Sunday, August 12, 2018

பசியின் பிள்ளைகள் - 3




பசியின் பிள்ளைகள் - அத்தியாயம் 3
வில்லியமிடம் அப்போதே நான் சொல்லியிருந்தால்? ஜூலியா எண்ணினாள்.  அப்போதே சொல்லியிருந்தால், அவன் பையனை வெளியேற்றியிருப்பான்; பையன் வெளியேறியிருந்தால், பரிசோதனைகளைச் செய்திருக்க முடியாது; பரிசோதனைகளில் அவன் மூழ்கியிராவிட்டால், அவன் பித்துப் பிடித்தது போலாகியிருக்க மாட்டான்.
————-
வண்டியின் கூரை மீது தாளமிடும் மழைத்துளிகளை கூர்ந்தவாறு அவள் கண்களை மூடிக்கொண்டாள். வெளியே எங்கோ ஒரு தேவாலய மணி ஏழு முறை அடித்து ஓய்கிறது; வெறுமையான, காற்றில் மிதக்கும் மணிச்சத்தம். டாக்டர் பெயர்ஸ் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.
நான் அந்த ஆர்வமிக்க பெண்ணாக இன்னும் இருக்கக் கூடும், அவள் எண்ணிக் கொண்டாள், கூந்தலில் கெமோமில் பூக்களும்,கழுத்தில் பூசிய பன்னீருமாக.
நான் அப்போதே அவனிடம் சொல்லியிருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள் .
———
குளிர்காலத்தின் முதல் புயல் அக்டோபரில் வந்தது. பனி அடர்ந்த, நீரிணைக்கு அப்புறமிருந்து ஓலமிடும் காற்று  அவர்களின் குடில் கதவுகளை படபடவென்று அடித்துக் கொண்டும், கரி படர்ந்த புகைபோக்கியில் நெருப்பு பொறி பறக்க விட்டுக் கொண்டும் வந்து சேர்ந்தது. ஜூலியா குடில் மரச்சுவர்கள் பனியால் நனைந்து கிடப்பதை பார்த்தவாறு விழித்தாள்.  போர்வையின் மேல் பூத்தாற்போல் படிந்துகிடந்த பனியை சன்னல் வெளியே பரவிக்கிடந்த நீர்கோர்த்த ஒளி இன்னும் வெண்ணிறமாக காண்பித்தது. கன்னங்கள் கணப்பில் எரிய, முதுகோ குளிரில் நடுங்க அவள் அடுப்பின் மிக நெருங்கி நின்றுகொண்டாள்.
பாத்திரங்களை கழுவிவிட்டு, படுக்கையைப் புரட்டி போட்டுவிட்டு, குடிலைக் கூட்டிவிட்டு, புகைபடர்ந்த விளக்குகளை சுத்தம் செய்துவிட்டு… உடை மாற்றிக்கொண்டு, அறைக்குள்ளேயே நெஞ்சு படபடக்கும்வரை ஸ்கிப்பிங் செய்தாள். மேசைமீது தலை சாய்த்து அவளைப் பார்க்கும் அந்த பாடம் செய்த குருவியைப் பார்த்துக் கேட்டாள் – இன்று மதியம் என்ன செய்யப்போகிறோம்? மிதக்கும் வெப்பக்காற்று பலூன் ஒன்றில் லண்டன் பறந்து போவோமா? இல்லை, ஏதென்ஸ்? நீலக்குருவி பதிலொன்றும் சொல்லாமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தது. வாழ்வில் முதல் முறையாக ஜூலியா தான் இன்னும் கொஞ்சம் அதிகம் மதநம்பிக்கை கொண்டவளாக இருந்திருக்கலாம் என்று விரும்பினாள். தினமும் பிரார்த்தனைக் கூட்டங்களாவது அவளுக்கு கிட்டியிருக்கும்.
நோயாளிகளின் அறையிலிருந்து கடமுடவென்ற சத்தம் கேட்டது. ஒரு கணம் நிதானித்த ஜூலியா விளக்கை தொடர்ந்து சுத்தம் செய்யத் துவங்கினாள்.
கடந்த சில வாரங்களாக அந்த அறையை அவள் தவிர்த்து வந்தாள். மணியொலிக்கும்போது, பையனின் தேநீரையோ உணவையோ அறைக்குள் சென்று மேசையின்மீது ஒரு மரியாதையான வணக்கத்துடன் வைத்துவிட்டு வந்து விடுவாள். பையனின் சட்டை தரையில் கசங்கிக் கிடைக்கும்; காலி தேநீர்க் கோப்பை படுக்கையினருகே  கவிழ்ந்திருக்கும்; ஒரு காடி வாசம் காற்றில் மிதக்கும். அவனது முன்பற்களில்லாத சிரிப்பு அறைக்குள் அவளை பின்தொடரும்படி, பையன் கட்டிலில் சரிந்து கிடப்பான்.
பத்து நிமிடங்கள் மேடம், உடை மாற்றிக்கொள்கிறேன், என்றான். கதவை சாத்திக்கொண்டு முகம் சிவக்க வெளியே வந்து நின்றிருக்கிறாள்.
பாத்திரத்தில் வெந்நீரை ஊற்றி காமோமில் மலர்களை அள்ளியிட்டு, முகத்தை நீரின் அருகே கவிழ்த்தவாறு தலைமுடியை நீருக்குள் அமிழ்த்தினாள். நீராவி முகத்தில் முத்துக்களாக கோர்க்கும்வரை காத்திருந்துவிட்டு, ஈரமுடியை துண்டில் சுற்றிக்கொண்டு,வில்லியமின் மேசையிலிருந்து அவனது மருத்துவக் குறிப்பை எடுத்துக் கொண்டு சமையலறை மேடைக்கு வந்தாள் . ஒரு குவளை தேனீர்  ஊற்றிக் கொண்டு குறிப்பைப் புரட்டினாள்.
அக்டோபர் 17, 1822
மாலை 8 மணி – பையன் கொதிக்க வைத்த ஆட்டிறைச்சிரொட்டிஉருளைக்கிழங்கு மற்றும் காபி உண்டான்.
9 மணி 30 நிமிடங்கள் – அவன் வயிற்றில் திறந்திருக்கும் காயத்தின் வழியே கஞ்சி போன்ற திரவம் கொதிப்பதைக் காண முடிகிறது. அமில வாடைஒரு கசப்புச் சுவை. பையன் வலிக்கிறது என்று முரட்டுத்தனமாக புகார் செய்தான்ஆனால் பசியில்லை என்கிறான்.
11 மணி – அவ்வளவு செரித்த உணவும் குடலிலிருந்து சிறுகுடலுக்குள் மறைந்துவிட்டது. பையனுக்கு பசியில்லை.
செரிமானம் ஆரம்பிக்கும்போது உணவுண்ட திருப்தி ஏற்படுகிறது எனத் தோன்றுகிறது. ஆனால்முழுமையாக உணவு செரிக்கப்படும்வரை மீண்டும் பசியென்ற உணர்வு ஏற்படுவதில்லை. 
 குடலுக்குள் உணவு இல்லாமல் இருப்பது மட்டுமே பசியெடுப்பதற்கான ஒரே காரணமாக  இருக்க முடியாது என்பதை இது குறிக்கலாம்.
அதிர்ஷ்டவசமாக பையனுக்கு அடிக்கடி பசி ஏற்படுகிறதுபரிசோதனையும் தடையின்றி செய்ய முடிகிறது. ஹாவல் ஒரு முறை சொன்னது போல அவன் பசியின் பிள்ளை.
விடியும்வரை விழித்திருந்தேன். உறங்க முடியாமல்.
"சினமிகுந்த அலைகள் கரையை மோதுகின்றன
தாழ்ச்சியுற்ற கப்பலோ முன்னும் பின்னும் தள்ளாடுகிறது
அனைத்தும் மேலிருந்து நோக்கப்பெறுகிறது
கடவுளால் அல்லமனிதனால்அறிவு வளரும்விதம்"
கதவு திறந்தது. கன்னங்கள் குளிரில் ஊதாநிறமாகத் தோன்ற, பனி அப்பிக்கிடந்த காலணிகளைத் தட்டி மிதித்தபடி வில்லியம் உள்ளே வந்தான். கொடுமையான குளிர்! என் முடிகூட நடுங்குகிறது என நினைக்கிறேன்.
குறிப்பேட்டை மூடிவிட்டு ஜூலியா திடுக்கிட்டு நிமிர்ந்தாள். தலையிலிருந்த துண்டை அகற்றிக் கொண்டே கேட்டாள். தேநீர் அருந்துகிறீர்களா?
பனித்துகள்கள் தாடியில் மின்ன அவன் இன்னும் கதவருகே நின்றிருந்தான். மூடப்பட்ட குறிப்பேட்டைப் பார்த்துத் தலையசைத்து கொண்டான். அதுவொன்றும் நீ படிக்கும் மாதாந்திர பெண்கள் பத்திரிக்கை அல்ல, தெரியும்தானே?
ஜூலியா அமைதியாக இருந்தாள்.
ஈர தொப்பியையும் கோட்டையும் கழற்றிவிட்டு மேசையனருகே வந்து முதல் நாளிரவு அவன் எழுதியிருந்த குறிப்பை மீண்டும் ஒருமுறை அமைதியாகப் படித்தான் .
மன்னித்து கொள் வில்லியம், என் அன்பே, என்றாள் ஜூலியா. எனக்கொரு ஆர்வம். நான் உன்னைக் கேட்டிருக்கலாம்தான், ஆனால் அறிவிலி போல் உன் முன் தோன்ற விரும்பவில்லை. உன் ஆராய்ச்சிகளைப் பற்றி எனக்கு தெரியவேண்டும். தயவுசெய்து சொல்வாயா?
அவன் கண்கள் அந்தக் கவிதையைப் பார்ப்பதைக் கண்டாள்; நெற்றி சுருங்க கேட்டான், இதை எதற்கு நீ படிக்கிறாய்?
சொன்னேனே, ஒரு ஆர்வம். அந்தப் பையனைப் பற்றி, உன் ஆராய்ச்சிகளை பற்றி. இன்னும் உன் கவிதைகளைப்  பற்றி – நான் உன் அழகிய கவிதைகளைப் படிக்க விரும்பினேன்.
ஒரு கணம் அவன் முகபாவனை சாந்தமடைந்தது போல் தோன்றியது. குறிப்பேட்டை மூடிவிட்டு கடுப்பு தோன்ற கேட்டான் , என்ன ஆயிற்று உன் முடிக்கு?
நிறம் பூசியிருக்கிறேன், உனக்காக, என்றாள்  ஜூலியா.
நல்லது அன்பே. அவன் குரலைச் சரி செய்து கொண்டான். அது சிக்கலான விஷயம்.
சரி. கொஞ்சம் புரியும்படி சொல்ல முயற்சி செய்.
நனைந்த குழல் கற்றையொன்று அவள் தோளில் படிந்திருப்பதை பார்த்துக் கொண்டிருந்தான். மெதுவே அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். பல கோட்பாடுகள் இருக்கின்றன. வயிறு ஓர் அரவை யந்திரம் எனச் சிலரும், அது ஒரு கொதிக்கும் கலன் எனச் சிலரும் கருதுகின்றனர். இன்னும் சிலரோ, அதுவொரு நொதிக்கும் பாத்திரம் போல செரிமானம் செய்கின்றது என்கின்றனர். யாருக்கும் உறுதியாகத் தெரியாது. நாய்களின் மீது சில சோதனைகள் நடந்திருக்கின்றன – ஆனால் இன்னும் எதுவும் உறுதிப்படவில்லை.
பையன் தான் உன் பரிசோதனை.
அந்தப் பையன் ஓர் அற்புதம், வில்லியம் சொன்னான், மேசையின் மீது நன்கு குனிந்து அவளை உற்று நோக்கி, உன்னால் உணர முடிகிறதா ஜூலியா? இன்னும் ஒரு கோட்பாட்டை எழுதத் தேவையில்லாமல் அவன் வயிற்றின் உள்நிகழ்வுகளைப் பார்க்க அவன் என்னை அனுமதிக்கிறான்.
மணியொலித்தது.
இரு.
வில்லியம் பின்னால் சாய்ந்துகொண்டான். புன்னகைத்தவாறு சொன்னான். அன்பே, அவன் உடல்நலமின்றி இருக்கிறான்.
தயவுசெய்து வில்லியம். அவனொன்றும் உடல்நலமின்றி இல்லை.
மறுபடி மணியொலித்தது. பிறகு ஏதோ கோபமாக முனகுவது கேட்டது.
நீ போய்விட்டபிறகு அவன் அறைக்குள் நடக்கிறான். பகல் வேளைகளில் மணியடித்து என்னை அழைக்கிறான். சென்றால் ஒன்றும் பேசாமல் ஒரு திமிரான சிரிப்பு வேறு.
அவன் ஒரு சிறுவன் என்று  உனக்கு நினைவுபடுத்த வேண்டுமா?
அவன் சிறுவனில்லை.
வில்லியம் ஜூலியாவின் நெற்றியில் முத்தமிட்டான். குறிப்பேட்டை மேசையறைக்குள் வைத்துவிட்டு பையனின் அறைக்குள் மறைந்து போனான்.
தேநீரை எரியும் அடுப்புக்குள் வீசிக் கொட்டிவிட்டு, காலிக் கோப்பையை மேசை மீது சட்டென்று வைத்தாள். முட்டாள் பையன் – அவன் முட்டாள் சிரிப்பும் அவன் நாடோடி நாற்றமும். அவன் வலி உயிர் போவது போல் நடித்துக்  கொண்டு கட்டிலில் கிடப்பதாகவும் வில்லியம் அவன் காயத்திற்கு மருந்து போட்டுக் கொண்டே அவனது குழறல் புகார்களைக் கேட்பது போலவும் கற்பனை செய்து பார்த்தாள் . எப்போது வில்லியம் அவள் பேச்சைக் கேட்டிருக்கிறான்? டெட்ராய்ட்டில், அவர்களது முதல் சந்திப்பு நிகழ்ந்த அந்த சமூக மன்ற நடனத்தில் அவள் கூறிய, மருத்துவர்கள் வானின்று வீழ்ந்த தேவதைகள், என்ற அந்த வரியைக் கேட்டதற்குப் பிறகு அவள் கூற எதைக் கேட்டிருக்கிறான்?
அமுங்கிய சிரிப்பொலி அறைக்குள்ளிருந்து கேட்டது. ஜூலியா கூர்ந்து கவனித்தாள்.
என்  முதல் பருவம், நாங்கள் ஒட்டாவா ஏரியில் படகு வலித்துக்கொண்டு சென்றது நினைவுக்கு வருகிறது. அங்கிருந்து கிராண்ட் போர்ட்டேஜ், பிறகு ரெய்னி ஏரி, இறுதியாக கோட்டைக்கு. இங்கெல்லாம் குளிரென்றா நினைக்கிறீர்கள்? அங்கெல்லாம் சிறுநீர் நடுக்காற்றில் உறைந்து போகுமென்றால் பாருங்கள்.
வில்லியம் சிரித்தான். அப்படியா?
மங்கேயூர் குழு போர்ட்டேஜ் போனது போதும் என்று திரும்பி விட்டார்கள். நானிருந்த ஹேவர்னன்ட் குழு, ஒரு எழுபது பேரிருப்போம்,அந்தக் கோட்டைக்குள் முழுப் பனிக்காலமும் மாட்டிக் கொண்டோம். எனக்கு அப்போது பதினாறு வயது. நான் தினமும் காலையில் உறுப்பைக் கையில் பிடித்துக் கொண்டுதான் விழிப்பேன். இரவுணவுக்கு பிறகு ஒருவர் வயலின் வாசிப்பார், யாராவது ஒரு பாத்திரத்தில் தாளம் போட, ஆட்டம்தான். சிலர் கழுத்தைச் சுற்றி ஒரு துண்டைச் சுற்றிக் கொள்வார்கள், அவர்கள் பெண்களை போல ஆட. ஆண்களுக்குள் தகராறாக இருக்கும் யார் அடுத்து இந்தப் பெண்ணாக நடிக்கும் ஆண்களுடன் ஆடுவது என்று.  எவ்வளவு தனிமையாக இருந்திருக்கும் என்று புரிகிறதா? ஒரு நாள் காலை படுக்கையில் அருகில் அந்த ஆணிலொருவன் படுத்துக் கிடந்ததும் நடந்தது.
மேலே சொல்.
அவ்வளவுதான். அந்த சண்டையில்தான் என் பற்கள் போனது, அவனுக்கு இன்னும் அதிகமாக.
ஒரு பெருமூச்சில் முடியும் தளர்ந்த சிரிப்பு. ஜூலியா அவளுக்கு தட்டையும் முள்கரண்டியையும் மேசை மீது எடுத்து வைத்துக் கொண்டாள். அவர்கள் பள்ளிக்கூடச் சிறுவர்கள் போல் சேர்ந்து சிரிக்கட்டும், அவள் எண்ணிக்கொண்டாள். அந்த அறைக்குள் இரவு முழுதும் இருக்கட்டும்.
(தொடரும்)

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் மொழியாக்கச் சிறுகதை: அத்தியாயம் 3


பசியின் பிள்ளைகள் - 3

https://padhaakai.com/2018/08/11/children-of-hunger-3/


Pandit Venkatesh Kumar and Raag Hameer