Sunday, April 24, 2011

உயிர்க் கோலம்


வன்... அவன்தான்.

அது...அதுதான். 

அவர்கள் அனாமதேயர்கள். அனாதிகள். அவர்களுடையது அந்த நகரத்தின் வீதிகளில் உருக்குலைந்து உருளும் வாழ்க்கை. அவனை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பார்த்திருக்கலாம்.  புகைவண்டி நிலையத்தினருகே மாதாவின் கருணை பொங்கும் சித்திரத்தோடு. பேருந்து நிலையமருகே முருகன் சேவற்கொடி, மயில் வாகனம் மற்றும் இவனோடும். கல்லூரி வளாகமருகே இயேசுபிரானின் அகலவிரிந்த கைகளோடு...என நீங்கள் மறுதலிக்க முடியாமல் உங்கள் மனிதாபிமானத்தோடும் கலைரசனையோடும் உறுத்திக் கொண்டிருக்கும் அவன் ஓர் ஓவியன்.

எவ்வளவுதான் சகிக்க முடியாததாய் இருந்தாலும் வெயிற்காலம் தான் பிழைப்பு; மக்களின் துன்பங்களை விற்றுக் காசாக்கிக்கொள்கிற நீர், மோர், குளிர்பானம், இளநீர் என்கிற கடைக்காரர்களுக்கு மட்டுமல்ல, அவனுக்கும் அதுதான் சீசன்.

ஓரிரு தினங்களுக்கு முன் ரயிலடியில் வரைந்த ஐங்கர விநாயகர் நல்ல கருணை செய்திருந்தார். கலர்ப்பொடி, கோல மாவு, சாக் பீஸ்கள் வாங்கியது போக அவன் கையில் ரூ.13 இருந்தது. இன்னும் இரண்டு தினங்களுக்கு போதுமென்றாலும் அடுத்த இடத்தையும், அடுத்த படத்தையும் இப்போதே தீர்மானித்து விடவேண்டுமென்ற நிலையாமை அவனுக்குள் குடைந்து கொண்டிருந்தது.

சிறுவயதில் அவனுள்ளிருந்த ஓவியத்திறமை வெளிப்படும்போதெல்லாம் அவன் தாய் மகிழ்ந்து போவாள்; நடக்கவியலா அவனின் ஊனம் ஒரு பொருட்டற்று போகும் அவளுக்கு; ரவி வர்மாவே வந்து பிறந்து விட்டதாக கனவு காணுவாள்; நெட்டி முறிப்பாள்.

செல்வமகனின் கலைத்திறமை செழுமையாய் வளர் வேண்டுமென்ற அவன்  தந்தையின் ஆசை, ஒரு சாலை விபத்தில் நிராசையாகும் என்று யாருமே எதிர் பார்த்திருக்க மாட்டார்கள், அவன் அன்னை உட்பட. வழக்கமான வழக்கமாக உற்றார் உறவினர் அனைவரும் கலைந்த பின் மீதமிருந்தது அவளும் அவள் மகன் மட்டுமே.  வளர்ந்து வந்த மகனின் ஓவியத்திறமைக்கு போதிய ஊக்கமூட்டவோ உடல் உறமூட்டவோ வழியற்று போன ஒரு நாளில், அவள் காதில் அச்செய்தி விழுந்தது.

அந்த பெருநகரத்தின் வாயில்களில் படைப்பாளிகள் கௌரவிக்கப் படுவதையும், அவர்கள் வாழ்வின் வெற்றிப்படிகளில் மேலேறிச் சென்று கோலோச்சுவதையும் அவள் அறிந்திருந்தாள். எண்ணிப் பார்க்கையில், அன்று அவள் எடுத்த முடிவு சரியானதா என்று கூட பல முறை அவனுக்கு தோன்றியிருக்கிறது. அனால் மேட்டில் உருட்டிவிடப்பட்ட சக்கரம் ஒரு நியதியுடன் கீழ்நோக்கிப் பாய்வதை எப்படி நிறுத்த? நிறுத்த வேண்டுமெனில், நிறுத்தி, அவரவர் ஆணைக்கேற்ப வாழ்வின் போக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டுமெனில், அதற்கேற்ற அமைப்புகளுடனோ, ஆதரங்களுடனோ பிறந்திருக்க வேண்டுமென்பதும் அவனறிந்ததுதான்...

எப்படியோ, அவன் பற்பல கனவுகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் அந்நகரை வந்தடைந்து விட்டான்.

பெரும் சத்தத்துடன் அந்த முதல் இடி விழுந்தவுடன் அவன் தலை நிமிர்ந்தது. இடமும் வலமும் ஆடிய தலைமயிர், மயிர் போல் கருத்த மேனி, வான் வெறித்த தீர்க்கமான பார்வை. பலகையுருட்டும் வலிமைவாய்ந்த முறுக்கேறிய கைகள் - அவற்றை பார்க்கும் போது, இத்தனை கரடு முரடான கைகளிலிருந்தா அத்தனை அழகோவியங்கள் பிறக்கின்றன என்று தோன்றும் - மெலிந்த கால்கள என அவனே ஒரு சித்திரம் போலிருந்தான். இப்போது கூட, அந்தத் தாடியையும் மீசையையும் மழித்து விட்டால் முகம் ஒரு கலைஞனின் எடுப்போடு இருக்குமோ என்னவோ?

பட் பட்டென்று முதல் மழைத்துளி விழுகிறது. கோடையின் வெப்பம் போங்க, வாடை கூடிய மணம் எழுகிறது. அவனுக்குள் அன்னையின் நெஞ்சணைத்து கிடந்த சுகம் திடீரென, அந்த கோடை மழை போல், வெடிக்கிறது. கண்கள் படபடக்கின்றன; குறுகுறுவென கண்ணீர் ஊறுகிறது.  அவள் அண்மைய, வெப்பம், வாசம், அணைப்பு, உச்சியை தடவும் வளையர்க் கைகள் என அவன் கைகள் தன்னைத்தானே தலையை தடவிக் கொள்கின்றன.  'ஒ' வென குமுறிக் குமுறி அழுகிறான். மழைநீரின் பரவலில் கண்ணீரும், திறந்த வாயிலிருந்து தோன்றும் கேவலும், யாருமறியாமல் கரைகின்றன, வரைய ஆரம்பித்து கரைய ஆரம்பித்துவிட்ட படம் போல. 

ந்த நகரத்தின் தார்ச்சாலைகளில் அவன் உருண்ட வண்ணம், ஓவியங்களை காண்பித்தும், புதியதாய் வரைந்து காட்டியும், மூடிகொண்டிருக்கிற வாழ்வின் கதவுகளை மட்டும் அந்த கைகளால் திறக்கவே முடியவில்லை.  ஊடாடிக் கொண்டிருந்த பொழுதுகளிலும் மற்றொமொரு இடி விழுந்தது...

வானம் இற்றுப் போகப்போகிற இதே போன்றதொரு கோடைமழையில் அவன் தாய் அங்கே இறந்து போனாள். அளந்து விடக்கூடிய ஒரு தூரத்தினால் அவனும் தாயின் உடலும் பிரிந்து கிடந்தாலும், அவளருகே சென்று சேர அவன் பட்ட பாடு...  நகரத்தின் வெற்றிப்படிகள் ஏறும் கலையார்வம் அவளோடு மறைந்து போனது.  தார்ச்சாலையிலும், நடைபாதைகளிலும் கடவுளர்களோடு பூண்ட நட்பு இதோ இன்று வரை தொடர்கிறது. மேரி, இயேசு, முருகன், சிவன், மால், விநாயகர், ஐயப்பன், பார்வதி.... ஏன், புத்தர் கூட அவனால் அற்புதமாக வரைய முடியும்.

ழை பெரிதும் வலுத்து விட்டது. அந்த நாயும் அவனும் சாத்திய கடையின் தகர மறைவில் ஒண்டிக் கொள்கின்றனர். பரஸ்பரம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. என்றாலும் ஏதோவோர் உறவு அவர்களுக்குள். மழையின் கனத்தோடு கவிந்து கிடந்த இருளில் கழிந்தது இரவு. 'ஏதோ காற்றழுத்த தாழ்வு மண்டலமாம்; மழை இன்னும் 24 மணி நேரம் நீடிக்குமாம்' - காதில் விழுந்த போது அவன் நடுங்கிப் போனான். கையிருப்பு கரைந்து கொண்டிருக்கிறது. குளிர் நடுக்கத்தை குறைக்க முடியவில்லை. விரித்துக் கொண்டிருக்கும் கை கால்களை, என்ன உணர்ந்ததோ தெரியவில்லை, நாய் நக்கிக் கொடுத்தும், உரசியும் உணர்வற்ற முயற்சிக்கிறது. கண் திறந்து பார்க்கும் போது உடலதிர வாலாட்டி அவன் கைகளுக்குள் அணையும் நாயை பார்க்கும் போது, மனம் ஏனோ தாயின் நினைவில் நெகிழ்கிறது. கண்கள் தாமாக மூடுகின்றன.

ன்று மழையுடன் மூன்றாவது நாள். வானம் வெறித்து விட்டிருந்தது. கலங்கிய மேக வண்ணம். கடை வாயிலில் உருண்ட அவனுடல். நகரவும் முடியாமல், தீர்மானித்திருந்த இடத்திற்கு போகவும் விடாமல் பசியும் சுரமும் அவனை உலுக்குகின்றன. நிர்ச்சலனமாய், நிர்ச்சிந்தையாய், பிச்சையெடுத்து பழகியிராத அந்தக் கரங்கள் வரையவாரம்பிக்கின்றன...

பாதாதி கேசம்...கோசல ராமன்... நடுங்குகிற கைகள் இறுகப் பற்றியிருக்கும் சாக்பீஸ் ஒரு தெய்வீகத்தை படைக்கிறது.  தரையில் விரிந்து கொண்டிருந்த இராமனின் உடலில் தோன்றும் பொலிவு - அகன்ற மார்பு, தோல் தாங்கும் வில், உருண்ட தொடைகள், உறுதியான கால்கள், கால்கள்...

காசுகள் அப்போதே உருண்டோடுகின்றன. புன்முறுவல் தவழும் அதரங்கள், அழகிய முகம், கூர் நாசி, அந்தக் கண்கள், அவை, அவை இன்னும் திறக்கப்படவில்லை.

விரிந்து கிடந்த கையின் விரல்களில் வலிவைக் கூட்டி இராமபிரானின் திருமுகக் கண்களைத் திறக்கிறான். முடிந்ததும் அவன் கண்கள் மெல்ல மூடிக் கொள்கின்றன, ஒரு சுகானுபவத்தை ரசிக்கிறவன் மாதிரி, அவன் படைப்பில் அவனே மூழ்கி ஆழமற்ற லயத்தில் புதையுண்டு போவது மாதிரி...


1991 ஆனந்த விகடன் சிறுகதை போட்டிக்காக எழுதியது. 

Pandit Venkatesh Kumar and Raag Hameer