Sunday, June 24, 2012

நண்பனின் கடிதங்கள் - 6



கூடிக் களித்துக் கொண்டாடி
கூட்டம் தவிர்த்து கூட்டம் போட்டு
வாழ்க்கை வாலிபம் வல்லமை
வையகம் வளர்க்கும் பொய் அகம்

நிஜத்தில் தேங்கும் நிச்சயம் - மற்றும்
நித்தமும் வளர்த்த கங்கணம்
உடைத்துச் சேர்த்த உண்மை - முற்றும்
கடைந்து தேர்ந்த கவிதை

காதல் கோர்த்த கற்பனை
கண்ணில் பார்த்த காலம்
சாதல் ஜெயித்த சகம்
சுகத்தில் லயித்த சுயம்

எல்லாம் நானாய் என்னிலும்...
என்னைப் பார்க்கும் உன்னிலும்...

கடந்த நாட்கள் கவிதைகள் சொல்வன
காவிய வித்தென கடிகளும் சுற்றின

வாழ்ந்த நாட்களை வாழ்ந்த விதமோ
வாழும் நாட்களை வாழும் விதமோ
முரணோ இல்லை முதிர்வெனச் சொன்னால்
உடன்பட நிஜமோ ஒவ்வாதி றக்கும்

பரிணாமம் இதுவோ பரிகாரம் எதுவோ
பரிச்சயம் தோற்பின் பரஸ்பரம் எழுமோ
விதியோ வினையோ வேல்விளை யாட்டோ
இருமுனை கூறெனில் எவர்ஜெயிப் பாரோ

பொய்யல்ல நண்பா இதுநம் இடைத்திரை
போலி மூட்டம் பெரும்பொய் நாடகம்
உடையும் நிஜங்கள் உணர்த்தும் சேதி
உனக்கு மட்டுமா எனக்குந் தானே

போருக்குத் தானே புறப்பட்டு வந்தேன்
போர்க்களம் இன்றோ மனதில் தானே
எந்தச் சிலம்பை எவள் உடைத்தாளோ
இந்தப் பரல்கள் எப்படி வந்தன

சொல்லும் வல்லமை எனக்கிலை தோழா
சொப்பன நிஜங்கள் போதும் போதும்

வந்து போகும் வாழ்க்கை போகும்
தந்து போகும் செல்வம் போகும்
வெந்து போகும் உடலும் போகும்
வேகா நிஜங்கள் போதும் போதும்

- ரமேஷ் சண்முகம்
1990 - 91

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer