Monday, April 4, 2016

நிர்ச்சலனம்

அவளின்
ஒவ்வொரு இமை அசைவுக்கும்
பதறியபடி
அமர்ந்திருக்கிறேன்

இருவருட நோய்மையின்
இறுதியில் ஈன்றவள்

என்னையே நான் பார்ப்பது போல்
என்னை அவள் நோக்குகிறாள்

வலியினூடான பயணம்
வரைந்த நிரந்தரக் கோடுகளன்றி
வேறற்ற அழகிய முகம்

பிடித்திருக்கும் கரத்தின்வழி
ஏதோவொன்று
நழுவித்தொலைவது போல்

வயிற்றினின்று இறங்கி
முலையருந்தி
இடுப்பிலமர்ந்து
மடியிலுறங்கி
தோளிற்கரைந்து
கைபிடித்து
அமர்ந்திருக்கிறேன்
அவள் அயரவென்று

கடந்து போகும்
அளக்கவியலா ஒவ்வொரு நொடிக்கும்
அவள் கைவழி என்னுள் கூடும்
அமைதியின்மை

துடிக்கும் இமைகள்
வலியால் துடிப்பன
எனுமோர்
சலனம் கடந்து
ஓரிமைப் பொழுதில்
துடியா இமைகள்
திறந்தே அமையும்
என்னுள்ளும்
அந்த அறையுள்ளும்
நிர்ச்சலனம் நிறைத்து

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer