Monday, August 22, 2016

அபத்தக் கவிகளும் அற்ப மதுவும்


உடலை உருக்கி
சொற்களில்
வடிக்கும் வாதை
கரைந்து நெளிந்து உருமாறி
கனவுகள்
வழியும் ரசவாதம்
கோடியிலொருவனாய்
கற்ற வித்தை

ஆயிரமாயிரம் வருடம்
கோடானுகோடி பாக்கள்
கொட்டித் தேடி
சலித்து வடித்து
சுவை தேர்ந்து
உயர்த்தும் சமூகம்
அரற்றுவது ஒன்றே

அற்ப மது
தனியொருவனின் முயக்கம்

பீடம் தேர்ந்த
நீயோ
எங்களில் கோடியிலொருவன்
பேசாப் பொருள்
பேசத் துணிந்தவன்

பணயப் பொருளாய்
உயிரைத் தொலைப்பவன்

கூறவந்தது முடிந்ததா
தவறற்ற மொழியின்
தேர்வு
நிச்சயப்படுத்தப்பட்டுவிட்டதா
திரும்பிப் பார்ப்பதற்கும்
எதிர்நோக்குவதற்கும்
உன் தடம்
குழப்பமின்றி
பதிக்கப்பட்டுவிட்டதா

இல்லையெனின்
உன் அற்ப மது
உன்னோடு
எங்கள் ஆதங்கம்
எங்களோடு 

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer