Friday, December 28, 2018

இல்லப்பணிப் பெண்டிரின் ஒருநாள்


எதிரும் புதிருமான
தெருக்களிலெல்லாம்
காலடி ஓசைகள்
அதிகாலை
அத்தனை பாதங்களும்
அழகிய பெரும் வீடுகளின்
தானியங்கிக் கதவுகள் திறந்து
சாலைகள் நோக்கி
சாரி சாரியாக நடக்கும்
பேருந்து நிறுத்தங்கள்தோறும்
இந்தோனேசிய தலைமுக்காடுகள்
இந்திய கைப்பைகள் குளிர்க் கண்ணாடிகள்
பிலிப்பினோ விரிந்த கூந்தல் அலங்காரங்கள்
சந்தனச் சுண்ணம் பூசிய பர்மிய கன்னங்கள்
குறைவும் நிறைவுமாக விதவிதமான ஆடைகள்
ஏதேதோ மொழிகள்
சுழலும் அத்தனைக் கண்களிலும்
ஒன்றே தாபம்
ஊடலும் கோபமும்
மகிழ்வும் பிணக்கும்
பேருந்து நிறுத்தங்களில் தொடங்கி
பேரங்காடிகளில் தொடர்ந்து
நிறுத்தங்களில் நிறையும் இன்று
சிங்கப்பூரில் ஞாயிறு

இல்லப்பணிப் பெண்டிரின் ஒருநாள்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - இல்லப்பணிப் பெண்டிரின் ஒருநாள்


https://padhaakai.com/2018/12/23/saranabhi-poetry/#two

Thursday, December 27, 2018

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - இருக்கலாம்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - இருக்கலாம்
https://padhaakai.com/2018/12/23/saranabhi-poetry/

இருக்கலாம்

வடிவதற்கேதும் வழியின்றி
பொங்கி நிரம்பி
ஆவியாவதொன்றல்லாமல்
தன்னைக் கரைத்துக் கொள்ளவியலா
இந்தக் கடல்
ஈர்ப்பு விசையனைத்துக்கும் மேலென
ஏதோவொன்று அழுத்தி வைத்திருக்கும்
அத்தனை நீரும்
பொதிந்து வைத்திருக்கும் இருள் அறியா
அத்தனை அந்தகாரங்களும்
என் சுயமாகக்கூட இருக்கலாம்.




வெண்ணிற பனித்துகில்
தொங்கும் திரைச்சீலை
அசைவற்ற நிசப்தம்
கொதித்தடங்கிய பாலின்
மென்சருகாடை மோனம்
கரையின் மீது காத்திருந்து
பறக்கத் துவங்கும்
முதல் சிறகசைவில்
கலையும் நீர்ப்பரப்பு
என் சிந்தையாகக்கூட இருக்கலாம்.
அசைந்து கொண்டேயிருக்கும் உணர்வுகளை
அசையா ஒரு காட்சியென
பிழையேதுமின்றி ஒரு முறை
ஒரே முறை
வடிக்க முடிந்துவிட்டால்
ஓய்ந்துவிடும் இதுவென்
ஆவியாகக்கூட இருக்கலாம்.

Pandit Venkatesh Kumar and Raag Hameer