Monday, October 12, 2015

இருண்மை


கேட்கப்படாத கேள்வியொன்று
நெய் குறையும் தீபத்தின்
சுடர் போல்
வளி கொண்டு அணையலாம்
ஆயினும்
இன்னும் கேட்கப்படாத கேள்வியின்
ஆன்மா
அங்கேயேதான் உறைகிறது
பிறிதொருகணம்
எனவொன்றில்லை
இறவாத அக்கேள்வியுடன்
தனித்து
அச்சுடர் நோக்கி
அமர்ந்திருப்பதில்
இடரொன்றும் இல்லை
அறிந்தது கொண்டு
அறிந்ததை அளத்தல்
இல்லாதது கொண்டு
இருப்பதை உணர்தல் போலும்
சுடரின் நுனி
துடித்தல் போலன்றி
தவித்தல்
எனவுணர்வதிலும்
இல்லை இல்லை
எனுமொரு நிலை
இல்லை இல்லை
கரைதலென்பதென்ன
இல்லாமற் போவதா
இன்னொன்றாய் இருப்பதா
வெற்றிடம் முழுதும்
நிறைந்து பெருகி
எனவொன்றில்லாத
பிறிதொருகணத்தில்
வழிந்தோடி வெற்றிடமாகி
இன்மையும் இருப்பும்
கரைதலென்பதென்ன
இல்லாமற் போவதா
இன்னொன்றாய் இருப்பதா
சுடரணைந்த இருளுக்குள்
தனித்தவொரு கேள்வியும்
சற்றுமுன்
வேறொன்றாய்
இருந்த ஒளியும்

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer