Monday, October 26, 2015

நானும் நானும்

உணர்வின் வெளிப்பாடு 
இயலாமல் ஆகிவிட்டவன் 
சுயம் என்னவாகும் 

உணர்தல் இயலும் அதை 
உரைத்தல் இயலாதான  இது 
சுயமற்றவொரு சடப்பொருள் என 
சூழ்ந்து நின்று விவாதிப்பதை நான் 
விழியசைவின்றி கண்டும் 
உடல் நகர்வின்றி கேட்டும் 
கொண்டிருப்பதை 
எப்படி உணர்த்துவேன் 

நினைவுக் கோளங்களில் 
பளிச்சிடும் 
வெளிச்சத் துணுக்குகளில் 
உங்களைப் போல் நானும் 
அவ்வப்போது
விதிக்கப்பட்டவோர் ஒழுங்குடன் 
நடந்து கொள்வதாக 
நீங்கள் மகிழ்வது புரிகிறது 

எனினும் 
எனக்கும் உங்களுக்கும் 
என்ன வேறுபாடு 
என்னை உங்களைப் போலாக்கும்
தவிப்பெதற்கு

வலிகளில் எது பெரியது 
என்றுதான் 
நீங்களெல்லாம் பேசியும் 
நான் பேசாமலும் 
ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் 

விட்டுவிடுங்கள் 
நானும் நீயும் ஊடாடுவதின் மூலம் 
நாமும் அவர்களும் 
ஒன்றெனக் காட்ட முயலும் 
இந்தச் சமன்பாடு 
எனக்குப் பிடிக்கவில்லை

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer