Sunday, December 13, 2015

கால்கள்

மழைக்கால நடைபாதைகளில்
கவனியாது விரையும்
மாபலிக் கால்களினூடே
கூன்சுமந்து ஊரும்
நத்தைகளை
பதைபதைத்து நோக்குகிறேன்

அறியாது அவை
மாபலிக்கும்
காத்திருக்கும்
பிறிதொரு வாமனக் கால்கள் 

Thursday, December 10, 2015

திணை மயக்கம்

நாட்காட்டியில் தாள்கள் கிழியும் சத்தம்
நொடிகள் கழியும் சத்தம்

யன்னலின் வெளியே
நிறம் மாறி மாறித் தோன்றும்
இரவின் வெக்கையும்
பகலின் மழைஈரமும்

வாழ்வு என்பதும்
நகர்தல் என்பதும்
அர்த்தமற்ற ஒலிக்குறிப்புகள்

சருகாகவும் தளிராகவும்
மிக மென்மையாக
மிக மிக அமைதியாக
உதிர்த்துக் கொண்டிருக்கிறது
காலம்

திறந்தே கிடந்தும்
யாரும் நுழையா
இக்கதவுகள்

திங்களொரு முறை
தோன்றும் மகனோ மகளோ
வருவது கூட
அசையா கதவுகளின்
மன்றாடலின் பேரில்

அசையா நாற்காலி அஃறிணை
அசையா கட்டில் அஃறிணை
அவற்றினூடே
உயிர்ப்புடனொரு
நாட்காட்டியும் கடிகாரமும்
பதாகை  மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: திணை மயக்கம்

http://padhaakai.com/2015/12/09/exotica/

Pandit Venkatesh Kumar and Raag Hameer