Sunday, October 18, 2015

மோஹ்சின் மக்மல்பஃப் இயக்கிய நிசப்தம்

குறிப்பிடத்தகுந்த இரானிய இயக்குனர்களுள் ஒருவர் மோஹ்சின் மக்மல்பஃப். விருதுகள் பல வென்ற அவரது படங்களுக்கு பல விமர்சனங்களும் குறிப்புகளும் கிடைக்கின்றன எனினும் முதல் முறை இந்த திகைக்கவைக்கும்படி எளிமையான ஆனால் குறியீடுகள் நிறைந்த The Silence என்ற படத்தை பார்த்தபோது என்னளவில் ஒரு சிறு  பதிவை எழுதும் உந்துதல்.

தாயுடன் வாழ்ந்து வரும் பார்வையற்ற சிறுவன் குர்ஷித் இசைக்கருவி செய்யும் ஒரு கூடத்தில், செய்து முடித்த கருவிகளில் சுதி கூட்டும் பணி செய்கிறான். கல்வியும் தந்தையுமற்ற ஆனால் வறுமை நிறைந்த வாழ்வில், அவன்  வருவாயை நம்பித்தான் அவன் தாய் இருக்கிறாள்.

தினமும் வீட்டிலிருந்து நடந்து ஒரு சந்தையை கடந்து, பேருந்து பயணித்து, உலோக வேலைக்கூடங்கள் தாண்டி அவன் பணியிடம் சேர்வதில் ஒரே ஒரு  சிக்கல்: ஓர் அழகிய பாடலோ, இசையோ, குரலோ கேட்டால் அவன் செய்வதறியாது அந்த இசையின் பின் சென்று விடுகிறான். நடக்கும் போது வழி தவறுவதும், பேருந்தில் இருந்து இறங்கி குரல்களை தொடர்ந்து எதிர் வழி சென்று விடுவதுமாக, பல நாள் பணிக்கு உரிய நேரத்தில் செல்ல முடிவதில்லை.

இசைக் கூட முதலாளி பல முறை கடிந்தும் வேலையை விட்டு நிறுத்தி விடுவதாக மிரட்டியும் கூட, அவனால் அவனறியாமல் செய்வதை மாற்றிக்கொள்ள முடிவதில்லை. மாறாக, சுதியும் லயமும் கூடிய எதுவும் அவனை ஈர்ப்பதை அவன் இயற்கையாகவும் இன்பமாகவும் கருதுகிறான்.

பல நாட்களில் வேலைக்குக் கிளம்பும்போது அவன் தாய் மேலும் பணம் முதலாளியிடம் பெற்று வரா விட்டால் வீட்டு வாடகை கட்ட முடியாமல் (ஏற்கனவே வீட்டுச் சொந்தக்காரன் அடிக்கடி வந்து வாடகை பாக்கி கேட்டு மிரட்டுகிறான்) வீதிக்குத்தான் வரவேண்டியிருக்கும் என்று எச்சரித்து அனுப்புவது அவனுக்கு நினைவில் இருக்கிறது, ஏதோவொரு இனிய குரலோ, இசையோ கேட்கும் வரை.

மிக அழகிய காட்சிகளில் அற்புதமான படப்பதிவுக் கோணங்கள்; மிகக் குறைந்த படப்பதிவு அசைவுகள்; யதார்த்தத்திற்கு  அருகில் இருக்கும் பின்னணி இசைக்கோர்வை என இப்படம் தரும் அனுபவம் உயரியது.

இரு காட்சிகளை குறிப்பிடலாம்:

- இசைக்கருவிக்கூடத்தில் குர்ஷித் கருவிகளுக்கு சுதி கூட்டும்போது அவன் தோழி நாதிரா அந்த இசையற்ற வெறும் சுதிக்கு மெதுவே மிக மெதுவே ஆடுவதும் அபிநயிப்பதும் - கவிதையான காட்சிப்படுத்தல்.

- நாதிராவும் குர்ஷித்தும் கானகத்தின் ஊடாக பொய்கை நோக்கி செல்லும் காட்சிகளில் இயற்கை ஒளியும் காட்சியின் கோணமும்  நடிகர்களின் உணர்ச்சிகளை பெருக்கும் ஒரு ஆடியாக பயன்படுத்தப் பட்டிருப்பது ஒரு சுகானுபவம்.

இது தவிர, படத்தின் பல நிலைகளிலும் குறியீடுகளை உணர முடிகிறது:

- வேலையிழந்த பிறகு தான் கேட்டு மயங்கிய ஏதோவொரு குரலை மீண்டும் கேட்க நகரத்  தெருக்களில் தேடித் திரிவது

- தோழி நாதிரா காட்டுக்குள் ஒருவன் தலையை மறைத்துக் கொள்ளாத பெண்களை  மிரட்டுவதாகக் கூறி குர்ஷித்தை வேறொரு வழியில் கூட்டிச் செல்கிறாள்; அந்த வழியில் அவன் இருக்கிறான், ஒரு அழகிய நரம்பு வாத்தியத்தை மீட்டிக் கொண்டு - அவனிலிருந்து சற்று விலகி அவன் இயந்திரத் துப்பாக்கி!

- உச்சக் காட்சியில் உலோக வேலைக்கூடத்தினூடே மெதுவே நடந்து கொண்டே வேலை செய்பவர்களை தன் தாளத்திற்கேற்ப பின் தொடருமாறு ஆணையிடுவது (மேலிருந்து பொழியும் ஓர் ஒளிக் கற்றையின் கீழ் தன் மேற்சட்டையை கழற்றியவாறு அவன் நிற்கையில் காட்சியும் இசையும் முடிகிறது!)

இந்தக் காட்சிகள் பல படிமங்களை எனக்களித்தது.

தீவிரவாதமும் இசையும்

தீவிரவாதமும் வறுமையும்.

மற்றும் தன்னை அறியாமலேயே ஓர் இசைக்கலைஞனாக உரமேறும் சிறுவனின் கால்களைத்  நகர விடாமல் தளைக்கும் அற்பக் கவலைகள்;

பெரும் வாழ்க்கைப் போராட்டங்களை சித்தரிப்பதான எந்தவொரு பசப்பும் இல்லாது ஆனால் இசை எப்படி எளிய மனங்களின் மிக எளிய மனங்களின் மிக எளிய, மிக இனிய இணைப்பு மொழியாக நிகழ்கிறது என காட்சிப்படுத்தும் இந்தத் திரைப்படம் நிச்சயம் வசியப்படுத்தும் ஓர் அனுபவம்.




No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer