Monday, May 16, 2011

இரவு பிரதிக்ஞைகள்

இந்த இரவு
என்னுடயதாவென்று
எண்ணிப் பார்க்கிறேன்

ஆற்று மணலை
அளைகையில்
விரல்வழியோடும் குறுமணல் போல்
பற்பல நினைவுகள்

ஆயிரம் தாரகைகள்
அள்ளி இறைத்திருக்கும் வானம்
என் துருவம் நீ
அற்புத சொல்லாட்சியின்
அருந்தமிழ் வடிவம்
ஆழ்கடல் செல்வம்
புலன்வழி புனைந்தவை
உனக்கே அர்ப்பணம்

மண் பார்க்க குமைந்து
மேலே பார்த்து
தடுக்கி விழுந்த தவறுகள்;
காயங்கள் எனது
கைதரத்தான் ஆளில்லை

ஊர் சிரித்தது
சிரிப்பொலியின் எதிரலை
செவிப்பறை முழுதும்
அனர்த்தம்

                                                   இந்த இரவு
                                                   என்னுடையதா தெரியவில்லை

உறக்கம் தப்பிய
இரவுகள்
உறங்கவே மறுத்த
இமைகள்
வாட்டுதல் மட்டுமே
குறிக்கோள்

பூவில் களிநடம் புரியும் காற்று
நுகர்ந்து
மனம் மரணத்திலிருந்து
மீளும்
நித்தியம் பெறும்
அத்தகு தருணம்
கைகளில் தேங்கிய
காவியங்களோடு நான்
குருடர்களும்
செவிடர்களும்
செங்கோல்

ஏன்?

பாலைவனத் தாகமாய்
பிறந்த கேள்வி
மறையாக் கானலாய்
மாதுயரூட்டும்

                                                    இந்த இரவு
                                                    என்னுடையதா தெரியவேண்டும்

உறையாத அறியாமையும்
நெகிழாத மௌனங்களும்
என்
அன்றாட எதிர்பார்ப்புகள்

இறுகிக் கிடந்து
மூச்சு முட்டி வெம்பிய
கோர உணர்வு நெரிசல்களுக்குள்
விடுதலை வேள்வி
அணு அணுவாய்
துடித்தது

விரைவில்
வழிய விட்டாலன்றி
விபத்து வெடிக்கும் எனும் நிலை

வல்லூறொன்று
சிறகுகளை கோதிக் கொண்டு
அலகை
அலட்சியமாய் திருப்பி
அசுரபலத்துடன்
கிளைத்து பறந்தது

நாள் செல்லச் செல்ல
அனுபவச் சுமை
அதிகமாயிற்று
பயணம்
இன்பமாயிற்று

வெற்றியே வேதம்
வேதத்தின் பிரணவம்
திருவினையாக்கும்
ஒருமுகம்
சிந்தனைத் தீவிரம்

அம்பின் கூரிய நுனியில்
ஆயிரமாயிரம் அணுக்கள்

என் 
சுடரொளிச் சிந்தனையின் 
ஒவ்வொரு தணலும்
வெப்பமும் வியாபிப்பும்
வெற்றியே பரப்பும்

தீயின் நிறமும் மாறும்
நாக்குகள் பொசுக்கும் பொசுங்கும்

ஓமப்புகை வானிட்ட பாலத்தில்
வெற்றி ஊர்வலம்
மண் நோக்கிக் கவிழ்ந்த
மானுடம் நிமிரும்

அம்பறாத் தூணிகள்
சிந்தனை நிரப்ப
சிறியோர் மேல்
சினமிகு போரிடும்

கடமை ஒருகை
காவியம் மறுகையென
கையிணைத்த
நெறிகள் வரலாறாகும் 

கடமைக் களங்களில் 
கண்ட காயங்கள்
ஒவ்வோர் உயிரும்
ஏங்கும்

காயக்கதை பேசி
காதற்க் கடலில்
கலந்திட்ட நதிகளே
காட்டாறுகளே

                                      இன்னும்,
                                                            இந்த இரவும்
                                                            என்னுடையதா என்று
                                                            தெரிய வேண்டும்
-12/07/1988




தோழிக்கு ஒரு கடிதம்

அன்புள்ள தோழி,

கொடி! 

அது பற்றிப் படரும்; காற்றில் சஞ்சலமடையும்; புயலில் துடிக்கும்; தேர் தரும் பாரியை தேடும்.

நீ?

நீ கொடி போலவா? உனக்குள் இருக்கும் வண்ணங்கள் வியப்பூட்டுவன; உணர்வுகள் அதிர்வூட்டுவன. தவறாக கைபட்டால் எளிதில் உடைந்துவிடக்கூடிய மென்மையுடையதாய் தோன்றி, அதனால் தொடவே சிறிது அச்சத்தை ஊட்டக் கூடியவை, உன் பரிமாணங்கள்.

மென்மையானவள் நீ; ஈடு செய்யும் வகையில், உன் நேரடியான (அதனாலேயே எனக்கு மிகவும் பிடித்தமான) வெளிப்பாடுகளில் வன்மையானவள்; உண்மையானவள்.

கொடி பற்றிப் படரும்; நீயும் பற்றிப் படர்கிறாய். படரவும் ஆக்கி விடுகிறாய்.  உன் அன்பை இப்படியெல்லாம் வெளிப்படுத்த யாருனக்கு கற்றுக் கொடுத்தது?
உணர்பவை அனைத்தும் (இன்பமோ துன்பமோ) பகிர்ந்து கொள்ள நீ தேடும் சகம், அதிலுன் தேர்வு, உன் தீர்மானம், உன் பற்றுதல், நீ எதிர்பார்க்கும் வெளிப்பாடு, உன் limitations பற்றிய முன்கூட்டிய உன் தெளிவு...

சஞ்சலங்கள். எளிதில் பெண்கள் உணர்ச்சிவசப்படுவார்களாம். ஏன் விதிவிலக்குகள் இருக்கக் கூடாது? கோபப்படுகிறாய் அதிகம். ' சாதிக்க இயலாதவனே கோபப்படுவான்'. சொல்லியிருக்கிறேன். உன் கோபம் உன் குடும்பத்தையுமல்லாது என்னையும் சமயங்களில் கூர்பார்க்கையில் மனம் வேதனை அடைகிறது. கொடி கோபப்படக் கூடாது. 

