Sunday, May 15, 2011

இன்னொருவன்

பகட்டு உடைகள்
பகல் வேஷங்கள்
இருட்டு நளினங்கள்
உதட்டுச் சாயங்கள்

குழு நீங்கி
முகம் கலைத்து
சூழ்ந்து நின்று
துக்கம் விசாரித்த
அரிதார மனிதர்களோடும் 
உண்மை பேசி
நிகழ்வு சிந்திக்கப்போன
அவனும்
நடிகனாகி போனான்

அவன்
அப்படியிருக்கவே குழு
ஆசைப்பட்டது
ஆணையிட்டது

பகட்டு ஆடைகளிலும்
பல்வேறு வேஷங்களிலும்
அவன் அழகாயிருப்பதாய்
எடுத்து காட்டியது குழு

அவன் நடிப்புக்கு 
சில நேரம் கைதட்டலும்
பல நேரம் கல்லெறியும்
கிடைத்தது

கைதட்டலும் கல்லெறியும்
குழுவே
ஆட்களை வாங்கி
நடத்தியது
நாடகத்துக்குள்ளும் நாடகம்

அவன்
நன்றாய் நடிப்பதாக
நம்பத் தொடங்கியிருந்தபோது,
குழுவின் கைதட்டல்
பலமாயிருந்தபோது,
அவன் பேச 
ஆசைப்பட்ட
உண்மைகளும் நிகழ்வுகளும்
நாடக மேடை படுதாவுக்குள் 
உறைந்து போய்,
அவ்வப்போது
அவன் சுதந்தர உணர்வுகளை
தீனக்குரலில்
விசாரித்து விட்டு
அடிக்குப் பயந்து
ஒளிந்து கொள்ளும்

அவன் நடிப்புக்கு
இவையெல்லாம்
தடையெனக் கருதிய குழு,
இந்தச் சின்ன சின்ன
தாகங்களை,
மாலையும் துண்டும் போட்டு 
விலைக்கு வாங்கும்


அவன்
நடிகனாகிப் போனான்

உண்மையும்
நிகழ்வும் பிறதொழிலும்
மறந்து போய்
நடிப்பே
உயிரும் உயர்வுமாகிப்
போனான்
 வேறொன்றரியாதுமானான்

குழுவோடு
ஒப்பந்தம் முடியும் காலம்
நெருங்கியது
முடிந்தது

மேடைக்குள்
நுழைந்த அவனை
முகம் தொட்டு
புறந்தள்ளிய
பல கைகளை
வெறிகொண்டு
விலக்கிப் பார்த்தபோது,
அங்கே
பகட்டு உடையிலும் 
உதட்டுச் சாயத்திலும்
பற்கள் மட்டுமே சிரித்த
புன்னைகையோடும்
உண்மை பேசி
நிகழ்வு சிந்திக்கப் போன
இன்னொருவன்

-08/03/1990

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer