Monday, October 17, 2016

ஏதுமற்று

 த்திய ஜாவாவின் 
யோக்யகர்த்தா நகரில் 
விரைந்து சாயும் 
மழைஅந்திகளின் 
முன்மாலைப் பொழுது 

தொலைவில் எரிந்தடங்கும் 
ஒளியின் முன் 
விண்ணைத் தீண்டக் கிளம்பும் 
மூன்று எரிகலன்கள்போல் நிற்கும் 
பிரம்பனான் கோவிற்சிகரங்களை 
நோக்கிக் கொண்டு 
மதுவை அருந்திக் கொண்டிருக்கிறேன் 



கருமையும் அடர்த்தியும் 
கலந்து சாயும் மழைத்தீற்றலினூடே 
தெருவின் இரைச்சலைப் பின்விட்டுவிட்டு 
விடுதியின் சாளரத்தில் 
தனித்து அமர்ந்திருக்கும் 
என்னெதிரில் அமர்கிறாள் அவள் 

சிறகை சிலிர்த்து நீர்த்துளிகள் 
உதிர்க்கும் பறவைபோல் 
நீவிக்கொள்கிறாள் 

இந்தியனா என்கிறாள் 
எனக்குத் தெரியும் 
இதையும் இதற்கடுத்த 
எந்த இரு கேள்விகளையும் 
நான் எதிர்பார்க்கலாமென 

ஆமோதிக்கும் புன்னகைக்குப்பிறகு 
பிரம்பனான் கோவில்வளாகம் பார்த்தேனா 
என்று வினவுகிறாள் 

மழையின் ஓசை 
ஒரு சுதியேறி சீரான கதியில் பெய்கிறது 

பதிலாக 
அவள் அருந்த 
என்ன வேண்டுமென கேட்கிறேன் 

இரு கோப்பைகள் 
நிறைந்தும் குறைந்தும் 
மழைச்சாரலில் நனைந்த 
புன்னகைகள் கடந்தும் 
இருவரும் தத்தம் 
கோப்பைகளை ஏந்திக்கொண்டு 
கவியும் இருளில் 
கரைந்து கொண்டிருக்கிறோம் 

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer