Monday, April 24, 2017

புலன்மயக்கம்

Image result for separation lovers

இமைத்துவிட்டாலும் கசங்கிப் போகக்கூடும்
விழிகளுக்குள் தேங்கி நிற்கும் உறவு
கூப்பிய கரங்களின் விரல்நுனிகள்
பார்த்தவாறிருந்தேன்
சொல்லென இல்லாமலேனும்
உணர்வொன்று
விரல்வழி வழிந்துவிடாதா
மென்மயிர் அடர்ந்த உன்
முன்வளைக்கரம் தொட்டு
உணர்த்திவிடாதா
அனிச்சையாகவேனும்
ஏதேனும் நிகழ்ந்துவிடாதா
தீண்ட நீளும் விரல்களின் முன்
சுருங்கும் என் புலன்கள்
சூழலின் உறுத்தல் மீதூற
கழுத்தை அழுத்தித் தேய்த்துக் கொள்கிறேன்
மேசை மீது வைக்கப் பெற்றிருக்கிற
நிறமும் வளைவும் மினுமினுப்பும்
உன் கழுத்தை நினைவூட்டும்
யாரும் இதுவரை தொடாத
தேநீர்க்குவளை புகைகின்றது.

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - புலன்மயக்கம்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - புலன்மயக்கம்

https://padhaakai.com/2017/04/23/sensory-illusions/

Pandit Venkatesh Kumar and Raag Hameer