எங்கே உன் சுயம்,  வாழ்வுரிமை, லட்சியம் முதலியன பறிக்கப்படுமோ அங்கே உன் கோபம் தார்மீகமானது; அர்த்தமுள்ளது; வீரமானது.

மற்றும் பல உணர்ச்சிகள் உன்னில் எளிதில் தீவிரமாக தாக்குகின்றன. கவர்கிறாய், எளிதில் கவரப்படுகிறாய். உணர்வுகளால் விரைந்து எடுக்கும் எம்முடிவும் வேதனை தரும். தவறு! இவ்வுலகம் மிகச்சில நல்லவர்களையே கொண்டது. யார் மீதும் விரைந்து அன்புறுவதும் தவறு. அதிக எதிர்பார்ப்பு மிகுந்த ஏமாற்றத்தைத் தரும்.

உன் அறிவு, உன் உலக ஞானம் கொண்டு நீ ஆராயக் கற்றுக் கொள்ள வேண்டும். எதிலும் எளிதில் மனம் பறிகொடாதே. (எவரிடமும்) முதலில், யார் எத்தகையவர், அவர் கண்ணோட்டம், லாப நஷ்டங்கள் எடைபோட பழகு. சுயநலமியாய் இரு. இவ்வுலகில் சுயநலமில்லாமல் வேறொன்றுமில்லை. 

கல்வியில் உன்னார்வம் என்னை மகிழ்விக்கிறது. மென்மேலும் நீ கற்க வேண்டும்.  உன் எல்லைகளை விரிவுபடுத்தும் தருணமிது.

இரசனைகள் இயற்கையானவை. எனவே, இன்பமானவை. ஒரு கவிதையோ, உரைநடையோ அன்றி இரசனை குறித்த பேச்சோ உன்னிடம் வீசப்பட்டால் நீ சோர்ந்து போகிறாய்.  ஏன்? உலகியல் வாழ்வின் உயிர்நாடி இரசனை.

அதுவொன்றில்லாமல் நானில்லை.

எதையும் இரசிக்க வேண்டும்.  நீ துன்பமடையும் கணங்களிலும், சோக நிகழ்வுகளினின்று, வெளி நின்று, "இக்கணம் நம் வாழ்வில் ஒரு முறை வருவதை இருந்தால், இப்போதே இதை வாழ்ந்து விட வேண்டும்" என்று எண்ணி அனுபவி. இச்சக்தி எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மனநிலை தரும்.

'நம்மை மீறி என்ன வரும்? என்னால் சாதிக்க முடியும். உயிரைத் தவிர பெரிதாய் வேறொன்றும் போய்விட முடியாது' போன்ற எண்ணங்கள் உன்னில் வளரவேண்டும். அவை, உன்னில் இப்போது காணப்படாத சகிப்புத்தன்மை, பொறுமை, வெல்லும் விடாமுயற்சி, முடிவில் இரசனை போன்ற, உன்னை மற்றவரிடமிருந்து தனித்து உயர்த்தக்கூடிய பண்புகளைப் பெற்றுத் தரும்.

உயரிய, தொலைநோக்கு மிகுந்த கொள்கைகள் உன்னில் குறைவு. இது உன் கல்விக்கும், சிந்தனை தெளிவிற்கும் பொருத்தமற்றதாய் இருக்கிறது. எப்படி வாழ வேண்டும், எங்கே, எவருடன், சாதனைகளின் குறிக்கோள், உன் கல்வி, உன் படிப்படியான வளர்ச்சி, உன் குடும்பம் பற்றிய முழுமையான திட்டங்களை நீ கொண்டிருக்க வேண்டும். 

இல்லையெனில், இப்பொழுது ஆரம்பி. சிந்தனைகளை பெரிதாக செய். எல்லைகளை தள்ளி வை. இலக்குகளை சிறந்தவையாய் நிர்ணயி. அதை அடைய பாடுபடும் வழிமுறைகள், தேவைப்படும் காலம், பொருள், மனித முயற்சி பற்றி திட்டமிட்டிருக்கிறாயா? இல்லையெனில், உடனே ஆரம்பி.

வேறே? உன் மென்மையும், பெண்மையும், அன்பும், பரிவும், கல்வியும், ஞானமும், உணர்ச்சிகளும் உயர்ந்தவை.

இவை இருக்கவேண்டிய இடம் இப்போது நீ இருப்பதல்ல. 

நீ உயர வேண்டும்; மூட நம்பிக்கைகளுக்கு உடன்படாமல், இல்லறக் கட்டுப்பாடுகளுக்கு இடங்கொடாமல் , நீ உயர வேண்டும்.

செய்வாயா, எனக்காக?

சரவணன் 
07/1990

கனவில்

மெல்லிய திரையொன்று
விலக,
நானும் நீயும்
அமர்ந்திருக்கிறோம்;
ஆச்சர்யம்
என்னை அமிழ்த்துகிறது
என் இவ்வளவு அருகே
உன்னை நான் சந்தித்ததில்லையே?

என் முகமருகே
குனிந்து
ஏதோ முணுமுணுக்கிறாய்
சிரித்தவண்ணம்

அசையும்
உன் இதழ்களையும்
மின்னுகிற உன் பற்களையும்
கவனித்து கொண்டிருக்கிறேன்

புரியாத மொழியுதிர்க்கும்
உன் இதழ் மூடும்
என் கைவிரல்
செந்நிற இதழ்களை
வருடுகிறது.
புன்னகை...

எப்படியோ
எப்போதோ
உன்னருகில் நகர்ந்து
கன்னங்களின் செம்மையை
துடைத்துவிடும் 
முயற்சியில் ஒரு முத்தம்...

எனக்கு
அப்போதும் ஆச்சர்யமாயிருக்கிறது
நான்?

சிரிப்புகள் சத்தமற்று
பளீரிடும் புன்னகைக் கோர்வை

உன் கழுத்தின் பின்புறம்
பொன்னிற சிற்றிழை ஒதுக்கி
உன் குழற்கற்றைகள்
என் மார்புரச
கமழ்கிற மணம்
நுகர்ந்தொரு முத்தம்

வார்த்தைகளேயற்றுப் போன
உடல் முழுதும் 
உன் அருகாமையில் இசைகிற
தவிப்புகள்
புன்னகைகளால் 
இசைவுகளால் இயங்க
வாய்நுனி வரை
வந்து நிற்கிறது
'என் நேசம் நீ...
என் தேவை நீ...'

உள்ளுமையோ
உள்ளுணர்வோ 
ஏதோவொன்று தடுக்கிறது
நீ சொல்லட்டுமென்று
உன் இசைவுகள்
என்னில் இசையாகும் போது
ஓசை என்ன முக்யத்துவம் 

இதுவரை
அதிசயித்துக்கொண்டிருந்த எனக்கு,
உன் எதிர்பார்ப்பு நிறைந்த
குறும்பு கண்களில் மின்னுகிற
புன்னகை
வியப்பளிக்கவில்லை
....

யார் சொல்வார்? 

- 11/07/1990

Efficiency

நானோர் இயந்திரம்.
...
ஆமென பலபேர்
ஆயத்தமாய் இருப்பினும்
என் இயக்கங்கள்
வேறுவிதம்.

நீங்களும் இயந்திரங்கள்தாம்
ஆயினும் 
என் இயக்கங்கள் 
வேறுவிதம்

உட்கொண்ட சக்தியைவிட
வெளியியக்க சக்தி
குறைவான
நிறை இயந்திரம்

உணர்ச்சிகளற்று
இயங்கும்;
இயங்கு, இயங்கு
சக்தி கொள், சக்தி தா
சூழ்நிலை மற
இதுவே சூழலின் அவா 

அடிக்கடி இரைச்சலிடும்
இயந்திரத்தை பற்ற வை;
அல்லது,
மூலையில் எறி.

முனகல் உணர்ந்து
மூச்சுணரும்
சிலபேர்
இருந்தனர் முன்பு.

எவ்வளவு நாள்தான்
எண்ணெய் தடவி
ஒன்றுகொன்று
சிக்கிக் கொள்ளாமல்
இதை ஓட்ட முடியும்?

விகிதமிழந்த எண்ணெய் போலும்
கரிப்புகையாய் துப்பி
தொழிற்ச் சாலையையே
நாற அடிக்கிறது

வேலைப்பளு
அதிகம் என்று
ஆகும் அன்றுதான்
அறுந்துபோகும் பெல்ட்
உடைந்து போகும் பல்சக்கரம்
இதை
வாங்கவோர் ஆளில்லை

ஆனாலும் 
இதன் இயக்கங்கள்
வேறுவிதம்

கொடுக்கின்ற சக்தியை
சொந்த உஷ்ணத்திற்கே
செலவழித்து விடுகிற
சுயனலமியாகி விட்டது
இயந்திரம்

இயந்திர கம்பெனிக்காரர்களை
கூப்பிட்டுத் திட்டினால்
கைபிசைந்து
கண்கலங்கி நிற்கிறார்கள்
செலவழித்து செய்துவிட்டு
சரிசெய்யத் தெரியாத
மூடர்கள்

வேறென்ன செய்ய?

போகிற போக்கில்
சொல்கிறார்கள்,
எந்த இயந்திரமும்
நூறு சதவிகித
இயக்கத் திறம் கொண்டதில்லையாம்...

இதை முதலிலேயே
சொல்லித் தொலைப்பதற்கென்ன

பரவாயில்லை
ஆனாலும்
இந்த இயந்திரத்தின்
இயக்கங்கள்
வேறுவிதந்தான்

- 07/06/1990

எனினும், இப்படிக் கவிதை...

வெளிச்சம் தேட
முனையும் கசிவுகளை
விலங்கிட்டு
அடிமைப்படுத்தியவன் நான்...

அப்படியும்
அந்த நாட்களில்
சில கரைகள்
உடைந்திருக்கின்றன.
சில மட்டும்.
வெகுசில மட்டும்.

மதகுகளை தகர்க்கிற
அரிப்புகள் என்று
அந்த ஈர்ப்புகள்
நிர்ணயிக்கப்பட்டவுடன் 
கசிவுகள்
கரைபுரண்டு விடுகின்றன
என் 
அனுமதியில்லாமல்

அப்பொழுதும்
திரைகளினால்
தடுத்துவிட நான் முயன்றதில்லை
காரணம்
உங்களுக்கே தெரியும்

இன்று,
நிதர்சனப் புரிதல்கள்
நிரந்தரப் பிரிவுக்கே என்று 
நினைவுறுத்திப் போனாலும்
நிம்மதி 
தொலைந்து போகிறது

                                                                 கரைகளும்
                                                                 இற்றுவிட வேண்டுமென்றா
                                                                 விரும்புகிறாய்?
அன்பும்,
பாசமும் காதலுமாய்
காலம்
என் முதுகினில்
சுவடு மிதித்து போனது;
சுவடு தொட்ட போதெல்லாம்
அன்பும் காதலும்
திரும்பித் தொட
ஆசை வந்தது

                                                                  கரைகடந்த நீர்
                                                                  சென்றது தானே?

யாருக்காக
இந்தத் தவிப்புகள்...

ச்சே, தொடருமா
உறவுகள் என்னும்
இந்தத் தவிப்புகள்...

நினைவுகளை
நீட்டித்து நீட்டித்து 
கற்பனைகளில் 
சொரிந்து கொள்கிற
இச்சுகம்....

ஒளிப்புள்ளியைச்
சுற்றிச் சுற்றி
ஏகாந்தகாரங்கள்...
உட்புகுந்த
சில கிரணகற்றைகளும்
விரைந்து வலுவிழக்கும்
நிலைத்து
கலக்கும்
ஒளி தேடி ஒளி தேடி.

                                                             வெள்ளச் சுழற்சி
                                                             பழகியவனுக்கு
                                                             இன்பமோ?
                                                             இங்கு தவிப்பது யார்...
                                                             மற்றொரு வெள்ளத்தின்
                                                            குமுறல்களில்
                                                             இயைந்து போக
                                                             இங்கு யார், சொல்?

காரணம்
உங்களுக்கே தெரியும்.

சொல்ல வேண்டுவதெல்லாம்
முடிந்தானபின்னும்
முதல் புரியாமல்
மற்றொன்று.

அடர்ந்த மரக்கிளைகளின்
நெடுதுயர்ந்த கலப்புகளினால் 
தரைப்பாசிகள்
ஒளியற்று
மரத்தை யாசித்து
மரமேறும்;
மறைவு பூண்டு
ஒளிந்து வாழ்ந்த
ஒளிக்கற்றைகள்
தரையைத்தான் 
தேடிக்கொண்டிருந்ததாய்
பொய் புணரும் 
பாசிகளின் தேடல்
அன்றோடு முற்றும்
மற்றுமொன்று புதிதாய்...

                                                            ஒரு நதி பிரிந்த
                                                            இரு வெள்ளமும்
                                                            ஒன்றாய் வடிய
                                                            வேண்டுவதோ எங்கனம்? 
                                                            தடங்களும் தொலைவுகளும்
                                                            இலக்குகளும் இயைந்தவை அல்லவே?

இற்றுப் போகப்
போவதில்லைதான்;
கடந்து போக
பாதை உண்டுதான்;
துயில்வதற்குள்
ஆற்றி முடிக்க 
கடமையும் உண்டுதான்...
எனினும்...

                                                             போச்சு,
                                                             இவ்வளவு சொல்லியும்
                                                             இப்படி
                                                             கவிதை எழுதிக் கொண்டு....

- 21/04/1990




Sunday, May 15, 2011

இன்னொருவன்

பகட்டு உடைகள்
பகல் வேஷங்கள்
இருட்டு நளினங்கள்
உதட்டுச் சாயங்கள்

குழு நீங்கி
முகம் கலைத்து
சூழ்ந்து நின்று
துக்கம் விசாரித்த
அரிதார மனிதர்களோடும் 
உண்மை பேசி
நிகழ்வு சிந்திக்கப்போன
அவனும்
நடிகனாகி போனான்

அவன்
அப்படியிருக்கவே குழு
ஆசைப்பட்டது
ஆணையிட்டது

பகட்டு ஆடைகளிலும்
பல்வேறு வேஷங்களிலும்
அவன் அழகாயிருப்பதாய்
எடுத்து காட்டியது குழு

அவன் நடிப்புக்கு 
சில நேரம் கைதட்டலும்
பல நேரம் கல்லெறியும்
கிடைத்தது

கைதட்டலும் கல்லெறியும்
குழுவே
ஆட்களை வாங்கி
நடத்தியது
நாடகத்துக்குள்ளும் நாடகம்

அவன்
நன்றாய் நடிப்பதாக
நம்பத் தொடங்கியிருந்தபோது,
குழுவின் கைதட்டல்
பலமாயிருந்தபோது,
அவன் பேச 
ஆசைப்பட்ட
உண்மைகளும் நிகழ்வுகளும்
நாடக மேடை படுதாவுக்குள் 
உறைந்து போய்,
அவ்வப்போது
அவன் சுதந்தர உணர்வுகளை
தீனக்குரலில்
விசாரித்து விட்டு
அடிக்குப் பயந்து
ஒளிந்து கொள்ளும்

அவன் நடிப்புக்கு
இவையெல்லாம்
தடையெனக் கருதிய குழு,
இந்தச் சின்ன சின்ன
தாகங்களை,
மாலையும் துண்டும் போட்டு 
விலைக்கு வாங்கும்


அவன்
நடிகனாகிப் போனான்

உண்மையும்
நிகழ்வும் பிறதொழிலும்
மறந்து போய்
நடிப்பே
உயிரும் உயர்வுமாகிப்
போனான்
 வேறொன்றரியாதுமானான்

குழுவோடு
ஒப்பந்தம் முடியும் காலம்
நெருங்கியது
முடிந்தது

மேடைக்குள்
நுழைந்த அவனை
முகம் தொட்டு
புறந்தள்ளிய
பல கைகளை
வெறிகொண்டு
விலக்கிப் பார்த்தபோது,
அங்கே
பகட்டு உடையிலும் 
உதட்டுச் சாயத்திலும்
பற்கள் மட்டுமே சிரித்த
புன்னைகையோடும்
உண்மை பேசி
நிகழ்வு சிந்திக்கப் போன
இன்னொருவன்

-08/03/1990

அன்பே நீ தேடுவது என்னையா?

நான் இதுவரை என் கற்பனைகளில் உன்னோடு தனித்திருந்திருக்கிறேன்
ஓராயிரந்தடவை உன்னிதழ்களில் கனவுகளில் முத்தமிட்டிருந்திருக்கிறேன்
இப்போழ்தும் கூட,
அவ்வப்போது என் வாசல் வெளியில்
உன் வரவை நான் உணர்கிறேன்


                  

அன்பே நீ தேடிக்கொண்டிருப்பது என்னையா?

உன் தேடலை உன் கண்களில் நான் உணர்கிறேன்
அன்பே, அதையுன் புன்னகையில் பார்க்கிறேன்

நான் தேடியலைந்தவை அனைத்தும், அன்பே உன்னிடமே
ஏனின்னும் என் கைகள் விரிந்திருக்கின்றன என கேட்கிறாயா?
அன்பே, நீயறிவாய் என்ன சொல்ல வேண்டுமென்று
உனக்குத் தெரியும் உனதெந்த வார்த்தைகளில்
இவனுயிர் வாழ்கிறதென்று
உன்னிடும் சொல்ல ஏக்கம் அடைகாக்கும்
ஆயிரம் சேதிகளும்...

அன்பே, நானுன்னை நேசிக்கிறேன்

உன் குழல்களினூடே கதிரொளியின் கோலம் காண
என் மனம் துடிக்கிறது
உன்னை அரவணைத்து நேசிக்க எத்தனை
இரவுகளிலும் பகல்களிலும்
நான் துடித்திருப்பேன்

சில போதுகளில், 
காதலினால் என்னிதயம்
பொங்கி வழிந்துவிடும் போல் உணர்கிறேன்

அன்பே, என்னால் இனி தாங்க முடியாது
என் காதல் நீ உணர்ந்தே ஆக வேண்டும்

ஆயினும்...

நீ எங்கிருக்கிறாய் எனத் தேடுகிறேன்
நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்றும் நானறியேன்
எங்கேயோ,
தனிமையில் நீ வாடிக் கொண்டிருக்கக் கூடுமோ
என்றவெண்ணம் வதைக்கிறது

அல்லது அன்பே
யாரேனும் அங்கும்
உன்னை நேசித்துக் கொண்டிருக்கிறார்களா?

உன் நேசம் வெல்ல ஒரு வழி சொல், தோழி
இறுதியாகவும்
நான் சொல்வதிதுதான்
நானுன்னை நேசிக்கிறேன்

-05/03/1990
- லயனல் ரிச்சியின் 'Hello, is it me you are looking for?' பாடலின் மொழிபெயர்ப்பு 

முரண்களுக்கு

உடல் அழகால் ஈர்க்கப்படாத காதலிற்கு இணைப்பும் பிரிவும் வலியற்றதாக இருக்கும், இயற்கையாக.

விமர்சனத்துக்கஞ்சி படைக்கப்படுவது படைப்பன்று.

உன் இரசனைக்குட்படாத உன் படைப்புகள் உயரியதன்று.


உரிமை

அவளிடம் மிக நெருங்கிப் பழகுகின்ற, அந்தரங்கங்களை பகிர்ந்துகொள்ளக் கூடிய தகுதியோ உரிமையோ உடையவர்களுக்கு மட்டுமே உரித்தானது போன்று ஒரு நறுமணம் அவளிடமிருந்து கமழ்ந்ததாக தோன்றியது.

- 03/12/1989 


நாட்டின் எதிர்காலம்

சீறும், உலகை வெல்லப் பாயும் 
           சிங்கங்களே, அடக்க வியலா
வீறும் கொண்ட இளஞ் சமுதாயமே
          விண்ணை வளைக்கும் நம்பிக்கையும் 
மீறும் உழைப்பும் துணிவுள்ளமும்
         மிஞ்சும் இளைஞரைக் காணும்
பேறும் எமக்கிலையோ வென்றிருந்தேன்
          பாரத ஏறுகளை காணும்வரை

நமதருமை பாரதத்தை சூழ்ந்திடும்
        நயவஞ்சகர் தம்மிடம் தந்திடவே
உமதுள்ளம் பொறுத்திடுமோ - அன்றி
       உயிர் துடித்திடுமோ உடல் கொதித்திடுமோ
சமன்பாடு பரப்பிய எம்மாருயிர்
       சத்தியத்தாய் உயிரின்விலை என்ன என்ன
எமக்குள்ளே எம்மிளைய சமூகத்தினுள்ளே
       என்றும் நிலவும் ஒற்றுமையே

- 03/05/1984

இந்த சங்கீதம்

இந்த சங்கீதம்
இந்தக் கவிதை
அவள் வீணையில் எழுகிறது
வீணைகள் பிணைக்கப்பட்டவை
அவள் வீணையின் தந்தி
நிரடப்படும் பொது
என் வீணையின் தந்திகள்
சிலிர்க்கின்றன

ஒரு சங்கீதம்
ஜனிக்கிறது

ஓர் உன்மத்தம்
எதற்காகவோ 
எழுந்தடங்குகிறது 

விரல்கள்
ரகசிய வித்வான்கள்
அவைஎழுப்பும்
உணர்ச்சி சங்கீதம்
மனமெங்கும் அலைபாய்கிறது
நானும் அவளும்

இருவீணைகளும் சங்கீத உற்சவம்
நடத்துகின்றன
இசைவேள்வியின் உச்ச உணர்ச்சியில்
அறுந்த தந்தியிரண்டும் 
தழுவிக் கிடக்கின்றன

-19/03/1987

ஞானஸ்நானம்

அதோ,
அந்த வனாந்திரம்...

ஈரத்தோடு கூடிய
இலைகளின் மேல்
அவளும் நானும்
நடக்கையில்
இவள் பாதம்
இடர்ப்ப்படுமோவென
அஞ்சத் தோன்றுகிறது

மண்ணின் அந்த வாசம்

என் தோள்மேல்
புரளும் அவள் தலைமயிர்
பொன்னிறக் கோடுகளாய்
கோலம் போடுகிறது

பறவைகள்
இவள்குரலைக் கேட்டு
வாயடைத்துப் போகின்றன

துணிந்த சிலகுயில்கள்
பலமுறை பாடிப் பார்க்கின்றன

அவளை
அணைத்துச் சாய்த்து
மெதுவாய் நடக்கையில்
உலகின் கோடியை
அடைந்து
வெளிச்சென்றார்ப் போல்
தோன்றுகிறது

கதிரவன்
புகையோடு கூடிய தன்
கைகளை நீட்டி
அந்த அடர்ந்த கானகத்தில்
எங்களை ஆசீர்வதிக்கிறான்
1515342953_4d17f59a3b.jpg (500×451)
அந்த நிசப்தத்தில்
எங்களுயிர்
காதலுக்கு ஏங்குவது கூட
கேட்கிறது

நடக்கிறோம்
நடந்து கொண்டேயிருக்கிறோம்

ஓர் எல்லையற்ற வெளியில்
இயற்கையின் அழகோடு
அவளோடு
வாழ்நாளெல்லாம் இருந்துவிடலாம்போல்
இருக்கிறது

மனம்
அக்கணம்
இன்பமா துன்பமா
வேண்டுமா போதுமா என
உணர்வதை நிறுத்திவிட்டது
அனிச்சையா ஆணையிட்டதா
என்பதுகூட
புரியவில்லை

அந்தக் கானகம்
அடர்ந்து விட்டது

காற்று இலைகளாய்
அட்சதை தூவுகிறது
இவள் மேலுதிர்ந்த
இலைகள் 
கன்னம் தடவை
சாபல்யமடைந்து மெதுவாய்
கீழே விழுகின்றன

அந்த அழகிய காட்டில்
அவளும் நானும்

- 22/07/1986

உயிர்த்தவம்

உன் நினைவுகளை
என் மனபீடத்தில்
வேள்வித்தீயாய்
வளர்த்தேன்

கடைசியில்தான் தெரிந்தது
நினைவுகள் மட்டுமல்லாது
நானுமே
ஆகுதியாய் ஆகிவிட்டேனென்று

ஆயினும்
இத்தனைத் தவத்திற்குப் பின்னும்
நீயேன்
இன்னுமுன்
அவிர்ப்பாகத்தை
அடையவரவில்லை காதலி?

- 04/09/1985


மென்மை

நான்
அவளுக்காக காத்திருக்கிறேன்
நேரம்
நிசப்தக் கத்தியைக் கொண்டு
என்னை அறுக்கிறது ...

அதோ, பூக்கள் மலரும்
சப்தம் கேட்கிறது
வந்தது
என் காதலி

- 07/08/1985

நண்பனின் கடிதங்கள்

ரமேஷ் சண்முகம்
02-03-88

நண்பா,

              நீ
              நின் மனிதம்
              உன் கவிதைகள்
              உன் கவித்துவம்
              உன் நேசம்
             உன் நியாயம்
             ....
             ....

                     இவை என்னை பொறாமைப்பட தூண்டுவன. பாராட்டக் கட்டளையிடுகின்றன. 

                     உனக்கு ஒரு முத்தம்.

                     உன் பேனாவுக்கு....
                     ....கோடி முத்தங்கள்.

                                                                         அன்புடன்,
                                                                          ரமேஷ்.

விந்தை

இருளில் பார்க்கவியலோதோ

கண் சன்னலின்
இமைக்கதவுகளை
இழுத்து மூடி
இருட்டுப்படுத்தினாலும்
உன் முகம்தான்
பிரகாசமாய் தெரிகிறது
உன் நினைவே
அனலாய் எரிகிறது

- 10/02/1986

அறிமுகம்

உன்னை
சிந்திக்கவும்
சந்திக்கவுமே
வார்த்தைகளைத் தேடி
நான் களைத்த
போதுதான் -

உன்னால்
சிந்தனைக் கருவுற்று
வார்த்தைகளைப் பிரசவித்த
களைப்பில்
இருந்தபோதுதான் -

நீ
மௌனமொழியை
அறிமுகம் செய்தாய்.

12/02/1986


கார்காலம்

 இலைச்சருகுகளில் காற்று
காதல் மொழி பேசும்
கார்காலம் அது.

என் கையிணைந்த அவள் கைகள்
ஒரு காவியசுகம் பிரிவதை 
தடுப்பதைப் போலெனை
அணைக்கின்றன

என் கண்களுக்குள் அவள் தேடல்
இதயச்சுவடிகளை வருடி
இசையாய் இதழ்களை நிறைக்கிறது

காலத்தை
நினைவுகளைப் போல்
தள்ளிவைத்து விட்டோம்

ஊமை மனதாசைகள்
உள்ளுக்குள் இடம்மாறுகின்றன
கரைகள் காலம்கடந்தே தோன்றுகின்றன

அதிகாலைப் பனியின் வெண்மையில்
முகம் பார்க்கும் இயற்கையே
எங்களுடை

இசைக்கனலின் கதகதப்பில்
கேட்காத 
காலத்தின் குளிர்மூச்சுகள்

அவள் கன்னக்கதுப்பில்
நான் வரைந்த கோலங்கள்
எந்த மார்கழிக்கும் சொந்தமில்லை

நாங்கள் நிறைந்து விட்டோம்
வெள்ளம் நுரைத்து படர்ந்தது
படர்ந்த அலைகள்
காதல் காதல் காதல்
என்று கரையை
ஆதுரத்துடன் முத்தமிட்டன

ஒரு முத்துக்காக
இருவரும் மூழ்கினோம்

22/05/1988

உயிர்க்கலைஞன்

ராகங்கள் நாவடக்கி 
சேவகம் செய்வதை பார்க்கிறேன்
தனிமனிதன் இசையின்
தரணி ஆள்வதை காண்கையில் 
இவன் எந்த
பரணியில் பிறந்திருப்பான் என
எண்ணத் தோன்றுகிறது

எவருக்கும் இளையாதவனாய்
இசைக்கு மட்டும் வளைபவனாய்
வந்துதித்த தேசத்தில்
வாழ்கின்ற பேறு பெற்ற
எம்மையும்
இசை வந்து தீண்டட்டும்
கருவிகளை இசை
அருவிகளாய் ஆக்குபவனும்
எம் நாத தேவனுமாகிய
இளையராஜா
நீடூழி வாழ்க
நல்லிசை தருக. 

- 23/07/86

Monday, May 2, 2011

ஓடிப் பெற்ற பரிசு


பாரத் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து கொண்டிருந்தேன். முன்பே பதிந்திருப்பது போல, கல்லூரியின் இசைக்குழுவில் நான் தான் தபலா, த்ரிபல் காங்கோஸ் வாசிப்பவன். 

மிக கடுமையாக குழுவும் நானும் பயிற்சி செய்து (அதி முக்கிய காரணம், கல்லூரி முதல்வர் எங்களுக்கெல்லாம் அளித்திருந்த சிறப்பு சலுகைகள்) முதல் வருடம் தயாராகி, கல்லூரிக்குள்ளேயே வாசித்து பெயர் வாங்கி (அதுவும் சும்மா வந்து விடவில்லை, நியூ இயர் ஈவ் என்ற பெயரில் மூன்றரை மணி வாசித்து செத்து சுண்ணாம்பாகி விட்டோம் - யோசித்து பாருங்கள், கமல் நடித்து , ராஜா இசைஅமைத்து, மனோ பாடிய, கடினமான, நில்லாத தாளம் கொண்ட 'வேதாளம் வந்திருக்குது' பாடலை ஒன்ஸ் மோர் கேட்டே (நாலு தடவை) கொன்று விட்டார்கள் நண்பர் நண்பிகள்), அடுத்த வருடம் கூட்டை விட்டு ஒன்றிரண்டு அடியெடுத்து அக்கம் பக்கத்து கிளைகளுக்கு தாவிப் பழகும் குஞ்சுகள் போல், கல்லூரி அருகிருந்த மற்ற கல்லூரி கலை விழா லைட் மியூசிக் போட்டிகளுக்கு செல்லவாரம்பித்த சமயம்.

சில பல போட்டிகளில் இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, சில சமயம் MCC யோ, லயோலாவோ வராத சில மொக்கை போட்டிகளில் முதல் பரிசு அடித்து நாளொரு மேடையும், பொழுதொரு பரிசுமாக வளர்ந்து கொண்டிருந்தோம்.  அப்போதுதான் சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரி கலை விழாவின் மெல்லிசை போட்டிக்கு அழைக்கப்பட்டோம். 

அப்பொழுதான் மூர் மார்கட் இடிக்கப்பட்டு, இப்பொழுதிருக்கும் புது சென்ட்ரல் புறநகர் போக்குவரத்து ரயில் நிலையம் கட்டும் பணிகள் அந்த இடத்தில் துவங்கியிருந்தது. சுற்றிலும் சாப்பாட்டு கடைகள், வைன் ஷாப்கள் என களைகட்டியிருக்கும் இடத்தை தாண்டிதான் பார்க் ஸ்டேஷனிலிருந்து கால்நடை மருத்துவ கல்லூரிக்கு சென்றோம். எடுக்கப்பட்ட லாட்டில், பாரத் கல்லூரி ஆறாவது இடமாகத்தான் மேடைக்கு அழைக்கப்படும் என்ற அறிவிப்புக்குப் பிறகு (ஒரு குழுவுக்கு கருவிகள் செட் செய்ய ஐந்து நிமிடம், மூன்று பாடல்கள் வாசிக்க பதினைந்து நிமிடங்கள் என மொத்தம் இருபது நிமிடங்கள்) இன்னும் குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகும் போலிருந்தது. 

அரங்கின் வெளியே அமர்ந்து மீண்டும் பாடவிருந்த 1. சிங்கார பெண்ணொருத்தி 2. மன்றம் வந்த தென்றலுக்கு மற்றும் 3. பொன் மானை தேடுதே என்ற பாடல்களின் இடையிசை மற்றும் தாளங்கள், ஸ்டார்ட் - ஸ்டாப் டைமிங் போன்றவற்றை சரிபார்த்து கொண்டிருந்தோம். அப்போதுதான், குழுவின் கீபோர்ட் வாசிப்பாளன் அருண் நினைவூட்டினான், "மச்சிஸ், வர்ற வழியில பாத்தோமே வைன் ஷாப், போயி ஒரு பியர் வுட்டுட்டு வந்து ஸ்டேஜ் ஏறினோம்னா, கலக்குண்டா" என்று. 

சூப்பர் ஐடியா என்று உடனே, பியர் அடிக்காத ட்ரம்ஸ் வனமாலி, வயலின் பிரபாகர் ஆகியோரை விட்டுவிட்டு (நல்ல வேலை,  எங்கள் கோச் எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் லெக்சரர் சுரேஷ் பாஸ்கர் அன்று வரவில்லை) உடனடியாக கிளம்பி விட்டோம் ஒரு ஆறு பேர். அப்போது மதியம் மூன்றரை மணியிருக்கும்.

போய் பாட்டில்களை வாங்கி கொண்டு பார்த்தால் தான் தெரிந்தது, அமர்ந்து குடிப்பதற்கு  ஒரு இடமோ கடையோ கூட இல்லை (இந்தக் காலம் போல் அரசுகள் டாஸ்மாக் கொண்டு வராத காலம்). சரிதான், மூர் மார்க்கட் உடைக்கப்பட்டு கிடந்த இடம்தான் தோது என்று, சுற்றிலும் கம்பி வேலி போட்டிருந்த காலி மனைக்குள் குனிந்து வளைந்து நுழைந்தாகி விட்டது.  பல்லாலேயே கடித்து மூடி கழற்றி சியர்ஸ் சொல்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். எதிரே பிசியான ரோடு. பக்கத்தில் சென்ட்ரல் ஸ்டேஷன். நடுவே கிடந்த காலி மைதானத்தில் ஆறு பேர் நட்ட நடுவே நின்று கொண்டு மட்ட மதியானத்தில் பியர் அருந்திக் கொண்டிருந்தோம்.

திடீரென்று லீட் கிடார் வினு கத்தினான், "மச்சி, போலிஸ்டா". அவ்வளவுதான், சுற்றி பார்த்தால் ஒரு நான்கைந்து காவலர்கள் லத்திகளை சுழற்றி கொண்டு நாலா பக்கத்திலிருந்தும் ஓடி வருகிறார்கள். பாட்டில்களை போட்டு விட்டு தாவி குதித்து எந்த பக்கம் ஓடினாலும் அங்கிருந்து ஒரு PC வர, செத்தோம் இன்னைக்கு என்ற படி, "ஓடு மச்சி ஓடு, மாட்டிக்காத" என்று ஒரே கூக்குரல்.

குனிந்து வளைந்து பதவிசாக நுழைந்த கம்பி வேலிக்குமேல் ஒரே ஜம்ப். ரோட்டில் விழுந்து, வாரி சுருட்டி எழுந்து, ரிப்பன் பில்டிங் பக்கத்தில் இருக்கும் மெயின் ரோடுக்குள் நுழைந்து ஆறு பேரும் தாறு மாறாக ஓடினோம். சத்தியமாக சொல்கிறேன், உண்மையிலேயே அந்தக் காவலர்கள் மாசக் கடைசிக் கஷ்டத்தில் இருந்தார்களா, அல்லது கடமை தவறாத உத்தமர்களா தெரியாது, அவர்களும் அப்படித் தாவி குதித்து துரத்தினார்கள்.  யாரவது பார்த்திருந்தால், ஏதோ பயங்கர கொலை குற்றம் செய்து விட்டு ஓடுகிற கூட்டத்தை தான் இப்படி துரத்துகிறார்கள் போலிருக்கிறது என்று நினைக்கும் வண்ணம் ஒரு ஆவேசத் துரத்தல். 

கால்நடை கல்லூரிக்கு கால் வழி மிச்சமிருக்கும்போது, பக்கத்திலிருந்த டீக்கடைக்குள் நுழைந்து மூச்சு வாங்கி லேசாக வெளியே எட்டிப் பார்த்தால் யாரும் துரத்தி வருகிற மாதிரி தெரியவில்லை. போன ஆறு பேரில் நான்கு பேர் தான் கடைக்குள் இருந்தோம். போச்சு, ரெண்டு பேர் மாட்டிக்கிட்டாங்க போல, இன்னிக்கு காம்பெடிஷன் காலி என்றபடி நொந்தவாறு கலூரிக்கு திரும்பினோம். 

மிச்சமிருந்த டீமோடு உட்கார்ந்திருந்தார்கள் அவ்விருவரும். கொஞ்ச நேரம் மூச்சு வாங்கி, தண்ணீர் குடித்து, டி குடித்து, சிகரட் புகைத்த பிறகு சிரித்த சிரிப்பிருக்கிறதே, இப்போதும் மறக்க முடியாத தருணம். 

வேர்த்து விறுவிறுத்து, சட்டை அங்கங்கே கிழிந்து அழுக்காக, அன்று வாசித்த அற்புதப் பாடல்கள் எங்களுக்கு முதல் பரிசை வென்று தந்தன.

இதுவும் கடக்கும்

உடலம் மெதுமெதுவே பொய்க்கும்
புலன்கள் தளர்ந்து சோம்பும்
கற்பிதங்கள் கழன்று விழும்
சூழ்ந்து விரியும் புன்னகைகள்
கைகொட்டும் களியாய் மாறும்

அவதானிக்கும்
அறிவின் இதழ்களில்
அரும்பும் என் குறுநகை 

Building Envelopes Asia 2011 conference in Singapore





Removing & Destroying Spirits!

I was travelling from Indonesia some time ago and was waiting for the ferry at the terminal.  A tap at the shoulder and turned around to look at this tall figure thrusting the name card at my face quite unceremoniously.    He was 6 feet tall, with long curly hair thrown backwards, dyed with abnormal black colour, sporting a thick black sunglass and with the ugly looking black polo T-shirt not hiding the protruding paunch and with a dramatic gold ring with a very big stone.

With a very friendly smile, he accepted my thanks for the name card with a slight bow of the head and continued enquiring, "any distress my friend, call me! I can help you!"


Until then I had not seen the name card still dangling between my fingers. I said I would and moved away to take a seat before my ferry could arrive in another 30 minutes.


I looked at the card, both front and back, tightly laced with text announcing unbelievable deeds. He could identify, remove and destroy spirits and had helped hundreds of businesses (a variety of them existed in quite a shady nature - as explained in the back of the card) and more importantly, helped lovers to gain their loved ones by eliminating the bad spirits set in between them by villainous parents or other persons.

I must confess that in my business of conferencing, I have come across thousands of name cards - a good number uniquely designed and a few boasting grand job titles, but I have never come across a name card such as this one in my entire life.

Look at the 'Personal Protection Against' part: Enemies, black magic, burglars, fights, frequent eccidents (yes, accidents!), quarrels - between husband & wife, Lovers etc. This last part of providing protection against quarrels with wife made me sweat and my palms were itchy to call him at once. Involuntarily I scanned through the crowd to locate him just to engage him a good natured conversation till my ferry arrived, but to my dismay, found him deeply advising another distraught traveller who seemed to be suffering from similar fate with vengeful spirits all through his life.

Letter to a friend

Hi friend,


Happy to know that you are partially relieved of your workload.

Thanks for appreciating the photograph. I loved the 'the whining
schoolboy' bit, though the comment was deceptively flattering, since
the 'schoolboy' photo was done at the age of 40.

I am not going to argue with you on Arundhati Roy. I was, I must admit
now in retrospection, disillusioned when I had read her novel a few years ago. Her
subsequent writings have failed to create any interest and on re-reading
God of small things, I could understand a very weak craft.

Her politics, I believe, is not soulful and is mostly
attention-seeking. You may differ with this observation and that is
exactly what Jeyamohan is trying to present as the current state of affairs
in Indian media and social activism. This pseudo intellectualism, fanned by foreign media and
foreign-supported Indian media, places a solution which is not action
intensive, sacrifice oriented but just a pseudo uprising with mere empty
words.

I am reading 'Reality Check' by Guy Kawasaki (on entrepreneurism) and
The Kamasutra by Vatsyayana - A translation by Richard Burton,
Bhagavanlal Indrajit and Shivaram Parashuram Bhide.

Kamasutra! 



I am sure you are aware that this treatise is not entirely
about sex. Though I have 
scandalously read the book in parts during our college
days, printed only to highlight the sexual positions and
about how to acquire women, the current reading has opened a door through which I
could see how this 6 century AD book has impacted the cultural forms,
literature and the social psychology of Indian people and am amazed at the
fact, how still it remains the centre of the relationships of man-woman and have-have nots
(yes, that too). That is, if you are prepared to view through that
that sense.

At some point of time in near future, may be during my annual year
leave (December), I am planning to write a long article to analyse how
the book has been a result of rich (previously existing)
psycho-analysis of sex, sexual behaviour and the interpersonal relations
before its time and how it has got ingrained subconsciously and is affecting the psyche of the people even now.

All that I could see in Indian films, the day-to-day life (husband-wife
relationships in a typically Indian marriage - to what I
am accustomed, inferences drawn from the lives of my parents, my friends, my relatives, neighbours and that of my own), to all the art forms and to the subtle and
not so subtle vagaries and ideologies of manhood and womanhood, transcended to us by
the elders and mothers - are very closely connected to this extensive
research work by Vatsyayana.

Interesting?

Concerning your observation of what I would have done regarding
the energy situation in India: honestly, I have been slowly shedding
my invincibilities and vulnerabilities alike, as I am seeing the life
in a more practical light nowadays and am no more nurturing huge ambitions
of a professional changing the course of the destined lives.

I am setting smaller, achievable targets for myself and work upwards in a
typically bottom-up approach that has been working well for the last 3
years, rather than the more ambitious top-down approach. That way,
If I could proceed as I am doing as now, should be entering the Indibiofuel industry when I am 50 years old.

Pardon me for a pretty uninteresting mail.

Take care of yourself,

Love
IB Saravanan

Pandit Venkatesh Kumar and Raag Hameer