட்டிற்கு ஏது விருந்தாளிகள்? அவள் மட்டும் வீட்டின் மரப்பலகைகளின் ஒவ்வொரு முடிச்சையும் கீறலையும் அறிந்துகொள்ளவே நேர்ந்தது.
தண்ணீரைக் கொதிக்கவைத்துவிட்டு பாத்திரங்களை சுத்தம் செய்தாள். இனி வில்லியமின் கையுறைகளை தைக்க வேண்டும், படுக்கையறையை கழுவி சுத்தம் செய்யவேண்டும். பொதுவாக வெறுத்துப்போக வைக்கும் இந்த வேலைப்பட்டியல் அன்று ஏனோ வயிற்றில் ஒரு அமிலச்சுரப்பாக, வாயில் கசப்பாக உருவெடுத்தது.
பாத்திரங்களை அடுக்கி வைத்துவிட்டு, வில்லியமின் மேசையிலிருந்து தாளொன்று உருவி கடிதமெழுதத் தொடங்கினாள்.
ஆகஸ்ட் 10, 1822
அன்பும் அற்புதமுமான என் அழகிய சூசனுக்கு,
இன்று காலை ஒரு நூறு அணில்கள் என் வயிற்றுக்குள் ஓடி விளையாடுவதுபோல் ஒரு படபடப்புடன் கண் விழித்தேன். ஹென்றியை நீ சுமந்தபோது இப்படித்தான் உனக்கும் இருந்ததா? விரைவில் எழுதுவாயா? தினமும் எழுதுவேன் என்றாய், நான்கே கடிதங்கள்தான் வந்தன. என்ன கொடுமை! தனியே பேசிக்கொண்டு அலைகிறேன் என்பது உனக்கு தெரியும்; அதைவிட உன் கடிதங்களை படிப்பது மேலென்றும் உனக்குத் தெரியும். இருந்தும் இப்படிச் செய்கிறாய்!
எங்களுடன் ஒரு கனடிய படகோட்டும் பையனொருவன் இருக்கிறான், வயிற்றில் சுடப்பட்டு படுகாயத்துடன். சாவுடன் போராடிக்கொண்டு. வில்லியம் அவன் நினைவாகவே, அவனையே கவனித்துக்கொண்டு இருக்கிறார். டெபோராவின் தமக்கை மகனைத் தெரியுமல்லவா – அந்த உயரமான முரட்டுச் சிறுவன்? இந்தப் பையனும் அவனை போல…
அறைக்குள்ளிருந்து வெளிப்பட்ட வில்லியம் இரத்தக்கறை படிந்த துணியை மேசைமேல் எறிந்துவிட்டு, கோட்டை எடுத்து அணிந்துகொண்டான்.
ஏதோ சத்தம் கேட்டதே? பையன் விழித்திருக்கிறானா? என்றாள் ஜூலியா.
அவன் படுக்கையருகே மணி வைத்திருக்கிறேன். அடித்தானென்றால், வெண்ணிறமான உணவு ஏதேனும் கொடு – ரொட்டி, பால், உருளைக்கிழங்கு, பாலாடைக்கட்டி இப்படி. புரிந்ததா?
வெண்ணிற உணவு.
வில்லியம் தனது காற்சட்டைப்பையை தட்டிக் காண்பித்தான். இந்த வீட்டில் ஒரு சுத்தமான கைக்குட்டைகூட இருப்பதில்லை…
கோட் பொத்தான்களை அணிந்துகொள்வதை பார்த்தாள். அவன் கை மணிக்கட்டில் இரத்தக்கறையை பார்த்தாள். நாளை துவைத்து வைக்கிறேன், என்றாள்.
அவளை உற்றுப்பார்த்தான். அவன் பார்வை அவள் எழுதிக்கொண்டிருந்த கடிதத்தின் மேல் விழுந்தது. உன் அக்காவையும் எட்வர்டையும் கேட்டதாக சொல்லு. புதுப் பத்திரிக்கைகள் உனக்கு அனுப்பச் சொல்லு. எவ்வளவு நாள்தான் நீயும் பழையதையே படித்துக்கொண்டிருப்பாய்?
ஒரு கணம் அன்று காலையில் எழுந்த படபடப்பை அவனிடம் சொல்லவேண்டுமென தோன்றியது. வேறொன்றும் இல்லை, எல்லாம் பதட்டமென்று ஏதாவது தூக்க மருந்தைக் கொடுத்து விடுவான் என்று பட்டதால் சொல்லும் எண்ணத்தை கைவிட்டாள். எனக்கே உறுதியாகட்டும், பின் அவனிடம் சொல்லி அவன் முகம் மலர்வதை பார்க்கிறேன்.
சரி, எழுதுகிறேன். உங்கள் மருத்துவப் பத்திரிக்கைகள் வந்திருந்தாலும் அனுப்பச் சொல்கிறேன்.
எங்கோ நினைவாக புன்னகைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி ஏதோ நினைவாகவே நடந்துபோகும் தன் கணவனைப் ஜன்னல் வழியே பார்த்தாள்.
அவர்களின் முதல் சந்திப்புகளிலேயே அவனுக்குள்ளிருந்த இறுகிய தன்மையை அவள் உணர்ந்தாள். ஆனால் அவன் கடிதங்கள் அவளுக்குப் பிடித்திருந்தன. ‘இன்றிரவு நான் தனிமையில் நடந்து வரும்போது விண்மீன்களை பார்க்க விரும்பவில்லை; உன் கண்களின்முன் அவை எம்மாத்திரம்?’ அன்பின் வெளிப்பாட்டில் சிறிதென்ன பெரிதென்ன? அவனால் இன்னும் அவள்மேல் ஈர்ப்புடனும் அன்புடனும் இருக்கமுடியுமென்று அவளுக்குத் தோன்றியது.
டெட்ராய்ட் நகர் மருத்துவக்கழகத்தின் விருந்து நடன முதல் சந்திப்பின்போது அவள் கூறியது அவளுக்கு நினைவுக்கு வந்தது. மருத்துவர்கள் தேவதைகள்; வீழ்ந்த தேவதைகள். வலியும் துயரும் கொண்டு வரும் தேவதைகள். வெறும் ஒரு பார்வையிலேயே துக்கம் தருவிக்கக் கூடியவர்கள்… அவன் சங்கடத்துடன் புன்னைகைத்தான். ‘என்னைப் பார்ப்பது எப்படியிருக்கிறது?’ அவளும் பதிலொன்றும் சொல்லாமல் புன்னைகை செய்திருக்கிறாள். அவனது முப்பத்தி ஐந்து வயதிற்கு அவள் பதினான்கு வருடங்கள் இளையவளாய் இருந்தும், அபாரமான தன்னம்பிக்கை கொண்டிருந்தாள். ஆட அழைப்பான் என்ற எதிர்பார்ப்பை பொய்யாக்கிவிட்டு அவன் திடீரென்று எழுந்து, விரைந்து நடன அரங்கை விட்டு வெளியேறியதும் நடந்தது.
இப்போது அவனது மேசைக்குள்ளிருந்து அவனது குறிப்பேட்டை எடுத்து நேற்றைய இரவின் பதிவை படிக்கத் தொடங்கினாள்.
ஆகஸ்ட் 9, 1822
இன்று மாலை பையனின் சுரம் நின்றது; காயத்தின் வீச்சமும் குறைந்திருக்கிறது. இரத்தத் தமனியின் அழுத்தத்தைக் குறைக்க பதினைந்து அவுன்ஸ் இரத்தம் வெளியேற்றப்பட்டது. காயத்தின் பிளவைப் பிரித்து ஆராய்ந்ததில், பட்டாணி அளவுள்ள மூன்று ரவைக்குண்டுகள் தென்பட்டன. காய்ந்த வெளித்தோலை பிரித்தெடுக்க தொடங்கியிருக்கிறது. காயம் பொருக்கோடி இப்போது பார்ப்பதற்கு சுருக்கங்கள் நிறைந்த ஒரு வாய் போலிருக்கிறது. நாளை காலை வெளிச்சத்தில் அவன் உணவெடுத்த பிறகு, வெளியில் கொந்தளிக்கும் கடலைப் போல் நொதித்துப் புரளும் அவன் வயிற்றுக்குள் பார்க்கவேண்டும்.
பையனின் உடல்நிலை பிரமாதம்: அவனது செரிமான உறுப்புகளின் உட்புறச் செயல்பாட்டை என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது. டாக்டர் டங்க்ளிசனோ அல்லது டாக்டர் மகெண்டியோ அவர்களது கனவில்கூட இப்படியொரு வாய்ப்பை கற்பனை செய்துபார்த்திருக்க முடியாது.
ஹார்ன்பெக்குக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கடலை நுரைக்கச் செய்யும்
அந்தக் காற்றில்
மலைக்குன்றின் முகட்டில் நின்றேன்
கடவுளின் பார்வையின் கீழ், தனியே
என் மன்றாடல்கள்
நீள்வெளிவானின் விரிவில்
கலந்து மறைய
அழைப்பு மணி ஒலித்தது. ஒரு கணம் தானில்லாத வில்லியமின் கவிதை உறுத்த, குறிப்பேட்டை மூடிவைத்துவிட்டு நோயாளிகள் அறைக்கதவை திறந்தாள்.
பையன் விழித்துக் கொண்டுதானிருந்தான். கண்கள் சுரத்தால் கனத்திருந்தன. அவன் தொடைகள் மேல் ஒரு போர்வை போர்த்தியிருக்க, வெறும் கால்களும் கைகளும் சிறிய கட்டிலின் இருபுறமும் விரிந்து கிடந்தன. கறைபடிந்த சாம்பல்நிற கட்டு இடையைச் சுற்றி.
காலை வணக்கம், என்றாள். இப்போது எப்படியிருக்கிறது?
அவளை வெறித்துப் பார்த்தான். ஒரு பிணத்தைப் போல.
அவன் கன்னங்கள் சதைப்பிடிப்புடன் வெளுத்திருந்தன. மெல்லிய ஆரஞ்சுநிற தாடி. வளைந்த உதடுகளுக்குள் முன்னிரண்டு பற்களில்லை. கழுத்திலிருந்து இருபுறமும் விரைத்த தசைநார்கள் செம்புள்ளிகள் படர்ந்த தோள்களில் பிணைந்தன. பதினேழு அல்லது பதினெட்டு வயதிருக்கலாம். பையனுமில்லாமல் இளைஞனுமில்லாமல், ஏதோ ஒரு பக்கத்திற்கான தகர்ந்த இலட்சியம் போல். அவன் பெயர் கில்லாமோ ரோலு.
ஒரு குவளை தண்ணீர் வேண்டுமா?
ரம். பற்களில்லாத இடைவெளியினூடே வார்த்தைகள் துப்பியதுபோல் விழுந்தன. அல்லது பிராந்தி. கொஞ்சம் மாமிசம் .
எங்களிடம் ரம் இல்லை. என்னால் பாலும் ரொட்டியும் கொண்டு வர முடியும், என்றாள்.
அதற்கு நீ என்னை இன்னொரு தடவை சுட்டுவிடலாம். சிரிக்க முயற்சி செய்தான். சிரிப்பு தவிர்க்கவியலாத இருமலில் முடிந்தது. சமையலறைக்குப் போகத் திரும்பினாள் ஜூலியா.
கொஞ்சம் இரு. இரு விரல்களை உயர்த்தினான். நான் அதைப் பார்க்கவேண்டும்.
அவள் தயங்கினாள். எங்கே இந்த வில்லியம்? மருத்துவமனையில் காசநோயில் உருக்குலையும் படைவீரர்களைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். அல்லது, சதுப்புக் காட்டுக்குள் ஏதேனும் வேர்களைத் தேடிக் கொண்டிருக்கலாம். அல்லது படைவீட்டுக்குள்ளே, கைகளை பின்னே கட்டிக்கொண்டு, அவர்களது வீட்டிலிருந்து ஒரே நேரத்தில் நூறடியோ அல்லது ஆயிரம் மைல் தூரத்திலோ நடந்து கொண்டிருக்கலாம்.
கட்டிலருகே முக்காலியை நகர்த்திப் போட்டு அமர்ந்தாள். அவனது இடையைச் சுற்றியிருந்த கட்டுத்துணியை மெல்ல அவிழ்த்தாள். பின் காயத்தின் மேல் காய்ந்துபோயிருந்த துணியையும் விலக்கினாள்.
மெதுவே, பையன் முனகினான். வலிக்கிறது.
பாத்திரத்தை எடுத்து அவன் வயிற்றின் மீதிருந்த துணியின் மீது நீரைச் சொட்ட விட்டாள். வெண்ணிற வயிற்றுப் பிரதேசத்தில் நீலநிற நரம்புகள் குறுக்கும் நெடுக்கும் பரவிக் கிடந்தன. துணியைப் பிய்த்து எடுத்தாள். இன்னும் ஆறாத, மென்சிவப்பில் திறந்துகிடக்கும் காயம் நெஞ்சின் கீழே தோன்றியது. காயத்தைச் சுற்றிலும் தோல் உரிந்தும், நெருப்பில் பொசுங்கியது போல் கறுத்துமிருந்தது. திறந்து கிடந்த காயத்திற்குள், வளைந்த நெஞ்செலும்பொன்றின் கீழ் செந்நிற நுரையீரலின் நுனி, ஜூலியா பார்த்துக் கொண்டிருக்கும்போதே சுருங்கி, விரிந்தது.
அவள் கணவனின் குறிப்பேட்டின்படி அது ஒரு விபத்து. துப்பாக்கியின் கோளாறால் ஏற்பட்ட வெடிப்பில் துணிச்சுருளைகளும், பறவைகளின் மிச்சங்களும் அவனது நெஞ்சுக்குள் புதைந்து விட்டன. அவனது சட்டை துப்பாக்கிக்குழலின் நெருப்பில் எரிந்துவிட்டது. வில்லியம் எழுதியிருந்த அன்றைய இரவின் குறிப்பு சுருக்கமாகவும், கச்சிதமாகவும் இருந்தது:
காயத்தின் வெளிப்புறம் இருந்த பிறபொருட்கள் துடைத்து சுத்தம் செய்யப்பட்டன. நொதித்த பௌல்டிஸ் மற்றும் அம்மோனியா கரைசலின் கலவை பூசப்பட்டது. காயத்தை பரிசோதிக்கையில், உள்ளிருந்து ஏறக்குறைய செரிமானமாகியிருந்த, கஞ்சி போன்றதொரு திரவம் வழிந்து தரையில் சிந்தியது. நிச்சயம் நாளைக் காலைக்குள் இறந்துவிடுவான்.
அதை மூடிவிடு, அவன் மூச்சிரைத்தான்.
அவள் ஒரு புது கட்டுத் துணியை காயத்தின்மேல் வைத்தாள். காயத்தின் வீச்சம் அவன் உடலின் வெங்காய வாடையுடன் கலந்து வீசியது.
வலது கையை நெஞ்சின் மேல் வைத்தவாறு கேட்டான், எப்பொழுது துடுப்பு வலிக்குமளவிற்கு எனக்கு தெம்பு வரும்?
எனக்குத் தெரியாது, மன்னித்துக் கொள்.
அவள் கையிலிருந்த அழுக்கு கட்டுத்துணியைப் உற்றுநோக்கினான். உன் பேரென்ன?
ஜூலியா.
ஜூலியா, திரும்ப சொல்லிக்கொண்டான். இங்கு கிடந்த இந்த இரவுகளில், உன்னை என் கனவுகளில் பார்த்திருக்கிறேன். நிச்சயமாகவே நீயொரு தேவதைதான்.
----------
அந்த குதிரைவண்டி ஜெபர்சன் வீதியில், கறுப்பினத்தவரின் தேவாலயம் தாண்டி, வறியவர்கள் விடுதியையும், காலியான மீன் சந்தையும் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது. “அவரது மறைவுச் செய்தி என்னை மிக்க சோகத்தில் ஆழ்த்தி விட்டது,” டாக்டர் பெயர்ஸ் சொன்னார். “அன்புக்குரியவர்களுக்கு மட்டுமல்ல, அவரது மறைவு இந்த நகருக்கும், மருத்துவத்துறைக்குமே கூட பேரிழப்பு.”
ஜூலியா ஒன்றும் சொல்லாமல் தலையசைத்துக் கொண்டாள்: ஓர் ஒத்திகை பார்க்கப்பட்ட, பண்பட்டதோர் மௌனம். மழை தூறிக் கொண்டிருக்கும்போதும் தொலைவில் எங்கோ தீயணைப்பு மணி ஒன்று ஒலிக்கிறது.
“இறக்கும்போது அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தாரா என்ன?” குறுகிய இருக்கைகளினூடே குனிந்து டாக்டர் பெயர்ஸ் கேட்டார். “உங்களுக்கு சிரமமொன்றும் இல்லையென்றால் சொல்லுங்கள் – ஏனென்றால் இதெல்லாம் உங்கள் தனிப்பட்ட விஷயம். அவர் திடீரென்று இறந்து போனார் என்றுதான் நான் கேள்விப்பட்டேன்.”
“அவர் நீண்ட நாட்கள் உடல்நலமின்றி இருந்தார்.”
டாக்டர் பெயர்ஸ் ஓர் எதிர்பார்ப்புடன் தலையாட்டிக் கொண்டார். ஆனால் மேற்கொண்டு ஏதும் பேசாமல் ஜூலியா தொலைவில் எங்கோ பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். நகரின்மேல் அந்தி ஓர் தெளிவற்ற மூடுபனி மூட்டம் போல் கவிந்துவிட்டது. நடைபாதையின் விளக்குத் தூண்களிலொன்றின் மேல் ஏணியில் நின்றவாறு விளக்கை ஏற்றுமொருவனின் கைகள் வெளிச்சத்தில் பளிச்சிடுவதை ஜூலியா கண்டாள். வில்லியம் இறந்தபோதிருந்த உடல் அவனுக்கு.
ஈமச்சடங்குகள் முடிந்தபிறகு அவளது மகன் ஜேக்கப்புடன் படியேறி வில்லியமின் படிப்பறைக்குச் சென்றதை அவள் நினைவுகூர்ந்தாள். சிதறிக் கிடந்த குறிப்பேடுகளை அடுக்கியவாறே அவனது கிழிந்த பழைய முகவரிப் புத்தகத்தைத் தேடினாள். மேசைக்குப் பின்னால், செடார் மரப்பெட்டிக்குள் அறுவை சிகிச்சைக்கு பயன்படும் பட்டு நூலினால் கட்டப்பட்ட நான்கு காகிதக் கட்டுகளை கண்டுபிடித்தாள். அவனது நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு மொடமொடத்துப் போன அந்தக் காகிதங்களைப் புரட்டினாள். பேராசிரியர்களுக்கோ, பதிப்பாளர்களுக்கோ அல்லது எந்தவொரு மருத்துவருக்குமோ, யார் யாருக்கெல்லாம் அனுப்பிய அத்தனைக் கடிதங்களுக்கும் ஒரு பிரதி அவன் எடுத்து வைத்திருந்தது போலிருந்தது. பெட்டிக்கு அடியில், அவளது அழகிய எழுத்தில் எழுதப்பட்ட சிறிய கடிதக்கட்டு ஒன்றும் தென்பட்டது. ஒன்றை உருவி சத்தமாகப் படித்தாள்.
அக்டோபர் 22, 1819
மிக இனிய, ஆனால் வருத்தம் தரும் விதம் தொலைவிலிருக்கும் வில்லியமிற்கு,
குளிர்காலம் துவங்கிவிட்டது. அன்னங்களும், கொக்குகளும், வாத்துகளும் தெற்கு நோக்கி பறந்துவிட்டன, இலையாடையின்றி நிர்வாணமாக நிற்கும் ஓக் மற்றும் மேப்பிள் மரங்களின் குளிர்தென்றலின் வழியனுப்புதலுடன். பறவைகள் தேடும் இதம் காரணமாக இருக்கக்கூடும், பிற மிருகங்களைப் போல் நமக்கும் இதமும் சுகமும் தேவையென்றாலும், நமது ஆசைகளை நாம் ஒழுக்கத்தின் பாற்பட்டு கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது அல்லவா? இதுவொரு கொடுமை என்று நான் சொன்னால் நீ ஏற்பாய்தானே?
உன்பால் பிரிய அர்ப்பணிப்புடன்,
ஜூலியா
தோன்றிய புன்னகை ஜூலியாவின் ஒரு சிறிய கேவலில் முடிந்தது. இன்னொரு கடிதத்தை எடுத்தாள்.
ஜூலை 9, 1820
என் பிரிய ஜூலியா,
நமது பிரயாணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டேன். வாக்-இன்-த-வாட்டர் என்ற கப்பலில் ஆகஸ்ட் 7ம் தேதி காலை 6.15க்கு நாம் கிளம்புகிறோம். மறுநாள் மாலை ராணுவ தளத்திற்கு சென்று சேர்வோம். நமது இல்லத்திற்கு தேவையான தட்டுகள், பாத்திரங்கள், துணிகள், திரைச்சீலைகள் கொண்டு வருவாய் என நம்புகிறேன்.
என் அன்பே, என் உடைமையே. நீ இல்லாதவரை நான் எப்படி முழுமையாக முடியும்? என் இதயம் உன் குரலின் நினைவில் துள்ளிக் கொண்டிருக்கிறது. என் குருதி உன் காலடி ஓசையின் வரவில் கொதிக்கிறது.
உன்பால் அர்ப்பணிப்புடன்,
வில்லியம்
அந்தக் கடிதத்தை அவள் கசப்பும், அற்புதமும், துக்கமும் ஒருசேர்ந்த கலவையான உணர்ச்சியுடன் நினைவுகூர்ந்தாள். வில்லியமிடம் அன்பு இருந்தது, பார்வைகளிலும், சில சைகைகளில், கடிதங்களில், சில வரிகளில் மட்டுமே வெளிப்படும் வண்ணம். எப்படி அவளால் அவனது கடுமையை ஏற்றுக் கொள்ளவும் விரும்பவும் முடிந்தது என்று இப்போது நினைத்துப் பார்க்கும்போது ஜூலியாவிற்கு திகைப்பாக இருந்தது. ஆனாலும் புருவங்கள் முடிச்சிட இதயத்தின் இறுக்கத்தை இளக்குவது போல் அவன் பார்க்கும் கடும்பார்வை அவளுக்கு விருப்பமாகவே இருந்திருக்கிறது. அவளது இளமையும், எளிதில் உணர்ச்சிவசப்படும் தன்மையும் அவனது கறார்தன்மையும், முதிர்ந்த அணுகுமுறையும் ஒன்றையொன்று சமன்செய்து கொண்டன போலும் என்று தனக்குள் அவள் சொல்லிக்கொண்டாள். உணர்ச்சிக் கிளர்வும் இளமையும் எதனாலாவது சமன் செய்யப்பட வேண்டுமா என்ன? துக்கத்தை மகிழ்ச்சி சமன் செய்து நிம்மதியை அளித்துவிட முடியுமா என்ன?
“அந்தப் புத்தகம் பிரசுரமாகி முப்பத்தியைந்து வருடங்களாகி விட்டன என்றால் நம்பக் கடினமாக இருக்கிறது.” தலையை வியப்பில் அசைத்தவாறு மழை சடசடக்கும் சன்னல் கண்ணாடியைப் பார்த்தார் டாக்டர் பெயர்ஸ். “நான் சின்னஞ் சிறுவன். முழுகால் சட்டைகூட அணிந்திருக்கவில்லை.”
ஒருவேளை அவள் மிக சுயநலமியோ? சொல்லப் போனால், வில்லியமின் படைப்பு அவளை பாரிஸுக்கும், ஹாம்பர்கிற்கும் அழைத்துச் சென்றிருக்கிறது; மென்சிவப்பு முத்துச்சரமும், தந்த கூந்தலணிகளும், அழகிய மொரோக்கோ வேலைப்பாடுகள் கொண்ட விலையுயர்ந்த கண்ணாடி பாத்திரங்களும்… மேலும், அவளுக்கு ஒரு மகனை, ஜேக்கப் இல்லாத வாழ்வை, ஒரு கணம் கற்பனை செய்ய முயற்சித்தாள். அந்த எண்ணம் அரைக்கணம் கூட நீடிக்காமல் கசப்பான சுழலாய் உடனே மறைந்தது. டாக்டர் பெயர்ஸை நோக்கிப் புன்னகைத்தாள்.
“இன்றிரவு நீங்கள் கொண்டாடப்படுவீர்கள்,” அவர் கூறினார். “அவரது பிரபலமான ஆராய்ச்சிகளின் ஒரே சாட்சி நீங்கள் அல்லவா! அந்தச் சிறுவனைத் தவிர.”
“நான் ஒரு சாட்சியல்ல.”
டாக்டர் பெயர்ஸ் கவனமாக தலையசைத்தார்..
“அது முழுக்க முழுக்க, நோயாளிகள் அறையில் வில்லியமும் அந்தப் பையனும் சார்ந்த விஷயம்.” ஜூலியா தோள்களை குலுக்கினாள்: ஒரு தெளிவற்ற, நிராதரவான பார்வையுடன். “அவ்வளவாக என்னால் அந்த நாட்களை நினைவுகூர முடியவில்லை.”
****
செப்டம்பர் மாதம் நீரிணையிலிருந்து குளிர்காலக் காற்றைக் கொண்டு வந்தது. ஜூலியாவை கோடைக்காலம் முழுதும் வாட்டிய சுரத்தையும் நடுக்கத்தையும் போக்கியது. காலையுணவுக்குப் பின் போர் வீரர்கள் தங்குமிடம்தோறும் தொடர்ந்து சென்று அவர்களுக்கு வேண்டியன விற்கும் சட்லர்கள் கடையில் மாவு, முட்டைகள், சில அடி நீளத்திற்கு துணி கொஞ்சம் வாங்கிக்கொண்டு, மெதுவே நதியோர புல்வெளியில் நடந்தவாறே, மெல்லிய பருத்திச் சட்டைகளும் கோவணங்களும், கால்களில் மொக்கஸின் சப்பாத்துகளும் அணிந்த நாடோடிகள் தங்கள் படகுகளில் பொருட்களை ஏற்றுவதை பார்த்தாள். அணிந்திருந்த தடித்த கம்பிளியாடையின் கனம் அவளைச் சோர்வால் நிறைத்தது; அவள் நடுங்கினாள். நீரிணைக்கு எதிரே, அவர்களது குடிலின் புகை கசியும் சிம்னியும், மேற்கூரையும் தெரிய, மனம் சிறிது தெளிந்தது; பின் வில்லியமின் மேல் எண்ணங்கள் குவிந்தன.
பையன் வந்த பிறகு அவன் உற்சாகமாகவே இருந்தான், எனினும் ஒரு தொலைவு இருக்கத்தான் செய்தது: அதிகாலையில் எழுந்து, கணப்படுப்பில் தீயை மூட்டிவிட்டு, பையனைப்  பரிசோதித்துவிட்டு மருத்துவமனைக்கு புறப்பட்டு விடுவான். அந்தியில் திரும்பி, ஒரு குவளை தேநீர் அருந்திவிட்டு, பையனின் அறைக்குள் மறைந்து விடுவான். சமையலறை மேடையின்மீது நிறைவடையாத ஒரு கடிதமும், அதன் முன்பு ஜூலியாவும் இருப்பார்கள். அவளது பேனா எழுதும் சத்தம் தவிர வேறெதுவும் அற்ற நிசப்தம்.
ஓரிரவு வில்லியம் அந்த அறைக்குள்ளிருந்து அவசரமாக வெளிவந்து அவனது குறிப்பேடுகளைப் புரட்டும் சரசரப்பு கேட்டது; பின் நீண்ட அமைதி. சிறிது நேரம் கழித்து கைகளை இடுப்பின் இருபுறம் வைத்துக்கொண்டு எதிரில் வந்து நின்றான்.
பையனுக்கு ஒன்றுமில்லையே?
கைகளால் காற்சட்டைப்பைக்குள் காசுகளை சலசலத்துக்கொண்டே புருவங்கள் நெரியக் கேட்டான். உணவெடுக்காமல் கிடக்கிறான், பசியெடுக்கிறது. சாப்பிடுகிறான், பசி மறைந்துவிடுகிறது. ஏன் என்று உனக்கு தோன்றுகிறதா?
ஜூலியா எச்சரிக்கையாக புன்னகைத்தாள்.
சொல்லு, என்றான் வில்லியம்.
கிசுகிசுப்பின் கூட்டிசை போல காற்று மரக்குடிலின் கதவைக் அறைந்து கடந்து சென்றது. ஜூலியா தலையசைத்தாள், எனக்குத் தெரியவில்லை.
ஆம், உனக்குத் தெரிந்திருக்காது. அவன் சிரித்தான். அவள் பிடரியின் மயிர்கற்றைகளை கோதினான். யாருக்குமே தெரியாது, அன்பே.
அவள் ஒன்றும் சொல்லாமல் அவன் கைகளை பற்றினாள். ஒரு வலிந்த புன்னகையுடன் அவள் விரல்களை அவன் மணிக்கட்டிலிருந்து பிரித்துவிட்டு சொன்னான். பிறகு முயற்சிப்போம். இன்றிரவு – சத்தியமாக.
மறுநாள் காலை வயிற்றில் ஒரு சுருள்வலியோடு விழித்தாள்.
நீர் கொதிக்க வைத்துவிட்டு, சமையறைக்குள்ளேயே பத்து பன்னிரெண்டு தடவைகள் சுற்றி வந்தாள். மறுபடியும் தோற்றுவிட்டேன், என்று எண்ணிக்கொண்டாள். மனதை இனிய நினைவுகளில் பதிக்கும் விதமாக அடுத்து எப்போது சூசனின் கடிதம் கொண்டுவரும் படகு வருமோ என்று நினைத்தாள். நேற்றிரவு, வில்லியமின் உணர்ச்சிகளைத் தூண்டும் முயற்சியில் மீண்டும் தோற்றுப் போனாள்: அவனது கடுமையான தொடர்ந்த உழைப்பே அவனது வீர்யத்தை செயலிழக்கச் செய்துவிடுகிறதோ என்று கசப்புடன் எண்ணிக்கொண்டாள். நான் தோற்றுவிட்டேன்நான் தோற்றுவிட்டேன், நான் மீண்டும் தோற்றுத்தான் விட்டேன். இந்த வார்த்தைகளை ஒரு துக்ககரமான, படைவீரர்களின் நடைப்பாடலின் சந்தத்தில் தனக்குள்ளே பாடிக்கொண்டாள்.
சமையலறையைக் கூட்டி துடைப்பத்தை தரைப்பலகைகளின் மேல் தட்டினாள். வில்லியமுடனான உரையாடல்களில் நிலவும் எரிச்சலூட்டும் தயக்கங்களை, அவனது ஒவ்வொரு தொடுகையிலுமிருக்கும் தாங்கவே முடியாத நிச்சயமின்மையை, அவள் வெறுத்தாள். இப்போதெல்லாம் அவளுக்கு, அவர்களிருவரும் தலை நரைத்து, இளக்கம் சிறிதுமில்லாது, காலையுணவுக்கு மேசையின் இருபுறமும் ஒரு வார்த்தையும் பேச இன்றி அமர்ந்திருக்கும் இரு அந்நியர்கள் என்பது போல் அடிக்கடி தோன்றும் காட்சி, தவிர்க்க முடியாத சினத்தையும் சோகத்தையும் ஒருசேர ஏற்படுத்திக் கொண்டிருந்தது. ஒரு குழந்தை அவர்களது பிரச்னைகளை தீர்த்துவிடக்கூடும்: வில்லியமின் சேய்மை, அவளது தனிமை. வீடு முழுதும் அவளது தளர்ந்த, உற்சாகம் குன்றிய மூச்சுக்காற்றினால் நிறைந்திருப்பதாக தோன்றியது.
அடுப்பைக் கூட்டும்போது, பையன் மற்றொரு அறைக்குள் நடக்கும் சத்தம் கேட்டது. கூட்டுவதை நிறுத்தினால், நடப்பதும் நின்றது. பிறகு மணி ஒலித்தது.
அறைக்குள் எட்டிப் பார்த்தாள். காலை வணக்கம், திரு ரோலு.
வணக்கம் மேடம். இந்தப் பனியை நீங்கள்தான் கொண்டு வந்தீர்களா?
ஜூலியா பணிவாக புன்னகைத்தாள். ஒரு குவளை தேநீர் கொண்டு வரவா?
எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு பெண், வெண்ணிற கூந்தல் கொண்ட பனிமகள் – தன் தலையசைவில் பனியை கொண்டுவருபவள். வானின் குறுக்கே, பனிமான்கள் இழுக்க விரையும் தங்க ரதத்தில், தன் ஒரு தலையசைவில், தான் செல்லும் வழிதோறும் பனிப்பொழிவை உண்டாக்குபவள். அவள் நீதான் போல, இல்லையா?
அவள் மீண்டும் புன்னகைத்தாள். அவளை விட மூன்றே வயது சிறியவன் எனினும் இன்னும் குழந்தைகள் போல் எளிய பகடிகள் செய்வதில் விருப்பம். ஆனாலும் முட்டாள் அல்லன்: சில மதியங்களில் அவனது அறைக்குள் அவன் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் சத்தம் கேட்கும், ஆனால் வில்லியமிடம் கையைக்கூட தூக்க முடியாதது போல் பாவனை செய்வான். படிக்கத் தெரியாது, ஆனால் ஓராயிரம் படகுப் பாடல்கள் தெரிந்து வைத்திருந்தான். அவற்றை அவ்வப்போது தனது கரடுமுரடான, ஆனால் அதேசமயம், இனிமையாகவும் தொனிக்கும் குரலில் பாடவும் செய்வான்.
நான் போய் உனக்கு தேநீர் கொண்டுவருகிறேன், என்றாள்.
தயவுசெய்து என்னோடு பேசு. இன்னும் கொஞ்ச நேரம்.
ஜூலியா சமையறைக்குள் சென்றாள், பின்னாலேயே அவனின் முனகல் கேட்டது.
அவளும் பிணியாளர்களை பேணியிருக்கிறாள், ஆனால் மூன்று நாட்களுக்கு மேலாக பார்த்துக் கொண்டதில்லை; இந்தப் பையனோ ஐந்து வாரங்களுக்கு மேலாக இங்கிருக்கிறான். சனிக்கிழமை காலைகளில் வில்லியம் பையனின் கட்டை அவிழ்த்துவிட்டு வேறு கட்டு போடுவான். அப்போதெல்லாம் கதவோரம் நின்று கேட்டுக்கொண்டிருக்கும் ஜூலியாவிற்கு, பையனின் பரிதாபமான குரலும், வில்லியமின் திருப்தி தோய்ந்த குரலும் பொறாமையைத் தூண்டும்.
கொதித்த நீரை எடுத்து குவளையில் தேநீர்த் தூளில் ஊற்றிக்கொண்டே ஏதோவொரு, நினைவில்லாத, இனிய பாடல் ஒன்றைப் பாடினாள். அது பையன் பாடும் பல படகோட்டும் பாடல்களில் ஒன்று என்று சட்டென்று தோன்றியபோது திடுக்கிட்டுப் போனாள்.
எனக்குத் தெரிந்த சிப்பேவா இனப்பெண்ணொருத்தியை நீ நினைவுபடுத்துகிறாய், என்றான் அவள் திரும்பி வந்தபோது. இல்லை – தவறாக ஒன்றுமில்லை, கோபப்படாதே.
அவள் தேநீர்க்கோப்பையை அவனிடம் நீட்டினாள். பின் திறந்திருந்த அறைக்கதவினருகே நின்றுகொண்டாள்.
அவள் மணமானவள், ஆனால் அதுவொன்றும் அவர்களினத்தில் ஒரு விஷயமே அல்ல.பெண்கள் பிற ஆண்களுடன் செல்வது அங்கே அனுமதிக்கப்பட்டிருக்கிறது, புரிகிறதா? லாக் டு போய்ஸ் பிளாங்க் அருகே அவர்களது கிராமம் அருகே சில நாள் தங்கியிருந்தோம், புயலொன்று ஓய்வதற்காகக் காத்திருந்தபோது. அப்போது அவள் எங்கள் முகாமுக்கு வருவாள், எரியும் தீயினருகே அமர்ந்திருப்பாள். மிக்க சோகத்துடன் இருப்பாள், உன்னைப் போலவே, எப்போதும் ஒரு சோகப் புன்னகை. அவள் – கண்கள் சுருக்கிக்கொண்டு, உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டான் – அவள் ஒரு மரத்தைப் போல, முழுக்க கனிகள் காய்த்து நிற்கும் மரத்தைப் போல இருந்தாள். உனக்குப் புரிகிறதா?
யோசித்துப் பேசு, என்றாள் ஜூலியா, தயவுசெய்து.
நாங்கள் கிளம்புவதற்கு எங்கள் படகுகளில் பொருட்களை ஏற்றிக் கொண்டிருக்கும்போது, என் சட்டையை அவள் பிடித்திழுத்தாள். நான் சியக்ஸ் குழுவால் பிடித்துச் செல்லப்பட்ட அவள் கணவனைப் போலிருக்கிறேன் என்றாள். அவள் பெயர் பசுமைப் பள்ளத்தாக்கின் பெண். அல்லது பசும்பெண், ஏதோவொரு பசுமையின் பெண், அல்லது அது போல் ஏதோவொன்று.
நீ அங்கே அவளை விட்டு வந்துவிட்டாய், அப்படித்தானே.
பையன் சிரித்தான். நான் என் சட்டையை அவளிடம் தந்தேன், அதன்பின் மூன்று வாரங்கள் எனக்கு அணிந்துகொள்ள சட்டையொன்றும் இல்லாமல் போனாலும். அடுத்த கோடையில் அவளைக் கண்டுபிடிப்பேன்.
உனக்கு நல்ல அதிர்ஷ்டம் அமைய வாழ்த்துக்கள், என்றாள் ஜூலியா.
கதவை சார்த்திவிட்டு, துடைப்பத்தை எடுத்துக்கொண்டு முன்னறைக்கு வந்து வீசிக் கூட்டினாள். அவன் சொன்ன கதை அவளுக்கு எரிச்சலூட்டியது; உறைந்து போன நதியில் தன்னந்தனியே அழுதபடி அலையும் ஒரு பழங்குடிப்பெண் அவள் முன் தோன்றினாள். தன் நினைவுகளை வில்லியம் பக்கம் திருப்ப முயன்றாள்: அவன் அந்தியில் வீடு திரும்பிவிடுவான்; அவள் அவனுக்காக வெங்காய சூப்பும் நேற்றைய இரவின் மீன்கறியும் தருவாள். பையனின் உடல்நலம் பற்றி விசாரிப்பாள். அல்லது மருத்துவமனையில் பிற நோயாளிகள் பற்றி கேட்பாள். பசியைப் பற்றி வினவுவாள்.
அவள் மறுபடி பையனின் அறைக்குச் சென்றாள். பையன் இரு கைகளையும் நெஞ்சின் குறுக்கே கட்டியபடி கட்டிலில் சிரித்தபடி அமர்ந்திருந்தான். அவனது செந்நிற சடைமுடி தோள்களில் புரண்டு கொண்டிருந்தது. தேநீர்குவளையை ஜூலியாவிடம் நீட்டினான். அவள் அதைப் பற்றியபோது அவன் குவளையை விடாமல் பிடித்துக் கொண்டான்.
இது நியாயமில்லை இல்லையா?
அவள் மூச்சு ஒருகணம் தடைபட்டது; புன்னகைக்க முயன்றாள். எது நியாயமில்லை?
என் காயத்தை நான் உனக்கு காட்டிவிட்டேன், அவன் கேட்டான், உன் காயத்தை நீ எனக்கு காண்பிக்கவில்லையே?
---------
வில்லியமிடம் அப்போதே நான் சொல்லியிருந்தால்? ஜூலியா எண்ணினாள்.  அப்போதே சொல்லியிருந்தால், அவன் பையனை வெளியேற்றியிருப்பான்; பையன் வெளியேறியிருந்தால், பரிசோதனைகளைச் செய்திருக்க முடியாது; பரிசோதனைகளில் அவன் மூழ்கியிராவிட்டால், அவன் பித்துப் பிடித்தது போலாகியிருக்க மாட்டான்.
————-
வண்டியின் கூரை மீது தாளமிடும் மழைத்துளிகளை கூர்ந்தவாறு அவள் கண்களை மூடிக்கொண்டாள். வெளியே எங்கோ ஒரு தேவாலய மணி ஏழு முறை அடித்து ஓய்கிறது; வெறுமையான, காற்றில் மிதக்கும் மணிச்சத்தம். டாக்டர் பெயர்ஸ் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.
நான் அந்த ஆர்வமிக்க பெண்ணாக இன்னும் இருக்கக் கூடும், அவள் எண்ணிக் கொண்டாள், கூந்தலில் கெமோமில் பூக்களும்,கழுத்தில் பூசிய பன்னீருமாக.
நான் அப்போதே அவனிடம் சொல்லியிருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள் .
———
குளிர்காலத்தின் முதல் புயல் அக்டோபரில் வந்தது. பனி அடர்ந்த, நீரிணைக்கு அப்புறமிருந்து ஓலமிடும் காற்று  அவர்களின் குடில் கதவுகளை படபடவென்று அடித்துக் கொண்டும், கரி படர்ந்த புகைபோக்கியில் நெருப்பு பொறி பறக்க விட்டுக் கொண்டும் வந்து சேர்ந்தது. ஜூலியா குடில் மரச்சுவர்கள் பனியால் நனைந்து கிடப்பதை பார்த்தவாறு விழித்தாள்.  போர்வையின் மேல் பூத்தாற்போல் படிந்துகிடந்த பனியை சன்னல் வெளியே பரவிக்கிடந்த நீர்கோர்த்த ஒளி இன்னும் வெண்ணிறமாக காண்பித்தது. கன்னங்கள் கணப்பில் எரிய, முதுகோ குளிரில் நடுங்க அவள் அடுப்பின் மிக நெருங்கி நின்றுகொண்டாள்.
பாத்திரங்களை கழுவிவிட்டு, படுக்கையைப் புரட்டி போட்டுவிட்டு, குடிலைக் கூட்டிவிட்டு, புகைபடர்ந்த விளக்குகளை சுத்தம் செய்துவிட்டு… உடை மாற்றிக்கொண்டு, அறைக்குள்ளேயே நெஞ்சு படபடக்கும்வரை ஸ்கிப்பிங் செய்தாள். மேசைமீது தலை சாய்த்து அவளைப் பார்க்கும் அந்த பாடம் செய்த குருவியைப் பார்த்துக் கேட்டாள் – இன்று மதியம் என்ன செய்யப்போகிறோம்? மிதக்கும் வெப்பக்காற்று பலூன் ஒன்றில் லண்டன் பறந்து போவோமா? இல்லை, ஏதென்ஸ்? நீலக்குருவி பதிலொன்றும் சொல்லாமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தது. வாழ்வில் முதல் முறையாக ஜூலியா தான் இன்னும் கொஞ்சம் அதிகம் மதநம்பிக்கை கொண்டவளாக இருந்திருக்கலாம் என்று விரும்பினாள். தினமும் பிரார்த்தனைக் கூட்டங்களாவது அவளுக்கு கிட்டியிருக்கும்.
நோயாளிகளின் அறையிலிருந்து கடமுடவென்ற சத்தம் கேட்டது. ஒரு கணம் நிதானித்த ஜூலியா விளக்கை தொடர்ந்து சுத்தம் செய்யத் துவங்கினாள்.
கடந்த சில வாரங்களாக அந்த அறையை அவள் தவிர்த்து வந்தாள். மணியொலிக்கும்போது, பையனின் தேநீரையோ உணவையோ அறைக்குள் சென்று மேசையின்மீது ஒரு மரியாதையான வணக்கத்துடன் வைத்துவிட்டு வந்து விடுவாள். பையனின் சட்டை தரையில் கசங்கிக் கிடைக்கும்; காலி தேநீர்க் கோப்பை படுக்கையினருகே  கவிழ்ந்திருக்கும்; ஒரு காடி வாசம் காற்றில் மிதக்கும். அவனது முன்பற்களில்லாத சிரிப்பு அறைக்குள் அவளை பின்தொடரும்படி, பையன் கட்டிலில் சரிந்து கிடப்பான்.
பத்து நிமிடங்கள் மேடம், உடை மாற்றிக்கொள்கிறேன், என்றான். கதவை சாத்திக்கொண்டு முகம் சிவக்க வெளியே வந்து நின்றிருக்கிறாள்.
பாத்திரத்தில் வெந்நீரை ஊற்றி காமோமில் மலர்களை அள்ளியிட்டு, முகத்தை நீரின் அருகே கவிழ்த்தவாறு தலைமுடியை நீருக்குள் அமிழ்த்தினாள். நீராவி முகத்தில் முத்துக்களாக கோர்க்கும்வரை காத்திருந்துவிட்டு, ஈரமுடியை துண்டில் சுற்றிக்கொண்டு,வில்லியமின் மேசையிலிருந்து அவனது மருத்துவக் குறிப்பை எடுத்துக் கொண்டு சமையலறை மேடைக்கு வந்தாள் . ஒரு குவளை தேனீர்  ஊற்றிக் கொண்டு குறிப்பைப் புரட்டினாள்.
அக்டோபர் 17, 1822
மாலை 8 மணி – பையன் கொதிக்க வைத்த ஆட்டிறைச்சிரொட்டிஉருளைக்கிழங்கு மற்றும் காபி உண்டான்.
9 மணி 30 நிமிடங்கள் – அவன் வயிற்றில் திறந்திருக்கும் காயத்தின் வழியே கஞ்சி போன்ற திரவம் கொதிப்பதைக் காண முடிகிறது. அமில வாடைஒரு கசப்புச் சுவை. பையன் வலிக்கிறது என்று முரட்டுத்தனமாக புகார் செய்தான்ஆனால் பசியில்லை என்கிறான்.
11 மணி – அவ்வளவு செரித்த உணவும் குடலிலிருந்து சிறுகுடலுக்குள் மறைந்துவிட்டது. பையனுக்கு பசியில்லை.
செரிமானம் ஆரம்பிக்கும்போது உணவுண்ட திருப்தி ஏற்படுகிறது எனத் தோன்றுகிறது. ஆனால்முழுமையாக உணவு செரிக்கப்படும்வரை மீண்டும் பசியென்ற உணர்வு ஏற்படுவதில்லை. 
 குடலுக்குள் உணவு இல்லாமல் இருப்பது மட்டுமே பசியெடுப்பதற்கான ஒரே காரணமாக  இருக்க முடியாது என்பதை இது குறிக்கலாம்.
அதிர்ஷ்டவசமாக பையனுக்கு அடிக்கடி பசி ஏற்படுகிறதுபரிசோதனையும் தடையின்றி செய்ய முடிகிறது. ஹாவல் ஒரு முறை சொன்னது போல அவன் பசியின் பிள்ளை.
“விடியும்வரை விழித்திருந்தேன். உறங்க முடியாமல்.
சினமிகுந்த அலைகள் கரையை மோதுகின்றன
தாழ்ச்சியுற்ற கப்பலோ முன்னும் பின்னும் தள்ளாடுகிறது
அனைத்தும் மேலிருந்து நோக்கப்பெறுகிறது”
கடவுளால் அல்லமனிதனால்அறிவு வளரும்விதம்
கதவு திறந்தது. கன்னங்கள் குளிரில் ஊதாநிறமாகத் தோன்ற, பனி அப்பிக்கிடந்த காலணிகளைத் தட்டி மிதித்தபடி வில்லியம் உள்ளே வந்தான். கொடுமையான குளிர்! என் முடிகூட நடுங்குகிறது என நினைக்கிறேன்.
குறிப்பேட்டை மூடிவிட்டு ஜூலியா திடுக்கிட்டு நிமிர்ந்தாள். தலையிலிருந்த துண்டை அகற்றிக் கொண்டே கேட்டாள். தேநீர் அருந்துகிறீர்களா?
பனித்துகள்கள் தாடியில் மின்ன அவன் இன்னும் கதவருகே நின்றிருந்தான். மூடப்பட்ட குறிப்பேட்டைப் பார்த்துத் தலையசைத்து கொண்டான். அதுவொன்றும் நீ படிக்கும் மாதாந்திர பெண்கள் பத்திரிக்கை அல்ல, தெரியும்தானே?
ஜூலியா அமைதியாக இருந்தாள்.
ஈர தொப்பியையும் கோட்டையும் கழற்றிவிட்டு மேசையனருகே வந்து முதல் நாளிரவு அவன் எழுதியிருந்த குறிப்பை மீண்டும் ஒருமுறை அமைதியாகப் படித்தான் .
மன்னித்து கொள் வில்லியம், என் அன்பே, என்றாள் ஜூலியா. எனக்கொரு ஆர்வம். நான் உன்னைக் கேட்டிருக்கலாம்தான், ஆனால் அறிவிலி போல் உன் முன் தோன்ற விரும்பவில்லை. உன் ஆராய்ச்சிகளைப் பற்றி எனக்கு தெரியவேண்டும். தயவுசெய்து சொல்வாயா?
அவன் கண்கள் அந்தக் கவிதையைப் பார்ப்பதைக் கண்டாள்; நெற்றி சுருங்க கேட்டான், இதை எதற்கு நீ படிக்கிறாய்?
சொன்னேனே, ஒரு ஆர்வம். அந்தப் பையனைப் பற்றி, உன் ஆராய்ச்சிகளை பற்றி. இன்னும் உன் கவிதைகளைப்  பற்றி – நான் உன் அழகிய கவிதைகளைப் படிக்க விரும்பினேன்.
ஒரு கணம் அவன் முகபாவனை சாந்தமடைந்தது போல் தோன்றியது. குறிப்பேட்டை மூடிவிட்டு கடுப்பு தோன்ற கேட்டான் , என்ன ஆயிற்று உன் முடிக்கு?
நிறம் பூசியிருக்கிறேன், உனக்காக, என்றாள்  ஜூலியா.
நல்லது அன்பே. அவன் குரலைச் சரி செய்து கொண்டான். அது சிக்கலான விஷயம்.
சரி. கொஞ்சம் புரியும்படி சொல்ல முயற்சி செய்.
நனைந்த குழல் கற்றையொன்று அவள் தோளில் படிந்திருப்பதை பார்த்துக் கொண்டிருந்தான். மெதுவே அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். பல கோட்பாடுகள் இருக்கின்றன. வயிறு ஓர் அரவை யந்திரம் எனச் சிலரும், அது ஒரு கொதிக்கும் கலன் எனச் சிலரும் கருதுகின்றனர். இன்னும் சிலரோ, அதுவொரு நொதிக்கும் பாத்திரம் போல செரிமானம் செய்கின்றது என்கின்றனர். யாருக்கும் உறுதியாகத் தெரியாது. நாய்களின் மீது சில சோதனைகள் நடந்திருக்கின்றன – ஆனால் இன்னும் எதுவும் உறுதிப்படவில்லை.
பையன் தான் உன் பரிசோதனை.
அந்தப் பையன் ஓர் அற்புதம், வில்லியம் சொன்னான், மேசையின் மீது நன்கு குனிந்து அவளை உற்று நோக்கி, உன்னால் உணர முடிகிறதா ஜூலியா? இன்னும் ஒரு கோட்பாட்டை எழுதத் தேவையில்லாமல் அவன் வயிற்றின் உள்நிகழ்வுகளைப் பார்க்க அவன் என்னை அனுமதிக்கிறான்.
மணியொலித்தது.
இரு.
வில்லியம் பின்னால் சாய்ந்துகொண்டான். புன்னகைத்தவாறு சொன்னான். அன்பே, அவன் உடல்நலமின்றி இருக்கிறான்.
தயவுசெய்து வில்லியம். அவனொன்றும் உடல்நலமின்றி இல்லை.
மறுபடி மணியொலித்தது. பிறகு ஏதோ கோபமாக முனகுவது கேட்டது.
நீ போய்விட்டபிறகு அவன் அறைக்குள் நடக்கிறான். பகல் வேளைகளில் மணியடித்து என்னை அழைக்கிறான். சென்றால் ஒன்றும் பேசாமல் ஒரு திமிரான சிரிப்பு வேறு.
அவன் ஒரு சிறுவன் என்று  உனக்கு நினைவுபடுத்த வேண்டுமா?
அவன் சிறுவனில்லை.
வில்லியம் ஜூலியாவின் நெற்றியில் முத்தமிட்டான். குறிப்பேட்டை மேசையறைக்குள் வைத்துவிட்டு பையனின் அறைக்குள் மறைந்து போனான்.
தேநீரை எரியும் அடுப்புக்குள் வீசிக் கொட்டிவிட்டு, காலிக் கோப்பையை மேசை மீது சட்டென்று வைத்தாள். முட்டாள் பையன் – அவன் முட்டாள் சிரிப்பும் அவன் நாடோடி நாற்றமும். அவன் வலி உயிர் போவது போல் நடித்துக்  கொண்டு கட்டிலில் கிடப்பதாகவும் வில்லியம் அவன் காயத்திற்கு மருந்து போட்டுக் கொண்டே அவனது குழறல் புகார்களைக் கேட்பது போலவும் கற்பனை செய்து பார்த்தாள் . எப்போது வில்லியம் அவள் பேச்சைக் கேட்டிருக்கிறான்? டெட்ராய்ட்டில், அவர்களது முதல் சந்திப்பு நிகழ்ந்த அந்த சமூக மன்ற நடனத்தில் அவள் கூறிய, மருத்துவர்கள் வானின்று வீழ்ந்த தேவதைகள், என்ற அந்த வரியைக் கேட்டதற்குப் பிறகு அவள் கூற எதைக் கேட்டிருக்கிறான்?
அமுங்கிய சிரிப்பொலி அறைக்குள்ளிருந்து கேட்டது. ஜூலியா கூர்ந்து கவனித்தாள்.
என்  முதல் பருவம், நாங்கள் ஒட்டாவா ஏரியில் படகு வலித்துக்கொண்டு சென்றது நினைவுக்கு வருகிறது. அங்கிருந்து கிராண்ட் போர்ட்டேஜ், பிறகு ரெய்னி ஏரி, இறுதியாக கோட்டைக்கு. இங்கெல்லாம் குளிரென்றா நினைக்கிறீர்கள்? அங்கெல்லாம் சிறுநீர் நடுக்காற்றில் உறைந்து போகுமென்றால் பாருங்கள்.
வில்லியம் சிரித்தான். அப்படியா?
மங்கேயூர் குழு போர்ட்டேஜ் போனது போதும் என்று திரும்பி விட்டார்கள். நானிருந்த ஹேவர்னன்ட் குழு, ஒரு எழுபது பேரிருப்போம்,அந்தக் கோட்டைக்குள் முழுப் பனிக்காலமும் மாட்டிக் கொண்டோம். எனக்கு அப்போது பதினாறு வயது. நான் தினமும் காலையில் உறுப்பைக் கையில் பிடித்துக் கொண்டுதான் விழிப்பேன். இரவுணவுக்கு பிறகு ஒருவர் வயலின் வாசிப்பார், யாராவது ஒரு பாத்திரத்தில் தாளம் போட, ஆட்டம்தான். சிலர் கழுத்தைச் சுற்றி ஒரு துண்டைச் சுற்றிக் கொள்வார்கள், அவர்கள் பெண்களை போல ஆட. ஆண்களுக்குள் தகராறாக இருக்கும் யார் அடுத்து இந்தப் பெண்ணாக நடிக்கும் ஆண்களுடன் ஆடுவது என்று.  எவ்வளவு தனிமையாக இருந்திருக்கும் என்று புரிகிறதா? ஒரு நாள் காலை படுக்கையில் அருகில் அந்த ஆணிலொருவன் படுத்துக் கிடந்ததும் நடந்தது.
மேலே சொல்.
அவ்வளவுதான். அந்த சண்டையில்தான் என் பற்கள் போனது, அவனுக்கு இன்னும் அதிகமாக.
ஒரு பெருமூச்சில் முடியும் தளர்ந்த சிரிப்பு. ஜூலியா அவளுக்கு தட்டையும் முள்கரண்டியையும் மேசை மீது எடுத்து வைத்துக் கொண்டாள். அவர்கள் பள்ளிக்கூடச் சிறுவர்கள் போல் சேர்ந்து சிரிக்கட்டும், அவள் எண்ணிக்கொண்டாள். அந்த அறைக்குள் இரவு முழுதும் இருக்கட்டும்.
------------
பையனின் குரல் ஏறக்குறைய அவளுக்கு தெரிந்த ஒரு இளைஞனை நினைவுபடுத்தியது; தவிர்க்க முடியாத புன்னகை கொண்ட ஜான் வெல்ஸ், ஒரு வங்கி அதிகாரியின் மகன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவாலயத்தில் அவளுக்கு நேர் எதிரே அமர்ந்துகொண்டு ஒரு மிருகத்தனமான தீவிரத்துடன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பான். ஒரு நாள் காலை, அவனை அவள் வீடு வரை உடன் நடந்துவர அனுமதித்தாள்; ஏதும் பேசாமல் வியர்வையில் நனைந்த கரத்தினால் அவள் கையைப் பற்றிக் கொண்டான். வீட்டின் முன்வாயிலில் பசி கொண்ட நாய் முனகுவது போல் முனகிக் கொண்டே அவள் கைவிரல்களில் முத்தமிட்டான். தன் நெஞ்சில் அவள் கரத்தை அழுத்தியவன், மெதுவே அவள் கையை தனது கால்சட்டை பொத்தான்களின் மேல் படும்படி கீழிறக்கினான். கைவிரல்களை இறுக்கி மூடிக்கொண்டாலும் ஜூலியா நகர்ந்து செல்லாமல் நின்றிருந்தாள்.
இப்போது நோயாளிகளின் அறையிலிருந்து ஒரு கூச்சல் எழுந்தது. எனக்குத் தெரியாது, பையன் கத்தினான். முடியாது. நீயென்ன செவிடா? எதைப்பற்றியும் எனக்கு கவலையில்லை.
வில்லியம் சமையலறைக்குள் வந்தான். இன்றிரவு உணவுக்கு இறைச்சி இருக்குமா?
கொதித்துக் கொண்டிருந்த பாத்திரத்தைப் சுட்டிக் காட்டி ஆமென்பதுபோல் தலையசைத்தாள்.
அவன் படுக்கையறைக்குள் விரைந்து சென்று அவனது பன்றித் தோல் பையைக் கொண்டு வந்தான். பாத்திரத்திலிருந்து ஒரு பெரிய இறைச்சித் துண்டை எடுத்து கத்தியால் பாதியாக வெட்டித் தனியாக ஒரு தட்டில் வைத்தான். பைக்குள்ளிருந்து நூல்கண்டையெடுத்து ஒரு நீள துண்டொன்று வெட்டி அதன் ஒரு முனையை தட்டிலிருந்த இறைச்சித் துண்டைச் சுற்றிக் கட்டினான். மீத நூல் காற்றடியின் வால் போல் தொங்குமாறு கட்டியிருந்தான்.
என்ன செய்கிறாய் வில்லியம்?
ஒரு பரிசோதனை. செய்யவிட பையனை சம்மதிக்கவைக்க முடிந்தால்.
அவனை துன்புறுத்திவிடாதே.
அவன் ஜூலியாவை ஒரு குழப்பமான, சிறிதே கவலை தொனிக்கும் உணர்வுடன் உற்றுப் பார்த்தான். இல்லை அன்பே. அப்படியெதுவும் ஆகாது.
சொல்லிவிட்டு தட்டுடன் இறைச்சியை எடுத்துக் கொண்டு பையனின் அறைக்கு விரைந்தான்.
பனிப்படிகங்கள் சில்லுகளாக உறைந்த சன்னல் கண்ணாடிகளின் மேல் வீசி அறைந்தன. மீத இறைச்சித் துண்டை ஜூலியா உருளைக்கிழங்குடன் எடுத்து தட்டில் வைத்துக் கொண்டாள். அதிலிருந்து கொழுப்பு உருகி வெண்ணிற தட்டில் பரவுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் சென்றதும் மூடியிருந்த நோயாளிகளின் அறைக்கதவை ஒட்டி தனது நாற்காலியைப் போட்டுக்கொண்டாள்.
அமைதி; படுக்கை விரிப்புகளின் சரசரப்பு; பிறகு பையனின் கிசுகிசுத்த குரல். வேண்டாம், டாக்டர். தயவுசெய்து நிறுத்துங்கள்.
oOo
அன்றிரவு தரைப்பலகைகளின் முனகலோசை கேட்டு விழித்துக் கொண்டாள். எழுந்து அமர்ந்தாள்; மூடியிருந்த அறைக்கதவின் கீழ் கோடாகத் தெரிந்த வெளிச்சக் கீற்றைத் தவிர படுக்கையறை இருட்டாகவிருந்தது. அருகில் வில்லியமின் தலையணை தொடப்படாமல் கிடந்தது. ஒரு குளிர் நடுக்கம் ஜூலியாவின் மேல் பரவியது.  காலணிகளை அணிந்துகொண்டு கதவைத் தள்ளித் திறந்தாள்.
மெழுகுவர்த்திச்சுடரின் ஒளியில் வில்லியம் திரும்பிப் பார்த்தான். கைகளிரண்டும் மேசையின்மேல் கண்ணுக்குத் தெரியாத யாரையோ அணைத்திருப்பதுபோல் கிடந்தன. கண்கள் பாதி மூடிக்கிடக்க, மெல்லிய புன்னகையொன்று இதழோரம் நெளிய, ஏதோவோர் இன்பநினைவில் மிதப்பவன் போலிருந்தான். அவனது குறிப்பேடு மேசையின்மேல், பேனா பக்கங்களின்மேல் கிடக்க, திறந்து கிடந்தது. அவன் திரும்பிய வேகத்தில் ஜூலியா மூச்சை உள்ளிழுத்து அடக்கிக் கொண்டாள்.
இங்கென்ன செய்கிறாய்?
ஜூலியா பலவீனமாக புன்னகைத்தாள். தூங்க முடியவில்லை. ஏதோ சத்தம் கேட்டது போலிருந்தது – தரைப்  பலகைகள் என்று நினைக்கிறேன்.
படுக்கப் போ. பேனாவை எடுத்து எழுதத் துவங்கியபடி சொன்னான். நீ தூங்குவதற்கு ஏதாவது தருகிறேன்.
கதவை இன்னும் அகலமாகத் திறந்தபடி கேட்டாள். என்னவாயிற்று?
ஒன்றுமில்லை. தயவுசெய்து என்னை எழுத விடு.
அவனை  நோக்கி நகர்ந்தாள். அவன் உதடுகள் இறுகின. நான் அதைப் படிக்க வேண்டும்.
கண்களின் கீழ் கருவளையங்கள். கீழுதட்டின் அருகே மசிக்கறை; பெருங்கடலைத் தனியாக படகோட்டிக் கடந்தவன் போல் சோர்வாக ஆனால் ஒரு உற்சாகத்துடன் அவன் இருப்பது தெரிந்தது. தான் எங்காவது அவன் நோக்கில் தென்படுகிறோமா என ஜூலியா தேடினாள். இந்த ஒரு தடவை. தயவுசெய்து படிக்க விடு என்று எண்ணிக் கொண்டாள்.
சரி, நீ படிக்கலாம். ஆனால் பிறகு என்னை நிம்மதியாக எழுதவிட வேண்டும்.
ஜூலியா தலையசைத்தாள்.
அவன் குறிப்பேட்டை அவளை நோக்கித் திருப்பினான். ஓசையில்லா கனவென ஜூலியா அதை நோக்கி நகர்ந்தாள்.
அக்டோபர் 13, 1822
முன்கூறிய நான்கு பரிசோதனைகளும் ஒன்றையே புலப்படுத்துகின்றன: பசி என்கிற உணர்வை உணவு ஈஸோபாகுஸுக்குள் செல்லாமலே கட்டுப்படுத்த முடியும். நொதித்தல் இல்லாமலும்.
சத்துகள் தேவை போல் தோன்றினாலும்…
பசியின் அடிப்படைக் கோட்பாடு: பசி என்கிற உணர்வு இரைப்பை நாளங்கள் விரிவடைவதாலேயே ஏற்படுகிறது; இரைப்பை சுரப்புகள் மீண்டும் சுரந்தவுடன் பசி தீர்ந்து அல்லது இல்லாமல் போகிறது.
(ஏற்கனவே உள்ள மகெண்டியின் கோட்பாட்டை இது மறுதலிப்பதால் மேலும் பல சோதனைகள் அவசியமாகிறது).
தூங்க முடியவில்லை.
தூங்க முடியவில்லை…
மனிதன் என்பவன் யார், அவனைப் பற்றி நாம் அறிந்துகொள்ள?
நீங்கள் அவனை தேவதைகளின்கீழ் பிறப்பித்தீர்கள்; பெருமையும் மகிமையும் கொண்டு அவன் கிரீடத்தை அலங்கரித்தீர்கள்.
oOo
குதிரைவண்டி வீதியிலிருந்து பக்கச் சாலைக்கு வளைந்து திரும்பியது. மருத்துவக் கழகத்தின் அத்தனை சன்னல்களும் ஒளி கொண்டிருந்தன. வெளியே சிந்தி கட்டிடத்தின் சுவர்களிலும் தூண்களிலும் பிரதிபலித்த ஒளியில் உள்ளே சிரிப்பொலிகளுடன் உருவங்கள் அங்குமிங்கும் நடமாடுவது தெரிந்தது. ஏற்கனவே நின்றிருந்த வண்டிகளினருகே ஜூலியாவின் குதிரைவண்டி சென்று நிற்கும்போதே உள்ளே தன் மகனின் உருவம் தென்படுகிறதா என்று அவள் தேடினாள்.
“இன்று ஓர் அற்புதமான மாலையாக இருக்கப் போகிறது.” தன் கோட்டினால் கண்ணாடியின் பனிப்படர்வை துடைத்துக்கொண்டே டாக்டர் பெயர்ஸ் கூறிக்கொண்டார். “டாக்டர் ஹேவுட்-டும் டாக்டர் போஸ்டாக்கும் வந்திருப்பார்கள். நியூ ஹாவெனில் சொற்பொழிவுகள் ஆற்றிக்கொண்டிருக்கும் டாக்டர் கெநாட் கூட இந்த இரவின் விருந்துக்காக பிரத்தியேகமாக வந்திருக்கிறார்.”
அந்தப் பெயர்கள் ஞாபகக் கிளர்ச்சியை ஜூலியாவிற்கு ஏற்படுத்தின. டாக்டர் ஹேவுட் தெரியும். போஸ்டாக், கெநாட்? கடந்து சென்ற வருடங்களில் எத்தனையோ பெயர்கள், எத்தனையோ டாக்டர்கள். அவள் அவர்களைப்  பற்றி வில்லியமிடம் கேட்டுக் கொண்டதில்லை. எங்கோ ஒரு கப்பலின் மணி எதிரொலிக்கிறது; மீன் வாடை மிதக்கும் குளிர்காற்று நதியிலிருந்து அவர்களைக் கடந்து வீசிச் செல்லும் அந்தத் தருணம் அவளுக்கு பாரிஸில் இதே போன்றதொரு மாலையில், பல அடுக்குகள் தொங்கும் சரவிளக்குகளும், இளஞ்சிவப்புநிற பளிங்குக்கற்கள் பாவிய அந்த பெரிய வீட்டில் அவர்கள் கூடியிருந்ததும் நினைவில் எழுந்தது. வில்லியமின் புத்தகம் ஐரோப்பாவில் வெளியானதற்காக ஒரு விருந்து. டாக்டர் கெநாட் தன் மிக ஒல்லியான உருவம் மேசையின் சாய அவளிடம் கேட்டார் – மேடம், உங்கள் குடிலில் அந்த நாட்கள் அற்புதமான ஒரு விஷயம் நடந்து கொண்டிருந்தது உங்களுக்குத் தெரிந்திருந்ததா?
பெண்களை அனுப்பிவிட்டு ஆண்கள் முக்கியமான விஷயங்களை பேச ஆரம்பிக்குமுன், ஜூலியாவை மகிழ்ச்சிப்படுத்த கேட்கப்பட்ட கேள்வியது. ஜூலியா  மரியாதையாகப் புன்னகைத்தாள்.
நிச்சயமாக. நான் கவலைப்பட்டிருக்கிறேன் – வில்லியமின் நடவடிக்கைகள் சீரற்று இருந்தன.
பேச்சு மெதுவே தேய்ந்து நின்றது. வில்லியம் அவளை வெறித்துப் பார்ப்பதாக உணர்ந்தாள். கன்னங்கள் கிழடுதட்டி சதைகழன்ற வில்லியம். எப்போதும்போல் ஒரு வைன் கோப்பை உதட்டுக்குச் செல்லாமல் பாதியிலேயே நிற்கும் வில்லியம். அவர்கள் நீண்ட நாட்களாகவே ஒரு சமனமான இருத்தலுக்கு பழகிவிட்டிருந்தார்கள். வில்லியம் அவ்வப்போது ஜூலியாவையும் அவளது மகனையும் வந்து பார்த்துவிட்டுச் செல்லும் ஒரு நிழலுலக விருந்தாளிபோல். அதுவொரு விசித்திரமான ஏற்பாடு; எப்படியோ, ஒருவர் தேவையை இன்னொருவர் முழுதாக புரிந்து கொண்டது போல்தானிருந்தது என ஜூலியா எண்ணிக்கொண்டாள்.
அவள் சொன்னாள், வில்லியமிற்கு வேறெதுவும் எண்ணத்திலில்லை, அந்த ரோலுவைத் தவிர. அவர் வேறொரு மனிதனாகவே மாறிவிட்டார்.
திருவாளர் கெனாட் ஆமோதிப்பதுபோல் முணுமுணுத்துக்கொண்டார். வில்லியமின் பார்வை ஜூலியாவின் உணவுத்தட்டின் மேலும் பின் சாளரக்கதவுகளின் மேலும் விழுந்தது. அவன் தன் வைன் கோப்பையை மேசைமேல் வைத்துவிட்டு எழுந்து எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அறையைவிட்டு வெளியேறினான். பளிங்குத்தரையில் அவனது ஷூவின் ஒலி நடந்து தேய்வதை ஜூலியா அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். மேசைக்கடியில் அவளது பாதத்தை யாரோ தட்டுவதை உணர்ந்தாள். திருவாளர் கெனாட் அவளது முகத்தையே ஒரு பொறுமையான புன்னகையோடு நோக்கிக் கொண்டிருந்தார்.
அன்றிரவு அந்த விடுதியின் இருட்டு அறையின் படுக்கையில் அவள் விழித்தவாறே கிடந்தாள். நா மதுவின் சுவையாலும் கண்கள் உறக்கமின்மையாலும் கனக்க, மூடிய சன்னல் கண்ணாடிகளின்மேல் பூச்சிகள் ரீங்காரமிட்டபடி வந்து வந்து மோதித் தெறிப்பதைப் பார்த்தபடியே கிடந்தாள். வில்லியம் புரண்டு அவள் பக்கம் திரும்பியபடி அவள் கரத்தைப் பற்றியபடி சொன்னான், நடந்த எல்லாவற்றுக்கும் என்னை மன்னித்துவிடு ஜூலியா. எல்லாவற்றுக்காகவும்.
அவள் அரைத்தூக்கத்தில் ஏதோ முனகினாள்.
தயவுசெய்து அன்பே. அவன் அவள் மணிக்கட்டைப்பற்றி மீண்டும் உலுக்கினான். ஜூலியா?
அவன் குரலின் சலனத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் அவள் நினைவுகூர்ந்தாள். அவன்மேல் அவளுக்கு வருத்தங்களேதும் இல்லை என அடிக்கடி தானே கூறிக்கொள்வாள். ஆனால் ஏன் அவள் தன் கண்களைத் திறக்கவில்லை? ஏன் அவன் அவளது விரல்நுனிகளில் முத்தமிட அனுமதிக்கவில்லை? ஏன் அவனது தலையை தன் மார்பில் புதைக்க விடவில்லை? அவளுக்குள்ளே எரிந்த கடும் உணர்ச்சித் தீயை அவளால் நினைவுகூர முடிந்தது . அருகே வில்லியம் மூச்சிரைப்பதையும் ஆனால் தன் சுவாசம் தெளிவாகவும் ஆழமாகவும் இருப்பதை உணர்ந்தாள்.
“உங்களுக்கு பிரச்னையில்லையென்றால் என்னை அறிமுகப்படுத்தி வைப்பீர்கள் என்று நம்புகிறேன்”, டாக்டர் பெயர்ஸ் கோச் வண்டியின் கதவின்மேல் கைகளைவைத்தவாறே கேட்டார்.
“யாருக்கு?”
“டாக்டர் கெனாட். அவரை அறிமுகப்படுத்திக்கொண்டால் பெருமைப்படுவேன்.”
ஐயோ பாவமே என்று எண்ணிக்கொண்டாள் ஜூலியா. “அதெற்கென்ன, கட்டாயம்,” என்றபடியே மழையீரம் பாவிக் கிடந்த தரையில் கால்களை பதித்து இறங்கினாள். உயர்ந்த வளைவான வாசலுக்கு வழிவிட்டுத் திறந்த கதவுகள்; மாபெரும் ஓக் மர கடிகாரம்; அவளது மேலங்கியை பணிவாக அகற்றி வாங்கும், அலங்காரமாக உடையணிந்த கறுப்பின சேவகன். கொடுமை, என எண்ணிக்கொண்டாள் ஜூலியா, இத்தனை வருடங்களுக்குப் பிறகும் ஒரு பதைபதைப்பு; வயிற்றில் அவிழ மறுக்கும் முடிச்சு.
“கழகம் இன்றிரவு அந்த நாடோடி ரோலுவை மோண்ட்ரீயலிலிருந்து இந்த விருந்தில் கலந்து கொள்ள வரவழைத்திருப்பது உங்களுக்குத் தெரியுமா? இன்னும் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறாராம். அந்தப் புத்தகத்தின் முக்கியத்துவம் பற்றியெல்லாம் ஒன்றும் தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன்.”
“ஆமாம், தெரியும்.”
“முதலில் வரமுடியாதென்று சொன்னாராம்.” பொருமினார் டாக்டர் பெயர்ஸ்.  “கழகம் வழங்குவதாகச் சொன்ன  வருகைத்தொகையைப் போல இரண்டு மடங்கு கேட்டாராம்.”
குமிழ்போல் வெடித்த சிரிப்பு ஜூலியாவை லேசாக்கிற்று. நல்லதுதானே, என்று எண்ணிக்கொண்டாள். அவ்வளவு தூரம் அறுத்தும், உட்புறம் நோக்கியும் நடந்த சோதனைகளுக்கு உடன்பட்டதற்கு இன்னும் அதிகமாகவே கேட்டிருக்க வேண்டும். அப்போதே. அவன் எதைக்  கேட்டாலும் வில்லியம் கொடுத்திருப்பான்.
ஒரு நீண்ட பெருமூச்சுடன் தனது முழங்கையை டாக்டர் பெயர்ஸ் பற்றிக்கொள்ளவிட்டு ஜூலியா ஒளிவெள்ளத்தில் மூழ்கிய அந்த அறைக்குள் நுழைந்தாள்.
oOo
நவம்பரில் அவர்களது குடிலை ஒரு கனத்த அமைதி சூழ்ந்திருந்தது. பாத்திரங்களை தடதடவென்று நகர்த்தியும் அலமாரியை அறைந்து சார்த்தியும் ஜூலியா ஏதோவொரு துணை இருப்பதுபோல் தோற்றம் ஏற்படுத்திக் கொண்டிருக்கக் கண்டாள். மதிய உணவுகளுக்குப் பிறகு கம்பிளியை இழுத்துப் போர்த்திக்கொண்டு, கல்போல் உறைந்து கிடந்த பனியில் நதிக்கரையோரம் வரை நடப்பதும், தொலைவில் கரிய உருவங்கள் படைவீட்டை நோக்கி நகர்வதை பார்ப்பதும், நகரும் உருவம் வில்லியமா, ஏதோவொரு சிப்பாயா அல்லது அந்தப் பையனா என்று கணிப்பதுமாக நாட்கள் நகர்ந்தன.
அந்த மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று பையன் வீட்டை விட்டு காணாமல் போனான். ஜூலியாவும் வில்லியமும் ராணுவ மேஜரின் வீட்டில் இரவு விருந்து அருந்திவிட்டு திரும்பினார்கள். பையனின் அறை காலியாகக் கிடந்தது; அவனது தொப்பியைக் காணவில்லை; தரையில் ஒரு தேநீர்க் கோப்பை உடைபட்டுக் கிடந்தது. அவனது கலப்பின நண்பர்களுடன் குடிக்கப் போயிருப்பான் என்று எண்ணிக் கொண்டு ஜூலியா அவனது படுக்கை விரிப்பை சரிசெய்து விட்டு  உடைந்த கோப்பைத் துண்டுகளை பனியில் கூட்டித் தள்ளினாள்.
மறுநாள் காலை விழிக்கும் போது வில்லியம் அவனது மேசையில் கைகளை மடிமீது வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கக் கண்டாள். அந்தக் குடிலின் அமைதி முழுதும் அவனது திறந்து கிடந்த குறிப்பேட்டிலிருந்து எழுவது போல் தோன்றியது.
அவன் இன்னும் வரவில்லை?
வில்லியம் எதுவும் பேசாமல் உறுமினான்.
அவனது அறைக்குள் பார்த்துக் கொண்டே கேட்டாள், இந்த ஊரிலிருப்பான் என்று நினைக்கிறாயா?
நீண்ட மௌனத்திற்குப் பிறகு அவன் சொன்னான், இருக்கலாம், இல்லை பனிப்படகு ஒன்றை பிடித்து பிக்போர்ட் போயிருக்கலாம்.
அவன் பிக்போர்டில் இருக்கிறான், ஒரு ஆசுவாசத்துடன் ஜூலியா நினைத்துக் கொண்டாள். தனது கைகளை வில்லியமின் தோள்களில் வைத்தவாறு சொன்னாள், விரைவில் வந்துவிடுவான். அல்லது, உனது சோதனைகளை நடத்தி முடிக்க வேறு வழியேதாவது உனக்கு கிடைக்கும்.
முட்டாள் மலட்டுப் பெண்ணே. வேறு வழியேதும் கிடையாது.
அவள் தனது கைகளை அவன் தோள்களிலிருந்து விலக்கிக் கொண்டாள்.
எப்படி என் சோதனைகளை நான் முடிப்பேன்? இன்னொரு நாடோடியை பிடித்து வயிற்றில் சுடவா?
அவள் இல்லையென்று தலையசைத்தாள்.
இல்லை, என் மீதே சோதித்துப் பார்க்கவா?
வேண்டாம் அன்பே, என்னால்…
வில்லியம் குறிப்பேட்டை அறைந்து மூடிவிட்டு, தனது கோட்டை எடுத்துக்கொண்டு உறைபனிக்குள் வெளியேறினான்.
நாட்கள் இருளுக்குள் மூழ்கி நகர்ந்தன. கிடைக்கும் சொற்ப ஒளியும் ஜூலியாவின் காலைச் சோம்பல் கலைவதற்குள்  கடந்து போனது. துவைக்காத துணிகள்  அறையின் மூலையில் குவிந்து கிடக்க, மேப்பிள் மரத்துண்டுகள்  சடசடத்து எரிவதை வேடிக்கை பார்த்தவாறு கணப்பினருகே சுருண்டபடி நாட்கள் கடந்தன. வெப்பம் இல்லாத நெருப்பு. வில்லியமின் மைக்கூடு உறைந்திருக்கக் காண்பதோடு ஒவ்வொரு நாளும் விடிந்தது.
அந்த வெள்ளிக்கிழமை சூசனுக்கு அவள் கடிதம் எழுதிக் கொண்டிருந்தபோது, குடிலின் பின்புறக்கதவு அறைந்து சார்த்தும் சத்தம் கேட்டது. அவள் கைகள் ஒரு கணம் ஸ்தம்பித்தன. அவள் எழுதினாள், அவன் திரும்ப வந்துவிட்டான்.  மெதுவே அவனது அறைக்கதவைத் திறந்து பார்த்தாள்: சுவரில் சாய்ந்தபடி பையன் தரையில் அமர்ந்திருந்தான். தலை முன்கவிழ்ந்திருக்க, அவன் கால்களுக்கிடையே கலங்கின மஞ்சள் நிறத்திரவம் கோடாக வழிந்து கிடந்தது.
தலையை உயர்த்தி அவளை பார்த்தான். சிரித்தபடி எழுந்து அவளை நோக்கி நடக்க முயற்சித்து, தடுமாறி ஒரு காலில் முழந்தாளிட்டு விழுந்தான். வலியில் முனகியபடி சட்டையை நெஞ்சும்வரைக்கும் மேலிழுத்துவிட்டுக்கொண்டு தரையில் புரண்டான்.
காயம் வாய்பிளந்து தெரிந்தது. சிவந்த அதன் ஓரங்கள் இன்னும் கூடாமல், உள்ளிருந்து அந்தத் திரவம் அவன் நெஞ்சின் மேலாக மரப்பலகை மேல் வழிந்தது. பையன் ஒரு கையை காயத்தின்மேல் வைத்து வெளிவந்த திரவம் உட்செல்ல செய்வதைப்போல அழுத்திப்பிடித்துக் கொண்டான். இன்னொரு கையால் தரையில் வழிந்துகிடந்த திரவத்தில் கிடந்த உருளைக்கிழங்கு துண்டொன்றை எடுத்து வலியில் விகாரமாக சிரித்தபடி வாய்க்குள் போட்டுக் கொண்டான். படுக்கையினருகே இருந்த மணியை எடுத்து அவளை பார்த்தபடியே அடித்தான்.
அசையாதே. தயவுசெய்து அப்படியே இரு. நான் உதவி செய்கிறேன், என்றாள்.
அவன் கஷ்டப்பட்டு தனது தோள்களை படுக்கையின்மேல் இழுத்துக் கொள்ள, அவள் அவனது கால்களை தூக்கி மேலே படுக்க வைத்தாள். தலைமுடி சேறும் சகதியுமாக, சிறு மணற்துகள்களோடு சிக்குப் பிடித்துக் கிடந்தது. மதுவும், பைப் புகையும், வாந்தியும் கலந்த நாற்றம் வீசியது.
உனக்கொரு குவளை தேநீர் கொண்டு வருகிறேன்.
வேண்டாம், இரு ஜூலியா. அவள் பெயரை மூன்று தனித்தனியான அசைகளாக உச்சரித்தான்.
நீ நகரக் கூடாது. நான் என் கணவனை வரச்சொல்கிறேன்.
அவர் என்னை கொல்லப் பார்க்கிறார்.
அவன் இதை சொல்லிவிட்டு சிரிப்பான் என்று நினைத்தாள். ஆனால், அவன் தீர்க்கமாக சொல்வது போலிருந்தது. உளறாதே, அவர் உன்னை காப்பாற்றியிருக்கிறார், என்றாள்.
அவன் சிரமப்பட்டு ஒருபுறம் ஒருக்களித்தபடி சொன்னான், இல்லை ஜூலியா அவர் என்னை மோசமாக நடத்துகிறார். பட்டினி போடுகிறார். எதையெதையோ என் வயிற்றுக்குள் திணிக்கிறார்.
அவன் கண்களின் ஓரம் சிவந்திருந்தது. அழப்போகிறான் என்று நினைத்தாள்; மறுகணம் கைகொட்டி சிரித்தான். தயவு செய் ஜூலியா. நீதான் என் தாய்.  உண்மையில் நீதான் என்னைக்  காப்பாற்றினாய்.
நீ குடித்திருக்கிறாய். அவமானம்.
சிரித்தான்.
வில்லியம் உன்னை கஷ்டப்படுத்துகிறார் என்றால் ஏன் திரும்ப வந்தாய்?
அவன் சிரிப்பு நின்றது. வெற்றுப்பார்வையுடன் அவளை வெறித்துப்பார்த்தபடி அவளது தொடையில் தனது குளிர்ந்த கையை வைத்தான்.
நான் போய் தேநீர் கொண்டு வருகிறேன்.
தயவு செய்து ஜூலியா, அவன் கிசுகிசுத்தான்.
அவள் கால்களை நகர்த்திக் கொண்டாள். குளிரூசிகள் செருகியதுபோல் தொடை கூசியது.
அவன் படுக்கையில் அப்படியே சரிந்தான். எனக்கு எதுவும் கொண்டு வராதே. நான் இன்னும் பத்து நிமிடத்தில் போய்விடுவேன்.
அவள் தேநீர் கொண்டுவந்தபோது அவன் தூங்கிவிட்டிருந்தான். வில்லியம் மருத்துவமனையிலிருந்து பனியில் நனைந்தபடி வந்து, காலணிகளைக் கழற்றிவிட்டு கால்களை கணப்பினருகே நீட்டியபடி அமர்ந்திருக்கையில் ஜூலியா சென்று சொன்னாள், பையன் வந்துவிட்டான்.
அவளை உற்றுப் பார்த்தவன் பையனின் அறைக்கதவை பார்த்தபடி கேட்டான், இப்போது உள்ளேயா இருக்கிறான்?
தூங்குகிறான். வரும்போது குடித்திருந்தான்.
வில்லியம் கதவை மிக மெதுவாகத் திறந்து உள்ளே பார்த்துவிட்டு மீண்டும் மூடியவாறு சன்னமான குரலில் கேட்டான், என்ன சொன்னான்? எங்கிருந்தானாம்?
தெரியவில்லை. வந்தவுடன் தூங்கிவிட்டான்.
வில்லியம் அவளை நோக்கி நகர்ந்தவன், சட்டென்று ஒரு அரைவட்டமாகத் திரும்பினான். முஷ்டி இறுகியிருந்தது . கடவுளே, நன்றி. மிக்க நன்றி கடவுளே. ஜூலியாவை இறுக அணைத்தான். மோவாய், மூக்கு, கன்னங்கள் என மாறி மாறி முத்தமிட்டான். அன்பே, இறைவனுக்கு நன்றி சொல். சத்தமில்லாமல் சிரித்தான். ஆயிரம் முறை நன்றி என் தேவனுக்கு.
வில்லியமின் முழு உடலும் நடுங்கியது. ஜூலியா அவனை அணைக்கும்போது அவளையறியாமல் ஒரு விம்மல் எழுந்தது. அவளால் அவனை மகிழ்ச்சியில் நடுங்கவைக்க முடிந்ததில்லை; இறைவனுக்கு நன்றி கூற வைக்க இயன்றதில்லை; ஆனந்தத்தில் கூத்தாட செய்ய முடிந்ததில்லை. அவன் கழுத்து திடீரென்று வியர்த்திருந்தது.
அவள் மெதுவாக, அவன் என்னைத் தொட்டான், என்றாள்.
வில்லியமின் கண்கள் மூடியிருந்தன. என்ன சொல்கிறாய்? எப்போது?
இங்கே. அவள் அவனது கையைப் பற்றி அவள் தொடை மேல் வைத்தாள். அவன் இங்கே தனது கையை வைத்தான். இப்படி.
வில்லியம் கண்களைத் திறந்தான். அவன் உன் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்திருப்பான்.
ஜூலியா தலையை அசைத்தாள். இல்லை, நான் நகர்ந்து விட்டேன். நீ சீக்கிரம் வந்து விடுவாய் என்று சொன்னேன். அதற்கு அவள் இன்னும் பத்து நிமிடத்தில் போய்விடுவேன் என்றான். நான் அவனுக்கு தேநீர் –
இரு இரு. ஏன் அவன் போய்விடுவேன் என்று சொன்னான்?
ஜூலியா அவனை கூர்ந்து பார்த்தாள். நான் என் காலை விலக்கிக் கொண்டதும்…
வில்லியமின் முகம் சோர்ந்தது. ஒன்றும் பேசாமல் மேசையைச் சுற்றி இரண்டு முறை நடந்தான்.  தனக்குள் ஏதோ பேசிக்கொண்டான். நெருப்பின் முன் வந்து அமர்ந்து கொண்டான். மெதுவாக சிரித்துக்கொண்டான். ஜூலியா, அன்பே ஜூலியா. அந்தப் பையன் ஒரு அற்புதம். மேலே பேசமுடியாமல் முகத்தைத் துடைத்துக் கொண்டான். ஜூலியா அவன் அழுகிறான் என்று புரிந்துகொண்டாள். அவனை இங்கே வைத்திருக்க வேண்டும் ஜூலியா. இன்னும் ஒருசில மாதங்களாவது அவன் இங்கே இருந்தாக வேண்டும். புரிகிறதா? இருந்தே ஆக வேண்டும்.
அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
அவன் ஒருகணம் அமைதியாக இருந்தான். பின் ஒரு குற்றப் பிரார்த்தனை போல அவள் பெயரை மெதுவாக உச்சரித்தான்.
அவளுக்குள் ஒரு குளிர் பரவியது. உதடுகளும் விரல்களும் பனிக்கட்டியில் செதுக்கியது போல் குளிர்ந்தன.  மேசைக்குமேல் சாய்ந்த தலையுடன் நின்றிருக்கும் அந்த நீலக்குருவி, அந்த மரச்செதுக்கு – அவற்றின் பெயர்கள் அவள் நினைவுக்கு வர மறுத்தன. கீழே மண்டியிட்டிருக்கும் அவள் கணவனுக்கு மேல் குனிந்து நின்றிருக்கும் அவள் உருவம் கண்ணாடியில் தெரிந்தது. வெளியே, இருளும், காற்றும் சூழ்ந்த கானகம்; கொடுங்குளிரில் நனைந்த இரவு. அவள் தனக்குள்ளே வினவிக் கொண்டாள், பறவைகள் ஏன் வலசை போகின்றன? ஏனென்றால் அவற்றுக்கு வெப்பம் வேண்டும். ஏன் மரங்கள் உயரே வளர்கின்றன? ஏனென்றால் அவை சூரியனை விரும்புகின்றன.
வில்லியம் வேண்டினான். தயவு செய்து ஜூலியா.
அவனது ஈர கேசத்தை நீவிக் கொடுத்தாள். பையனின் இருப்பு அந்த அறைக்குள்ளிருந்து ஒரு தொலைதூர நெருப்பு போல அந்தக் குடில்முழுதும் பரவுவதுபோல் இருந்தது. அவளது குளிர்ச்சிக்குள்ளும் ஒரு சுடரின் தகிப்பை ஜூலியா உணர்ந்தாள்.
இன்றிரவு அவனிடம் நான் பேசுகிறேன் என்றாள்.
oOo
கழகத்தின் கூட்ட அரங்கு அவள் உள்ளே நுழையும்போது நெரிசலாகவும் மெல்லிய பேச்சொலிகளால் நிரம்பியதாகவும் இருந்தது. டாக்டர் ஹேவூட், அவர் மனைவி, டாக்டர் செகி, டாக்டர் மோஞ்சஸ் அவள் கண்ணில் பட்டனர். பின்னர் அவள் மகன், ஜேக்கப் அவள் கண்களில் பட்டான். ஆரஞ்சு நிற தலைமுடி மழையீரத்தில் படிந்திருக்க, வயலின் வாத்தியங்களருகே நின்றிருந்தான். ஜூலியாவைப் பார்த்ததும் ஒரு விரிந்த புன்னகையுடன் கையைத் தூக்கி ஆட்டினான். இப்போது அவன் அந்த அறையைக் கடந்து, புன்னகை மாறாமல் அவளருகே வந்து நின்று அவள் முகத்தில் ஏதேனும் கவலை தென்படுகிறதா என்று உற்றுப் பார்ப்பான். கையிலிருக்கும் ஷாம்பெய்ன் கோப்பையை அவளிடம் நீட்டுவான். அவள் மறுக்கும்போது, ஓரிரு மிடறு குடிப்பான் – அது அருமையான சுவை என்பதைக் காட்டுவது போல, ஊக்கம் தேவைப்படும் ஒரு குழந்தைக்கு செய்து காட்டுவது போல. இந்த எண்ணமே ஜூலியாவிற்கு நிறைவைத் தந்தது.
அவள் மெதுவாக அறையைச் சுற்றி நோட்டமிட்டாள். இப்போது ரோலு, அந்தப் பையன் எப்படி இருப்பான் என்று அவளால் யூகிக்க முடியவில்லை.  மிகப் பலகாலங்களுக்கு அவனை வெளுத்த, சிக்கு விழுந்த தலைமுடியுடன், காய்த்துப்போன விரல்களுடன், எப்போதும் புன்னகைக்கும் ஒரு நாடோடி பையனைத்தான் மனதில் நிலைநிறுத்தி வைத்திருந்தாள். இப்போது அவன் சிறுவனல்ல; எப்படி அவள் இளம்பெண்ணல்லவோ அதுபோல். அவனைப் பார்க்கும்போது என்ன சொல்வேன், அவள் சிந்தித்தாள். அவன் இன்னும் படகோட்டும் பாடல்கள் பாடுகிறானா என்று கேட்க வேண்டும். யாரை மணந்துகொண்டான் என்று கேட்க வேண்டும். அவன் மனைவியை நேசிக்கிறானா என்று கேட்கவேண்டும்; எப்போதும் அவளை நேசித்திருக்கிறானா என்று கேட்கவேண்டும். அவன் பிள்ளைகள் அவன் வருகைக்காக அவன் வீட்டில் காத்திருக்கிறார்களா என்று கேட்கவேண்டும். அல்லது அவர்கள் நீண்ட நாட்களுக்கு முன்பே அவர்களது மனம்போனபடி தத்தம் வழியைத்தேடி சென்றுவிட்டார்களா என்று கேட்கவேண்டும். அவளுக்கு நேர்ந்ததெல்லாம், அவள் வாழ்வின் கசப்புகள், இன்பங்கள், துன்பங்கள், நம்பிக்கைகள் – எல்லாவற்றிற்கும் அவன்தான் காரணம் என்பதை அவனிடம் சொல்ல வேண்டும். ஆனால் இதையெல்லாம் எப்படி விளக்குவாள்? அவனது காயம் ஆறிவிட்டதா என்றும் கேட்கவேண்டும்.
நன்றி சொல்ல வேண்டும், என்று இறுதியாக எண்ணினாள். அந்த குளிர்மாதங்களில் அவனது வெம்மைக்கு நன்றி சொல்ல வேண்டும்.
அரங்கின் கூட்டம் விலகி வழிவிட்டது. சன்னலருகே செந்நிறமுடியுடன் குறுகிய சிறிய உருவத்துடன் அந்த மனிதனை அவள் கண்டாள். ஒரு நடுக்கம் உடலெங்கும் படர அவரை நோக்கி நகர்ந்தாள். அவள் அவரிடம் என்ன சொல்வாள் என்று நிச்சயமாக அவளுக்கு இப்போது தெரிந்திருந்தது, ஏற்கனவே பதிந்துவிட்ட நினைவைப் போல: வணக்கம் சொல்வாள், குனிந்து சுருக்கம்படர்ந்த அந்த மோவாயில் ஒரு முத்தம் பதிப்பாள். பின் அவரை ஜேக்கப்பிற்கு அறிமுகப்படுத்துவாள் , ஏதோ அவர்களிருவரும் அந்நியர்கள் என.
“திரு ரோலு அவர்களே,” அவள் சொல்வாள், “இதோ என் மகன்.”



Pandit Venkatesh Kumar and Raag Hameer